கோர்ட்டு கேஸூ

Posted: Tuesday, June 23, 2009 | Posted by no-nononsense | Labels:
விபத்து வழக்கு ஒன்றின் பொருட்டு நேற்று அரைநாள் கோர்ட்டில் கழிக்கும்படியானது. வாதி நான் தான் என்பதால் தவிர்க்க இயலவில்லை. ஆனால் இதுவும் ஒரு வகையில் நல்ல அனுபவமாகவே அமைந்தது. என்ன மாதிரி அனுபவம் என்றால் இனியும் ஒருமுறை எக்காரணம் கொண்டும் வம்பு வழக்கில் மட்டும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான் அது.

இரண்டு அடிதடி வழக்குகள், ஒரு கற்பழிப்பு வழக்கு — அவற்றின் விசாரணைகள், கை விலங்குடன் ஆஜரான கைதிகள்; அவர்களுடன் இரண்டு வார்த்தை பேச கால்கடுக்க நின்றிருந்த குடும்பத்தினர்; அவர்களிடம் பணத்துக்கு பல்லைக்காட்டும் காக்கி, கருப்பு உடை சிப்பந்திகள் என்று அச்சூழலே அமைதியான வாழ்வின் மீது பற்றுதல் கொண்ட யாரையுமே அச்சுறுத்துவதாக இருந்தது. வழக்கு, விசாரணை என்றால் ஏன் அவனவன் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுகிறான் என்பதை நேற்று ஒருநாள் நடப்புகளை அவதானித்ததன் மூலம் புரிந்து கொண்டேன்.

அலுவகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு காலையிலிருந்து கால் கடுக்க நின்றதன் ஆகப்பெரிய பயன் சடுதியில் ஜட்ஜ் வாய்தா போட்டதுதான். இதனால்தான் பணம் போனாலும் பரவாயில்லை என்று கட்ட பஞ்சாயத்தையோ, மாமூல் போலீஸையோ அணுகி பிரச்சினையை முடித்துக் கொள்கின்றனர் போலும்.

அரை நாளுக்கே இப்படியென்றால் ஆண்டு பல அலைபவர்களின் நிலையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. என்னுடைய இரு நண்பர்கள் — இருவருமே பரம சாது — இப்படிப்பட்ட ஒரு சிக்கலில் சிக்கி தவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment