பொன்னியின் செல்வனும் மணிரத்னமும்

Posted: Saturday, April 30, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
பொன்னியின் செல்வனை முன்வைத்து... :

மணிரத்னம் பற்றி பேசி நேரத்தை வீணடித்துக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன். இங்கே ஏற்கெனவே ஒருமுறை அவர் தலை எனக்கும் நவலடிக்கும் இடையே உருண்டிருக்கிறது. அப்போதாவது ஒன்றிரண்டு உரோமங்கள் அதில் ஒட்டிக்கொண்டிருந்தன. ராவணன் என்னும் த்ராபைக்கு பிறகு அவையும் உதிர்ந்து விட்டன. இப்போது முற்றிலும் முனை மழுங்கிய மனிதராக காட்சியளிக்கிறார். இராமாயணம் என்னும் காவியத்தையே திரைக்கதையில் சரிவர கையாளத் தெரியாமல் சொதப்பிய ஒருவரால் எப்படி பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வெகுசன இலக்கியத்திற்கு காட்சி வடிவம் கொடுக்க முடியும் என்பது சந்தேகமாக இருக்கிறது.

மணிரத்னம் படைப்பூக்கத்துடன் செயல்பட்ட ஆரம்பகால படங்களை மட்டும் வைத்துக்கொண்டு இன்று வரை அவரை எடை போட்டுக்கொண்டு இருப்பது சரியான மதிப்பீடாக இருக்காது. கடந்த பத்தாண்டுகளில் அவரின் படங்களில் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும் அளவுக்கு படைப்பின் தரமும், அது பார்வையாளன் முன் முன்வைக்கும் மொழியும் மேம்படவில்லை என்பதற்கு ஆய்வெல்லாம் அவசியமில்லை. பத்தோடு பதினொன்றாக அவை கரைந்து எந்த வித அழுத்தமான தடங்களையும் தனக்கென பதிவு செய்துகொள்ளாமல் காணாமல் போனதே போதுமானது.

அவருடைய படங்களில் ஆரம்ப காலங்களில் தென்பட்ட குறைந்த பட்ச எதார்த்த வடிவம் சிதைவடைந்து விட்டது. சேரிகளை காட்டும்போது கூட அதில் ஒரு மேட்டிமைத்தனமான பாசாங்கை எதார்த்தம் என்று படம் பிடித்துக் காட்ய முயல்கிறார். யாரை நம்ப வைக்க? யாருக்காக? நிச்சயமாய் அவரை இந்தளவு உயர்த்திய நல்ல சினிமாவின் ரசிகர்களுக்காக அல்ல. நிச்சயமாக பத்தாண்டுகள் முன்பு வரை ‘சி’ சென்டரிலும் கூட அவரின் படத்தை நூறு நாட்கள் ஓட்டிக்காட்டிய கடைமட்ட ரசிகனுக்காக அல்ல [அலைபாயுதே வெளியான வருடம் 2000].

அவரின் உலகம் வேறு மாதிரி ஆகிவிட்டது. படைப்பூக்கம் திரிந்து, ஹிந்து, தமிழ், தெலுங்கு என்பதான மூன்று மொழிகளுக்கான வியாபார கணக்குகள்தான் இன்று அவரின் சினிமாவை நிர்ணயம் செய்துகொண்டு இருக்கின்றன. ‘மணிரத்னம்’ என்னும் brand name-ஐ மும்மொழிகளில் திறம்பட மார்க்கெட் செய்யத் தெரிந்த ஒருவராக, சமரசங்கள் நிறைந்த சரக்குகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டுக்கொண்டு இருக்கிறார். இன்று மணிரத்னம் வெறும் முகமூடி மட்டுமே. அதன் பின்னால் இருந்து எல்லாவற்றையும் முடிவு செய்வதும் இயக்குவதும் அவரின் அறிவுஜீவி மனைவி என்று கேள்வி. இப்படி நீர்த்துபோய்விட்ட ஒரு மனிதரிடம் இருந்து என்ன ஒரு நல்ல காட்சியாக்கத்தை பொன்னியின் செல்வனில் எதிர்பார்த்துவிட முடியும்? எனக்கு நம்பிக்கை இல்லை.

ஜெயமோகன் இலக்கியத்தில் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் சினிமா உலகம் என்பது வேறு. கவிஞர் வாலியின் வார்த்தைகளில் சொன்னால் அங்கே யாரும் துட்டுக்கு முட்டையிடும் பெட்டை கோழியாகத்தான் இருக்கமுடியும். இதுவரை அவர் பங்கெடுத்துக் கொண்ட ஆக்கங்களில் அவரின் ஆளுமை நிரூபிக்கப்பட்டதில்லை. அண்மையில் தான் எழுதிய கதை என ஜெயமோகன் ஜபர்தஸ்தாக மார்தட்டிக்கொண்ட ‘சிந்துசமவெளி’ சந்தி சிரித்துவிட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து கிண்டப்போகும் கூட்டாஞ்சோறு சுவையாக இருந்துவிட்டால் மகிழ்ச்சிதான். மாறாக, வேறு மாதிரி அமைந்துவிட்டால் அங்கே கூறுபோடப்படுவது கல்கியின் காவியமாக இருந்துவிடும் என்பதுதான் எம் கவலை. இதுவே அவர்களின் சொந்தக் கதையாக இருந்திருந்தால் இவ்வளவு பதற்றம் நமக்கு அவசியமில்லை. ஆனால், அமரர் கல்கியின் அந்த குறிப்பிட்ட காவியத்துடன் தமிழ் வாசகன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனதளவிலான நெருக்கம் அப்படிப்பட்டதல்லவே.
மேலும்...

திண்ணைப் பேச்சு: மின்வெட்டு, நாடுகளின் வரலாறு

Posted: Friday, April 29, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
கடந்த ஒரு மணி நேரத்தில் நான்கு முறை கரண்ட் போய் வந்துவிட்டது. ட்ரான்பார்மர்கள் லோடு தாங்காமல் திணறுகின்றன. மின்சார பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அரசாங்கத்திடம் மாற்று ஏற்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இனியும் இதற்கெல்லாம் பழகிக்கொள்ள வேண்டியதுதான் என்பது புத்தியில் உறைத்தாலும், மின்சார சாதனங்களுடன் வாழ்ந்து பழகிவிட்டதை சட்டென்று விலக்கிக் கொள்ள முடியவில்லை.

இதனாலேயே நான் ஒரு லேப்டாப் வாங்கும் நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் கட்டாயமாக தவிர்த்து வந்த ஒன்று அது. தவிர்க்க காரணம், வீட்டில் மேசைக் கணினி இருக்கிறது. எப்போதும் பிரியாமல் உடன் என் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதிலேயே இணையதளங்களை படித்துக்கொள்ளவும், சின்ன சின்னதாக எழுதியனுப்பவும் முடிகிறது. ஆனால் சீரியஸாக சில விஷயங்களை எழுத அமரும்போதுதான், கரண்ட் போவதன் வலியும், கையடக்க போன்களின் கையறு நிலையும் உறைக்கிறது.

உதாரணமாக, ஜனகனமன சர்ச்சைப் பற்றி இரண்டு பகுதிகள் எழுதி அனுப்பி விட்டேன். அதன் மூன்றாவது பகுதியை வெகுசிரத்தையாக எழுதிக்கொண்டு இருந்தபோது திடீரென்று கரண்ட் போய்விட்டது. என்னுடைய யூபிஎஸ் சில நேரங்களில் பேக்கப் நிற்காமல் அப்படியே அணைந்துவிடும். அதுதான் அப்போது நடந்தது. என்னுடய பல மணி நேர உழைப்பு ஒரு நொடியில் வீணாய் போனது. சேமித்துக் கொள்ளவெல்லாம் அவகாசமே கிடைக்கவில்லை. வெறுத்து போய் விட்டு விட்டேன். மீண்டும் எழுத மனம் வரவேயில்லை. (ஆனால் எழுதுவேன்). ஒரு மணி நேரத்தில் நான்கைந்து முறை மின்சாரம் தடைபட்டால் எந்த யூபிஎஸ் தான் தாங்கும்? அதனால் அதனிடம் நான் குறைபட்டுக் கொள்வதில்லை.

அரசாங்கம் செய்து தந்திடாத மாற்று ஏற்பாட்டை நாம் நம் சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். வீட்டில் நம்மை ஆக்கிரமித்து கிடக்கும் இயந்திரங்களின் எண்ணிக்கையில் சிலவற்றை கூட்ட வேண்டியுள்ளது. வீட்டுக்கு வீடு அவரவர் வசதிக்கு தக்க ஏஸி, ஜெனரேட்டர், இன்வெர்ட்டர், யூபிஎஸ், லாப்டாப் என்று சில இயந்திர சாதனங்களை வாங்கிப்போடும் அவசியம் ஏற்பட்டுவிட்டது. ஆடம்பரம், அத்தியாவசியமாகிவிட்டது.

முடியாதவர்கள் வாழ்க்கையில் இயந்திரங்கள் இன்றி வாழ்ந்த முற்கால மனநிலையை சாத்தியப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால், இந்த கொளுத்தும் கோடையில் காற்றாடி இயங்காததால் தூங்க முடியாமல் தவிக்கும் என் குழந்தையின் முகம் பார்த்து ‘பொறுத்துக்கொள்’ என்று எப்படி நான் சொல்லமுடியும்? விரைவில் என் பட்ஜெட்டையும் மீறி சில செலவினங்கள் அதிகரிக்க உள்ளன.
-0-

நான் தற்சமயம் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சரித்திரம் பற்றி படித்து வருகிறேன். அதைப் படிக்கப் படிக்க, இந்தியாவின் பின்தங்கிய நிலை, பொதுவெளி/அரசியல் நாகரிகங்களின் தேக்க நிலை குறித்து சில புரிதல்களை அடைய முடிகிறது.

யூ.எஸ், கனடா, சிங்கப்பூர் போன்ற குறுகிய அரசியல் வரலாறு கொண்ட நாடுகளை இந்தியா, இந்தோனேஷியா, பாரசீகம் போன்ற நெடும் வரலாறு கொண்ட நாடுகளின் அரசியல் பொருளாதார வரலாறுகளுடன் ஒப்பாய்வு செய்வதன் மூலம் (comparative study), நெடும் வரலாறு நாடுகளின் வளர்ச்சிக்கு அந்த தொன்மையே தடையாக இருந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியும். வேறுவிதமாக சொன்னால் காலனி நாடுகளின் அபார வளர்ச்சியுடன், பழம்பெரு நாடுகளின் பின்தங்கிய சமூக பொருளாதாரத்தை ஒப்புநோக்குதல் என்றும் சொல்லலாம்.

சீனா, ஜப்பான் போன்ற சில விதிவிலக்குகள் இதற்கு உண்டு. ஆனால் சீனாவுக்கு அதன் கறாரான பொதுவுடமை கொள்கையும், ஜப்பானுக்கு அதன் isolationism-ம் வளர்ச்சியை சாதித்துக் கொடுத்துள்ளன.

இது குறித்த விவாதத்தில் மையக்கருத்திலிருந்து விலகாத எடுகோள்களை முன்வைத்து அலசுவதன் மூலம் இந்திய வளர்ச்சிக்கு தடையாக இருந்துவரும் காரணிகளை பிரித்துப்பார்த்து இனங்காணலாம் எனத் தோன்றுகிறது. எழுத்தில் முடியாவிட்டாலும் நேர்பேச்சிலாவது ஆர்வமுள்ள நண்பர்களுடன் விவாதித்து பார்க்க வேண்டும்.
மேலும்...

ஹிப்போகிரஸியின் மொத்த குத்தகைதாரர்கள்

Posted: Thursday, April 28, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
சாய்பாபாவை முன்வைத்து:

கடவுள் நம்பிக்கை உள்ளவரை அதன் கிளை நம்பிக்கைகளான கடவுள் அவதார நம்பிக்கைகளும் இருக்கும். தன்னை அவதாரமாக அறிவித்துக்கொள்ளும் நபர்களின் வாழ்க்கையும் செழிக்கும். இதைக் கேள்வி கேட்பவரைத்தான் கண்ணை மூடி கைதொழச் சொல்லி உலகம் பழிக்கும். அதனால்தான் ஆதார பிரச்னையாகிய கடவுள் நம்பிக்கை நோக்கி அம்பை விட்டெறிந்தனர் பெரியார்களும், மார்க்ஸ்களும். பல விஷயங்களில் முற்போக்காக கருத்துச் சொல்ல முண்டியடித்து ஓடி வரும் படித்த பிற்போக்குகள் இந்த விஷயத்திலும் ஜாதிபற்று விஷயத்திலும் மட்டும் கள்ளமௌனம் சாதிப்பார்கள். கவனித்து பார். அவர்களை பொறுத்தவரை ஒட்டுமொத்த மானுட பிரச்னையே அரசியல்வாதிகளின் ஊழல் மட்டும்தான். ஹிப்போகிரஸியின் மொத்த குத்தகைதாரர்கள்.
மேலும்...

Mooladee - ஓர் எதிர்வினை

Posted: | Posted by no-nononsense | Labels: , , 0 comments
Dear .....,

Thanks a lot for your time to respond to me and this mail gave me an opportunity to analyse this matter. There is a hadith which says about female circumcision. But not every hadiths are taken as the islamic law. There are rulings for the hadiths to be authentic and then only it will be considered as a law in Islam. For a deep understanding on this, if you get time please go through the site http://www.islamset.com/hip/health5/female.html.


I wish you good luck.


Thanks
........

அன்புள்ள ஹபீப்,நீங்கள் கூறியுள்ளது உண்மை. இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ இது வழக்கத்தில் கிடையாது. குரானிலும் சொல்லப்படவில்லை. Sunnah-ல் இல்லை. ஆனால் ஹதிஸீல் இருப்பதாக தெரிகிறது. அதையொட்டியே சில மத அடிப்படைவாதிகளால் அவர்களுடைய ஆதிக்கக்குடிகளிடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்:

Um Atiyyat al-Ansariyyah said: A woman used to perform circumcision in Medina. The Prophet (pbuh) said to her: Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband.

மெதினாவைச் சேர்ந்த விருத்தசேதனத்துக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் பெண்ணை பார்த்து நபிகள் ‘கடுமையாக வெட்டிக் கொள்ளாதே’ என்று சொல்கிறார். என்று மட்டும்தான் சொல்கிறார். வெட்டிக் கொள்ளாதே என்று சொல்லவில்லை. இதை சுட்டிக்காட்டித்தான் பெண்களிடம் விருத்தசேதனத்தை ‘purification' என்ற பெயரில் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இதனை படித்த பிறகே அதை இஸ்லாமில் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கமாக பொதுமைப்படுத்தி எழுதி இருந்தேன். ஆனாலும் மதத்திற்கு வெளியே இருந்து எழுதும்போது, அதனை தவிர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அந்த விஷயத்தில் நண்பர் ஹபீபின் கருத்தை எற்றுக்கொள்கிறேன்.

எனினும், இஸ்லாமியர்களில் கூட சில பழங்குடி மரபினரிடம் மட்டும் - குறிப்பாக மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள சில நாடுகளில் தேசம் தழுவிய அளவில் ஒரு நடைமுறை வழக்கமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அதை எழுதினேன். அதை அந்தக் கட்டுரையிலேயே சொல்லியும் இருந்தேன். இந்தப் படம் களமாக கொண்டிருக்கும் செனகல் நாட்டில் அப்படி ஒரு வ்ழக்கம் இருந்து ஐ.நா.வின் முயற்சியினால் 2006-ல் அது அங்கே தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. (Moolaade வெளிவந்தது 2004-ல் என்பது ஒரு தகவலுக்காக). கிழக்காசிய நாடுகளில் அரபுக்களிடமும் அது இருந்திருக்கின்றன. அது குறித்தத் தகவல்கள் இணையம் முழுக்க கொட்டிக்கிடக்கின்றன.

இஸ்லாமில் தடை செய்யப்படாதவை அனுமதிக்கப்பட்டவை என்று ஒரு ஐதீகம் உண்டு. அந்த ஹராமில் female genital mutilation வரவில்லை. குரானில் male circumcision பற்றியும் கூட சொல்லப்படவில்லை. ஆனால் நபிகள் அவரே செய்து கொண்டிருக்கிறார். அதனால் சொல்லப்படாதது எதுவும் வழக்கத்தில் இல்லை என்றும் கிடையாது என்பது புரிகிறது. ஒரு மதத்திற்கு வெளியே இருந்து எழுத நேரும்போது இந்த மாதிரி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நமது புரிதல்கள் இப்படித்தான் அமைகின்றன.

அதனால் குறைந்த பட்ச சரிபார்த்தல்களாவது இல்லாமல் எதையும் நான் எழுதுவதில்லை. அதன் உண்மையான காரணம் நான் என்னளவில் தெளிவு பெறவே எதையும் படிக்கவும் அறிந்து கொள்ளவும் விழைகிறேன். எழுதுவது என்பது நண்பர்களுடன் ஒரு பகிர்தலுக்காக மட்டுமே. சரிபார்த்தல்களையும் மீறி அதில் சில நேரங்களில் தகவல் பிழைகள், முரண்கள் இருக்கலாம். ஏனென்றால் நாம் ஆதாரம் என்று கருதி முன்வைத்து புரிந்து கொள்ளும் மூலப்பொருளில் பிழை இருந்தால் அது நமது கருத்தாக்கத்தையும் பிழையாக்கி விடுகிறது. Female circucision - ஐ இஸ்லாமுடன் சம்மந்தப்படுத்தும் இந்த ஹதீஸும் அதுபோன்றது தானா என்பதெல்லாம் மத ரீதியான ஆய்வுக்குரிய விஷயம். இஸ்லாம் மதத்திற்கு வெளியே இருந்து கிடைப்பனவற்றைப் படித்து நாம் அடைவதெல்லாம் மேலெழுந்தவாரியான புரிதல்கள் மட்டும்தான்.


அன்புடன்,
......
மேலும்...

அதிநாயக ஜெயஹே -2

Posted: Thursday, April 21, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments

இதுவரை: விக்டோரியா மகாராணி மற்றும் அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த ஏழாம் எட்வர்டு ஆகிய இருவரின் முடிசூட்டல் விழாக்களும் ‘டெல்லி தர்பார்’ என்ற பெயரில் டெல்லியில் நடைபெற்றன. ஆனால் இரண்டிலுமே சம்மந்தப்பட்ட அரசியும், அரசரும் கலந்து கொள்ளாமல் அவர்களின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் மட்டுமே கலந்து கொண்டதாக அமைந்துவிட்டன. இனி..,
King George V, Emperor of India with Empress Mary

விக்டோரியாவின் மகன் ஏழாம் எட்வர்டு இறந்தப்பின் அவரது இரண்டாம் மகன்
ஐந்தாம் ஜார்ஜ் பரந்துபட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் ஏக சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார்.

இவர் ரொம்ப அதிர்ஷ்டசாலி ராஜா. உண்மையில் இவருக்கு கிடைத்த இந்த சக்கரவர்த்தி பதவி, மற்றும் அதன் பட்டமகிஷியாகிய மேரி - இரண்டுமே இவரது அண்ணனுக்கு கிடைக்க வேண்டியது. மன்னருக்கான வாரிசுரிமைப் பட்டியலில் ஜார்ஜ் இரண்டாம் இடத்தில்தான் இருந்தார். இவரின் அண்ணன் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் தான் அடுத்து பதவியேற்க இருந்தார். மேலும் மிக அழகிய இளவரசியாகிய மேரியுடன் விக்டருக்கு நிச்சயமாகியும் இருந்தது. இருவருக்கும் காதல் வேறு.

கல்யாணத்துக்கு மூன்று மாதங்கள் இருந்தநிலையில் விக்டரை நிமோனியா காய்ச்சல் ரூபத்தில் மரணம் தழுவிக்கொண்டது. அவரது அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அண்ணனின் fiancée மேரியுடன் துக்கத்தை பங்கிட்டுக்கொள்ள வேண்டி அடிக்கடி சந்திக்க நேர்ந்ததில், வாழ்க்கையை பங்கிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவரின் நெருக்கமும் வளர்ந்தது. பட்டத்து உரிமை, அண்ணனின் காதலி இரண்டுமே ஜார்ஜ் வசமானது.

ஜார்ஜ் இன்னொரு விதத்திலும் அதிர்ஷ்டசாலி... அவரைப்போல பெருமை வாய்ந்த பட்டாபிஷேகம் வேறு யாருக்கும் நடந்ததில்லை.

டெல்லி தர்பார் III: கண்டதுமில்லை கேட்டதுமில்லை

1910-ல் ஜார்ஜ் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியாக பதவியேற்றுக் கொண்ட பிறகு, அவருக்கு இந்திய சக்கரவர்த்தியாகவும் முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. இவருக்கு முன்பு யாரும் அப்படி தனியாக முடிசூட்டிக் கொண்டதில்லை. ஆனால் இவர் செய்து கொள்ள விரும்பினார். அது நிமித்தம் மூன்றாவது டெல்லி தர்பார் ஏற்பாடாகியது. ஜார்ஜ் அவசியம் கலந்து கொள்வதாக அப்போதைய வைஸ்ராய் ஹார்டிங் பிரபுவிடம் உறுதியளித்து விட்டார்.

ஜார்ஜுக்கு இளவரசராக ஏற்கெனவே இந்தியா வந்த அனுபவம் உண்டு. அதன்போது அவர் மதராஸில் இருந்த போது ராஜா ரவிவர்மாவைகூட அழைத்து சந்தித்திருக்கிறார். பாரதியார் கூட அவரின் மதராஸ் வருகை குறித்து பாடல் பாடியுள்ளார். அதனால் இந்தியா அவருக்கு புதிதல்ல. இந்தியாவுக்கும் அவர் புதியவரல்ல.

சக்கரவர்த்தி ஜார்ஜ் இந்தியா வரப்போகிறார், வந்து டெல்லியில் இந்திய சக்கரவர்த்தியாக பதவி ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்னும் செய்தி தீயாக வேலை செய்தது. நாடே உற்சாக ஏற்பாடுகளில் திமிலோகப் பட்டது. டெல்லி தர்பாரை கண்ணார காண மக்கள் தங்களை ஆவலுடன் தயார் செய்து கொண்டனர்.

(சமீபத்தில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியை காண இந்தியா ஆவலுடன் தன்னை எப்படி தயார் படுத்திக் கொண்டதோ, அது போல என்று சொல்லலாம்.)

ஏற்பாடுகள் தொடங்கின.

தர்பாருக்காக செங்கோட்டையில் கேலரி கட்டப்பட்டது. 12,000 சிறப்பு விருந்தினர்களும்(ராஜாக்கள், கவர்னர்கள்), 70,000 வரையிலான உள்ளூர் மற்றும் ஐரோப்பிய விருந்தினர்கள் அமர்ந்து பார்க்கும் விதமாக அது திட்டமிடப்பட்டது. விருந்தினர்கள் தங்குவதற்காக 40 சதுர கிலோ மீட்டரில் 233 கூடாரங்கள் அமைக்கப்பட்டன. டெல்லியை சுற்றி 64 கி.மீ.க்கு புதிய சாலைகள் போடப்பட்டன. 48 கி.மீ.க்கு தண்ணீர் குழாய்கள் பதியப்பட்டன (அக்காலத்தில் அது பெரிய விஷயம்). இதுபோல இன்னும் பல பிரம்மாண்ட ஏற்பாடுகள்..., சொல்லிக்கொண்டே போகலாம். (கிடைத்தால் அஹ்மெத் அலியின் ‘Twilight in Delhi’ நூல் படியுங்கள். அதில் விரிவாக இருக்கும்).

பேரரசரின் கிரீடம் அந்த காலத்தில் லண்டனில் மிகப்பிரபலமாக இருந்த Garrad & Co மூலமாக எட்டு வளைவுகளுடன் 6100 வைரங்கள், வைடூரியங்கள், பச்சைக் கற்கள் பதிக்கப்பட்டதாக தயாரிக்கப் பட்டது. செலவு அறுபதாயிரம் பவுண்ட். எடை சுமார் 1 கிலோ.

சக்கரவர்த்தினி மேரியின் கிரீடத்தை(tiara) பாட்டியாலாவின் ராணி விரும்பி பொறுப்பேற்று செய்து கொடுத்தார். ஒட்டு மொத்த இந்திய பெண்களின் அன்பின் அடையாளமாக மேதகு ராணிக்கு பரிசளிப்பதாகவும் அறிவித்தார்.

சொன்னபடி 1911, டிசம்பரில் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டிக் கொள்ள இந்தியா வந்தார்.

முறைப்படி 101 துப்பாக்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்ய 1911, டிசம்பர் 12 -ல் டெல்லி தர்பார் தொடங்கியது. தர்பார் மண்டபத்தில் ராணி சகிதம் பேரரசர் வீற்றிருந்தார். (வீடியோ)


முதலில் ஹார்டிங் பிரபு தொடங்கி ஒவ்வொருவராக மன்னருக்கு மரியாதை செய்யத் துவங்கினர்.

யார் யாரெல்லாம் மரியாதை செய்தார்கள்?

அது எப்படிபட்ட மரியாதையாக இருந்தது?

பிரிட்டிஷ் இந்தியாவில் அப்போது இருவிதமான ஆட்சிமுறைகள் நிலவி வந்தன. பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் இருந்த ரெஸிடென்ஸி இந்தியா (Residencies of British India). மற்றும், மஹாராஜாக்கள், நவாப்கள், ராணாக்கள் போன்றவர்களின் கீழ் இருந்த சுதேசி இந்திய நாடுகள் (Native Indian States). அப்படியாக மொத்தம் 562 சுதேசி சமஸ்தானங்களாக இருந்தன.

அத்தனை சமஸ்தானங்களின் ராஜாக்கள், ராணிக்கள், இளவரச, இளவரசிகள் என தோராயமாக கூட்டிப் பார்த்தால் ராஜ வம்சத்தினர் மட்டும் ஆயிரக்கணக்கானோர் எண்ணிக்கையில் வரும். அவர்கள் எல்லோரும் பார்வையாளராக இருக்க, அவர்களில் ராஜாக்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் 562 பேர் வரிசையாக வந்து தர்பாரில் வீற்றிருக்கும் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் முன்னால் மண்டியிட்டு மரியாதை செலுத்திச் செல்லும் காட்சி எப்படி இருக்கும்?

ஒரு தேசத்தின் ராஜா என்றால் அவருக்கு தினம் தாள் பணிந்து மரியாதை செய்ய அவர் தர்பாரிலேயே தினம் ஆயிரம் பேர் வரப்போக இருப்பார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான தேசங்களின் ராஜாக்கள் ஒவ்வொருவராக ஒரு பேரரசருக்கு முன் மண்டியிட்டு, அவர் கையைப்பிடித்து முத்தமிட்டு (kissing of 'His Majesty's hand) வணங்கி மரியாதை செய்யும் காட்சி எவ்வளவு அபூர்வமானது! அது அந்த பேரரசருக்கு எவ்வளவு மதிப்பானது! அதுதான் மூன்றாம் டெல்லி தர்பாரில் நடந்தது. (வீடியோ)

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை பிரதேசம் வாரியாக (அதன் வரிசைக்கிரமம் கூட சொல்ல முடியும்) ராஜாக்கள், கவர்னர்களின் மரியாதை செலுத்தும் வைபவத்தைக் காணும் போது, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் முன் மண்டியிட்டது அவர்களல்ல ஒட்டு மொத்த இந்தியாவின் மாட்சிமையும் என்பதை எடுத்துக்காட்டிய நிகழ்ச்சி அது.

இத்தனை மன்னர்கள் சேர்ந்து அடித்த ராயல் சல்யூட், ஒரு grand salutation, வேறு எந்த அரசருக்கும் எப்போதும் கிடைத்ததாக சரித்திரம் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை!

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம் என்று ஒரு கணக்கு சொல்கிறது.

உண்மையிலேயே இந்த ராசா ரொம்ப அதிர்ஷ்டக்காரர் தானே?

விஷயம் இதோடு முடிந்துவிட வில்லை. இவ்வளவு சிறப்பான பட்டாபிஷேக விழாவின் இறுதியில் ஹைலட்டாக ஏதாவது அறிவிப்பு வெளியிட்டால் தானே அதற்கே ஒரு அழகு! சக்கரவர்த்தி ஜார்ஜ் அவ்வாறாக இரண்டு அறிவிப்புகளை தன் வாயாலேயே வெளியிட்டார். அதைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த லட்சோப லட்ச மக்களும் ஆர்பரித்து சந்தோஷ கூச்சலிட்டனர். அவை,

1. இந்தியாவின் தலைநகர் இன்று முதல் கல்கத்தா அல்ல, இனி அது டெல்லி! தலைநகர் மாற்றப்படுகிறது.

2. 1905-ல் கர்சன் பிரபு காலத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதனால் மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியிருந்த வங்க பிரிவினை திட்டம் உடனடியாக கைவிடப் படுகிறது. வங்கம் மீண்டும் ஒன்றிணைக்கப்படுகிறது.

இந்த இரண்டு அறிவிப்புகளும் கடைசி நேரம் வரை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. தான் அறிவிக்கும் வரை செய்தி வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் மன்னர் தனி கவனம் கொண்டிருந்தார். அதற்காக அந்த அறிவிப்பை அச்சு கோர்த்து அச்சிட்டுத் தந்தவர்கள் எல்லாம் மூன்று நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதன்படியே, ஒரு இன்ப அதிர்ச்சி அறிவிப்பாக அவை அமைந்தன.




-0-

ஐந்தாம் ஜார்ஜுக்கும் ஜன கன மன பாடலுக்கும் ஏற்பட்ட தொடர்பும் எழுந்த சர்ச்சையும் — அடுத்தப் பகுதியில்...
மேலும்...

அதிநாயக ஜெயஹே -1

Posted: Wednesday, April 20, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இந்தியாவின் தேசிய கீதம் 'ஜன கன மன’ பாடல் பாரத தாயை போற்றி பாடப்பட்டதா, அல்லது ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை வாழ்த்திப் பாடப்பட்டதா என்பது குறித்து ஒரு நீண்ட கால சர்ச்சை இருந்துவருகிறது. அதைப்பற்றி நண்பன் சதீஷ்கண்ணன் கேள்வி எழுப்பியிருந்தான்.

அதனை சரியாக அணுகிப் புரிந்து கொள்ள வேண்டுனாமால் அக்கால அரசியல் சூழல் பற்றியும், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகை பற்றியும், அவருக்கு நடந்த முடிசூட்டு விழா பற்றியும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

சரித்திரத்தின் பக்கங்களில் பயணிப்பது சிலருக்கு கொட்டாவியை வரவழைக்கலாம். இருந்தாலும் முடிந்தவரை சுருக்கமாகவும் புரியும்படியும் சொல்ல முயற்சிக்கிறேன்.

முடிசூட்டல்கள்: டெல்லி தர்பார் I


1857-வரை இந்தியாவை ஆண்டது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. 1857-ல் சிப்பாய் கலகம் இந்தியாவை உலுக்கியது. நாடெங்கும் கிளர்ச்சிகள் அமளி துமளிப் பட்டன. அதனை அடக்குவதற்கு கம்பெனியார் படாத பாடு பட்டனர்.

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்கு இனியும் இந்திய நிர்வாகத்தை கம்பெனியார் வசம் விட்டு வைப்பது சரியாகப் படவில்லை. 1857-ல் விக்டோரியா பிரகடனம் என்னும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனத்தை வெளியிட்டு இந்தியாவை நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். கம்பெனி கலைக்கப்பட்டு, அதன் சொத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அதுவரை ஒரு கார்ப்போரேட் கம்பெனியின் சொத்தாக மட்டும் இருந்துவந்த இந்திய துணைக் கண்டம், அது முதல் ’பிரிட்டிஷ் ராஜ்’ என்று அழைக்கப்பட்டு மகாராணியாரின் ஆளுகைக்கு வந்தது.

1876-ல் விக்டோரியா அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் சக்கரவர்த்தினியாக (Empress of india) முடிசூட்டப் பட்டார். அவருடைய விருதுகள் Queen of England, Scotland, Wales, and Northern Ireland and Dominions across the Seas and Empress of India’ என்று அழைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவருடைய முடிசூட்டு விழா இந்தியாவிலும் கொண்டாடப் பட்டது. 1877-ல் நடந்த அந்த விழா ‘டெல்லி தர்பார்’ என்று அழைக்கப்பட்டது. (தர்பார் என்றால் என்ன என்று பின்னர் விளக்கமாக எழுதுகிறேன்).

பெரிய படோபங்கள் இன்றி முக்கியமான மகாராஜாக்கள், நவாப்கள் மட்டும் கலந்து கொள்ள நடந்து முடிந்த அந்த விழா, மகாராணியாரின் முடிசூட்டலை அறிவிக்கும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடந்து முடிந்தது.

முடிசூட்டல்கள்: டெல்லி தர்பார் II

1901-ல் விக்டோரியா இறந்துபட்டார். அவரைத் தொடர்ந்து அவர் மகன் ஏழாம் எட்வர்டு அரியணை ஏறினார். ‘மொட்டத்தலை ராசா’ என்று பட்டப் பெயர் கொண்டு அழைக்கப்பட்ட அவருக்கு ஆட்சிக்கு வரும் போதே 60 வயது ஆகியிருந்தது. சில ஆண்டுகள் மட்டும் ஆண்டுவிட்டு அவரும் இறந்துவிட்டார்.

அந்த ஏழாம் எட்வர்டுக்கும் ஒரு முடிசூட்டு விழா இரண்டாம் டெல்லி தர்பாராக 1903-ல் டெல்லியில் ஏற்பாடாகியது. அப்போது இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு அதற்காக ஒரு தடபுடல் ஏற்பாட்டை செய்திருந்தார். அதன்படி பேரரசர் ஏழாம் எட்வர்டு இந்தியா வந்து வரவேற்பு, விருந்து உபசரணைகளை ஏற்றுக்கொண்டு இந்தியாவின் பேரரசராக முடிசூட்டிக் கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்களித்திருந்த மன்னர் கடைசி நேரத்தில் தன் தம்பியை மட்டும் அனுப்பி வைத்தார். அது பெரும் ஏமாற்றமாக இருந்தாலும் செய்த ஏற்பாடுகளில் குறைவின்றி ஒரு அசத்தலான தர்பாரை நடத்திக் காட்டினார், கர்சன் பிரபு. நாடே பிரமித்தது.

அதற்கு பிறகு ‘டெல்லி தர்பார்’ என்றால் ஒரு உயர்வான அடையாளமும், பெருமிதமும் உலக அளவிலான கவன ஈர்ப்பும் அந்த நிகழ்ச்சிக்கு உண்டாயிற்று.

-0-

டெல்லி தர்பார் என்றால் என்ன,
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் 3-ம் டெல்லி தர்பாரும்,
தாகூர் எழுதிய ஜன கன மன பாடல்,
— அடுத்தப் பகுதியில்.
மேலும்...

நாடு விட்டு நாடு

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
ஆ! தன்யனானேன்! தேடும் பொருள் கிடைக்க வழி கிடைத்து விட்டால் சீதையை கண்ட அனுமன் போல துள்ளாட்டம் போட ஆரம்பித்து விடுகிறது மனம்.

வெள்ளகோவில் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிசாமி என்னும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் சுயசரிதைதான் இந்த நூல்.

தோட்டத் தொழிலாளராக மலேயாவுக்கு செல்லும் இவரின் குடும்பம் அங்கே சந்திக்கும் அனுபவங்களும், வாழ்வியல் மாறுதல்களும் ஒரு பெண்ணின் பார்வையில் நூலில் பதியப்பட்டுள்ளதாக நல்ல வாசகர்கள் சிபாரிசு செய்கிறார்கள். வாங்க வேண்டும்.
மேலும்...

Mooladee: ஒரு மதிப்புரை

Posted: Tuesday, April 19, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments



சடங்குகள் என்பன மனிதன் வாழ்வில் தொன்று தொட்டு இருந்து வரும் மரபு சார்ந்த ஒரு நடைமுறை வழக்கம். பெரும்பாலும் சமய நம்பிக்கைகள் அதற்கு காரணமாக இருக்கின்றன. இனம், மதம், கலாச்சாரங்களைப் பொறுத்து சடங்குகள் பலவிதமான மாறுபட்ட வழக்கங்களை கொண்டிருக்கின்றன. சமயங்களுள் சடங்குகள் இல்லாத சமயம் என்று ஒன்று இருக்கவியலுமா என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஒரு நம்பிக்கை, மதமாக பரிணாம வளர்ச்சி காண்பதில் சடங்குகளின் பங்கு மகத்தானது. மதங்களை சடங்குகள் நிறுவனமயமாக்கி நிலைபெறச் செய்கின்றன.

சடங்குகள் நாம் நன்கறிந்த மதமான இந்து மதத்தின் ஆதாரமான ஒரு விஷயம். எல்லாவற்றுக்கும் அதில் சடங்குகள் உண்டு. பின்பற்றப்படும் சடங்குகள் போதாதென்றால், நாமாக நம் மெய்யுணர்வின் பால் உந்தப்பட்டு இஷ்டப்படியாக ஒரு சடங்கை உருவாக்கிக் கொள்ளலாம். உருவாக்க மட்டுமன்றி சடங்குகளை மறுதலிப்பதற்கும்கூட அதில் அனுமதியுண்டு என்பதுதான் அதன் தனித்துவமான அம்சம். ஆனால் இந்த வசதி எல்லா மதங்களிலும் கிடையாது. சில மதங்கள் தங்கள் மாந்தர்களின் வாழ்வியலை சட்டங்கள் கொண்டு வரையறுத்து வைத்துள்ளன. அதை மீறி நடந்து கொள்வது தன்னை அதிலிருந்து சுய பிரஷ்டம் செய்துகொள்வதற்கு சமமானதாக கருதப்படுகிறது.

உதாரணமாக இந்து மதத்தில் பிராமணர்கள் பின்பற்றும் உபநயனத்தைச் சொல்லலாம். அதை பிள்ளைகள் எல்லோருக்கும் செய்துவிட வேண்டியது ஒரு மதக் கடமையாக கருதப்படுகிறது. உண்மையில் அது ஒரு கொண்டாட்டமான சம்பவமாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு கல்யாணம் போல ஏற்பாடுகள் தடபுடல் படும். தன்னை அந்த சடங்குக்கு உட்படுத்திக் கொள்ளும் சிறுவர்களும் அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அதற்கு பூணூல் கல்யாணம் என்ற மங்களகரமான பெயர் கூட உண்டு.

ஆனால் சில மதங்களில், இனக் குழுக்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மதச் சடங்குகள் - அவற்றை எதிர்கொள்பவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சிகரமானவை அல்ல. இஸ்லாம் உள்ளிட்ட ஆப்ரகாமிய மதங்களில் புனித சடங்காக பின்பற்றப்படும் சுன்னத் (அ) விருத்த சேதனம் அந்த வகையிலானது.

சுன்னத் என்றால் நமக்கு அதன் செய்முறை தெரியும். பூணூல் கல்யாணம் போலவே அதற்கும் ‘... கல்யாணம்’ என்ற கொண்டாட்டமான சொல் வழக்கமும் உண்டு. நாம் அறிந்தவரை ஆண்களுடைய பிறப்புறுப்பின் முன்தோல் நீக்கப்படும். சில நாட்களில் புண் ஆறிய பிறகு பெரிதாக எந்தவித மாறுதலும் இன்றி வாழ்க்கை சகஜநிலைக்குத் திரும்பி விடும். இது ஆண்களுக்கு. இதுவே பெண்களுக்குச் செய்யப்படும் சுன்னத்தில்...?

-0-

முதலில் பெண்களுக்கு சுன்னத்தா என்னும் வியப்பை விலக்கி வைக்க சில விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. இஸ்லாமில் ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்படுவது போலவே பெண்களுக்கும் செய்யப்படும் ஒரு மத ரீதியான நடைமுறை வழக்கம் (religious practice) உண்டு. பெரும்பாலும் அராபியர்களிடமும், ஆப்பிரிக்க நாடுகளின் இஸ்லாமிய பழங்குடிகளிடையேயும் அது வழக்கத்திலுள்ளது. சிறுமிகளாக இருக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டால் அவர்களை ஊர் பொதுவில் அதற்கென இருக்கும் கலாச்சார குழுவினரிடம் கொண்டு விட்டு விடுவார்கள். அவர்கள் அந்தப் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்து (female circumcision), புண் ஆறும் வரை ஒரு கொட்டிலில் விட்டு விடுவார்கள். அதை அவர்கள் ‘புனிதப்படுத்தல்’ (purification) என்று அழைக்கிறார்கள். அப்படி விருத்த சேதனம் செய்துகொள்ளும் பெண்களுக்கே திருமணம் நடைபெறும். செய்துகொள்ளாதப் பெண்களை மணமாக தகுதியற்றவர்கள் (bilakoro) என்று கூறி விலக்கி வைத்து விடுவார்கள். Bilakoro என்றால் புனிதமடையாதவள் என்று அர்த்தம்.

அது ஒருபுறம் இருக்க, ஆண்களுக்கு விருத்த சேதனம் எப்படி செய்யப்படும் என்று ஒருவாறு அறிவோம். ஆனால், பெண்களுக்கு அதை எப்படி செய்வார்கள்?

_241230_circumcision150.jpg

படத்திலுள்ளது போல மல்லாக்க படுக்க வைத்து, இருவர் அழுத்திப் பிடித்துக் கொள்ள, பிளேடு, கத்தி, அல்லது கூரான கண்ணாடி சில்லு போன்றவைகளைக் கொண்டு பெண்ணுறுப்பின் மேல் தோல்கள் முழுவதையும் கிளிடோரியஸ் உட்பட வெட்டி எடுத்துவிட்டு தையல் போட்டு விடுவார்கள். முடிவில், சிறுநீர் துளை, கீழ்புற துளை இரண்டு மட்டுமே மீதம் இருக்கும்.


அதாவது பெண்களுக்கு பாலுணர்ச்சியை தூண்டும் மேல்புறத் தோலுறுப்பு சுத்தமாக அகற்றப்பட்டு விடும். விளைவாக, அவர்களால் என்றுமே உடலுறவு இன்பத்தை துய்க்க முடியாது. அதாவது அவர்களுக்கு என்றுமே orgasm கிடையாது. உடலில் அதுவும் மற்றொரு உறுப்பாக இருக்கும். அவர்களின் கணவனுடைய பாலியல் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு துளையாக பயன்பட்டுக் கொண்டிருக்கும்.

‘அந்த சடங்கை செய்துகொள்ளா விட்டால் பெண்கள் பாலுணர்ச்சியால் தூண்டப்பட்டு கணவனுக்கு துரோகம் இழைத்துவிட வாய்ப்புண்டு. அவர்களுடைய பாலுணர்வு உறுப்புகளை சிதைத்து விடுவதன் மூலம் அவள் கணவனிடம் யோக்கியமாக இருப்பாள்’ - என்பது அவர்களின் நம்பிக்கை.


அதனை செய்து கொள்வதால் ஏற்படும் பாதிப்பு பாலுணர்வு இழப்பு என்பதுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. முறையற்ற இரண சிகிச்சையினால் ஆறாத ரணங்கள் ஏற்பட்டு நாள்பட்ட வலியையும் வேதனையையும் கொடுத்துவரும். சரியாக தைக்கப்படாமல் மிகச் சிறியதாக மாறிவிடும் சிறுநீர் துளைகளில் எவ்வளவு அவசரம் என்றாலும் சிறுநீர் சொட்டு சொட்டாக மட்டுமே வெளியாகி கடும் வலியை ஏற்படுத்தும். இது போன்ற நீண்ட கால பாதிப்புகள் பல உண்டு.

-0-


மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலைச் சேர்ந்த Moolaade என்னும் படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அது ஏற்படுத்திய தாக்கமே மேற்சொன்ன female circumcision பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆவலை தந்தது.



அது செனகலில் உள்ளடங்கி அமைந்திருக்கும் ஒரு குக்கிராமம். ஒரே வளாகத்தில் அமைந்துள்ள மூன்று வீடுகளில் ஒரே நபருக்கு வாழ்க்கைப்பட்ட மூன்று மனைவிகள் வசிக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையில் கணவனுக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும், அனைவரும் அவனுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு, அடுத்ததாக தங்களுடைய மூத்தாளுக்கு கட்டுப்பட்டு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அவர்களுள் இரண்டாம் தாரமாக இருப்பவளே கதையின் நாயகி ‘கோலி’.


ஒருநாள் கோலி வீட்டில் மும்முரமாக வேலையில் இருக்கும் போது நான்கு பெண் குழந்தைகள் அவள் பெயரை அழைத்த வண்ணம் ஓடி வந்து அவள் காலடியில் விழுந்து உதவி கேட்கிறார்கள். அவர்களின் வயது சராசரியாக ஐந்து முதல் ஏழு இருக்கலாம். அவர்களின் இடுப்புகளை மறைத்திருக்கும் அரையாடைகளை காணும் போதே தெரிகிறது அவர்களெல்லாம் உறுப்பை வெட்டித்தள்ளும் சுன்னத் புனித சடங்கிலிருந்து பாதியில் தப்பி வந்தவர்கள் என்பது. அவர்களின் நிலையறிந்து கோலி அவர்களுக்கு அடைக்கலம் தருகிறாள்.


அவர்கள் ஏன் கோலியிடம் அடைக்கலம் தேடி வந்தார்கள் என்பதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. கோலி ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய மகளுக்கு சுன்னத் செய்ய மறுத்துவிட்டாள். அது ஒன்றும் அவ்வளவு இலகுவான காரியமல்ல. ஆனாலும் சாதித்திருந்தாள். எதிர்ப்புகளுக்கு அஞ்சவில்லை. அதற்கு முன் அப்படி எந்த பெண்ணும் மத சடங்கை நிராகரித்து கலகம் செய்ததை அந்த ஊர் கேள்விப்பட்டிருக்கவும் இல்லை. அதனால்தான் புனித சடங்கு நடக்கும் கொட்டிலில் இருந்து தப்பிப்பது என்று முடிவு செய்ததும் அந்த சிறுமிகளுக்கு ஞாபகம் வந்த ஒரே இடம் கோலியின் இல்லம் தான். அதை பின்னர் அவள் ஆற அமர விசாரிக்கும் போது அந்த சிறுமிகளே சொல்கிறார்கள்.


சிறுமிகளுக்கு தான் அடைக்கலம் தந்தது விடிந்ததும் ஊரில் எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கோலி அறிவாள். அதனால் அந்த ஊரில் பாரம்பரியமாக வழக்கத்தில் இருக்கும் 'moolaade' என்னும் அடைக்கல பிரகடனத்தை வெளியிடுகிறாள். அது ஒரு மந்திர சக்தி கொண்ட பிரகடனம் என்பது ஐதீகம். அதன்படி அவள் வீட்டு வாயிலை மறைத்து குறிப்பிட்ட வண்ணங்கள் கொண்ட கயிறு கட்டப்படும். அதைத்தாண்டி அந்த சிறுமிகளை கவர்வதற்காக யாரும் உள்ளே வரக்கூடாது. அப்படி வர முற்படுபவர்கள் ரத்தம் கக்கி சாவார்கள் என்பது அவர்களின் அமானுஷ்ய நம்பிக்கை. அதனால் அச்சிறுமிகள் நாடி வந்த பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.


ஆனால், எதிர்பார்த்தப்படி ஊரில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

கோலி, புனித சடங்கு கொட்டிலை விட்டுத் தப்பிச் சென்ற நான்கு குழந்தைகளுக்கு Moolaade தந்துள்ளச் செயல் ஊரில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஊர்த்தலைவனின் தலைமையில் பஞ்சாயத்து கூடி விவாதிக்கிறது. முடிவில் வெளியூர் சென்றுள்ள அவள் கணவன் வந்ததும், அவனைக் கொண்டு கோலியை வழிக்கு கொண்டு வர முடிவு செய்கின்றனர். அதற்கு மும் முக்கியமாக ஒரு பொருளை ஊர் முழுவதும் தடை செய்கின்றனர். அது, ரேடியோ!


அந்த ஊர் பெண்களுக்கு வெளியுலகுடன் இருக்கும் ஒரே தொடர்பாக சமீப காலமாக ரேடியோ இருந்துவருகிறது. அதில் எப்போதும் பாடல்களை ஒலிக்கவிட்டவாறு வேலைகளை செய்வது வழக்கமாகி இருந்தது. அவர்களுள் கோலி வெளியுலக செய்திகளை மிக விருப்பமாக கேட்பாள். அதன்மூலம் தான் சுன்னத் செய்வது இஸ்லாமில் கட்டாயமில்லை என்பதை தெரிந்து வைத்திருந்தாள். அதுதான் அவளை நெருடலின்றி தன் மகளை சுன்னத் செய்வதிலிருந்து தடுத்து காக்கச் செய்திருந்தது.


கோலி ரேடியோ கேட்டுதான் இப்படி கலகக்காரியாகி ஊர் கட்டுப்பாட்டை மதிக்க தவறுகிறாள் என்று ஊர் கணவன்மார்களெல்லால் தத்தம் மனைவிகள் வைத்திருக்கும் ரேடியோக்களை பிடுங்கி வந்து ஊர் பொதுவில் இட்டு எரிக்கின்றனர். இச்செயல் ஊர் பெண்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இரவெல்லாம் ரேடியோ கேட்டு தூங்கிப் பழகிய அவர்கள் தூக்கம் வராமல் நடுநிசியில் கூடி அலுத்துக் கொள்கின்றனர். அதுவன்றி அவர்கள் மேற்கொண்டு செய்யக்கூடியது வேறொன்றுமில்லை. அவர்கள் தம் கணவன்களிடம் காட்டும் பக்தி அப்படிப்பட்டது.

இந்தப் பிரச்னையினால் கோலியின் மகளுக்கும் ஊர்த்தலைவனின் மகனுக்கும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமணம் தடைபடுகிறது. பிரான்ஸில் படித்து வேலையில் இருந்து சம்பாதித்து ஊர் திரும்பும் ஊர்த்தலைவனின் மகன் இப்ராஹிம், தன் தந்தை மற்றும் ஊர் மக்களின் பிற்போக்குத்தனம் கண்டு பொருமுகிறான். சிறு வயது முதல் தான் விரும்பும் கோலியின் மகளையே திருமணம் செய்ய விரும்புகிறான். ஒரு bilakoro தன் மருமகளாக வரமுடியாது என்கிறார் தந்தை.

இதனிடையே, வியாபாரம் விஷயமாக வெளியூர் சென்றிருக்கும் கோலியின் கணவன் ஊர் திரும்புகிறான். அவனை வழிமறித்து ஊரே அவன் மனைவியின் மதவிரோதச் செயல் குறித்து முறையிடுகிறது. அவன் கோபம் கொண்டு அவளை பலவாறாக Moolaade-யை முறிக்கும் பிரகடனத்தை உடனே வெளியிட நிர்பந்திக்கிறான். அவள் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொள்வது தவிர, வேறு எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ஊர் மேலும் அவன் பலவாறாக அவனைத் தூற்றி, அவன் ஆண்மையை பரிகசிக்கிறது. அவனின் கோபம் பல மடங்காகி, கோலியை ஊர் பொதுவில் அழைத்து வந்து சவுக்கால் விளாசுகிறான்.

இப்போது ஊர் பெண்கள் கோலியின் செயலில் இருக்கும் நியாயத்தையும் பொது நன்மையையும் உணர்ந்தவர்களாக அவள் பக்கம் நின்று ‘செய்யாதே... சவுக்கடிக்கு அசைந்து கொடுக்காதே..’ என்று குரல் கொடுக்கின்றனர். சவுக்கு அடித்து களைக்கிறது. கோலி ரத்தம் காயங்களுடன் சாய்கிறாள். ஆனால், அவள் வாய் மட்டும் Moolaade-யை முறிக்கும் பிரகடனத்தை வெளியிடவேயில்லை.

கோலியை ஊர் மத்தியில் சவுக்கு பதம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவளிடம் அடைக்கலமாகி இருந்த நான்கு பெண்களில் ஒருவளின் தாய் மட்டும் அவள் வாசலில் நின்று ஆசை வார்த்தை பேசி தன் மகளை Moolaade-யை விட்டு வெளியே வரவழைத்து கவர்ந்து செல்கிறாள். நேரே சென்று அவளை purification செய்ய அதற்கென இருக்கும் பெண்களிடம் ஒப்படைக்கிறாள். அங்கே அவசரம் அவசரமாக நடக்கும் உறுப்பு சிதைப்பு வேலையில் அந்த சிறுமி உயிரிழக்கிறாள்! தப்பி ஓடி வந்த நான்கு பெண்களில் அவள்தான் வயதில் சிறியவள்.

இதைக் கேள்விப்படும் கோலி மனம் நொந்து Moolaade இத்துடன் முடிந்தது என்று அறிவிக்கிறாள். கயிற்று அகற்றப்படுகிறது. எஞ்சியுள்ள பெண்கள் அவர்களின் தாயார் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள். எனினும், இப்போது அவர்களெல்லாம் தத்தம் அளவில் சுன்னத் சடங்கை நிராகரிப்பவர்களாக மாறியிருக்கின்றனர். கோலியின் தியாகம் ஏற்படுத்திய தாக்கம் அது!

இதன் பிறகு கதை - ஆண்களுக்கு எதிராக பெண்கள் ஒன்று திரள்வது, கோலியின் மகளை இப்ராஹிம் ஏற்றுக் கொள்வது என்று சென்று முடிவில் purification-யை இனி இல்லாமல் செய்கிறது. அதற்காக நடக்கும் சம்பாஷணைகளும், பெண்களின் நடிப்பும் கதையின் போக்குக்கு வலுவூட்டுவதாக அமைந்து நம்மை காட்சிகளுடன் கட்டிப் போடுவதாக இருக்கும்.

இங்கே சொல்லாமல் விடுபட்ட ஒரு சுவாரஸ்யமான கேரக்டரும் உண்டு. மிலிட்டரியில் வேலை செய்து பாதியில் வேலையை விட்டு பலசரக்கு வியாபாரம் செய்ய அந்த கிராமத்து மரத்தடியில் கடை விரித்திருக்கும் மெர்சனைர் என்பவன் அவன். அந்த ஊர் பெண்களிடம் சரசமாடுவதும் போது நகைச்சுவையை தெறிக்கும் அந்த பாத்திரம், கோலியை ஊர் கூடி சவுக்கால் அடிக்கும் போது தடுக்க ஓடி வரும் ஒரே ஆண் மகனாக உயர்ந்து நிற்கும். முடிவில் அதற்காக ஊர்த்தலைவன் உத்தரவின்படி கொல்லவும் படுகிறான்.

படம் முழுக்கவே மிகையில்லா யதார்த்த நடிப்பை காண முடிகிறது. இப்படத்தின் இயக்குநர் ஓஸ்மெனே செம்பெனே நல்ல படங்கள் தருவதில் ஏற்கெனவே முத்திரை பதித்திருக்கிறார் என்று தெரிகிறது. கிடைத்தால் அவரின் வேறு படங்களையும் பார்க்க வேண்டும்.

இன்னொன்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் இசை. தன் மகளே தானே கவர்ந்து சென்று கொன்று விட்டதை எண்ணி துயரம் தாங்காமல் அழுது அரற்றி துவண்டு விழும் அந்த தாயிடம் மற்றொரு கைக்குழந்தையை கொடுத்து இதை தன் மகளாக இனி வளர்த்து வருமாறு அந்த ஊர் பெண்கள் கூறுகின்றனர். மனதை பிசையும் அந்தக் காட்சியில் அந்த தாய் அந்தக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு ஒரு பாடலை பாடியவாறு நடக்கிறாள். அந்த பாஷை புரியாவிட்டாலும் நம்முடைய அவளின் துயரத்தை உணர்வு நாளங்களுக்கும் கடத்தி நம்மையும் கண் கலங்கச் செய்கிறது அந்த குரலும், அதில் இழையும் லயமும்.

நல்ல ஒரு படத்தை பார்த்த திருப்தி!

-0-

இந்தப் படம் பின்தங்கிய ஆப்பிரிக்க கிராமங்களில் நிலவும் கலாச்சார சூழலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனக்கு அதில் தனிப்பட்டு கவனிக்கத் தோன்றியது அவர்களுடைய குடும்ப வாழ்க்கை முறையை. ஒரு கணவன் - பல மனைவி. ஆனால் சேர்ந்து வாழ்வதில் அவர்களுக்குள் ஒரு சிக்கலும் இல்லை. உண்மையில் ஒருவருக்கு ஒருவர் அன்பை பொழிகின்றனர். யாருடைய பிள்ளையாக இருந்தாலும் அதன் மீதான பாசம் பொதுவானது. ஒரு காட்சியில் இளையாள் கணவனுடன் சம்போகம் செய்துவிட்டு களைத்து போய் நீராடிக் கொண்டிருக்கும் போது, மூத்தாள் அவளுக்கு தண்ணீர் சொரிகிறாள்.

கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் அவரவர் வாழ்க்கை முறைகளின் வசதிகளின் பாற் பட்டது. ஓரிடத்தில் கூட்டுக்கலவி என்பதும், அதன் காரணமாக தாய்வழி சமூகம் என்பதும் அமைதியாக வாழ்க்கை முறையை வழிகாட்டிக் கொண்டிருக்க, உலகின் வேறொரு மூலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கலாச்சாரமாக பொதுமைப்படுத்தி முச்சந்தியில் நிற்க வைத்து உயிர் போகும் வரை கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள்.

விசித்திரமான உலகம்!


மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு - ஒரு நனவிடை தோய்தல்

Posted: Tuesday, April 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஹ்ம்ம்.. கொசுவர்த்தி சுத்த வைக்கிறாய்.

கடைசி பரிட்சை முடிந்ததும் சினிமா போகவேண்டும் என்று முன்பே பேசி வைத்திருந்தோம் என்று நினைக்கிறேன். தினமும் பள்ளியிலேயே படுத்துப் படித்த பசங்க யார் யாரென்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் அன்று யார் யார் சினிமா போனோம் என்று தெரிந்து விடும்.

பாட்டை யார் பாடியது என்று விவாதித்தது ஞாபகம் இல்லை, ஆனால் எஸ்.பி.பி.யை நகலெடுத்து இருந்த மனோவின் குரலை வியந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது. அப்புறம் நாள் செல்ல செல்ல இரண்டு குரல்களுக்கும் இடையேயான வித்தியாசததை அறிந்துணர செவிப்புலன்கள் பழகிக் கொண்டுவிட்டன.

தேர்வை முடித்துக்கொண்டு நான் பார்த்தது அந்தப் படம் என்றால், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு படம் சென்று பார்த்தேன்: புது மனிதன். பார்க்க அப்படத்தைத் தேர்வு செய்ததிலும், அழைத்துச் சென்றதிலும் எனக்கு கூட்டாளி - போதுப்பட்டி இளங்கோ. அவன் அப்போது சத்யராஜின் தீவிர ரசிகன். இப்போது எப்படி என்று கேட்பது சரியாக இருக்காது. ஆனாலும் இரண்டு வருடங்களுக்கும் முன்பு திருச்சியிலிருந்து ஊர் திரும்பும்போது பேருந்தில் சந்தித்தபோது, பழைய சம்பவங்களை நினைவுபடுத்திக் கேட்டேன். ஹிஹி என்று சிரித்தான். என்ன அர்த்தம் என்று ஆராய விரும்பவில்லை.

-0-

பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து கிடைத்த இரண்டு மாத விடுமுறையும் அவ்வளவு கொண்டாட்டமானவை. கவலைகள் ஏதுமின்றி கால் போன போக்கில் மகிழ்ந்து விளையாடித் திரிந்தவை. புதிய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்தவை. அந்த இன்பகரமான தருணங்களை எல்லாம் நினைத்தால் நெஞ்சம் விம்மும்.

அதற்குப் பிறகு காலம் காட்டாற்று போக்கான தன் வழியில் தக்கையென இழுத்துச் சென்று பல மூலைகளிலும் முகடுகளிலும் முட்டவைத்து அனுபவ புத்தியை அளிக்க பல வகைகளிலும் அலைக்கழித்து முடிவில் கரை ஒதுக்கி விட்டது. இன்றைய என் மனநிலையின் முதிர்ச்சியையும் இருபது வருடங்களுக்கு முன்பிருந்த மனநிலையின் சிறுபிள்ளைத்தனத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அந்த சிறுபிள்ளைத்தனம் சிலாக்கியமானது என்பதை மறுநொடியே சொல்லிவிடலாம்.

அதில் வாழ்க்கையை அந்த நாளின் அந்த நொடியின் இன்பத்திற்காக செலவிட்ட ஒரு சௌகரியம்; அதிஇன்பம் இருந்தது. குடும்பம், எதிர்காலம், நிதி ஆதாரம், நில உடமை குறித்த கவலைகள் கிஞ்சித்தும் இல்லாமல் சிறகடித்த பறவைகளாய் இப்பிரபஞ்ச பேரின்ப பெருவெளியின் சிறுபுள்ளிகளாய் சுற்றித் திரிந்தோம். அந்தக் கள்ளம், கபடு, சூது, துரோகம், முதுகு சொறிதல், வஞ்சம் இல்லாத ஒரு உலகம் இனி திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அதன் ஞாபகம் வரும்போதெல்லாம் இருக்கும் உலகத்தில் பெருமூச்சுகள் விட்டு நாள் கடத்த வேண்டியதுதான். காலம் கறந்த பால் இனி மடி புகாது!
மேலும்...

இன்னொரு ஜாதி இன்னொரு கட்சி

Posted: Monday, April 11, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments



இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளின் கூட்டணிகள் ஆளுக்கு ஒருபுறம் போட்டியிடுகின்றன.

தேசிய கட்சியாகிய பிஜேபி தனித்து போட்டியிட்டு மூன்றாவது வாய்ப்பாக வாக்காளன் முன்னால் நிற்கிறது.

இவர்கள் எல்லாம் அறிந்த முகங்கள்.

ஒரு புதிய முகமாக ஒரு ஜாதிக்கட்சி இந்தத் தேர்தலில் மற்ற பெரிய கட்சிகளுக்கு இணையாக எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, பெரிய பெரிய விளம்பரங்களாக செய்திதாள்களில் தந்து கவனத்தை ஈர்த்து வருவதை கவனித்திருக்கலாம். அதுதான் இந்திய ஜனநாயக கட்சி (http://ijkparty.org/). IJK என்று சுருக்கமாக அழைத்துக் கொள்கிறார்கள்.

இருக்கும் எல்லா ஜாதிகளின் சங்கங்களும் தங்களை அரசியல் கட்சிகளாக பதிவு செய்து கொண்டு ஒவ்வொருவராக அரசியல் களம் இறங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிய உதயம் இந்த ஐஜேகே. பார்க்கவ குல சங்கத்தின் அரசியல் அவதாரம். இவர்களை உடையார்கள் என்று சொன்னால் எளிதில் புரியும். இவர்களின் உட்பிரிவுகள் - மூப்பனார், நயினார்.

இப்போது இந்தக் கட்சியை துவக்கி இருப்பவர் பாரி வேந்தர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் பச்சமுத்து. பச்சமுத்து என்னும் பெயர் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை என்பதால் பாரிவேந்தர் என்று அழைத்துக் கொள்கிறார் போலுள்ளது. இந்த காலத்தில் ஒரு கட்சியை நிறுவி ஒரு பொது தேர்தலில் மற்ற பழம் தின்று கொட்டை போட்ட பெரிய கட்சிகளுக்கு இணையாக எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு பெரும் முதலீடுகள் தேவைப்படும். அதற்கான நிதி ஆதாரம் பச்சமுத்துவிடம் கொட்டிக் கிடக்கிறது. பச்சமுத்து தான் சென்னை, திருச்சி, டெல்லியில் கல்விச் சேவை(!) செய்து வரும் SRM பல்கலை கழகங்களின் வேந்தர். அதாவது முதலாளி.

கருப்பை வெள்ளையாக்கிக் கொள்வதுடன் தன்னுடைய ஜாதியின் தனிப்பெரும் தலைவராகவும், தமிழகம் முழுவதும் பரவி இருக்கும் உடையார்களின் அரசியல் முகமாகவும், அடுத்த தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் உருவெடுக்க பெரும் பணம் வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார் பச்சமுத்து. நிச்சயம் அவர்களுடைய ஜாதிகளின் ஓட்டுக்களை அவர்கள் கணிசமாக சேகரம் செய்து கொள்வார்கள் என்று நம்பலாம்.

காரணம், மக்களிடையே இருக்கும் ஜாதிப் பற்று. ‘நம்ம ஜாதிக்காரன் நிக்கறான்பா. அவனுக்கு போடாம யாருக்கு போட. ஓட்டு கம்மியா போயி டெபாஸிட் போச்சின்னா ஜாதி மானம்ல போவும்’ என்று என் ஜாதிக்காரர்கள் பேசுவதை நான் அனுபவப்பட்டிருக்கிறேன். ‘இததன நாள் எவன் எவனுக்கோ போட்டோம்.. நம்ம ஜாதிக்காரனும்தான் பொழச்சிட்டு போகட்டுமே’ என்பதும் ஒரு பொது கருத்து. இது எல்லா ஜாதி மக்களிடமும் இருக்கும் ஒரு சுயஜாதி அபிமானம். அதைத்தான் பச்சமுத்து போன்றவர்கள் தங்கள் அரசியல் அபிலாஷைகளுக்கு அனுகூலமாக்கிக் கொள்கிறார்கள்.

தலித் அரசியல் என்பது நீண்ட காலமாக அரசியல் களனில் ஓங்கி ஒலிக்கும் குரல். அதன் நியாயங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை. ஒடுக்கப்பட்ட இனத்தின் அரசியல் முக்கியத்துவம் ஒரு சமூகவியல் கட்டாயமும் கூட. ஆனால் பொருளாதார நலன்களில் வலுவான இடத்தில் இருக்கும் மேல்ஜாதி அமைப்புகளும் ஒடுக்கப்பட்ட இனங்களின் கோரிக்கைக்கு இணையான குரல்களை எழுப்பி அரசியலில் குதித்திருப்பதன் பின்னால் இருப்பது அதன் பெருமுதலாளிகளின் சுயநல அரசியலே என்பது அந்தந்த ஜாதியின் நிறுவனர்களையும் தலைவர்களையும் பார்த்தாலே புரியும். அவர்களை ஆதரிப்பவர்களும் சிறுமுதலாளிகளாகவே இருப்பதைக் காணலாம்.

பா.ம.க.,வில் ஆரம்பித்து சென்ற சில தேர்தல்கள் வரை தேவர், கவுண்டர்கள், செட்டியார் என்று வரிசையாக ஜாதி சங்கங்கள் அரசியல் கட்சிகளாகி வரும் நிலையில் அடுத்து எந்த பெரிய ஜாதி தங்கள் இனத்தை காக்க பத்து அம்ச கோரிக்கைகளுடன் அரசியலில் குதிக்கப் போகிறது என்பது அதிலுள்ள பெரும் பணக்காரர்களை பொறுத்தது. சாமானியனுக்கு ஜாதியை விட கவலைப்பட வேறு பல அன்றாட வயிற்றுப்பாடுகள் இருக்கின்றன.
மேலும்...

திண்ணைப் பேச்சு : ஜெ. பிரசாரம், இருவர் படம்

Posted: Saturday, April 9, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
பல ஆண்டுகள் கழித்து தேர்தல் சமயத்தில் நாமக்கல்லில் இருக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் ஒரு சுரத்தும் இல்லை என்னும்படியாக தேர்தல் முஸ்தீபுகள் ஆர்பாட்டமில்லாமல் நடந்து வருகின்றன. திருமங்கலம் ஃபார்முலாவில் தேர்தல் வியூகம் அமைத்து வைத்திருந்த இருதரப்பும் தேர்தல் கமிசனின் கெடுபிடிகளில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளன. மக்கள் பரமஆறுதலாக உள்ளனர்.

தேர்தலை பொருத்தவரை நான் எதிர்பார்ப்பது நல்ல மேடைப் பேச்சாளர்களின் உரையை கேட்க வேண்டும் என்பது. துரதிர்ஷ்டவசமாக குசுபு, பாக்கியராசு, செந்தில், வையாபுரி போன்றவர்களே இதுவரை பிரச்சாரம் செய்ய வந்தனர். அவர்களை சென்று கேட்பதற்கு பதிலாக பழகிப்போன கஷ்டமாக நாதஸ்வரத்தையே குடும்பத்தாரோடு சேர்ந்து பார்த்து விடலாம் என்று என்னை வருத்திக் கொள்ளாமல் காத்துக் கொண்டேன்.

இவ்வாறிருந்த நிலையில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இன்று ஜெயலலிதா நாமக்கல் வந்தார். ஆனாலும் அவர் உரையை கேட்க ஒரு ஆர்வமும் எனக்கு கிளர்ந்தெழவில்லை. ஸ்டீரியோடைப்பாக எல்லா ஊர்களிலும் பேசியதையே பேசிக்கொண்டு, ஒரு உற்சாகமும், சாமார்த்தியமும், நையாண்டியும், சிலேடையும் இல்லாமல் ரோபோத்தனமாக ‘அண்ணா நாமம் வாழ்க. புரட்சித்தலைவர் நாமம் வாழ்க’ என்று சொல்லி வலம் வரும் அவரை ஒரு சாதாரண பேச்சாளர் பட்டியலில் கூட என்னால் சேர்க்க இயலாது.

ஆனால் என் கருத்துக்கெல்லாம் வீட்டில் மதிப்பிருக்குமா அவர் வந்து பேசப்போகும் இடம் என் வீட்டிற்கும் எதிர்புறமுள்ள சாலையில்தான் எனும்போது. அதிலும் வெறும் நாலே எட்டில் எட்டிப் பிடிக்கும் தொலைவு. வீட்டுப்பெண்களும் அக்கம் பக்கமுள்ள அக்காமார்களும் காலை முதலே சென்று பார்க்க ஆயத்தமாகி சரியாக 1 மணிக்கே சென்று இடம்பிடிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

வழக்கம் போல வண்டி வண்டியாக தொண்டர்கள் கொண்டு வந்து இறக்குமதி செய்யப்பட்டனர். ஊரெங்கும் ஒரே அலம்பல் சலம்பல். சாலையோர சந்து பொந்துகளெல்லாம் டாஸ்மாக்காகவும் கழிவறைகளாகவும் ஆகிப்போயின. அவர்களில் பெண்கள் தான் பாவம். அவசரத்துக்கு ஒதுங்க இடம் தேடி அலைந்த வண்ணம் இருந்தனர். ஒரு சிறிய மறைவிடம் கூட சேலையை முட்டி வரை உயர்த்த வைத்தது. அந்தளவில் அரசியல் தொண்டர் படை பெண்கள் இன்னும் சுடிதாருக்கு மாறாமல் இருப்பது ஒரு சௌகரியமான விஷயம் தான்.

1 மணி என்பது அறிவிக்கப்பட்ட நேரம். நான் சென்று சாலையில் நின்றது 2.50 மணிக்கு. அங்கே நடந்த தொண்டர்களின் தள்ளாட்டத்தையும், ஒரு குடிமகளின் குத்தாட்டத்தையும் கண்டு களித்தேன். உச்சி வெயிலில் சிலர் சில குழந்தைகளையும் கையோடு தொண்டர்கூலிவேலைக்கு அழைத்து வந்திருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. அவர்களின் தாகத்தை பாக்கெட் பாக்கெட்டாக தணித்து உதவியது பாக்கெட் வாட்டர். நேரம் 3.30 ஆனது. ஜெ. விரைவில் வந்துவிடக்கூடிய அறிகுறியை காணோம். அதற்கு மேல் எனக்கு பொறுமை இல்லை. குவிந்திருந்த கூட்டத்தை சில போட்டோக்கள் எடுத்துக் கொண்டு சோலியை பார்க்க நகர்ந்து விட்டேன்.
4 மணியளவில் தலைக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தது. தொண்டர்கள் ஆர்பரிக்கும் சத்தமும் தொலைவில் கேட்டது. அதில் கலந்திருந்தது உள்ளூர் மக்களின் கரகோஷமும்தான் என்று என்னால் சொல்ல முடியும்.

நாமக்கல் தற்சமயம் தன் மேல் பச்சை வண்ணம் போர்த்தி அதிமுக ஆதரவில் திளைத்துக் கொண்டுள்ளது. அடுத்து 2015-ல் ஸ்டாலின் அபிமானத்தில் திளைக்கக்கூடும். 1990-ல் இருந்தே ஆட்சி மாறி மாறிதானே வந்து கொண்டுள்ளது. அந்த Anti-Incumbent Fever இப்போதைக்கு விட்டு விடாது.

-0-

நான் எழுதுவதாக ஒப்புக்கொண்டு நிலுவையிலுள்ள விஷயங்களை பட்டியலிட்டு பார்த்தேன். ஞாபகத்தில் உள்ளவரை சுமார் 10 என்று எண்ணிக்கையில் தேறுகிறது. அவையெல்லாம் அடுத்தடுத்த தினங்களில் ஒவ்வொன்றாக எழுதி முடித்துவிட இருக்கிறேன். பிரச்னை என்னவென்றால் எதையும் தீர்மானித்துக் கொண்டு எழுத அமர்வதில்லை. நேரம் கிடைக்கும் நேரத்தில் அமர்ந்து கைபோன போக்கில் எழுதுகிறேன். அதனால் அன்றைய டாபிக் எழுத்தாகி விடுகிறது. எல்லாம் ஒரு பயிற்சிக்காக.

படிப்பதும் எழுதுவதும் மட்டுமே வாழ்க்கையாகவும் தொழிலாகவும் வாய்க்கப் பெற்றோரை நினைத்து பொறாமைப் படுகிறேன். என்ன ஒரு சௌஜன்யமான வாழ்க்கை அது!

-0-

ஏதோ ஒரு லோக்கல் கேபிள் டிவியில் ‘இருவர்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் வந்தபோது பார்த்தது. அப்போது பிடிக்கவில்லை. (இன்று பார்த்தவரையில் இப்போதும்கூட பிடிப்பதற்கான முகாந்திரம் தெரியவில்லை). அதற்கு பிறகுதான் திராவிட வரலாறின் அரிச்சுவடி பாடங்களை வாசிக்கத் துவங்கினேன். இன்று ஓரளவு விஷயஞானம் உண்டு என்னும் நிலையில் அப்படத்தை மீண்டும் முழுவதுமாக பார்க்க விரும்புகிறேன்.

மாலையில் வெளியே சுற்றித் திரிந்து அதன் சிடியை வாங்கிவிட முனைந்தேன். நாமக்கல் சிடி கடைகளில் குவியலாக குப்பைகூளமான படங்கள்தான் குவிந்து கிடக்கின்றன. ஒரு பிரபல டைரக்டரின் படங்கள், அல்லது கிளாஸிக் பட வரிசை என்று வரிசைக் கிரமமான ஒரு ஒழுங்கு எதுவும் கிடையாது. பழைய அனுபவங்களைப் போல இன்றைய தேடலும் அலுப்பையே அனுபவமாக்கித் தந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை இணைய இணைப்புகள் இன்னும் வேகமாக வேண்டும். தேவைப்படும் திரைப்படங்களை பணம் செலுத்தி உடனடியாக இணையத்தில் வாங்கிக் கொள்ளும், அல்லது நேரடியாக பதிவிறக்கிக் கொள்ளும் வசதி வர வேண்டும். அதுதான் இம்மாதிரி குறைகளை நிவர்த்திச் செய்யும். அப்படி ஒரு காலம் வந்தால் இந்த சிடி, டிவிடி கடைகள் எல்லாம் தன்னால் காணாமல் போய்விடும்.

ஆனால் காலக் கொடுமையாக இன்னும் இங்கே இணைய இணைப்பு 512 kbps-க்கு மேலே செல்லவில்லை. என்னுடையதெல்லாம் வெறும் 256 kbps தான். உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் 1.5 Mbps. இந்தியாவிலோ அது வெறும் 772 kbps தான். இணைய வேகத்தில் உலக அளவில் இந்தியா 115 இடத்தில் பின்தங்கியுள்ளது.

இதிலுமா?
மேலும்...
Posted: Thursday, April 7, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இந்தத் தேர்தலை பொறுத்தவரை...



நம் நாட்டில் ஒரு கட்சிக்கு வாக்களித்து நம்மை ஐந்து ஆண்டுகள் ஆள அவர்களுக்கு வாய்ப்பளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினால் அவர்களுக்கு அந்த ஐந்தாவது ஆண்டுதான் நம்மைப் பற்றி ஒரு அக்கறையும், அச்சமும், பதற்றமும் வருகிறது. காரணம் மீண்டும் எதிர்கொள்ளவிருக்கும் தேர்தல். அதுதான் ஜனநாயகத்தின் அற்புதம்; அதன் கையிலுள்ள பெரும் ஆயுதம். அதை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்பதைப் பொறுத்துதான் நமது அடுத்த ஐந்து ஆண்டுகளின் தலைவிதி நிர்ணயமாகிறது. அதை கவனத்தில் கொண்டு நாம் நம் வாக்கை முடிவு செய்யவேண்டும்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை இரண்டு தகுதியற்ற தலைவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் ஒரு கட்டாய சூழலில் — கூட்டணி, கூட்டணி அரசியல், கூட்டணி தர்மம், ஆணவம், அகங்காரம், பிரச்சார கோமாளிகளின் உளறல்கள், ஊழல், சந்தர்ப்பவாதம் — ஆகியவற்றையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை. அதனால் இரு தரப்பையும் பற்றிய ஆழமான பரிசீலனை என்னிடம் கிடையாது. மேலோட்டமான சில கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று காலை பூங்காவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு நாற்சந்தியில் அமைந்திருக்கிறது என்பதால் அங்கே வழக்கம் போல பிரச்சார ஆட்டோ நின்று கொண்டிருந்தது. ஒரு பிரச்சாரகர் எதைப் பற்றிப் பேசினாலும், மீண்டும் மீண்டும் சேர்த்துக்கொண்ட ஒரு வாக்கியம் ‘மறந்தும் இருந்து விடாதீர்கள். இருந்தும் மறந்து விடாதீர்கள்..!’. கண்டிப்பாக ஓட்டுப் போடும் முன் மக்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டிய ஒரு வாக்கியம்தான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.

கடந்த கால ஆட்சியின் சரி-தவறுகளை மறந்து விடாமல் பரிசீலனைக்கு உட்படுத்திதான் ஓட்டளிக்க வேண்டுமே தவிர, கடைசி நேர தேர்தல் கூத்துகளில் கவனம் சிதறி ஆட்சியாளர்களின் பழைய நடவடிக்கைகளை மறந்து தவறான ஒரு முடிவை எடுத்துவிடக் கூடாது. ஆனால் கடைசி நேர அரசியல் ஸ்டண்ட்களை பொறுத்து ஓட்டளிப்பதுதான் பெரும்பாலும் டக்கிறது.

என்னைப் பொறுத்தவரை கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும், ஊழலும், பல்மட்ட அராஜகமும், வாய்ஜால அரசியலும், திமுக மா.செ.க்களின் குறுநில மன்னர் மனோபாவமும் தற்காலிகமாவது முடிவுக்கு வர வேண்டும்.

சாகும்போதும் பதவியில் இருந்துகொண்டே சாகும் கௌரவம் கிடைக்கப்பெறும் அளவிற்கு கருணாநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது. அதனாலும் தனிப்பட்ட விருப்பமாக ஆட்சி முடிவுக்கு வர விரும்புகிறேன்.

ஈழத்தில் மக்கள் சாகும்போது இங்கே கருணாநிதி நடத்திய நாடகங்கள் ஒன்றா, இரண்டா? அமைச்சரவையில் பங்கு வாங்க பதறியடித்துக் கொண்டு டெல்லிக்கு ஓடத் தெரிகிறது. சீட் பகிர்வில் பிரச்னை என்றால் ஆட்சிக்கு ஆதரவையே வாபஸ் பண்ணத் தெரிகிறது. ஆனால் மக்கள் கொத்து கொத்தாக சாகும்போது நானென்ன செய்ய என்று அங்கலாய்க்க மட்டுமே தெரிந்தது. மக்களை முட்டாள்களாக நினைத்து ஆடிய அழுகுணி ஆட்டங்களுக்குத் தக்க பாடம் புகட்டப்பட வேண்டும்.

இருநாட்கள் முன்பு ஆட்சிக்கு வந்தால் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று ஒரு தேர்தல் வாக்குறுதியை படித்தேன். கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். மேலும், ‘தேவைக்கு அதிகப்படியாகவே மின்சாரம் வழங்கப்படும்’ என்று அதில் ஒரு முத்தாய்ப்பு வேறு. இதை எதிர்கட்சி சொல்லலாம். ஆட்சி அதிகாரத்தில் ஐந்து வருடங்கள் இருந்தவர்கள் சொல்லலாமா? இருந்தவரை மின்சார உற்பத்தியை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் என்ன? அப்போது முடியவில்லை என்றால் மீண்டும் வந்தால் மட்டும் எதன் அடிப்படையில் முடியும்? தமிழன் - எது சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் ஏமாளி என்று நினைப்பு. இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.

போட்டத் திட்டங்களெல்லாம் கொள்ளையடிக்க. 2G வெளிவந்த ஊழல். சேது சமுத்திரத்தில் கப்பலை விட்டு தூர் வாறியதில் மறைந்துள்ள கொள்ளை ஒரு விஞ்ஞான ஊழல். இதுபோல் இன்னும் எவ்வளவோ! ஊழலை மனதளவில்கூட அங்கீகரிக்கும் ஒரு சமுதாயமாக நாம் முற்றிலும் மாறிவிடக்கூடாது.

திருவாரூரில் கருணாநிதிக்கு ஓட்டு கேட்கும் வேலையை அவர் மகள் செல்வி செய்து வருகிறார். சில நாட்கள் முன்னாள் பத்திரிக்கையில் ஒரு புகைப்படம் பார்த்தேன். ஒரு முதியவர் ஓட்டு கேட்க வந்த செல்வியிடம் திமுக ஆட்சியைப் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்க, அவரிடம் திருப்பி வாக்குவாதம் செய்ய முடியாமல் செல்வியின் முகம் இருண்டு அவர் வந்த வழி திரும்பியதை படமெடுத்து போட்டிருந்தார்கள். அந்த கடைகோடி முதியவரின் உணர்வுதான் இன்று இந்த ஆட்சியால் அதிருப்தி அடைந்திருக்கும் மெஜாரிட்டி தமிழர்களின் உணர்வும்.

எழுத எழுத காரணங்கள் நீள்கின்றன. நீட்டித்துச் செல்லத்தான் எரிச்சலாக உள்ளது.

கருணாநிதியை யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள்?

  1. கருணாநிதியை விட ஜெயலலிதாவின் மேல் தனிப்பட்ட வெறுப்புடன் இருப்பவர்கள்.

  2. திமுகவினரை உறவினர்களாக கொண்டவர்கள்.

  3. திமுக ஆட்சியால் பலனடைந்த/பலனடைய எதிர்பார்க்கும் மைனாரிட்டியினர். (like govt staffs, contractors..)

  4. ஜெ.யின் கண்டிப்பான ஆட்சிமுறையின் மீது(strict bureaucracy) கசப்பும், அச்சமும் கொண்டவர்கள் (like those same govt staffs)

  5. எந்த வித பரிசீலனைகளும் இல்லாத பரம்பரை திமுக அனுதாபிகள்.

  6. அரசின் கஜானா நிலை தெரியாமல் இலவசங்களுக்கு ஆசைப்படும் வெகுளிகள்.

இப்படி இன்னும் சில காரணங்களை அடுக்கிச் செல்லலாம். எல்லாம் தனிப்பட்ட நலன்கள், விருப்பு வெறுப்புகள் சார்ந்ததாகவே இருக்கும்.

பொதுநலன் என்று பார்க்கும்போது, ஒரு ஆட்சி சரியில்லை என்றால் தயவு தாட்சண்யமின்றி அவர்களை தண்டிப்பதுதான் ஜனநாயகத்தை சமநிலையில் வைத்திருக்க இருக்கக்கூடிய ஒரே வழி. அடுத்து வருபவர்களுக்கும் மக்கள் நலனில் ஒரு பயம் கலந்த அக்கறை இருக்கும். உண்மையில் ஜனநாயகத்தின் தாத்பர்யமும் அதுதான். ஒரு ஆட்சி கயமைத்தனமானது என்றால் சுயபிரக்ஞை கொண்ட எந்த குடிமகனும் அதை தண்டிக்கத் தயங்கக்கூடாது. அவர்களை நீடிக்கச் செய்ய சுயவிருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரக்கூடாது. காரணங்களை ‘கண்டுபிடித்து’ நியாயப்படுத்த முயலக்கூடாது. அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

இந்தத் தேர்தலை பொறுத்தவரை இதுதான் என் நிலைப்பாடு. அதாவது, திமுகவை அதன் கடந்த கால ஆட்சியின் தவறுகளுக்காக தண்டிப்பது.

-0-

அரசியலில் மாத்திரமல்ல எதிலுமே நாம் ஒரு நன்னம்பிக்கை (optimism) கொண்டிருப்பது அவசியம். அது மட்டுமே நம்மை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். இல்லையென்றால் இன்றே சயனைடை சுவைத்து முடித்துக் கொள்ளலாம். காரணம் உலகம் அதன் எல்லாக் கூறுகளிலும் அவ்வளவு அபத்தங்களால் நிறைந்தது. நன்னம்பிக்கைதான் உலகை இன்றளவும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. எல்லா சீர்திருத்தங்களுக்கும் அடிகோலியுள்ளது. எல்லா புரட்சிகளுக்கும் வித்திட்டிருக்கிறது. எல்லா பரிணாமங்களுலும் உடனிருந்திருக்கிறது.

அந்த optimism, logical optimism தானா என்பதை மட்டும் சரிபார்த்துக் கொள்வது முக்கியம்.

அரசியல் கட்சிகள் என்ன மாதிரி நடந்து கொள்கின்றன என்பது அடுத்தது. நமக்கு முன்னுள்ள வாய்ப்புகளில் நாம் சரியானதை தேர்ந்தெடுக்கிறோமா என்பதுதான் முக்கியம். தேர்தல் அரசியலில் தொடர்ந்து எடுக்கப்படும் சரியான முடிவுகள் அரசியலில் சீர்திருத்ததை நிச்சயம் கொண்டு வரும். இரு கட்சிகள் தொடர்ந்து மாறி மாறி ஏமாற்றி வந்தால், மாற்று சக்தியாக மூன்றாவதாக ஒன்று கண்டிப்பாக உதிக்கும். அது மாறுதலை கொண்டு வரும். இதுவரையான அரசியல் சரித்திரத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு இதனை சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

ஒரு எளிய உதாரணமாக, தொடர்ந்து அரசியல் சீர்கெட்டு, அராஜகம் மலிந்து கிடந்த பீகாரில் இன்று ஒரு நல்லாட்சி வந்து விடவில்லையா? அந்த நல்லாட்சிக்கு பீகார் மக்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி வாய்ப்பளிக்கவில்லையா? அதுதான் optimism!


மில்லியன் டாலர் கேள்வி

மில்லியன் டாலர்களெல்லாம் (5 கோடி) இப்போது பஸ் கூரைகளிலேயே கிடைப்பதால் இனி இந்த மாதிரி சொலவடைகளுக்கெல்லாம் மதிப்பிருக்காது.

-0-

திமுக பற்றி நான் எழுதியவற்றில் பலவற்றை சேர்த்துக் கொள்ள வில்லை. முக்கியமாக கருணாநிதி அரசு கேபிள் டிவி திட்டத்தை எதிர்கொண்டு அடித்த அந்தர் பல்டிகளை.

-1-

அதிமுக ஆட்சியில் இருக்கும்போது ஜெ. சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் எதேச்சதிகாரத்தை தடுக்க கேபிள் டிவிக்களை அரசுடமையாக்கும் மசோதா கொண்டு வந்தார். உடனே கருணாநிதி குடும்பத்தாருக்கு குலைநடுங்கிப் போனது. உடனே கட்சியின் முக்கியத் தலைகளெல்லாம் திரண்டு சென்று கவர்னரிடம் மனு கொடுத்து ஒப்பாரி வைத்தார்கள். தற்காலிகமாக அதில் முட்டுக்கட்டை விழுந்தது. அரசு கேபிள் வருவதற்குள் தேர்தல் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

-2-

இப்போது காட்சி மாறுகிறது. தினகரன் அலுவலகம் எரிப்பு விவகாரத்தில் கருணாநிதி, அழகிரியுடன் மாறன் சகோதரர்களுக்கு சச்சரவு ஏற்படுகிறது. இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முழங்குகிறார் அழகிரி. ராயல் கேபிள் விஷனை துவக்கி மதுரையின் கேபிள் டிவி தொழிலை கையகப்படுத்துகிறார்.அவர்களின் டிவி சேனல்களுக்கு போட்டியாக கலைஞர் தொலைக்காட்சி உருவாகிறது. மாறன் சகோதர்களுக்கு கோடிகளை குவிக்கும் சுமங்கலி கேபிள் விஷனை முடக்க அரசு கேபிள் டிவி அறிவிப்பை வெளியிடுகிறார் கருணாநிதி. அரசு கேபிளுக்காக நவீன ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களும், நவீன உபகரணங்களும் 50 கோடி செலவில் மாவட்ட தலைநகரங்கள் தோறும் வாங்கி குவிக்கப்படுகின்றன. மாதக் கட்டணம் 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது. சுமங்கலி கேபிளை எதிர்த்து லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

-3-

இப்போது ‘திடீர்’ குடும்ப சமாதானப் படலம். காட்சிகள் மாறுகின்றன. அழகிரியும், மாறன் சகோதர்களும் மாமா-மாப்ளே என்று சிரித்தபடி போஸ் கொடுக்கின்றனர். பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்ந்து கொள்கின்றன. மக்கள் பணம் 50 கோடி வாரியிறைத்த அரசு கேபிள் கிடப்பில் போடப்படுகிறது. அரசு கேபிளை நம்பி அணி திரண்ட கேபிள் ஆபரேட்டர்கள் த்ராடில் விடப்படுகின்றனர். ராயல் கேபிள் விஷன் மட்டும் தொடர்ந்து சக்கைப் போடு போடுகிறது. ஜாக் கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் அது சென்னையிலும் தொழிலை விரிவுபடுத்துகிறது.

குடும்பத்தில் குடுமிப்பிடி என்றதும் கருணாநிதிக்கு தமிழக மக்களெல்லாம் அதிக கேபிள் கட்டணம் செலுத்துவது குறித்து உடனே கவலையும் அக்கறையும் ஊற்றெடுத்தது. அதே, பங்கு பாங்காக பிரித்துக் கொள்ளப்பட்டதும் தமிழக மக்கள் மீண்டும் அநாதைகளாகி விட்டனர். கருணாநிதியின் அக்கறையெல்லாம் புஸ்வாணமாகி விட்டது.


மேலும்...