கீதை

Posted: Thursday, December 30, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒன்றை தேடப் போய் சில சமயம் பல நாள்களாக தேடி சலித்த வேறு ஒன்று அகப்படும். இன்று அப்படியாக ஒரு பழைய ரசீதை தேடி என்னுடைய அலமாரியில் முத்து குளித்துக்கொண்டிருந்த பொழுது கீதை சம்மந்தப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகள் சில அகப்பட்டன. தேடியதை விட்டு விட்டு கிடைத்தவற்றை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் குறிப்புகளின் காலம் குறைந்தது ஆறு வருடங்கள் இருக்கலாம். கீதையை மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது.

கீதையை பொறுத்தவரை அது மகாபாரதத்தில் உபதேசமாகும் இடம் மட்டுமன்றி கீதையின் உள்ளடக்கமான பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும்போது அது நிச்சயமாக ஒரு இடைசெருகலே என்றுச் சொல்ல முடியும். ஆனால் ஒரு அழகிய இதிகாசத்தின் சுவாரசியத்துக்கு வலு சேர்க்கும் ஓர் அங்கம் அது என்னும் கருத்து மிகையானதில்லை. அது ஒரு அழகிய ஆபத்து. அதே நேரம் பாம்பின் விஷம் மருந்தாவது போல உள்ளத்தின் தெளிவுக்கும் அது ஒரு ஔஷதம் என்பதுதான் அதன் சிறப்பு.

கீதையை தன்னுள் தாளப் பொறுத்திக்கொண்டுள்ள மகாபாரதம் போன்ற இதிகாசங்களை பொறுத்தவரை எஸ்.ரா சொல்வது போல அவை இயல்பும் அதீதமும் கலந்தவை. அந்தக் கலப்பில் எது இயல்பு எது அதீதம் என்றெல்லாம் கண்டறிந்து கொள்வது கடினம். அவ்வாறாக கண்டறிந்து கொள்ள இயலாத ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு வடிவம் தந்து பார்க்க நினைப்பதும் ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த விளக்க வகைமைக்குள் அதனை அடையாளப்படுத்த நினைப்பதும், தர்க்க ரீதியாக தோல்வியை சந்திக்க கூடிய ஒரு முயற்சியாக இருந்துவருகிறது. ஆனால் அதனைத்தான் வெற்றிகரமாக வேதாந்திகளின் மரபு செய்துவந்துள்ளது. அவர்களின் வெற்றியின் அடித்தளம் மறுபுறமுள்ள மக்களின் அறியாமையில் உள்ளது.

இதனைப் பற்றி விரிவாக எழுதுவது பல நூற்றாண்டு கால வேதாந்த மரபை பற்றிய ஆய்வாக மாறிவிடக்கூடிய ஒன்றாக ஆகிவிடும். பணத்தின் பின்னால் அலைவது ஓய்ந்து வாசிப்பதற்காக மட்டும் அமரும் ஒரு காலம் கைகூடினால் இவற்றை தர்க்கரீதியாக அணுகி தன்னளவில் விளங்கிக்கொள்ள சித்தம் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.
மேலும்...

எல்லே இளம்கிளியே

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
எல்லே இளம்கிளியே

மார்கழித் திங்கள் 15ஆம் நாளில் பக்தர்கள் பாடி மகிழும் ஆண்டாள் திருப்பாவையின் கீழ்காணும் 15ஆம் பாடல் ஓர் அற்புதம்! ஒரு சிறிய அழகிய நாடகமே அதில் அடங்கியுள்ளது. பக்தியோடு தமிழின் செழுமைக்காகவும் பக்தி இலக்கியங்களை படியுங்கள் தோழர்களே.

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

(உறங்கிக்கொண்டிருப்பவளை தட்டியெழுப்பி பெருமாளை பாட அழைக்கிறாள் ஒருவள். அதற்கு மறுமொழி தருகிறாள் மற்றவள்)

இன்று அதிகாலை
செய்திதாளில்
இப்
பாடலையும் பொருள் விளக்கத்தையும் படித்ததில்
இருந்தே இதைத்தான்
வாய் முணுமுணுத்துக்கொண்டு இருக்கிறது.

பொருள்:

எழுப்புவோர்: ஏண்டி! இளங்கிளி போல் மிழற்றும் குமரிப் பெண்ணே, இன்னமும் உறங்குகின்றாயே!

தூங்குபவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்: நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிவோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

தூங்குபவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

தூங்குபவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவாலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.


மேலும்...

அதிதி தேவோ பவ

Posted: Wednesday, December 29, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
எல்லா மலேசிய தமிழர்களுக்கும் ஒரு கனவு இருக்கும். என்றாவது ஒரு நாள் தமிழக மண்ணை மிதித்து ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்னும் ஆசைதான் அது. தங்களுடைய மூதாதையர்களின் பூமி என்பதுடன் இதுவரை சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் மட்டும் கண்டு களித்து வரும் இடங்களை நேரிலும் பார்க்கும் ஒரு ஆர்வம் என்றும் சொல்லலாம்.

காலக்கிரமத்தில் இந்த ஆசை என்னுடைய மலேசிய தோழி ஒருவருக்கும் வந்து சேர்ந்தது. அவர் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய குணநலன்கள் எனக்கு நன்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியொட்டிய சிந்தனைகளை கொண்டவர். கடவுள் பக்தி அதிகம். தமிழ்நாட்டின் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்ல வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் விருப்பம். தொழில்முறையில் ஆசிரியர்.

இந்தியாவில் இருப்பது போன்ற கல்வியாண்டு மலேசியாவில் கிடையாது. அங்கே ஜனவரியில் பள்ளிகள் தொடங்கி நவம்பரில் முடிந்துவிடும். டிசம்பர் முழுக்க பள்ளி விடுமுறை நாட்கள். அதனால் டிசம்பரில் தமிழ்நாட்டு கோவில் குளங்களில் அதிகமாக மலேசிய தமிழர்களை காணமுடியும்.

தோழியும் அவ்வாறாக டிசம்பரில் கிடைத்த விடுமுறையில், இஷ்ட மித்ர பந்துக்களுடன் ஒரு குழாமாக தமிழகம் வந்து சேர்ந்தார். நிச்சயம் தமிழ் மண்ணை மிதிக்கும்போது அவருக்கு மெய் சிலிர்த்திருக்கும் என்றுச் சொல்லமுடியும். இங்கே வரும் தன் விருப்பம் பற்றி என்னிடம் அவ்வளவு பேசி இருக்கிறார்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானம் உண்டு. அதில்தான் பெரும்பாலும் மலேசிய தமிழர்கள் வருவார்கள். திருச்சி, அங்கே ஸ்ரீரங்கம், பின்னர் தஞ்சை பெரியகோவில், ராமேஸ்வரம், மதுரை என அவர்களுக்கு என்று ஒரு சுற்றுலா வழித்தடம் உண்டு. ஊரிலேயே சொல்லி அனுப்புவார்கள் போலும்.

அந்த வழியிலேயே ஆரம்பமானது தோழியின் யாத்திரையும். பயணத்தின் தொடக்கத்தில் உற்சாகமாக பேசி வந்தவரிடம் ஓரிரு வாரங்கள் போனதும் மெல்ல ஆர்வம் குன்றுவதை என்னால் உணர முடிந்தது. நாள் செல்ல செல்ல கோவில் குளம் பற்றிய தன் பேச்சை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு தாங்கள் ஷாப்பிங் சென்ற கதை, வழியில் கண்டது கேட்டது என அவருடைய வழக்கத்திற்கு மாறாக பேச ஆரம்பித்தார்.

இருவரின் அவசர குறு உரையாடல்களுக்கிடையே ஒருநாள் கிடைத்த ஆசுவாசமான உரையாடலின் போதுதான் காரணம் புரிந்தது. அந்த உற்சாகமின்மைக்கு காரணம் சில கோவில்களில் கிடைத்த கசப்பான அனுபவம் தான் என்று தெரிந்தது.

உதாரணமாக, பழநி மலையில் கோவில் உள்ளே தனி வழி மூலம் அழைத்துச் செல்ல என்றே புரோக்கர்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள். இது நாம் அறிந்ததுதான். முகத்தில் இந்தியக்கலை தெரிபவர்களிடம் அதிகம் சீந்த மாட்டார்கள். ஆனால் ஆளை பார்த்தால் மலேசியா, சிங்கப்பூர் மாதிரி தெரிந்தால் (அதான் அந்த குழுவில் இருக்கும் பெரியம்மா கைலி கட்டி இருப்பாரே..) உடனே மொய்த்துக்கொண்டு கெஞ்ச ஆரம்பித்து விடுவார்கள்.

அப்படி இவர்களிடம் மொத்தமாக 500 ரூ என பேரம் பேசி உள்ளே அழைத்து சென்ற நபர் 1200 தந்தால்தான் ஆச்சு என்று மிரட்ட ஆரம்பித்து விட்டாராம். அங்கேயிருந்த காவலர் உட்பட யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லையாம். இந்த முன்னுக்குப் பின் முரணான பணம் பறிக்கும் வேலை கண்டு முகம் எல்லோருக்கும் பேஸ்தடித்துவிட்டது. பணம் கூட பிரச்னையில்லை. ஆனால் இறைவனின் சந்நிதானத்தில் எப்படி இப்படியெல்லாம் ஏமாற்று வேலைகள் கிட்டத்தட்ட அஃபிஷியலாக அனுமதிக்கப்படுகின்றன என்று வருத்தப்பட்டார்.

அதேபோல மதுரையில் வெளியே முந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்ற மாலையை அம்மன் கழுத்தில் சாற்ற தனியாக நூறு ரூபாய் கேட்டார்களாம். சாற்றுவதற்கு எதற்கு காசு; அதான் அர்ச்சனைக்கும் உள்ளே அழைத்துச் செல்வதற்கு ஏற்கெனவே கொடுத்துவிட்டோமே என்று சொல்லிப் பார்த்து பலன் இல்லை என்றார். இதெல்லாம் அவருக்கு பெரிய அதிர்ச்சி.

‘நீங்கள் வேண்டுமானால் மலேசியாவின் எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் வந்து பாருங்கள், இப்படியெல்லாம் ஒரு இடத்திலும் கிடையாது’, என்று புலம்பினார்.

‘இப்போது புரிகிறது நீங்கள் ஏன் கோவில், தெய்வம் போன்றவற்றின் மீது பற்றில்லாமல் இருக்கிறீர்கள்’, என்று சொல்லி சிரித்தார். ஆனால், என்னால்தான் அந்த சிரிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. போவது தமிழனின் மானம் அல்லவா!

‘கோவில்கள் போகட்டும். இங்கே சந்தித்த பிரச்னை என்று வேறு எதுவும் உண்டா’ என்றதற்கு அவர் பகிர்ந்து கொண்ட அதிருப்திகளில் முதலிடம் பெறுவது நம் ஊரின் கலீஜான பொது கழிப்பிடங்கள். மேலும் திறந்த வெளியில் மல ஜலம் கழித்தபடி அமர்ந்திருப்பது, எல்லா சுற்றுலா தளங்களிலும் குவிந்து கிடக்கும் பிச்சைக்காரர்கள், போலவே அர்ச்சனை தட்டை வாங்கிக்கொள்ள சொல்லி சூழ்ந்துகொண்டு துரத்தும் கோவில் வாசல் கடைக்காரர்கள் என்றுபோன்ற விஷயங்கள் விரும்பத்தகாத அனுபவங்களாக இருந்ததாக சொன்னார். எல்லாம் வழக்கமாக நாம் கேட்கும் புகார்கள் தாம்.

இவற்றையெல்லாம் தாண்டி மனதில் நினைத்து வழிபட்ட தெய்வங்களின் வாசல்களை மிதிக்க முடிந்தது மிகவும் மனநிறைவாக இருப்பதாகவே சொன்னார். இந்த நிறைவுதான் மீண்டும் மீண்டும் பக்தர்களை தமிழக கோவில்களை சுற்றி வரச் செய்கிறது. அடுத்தமுறை வரும்போது இன்று கசப்பான அனுபவமாக தெரிவதெல்லாம் இவருக்கும் நம்மை போலவே பழகியிருக்கும். சுலபமாக எதிர்கொண்டு விடுவார்.

இங்கே பிடித்திருந்தது என்றால்: சரவணபவன் சாப்பாடு (அங்கே மலேசியர்கள் அதிகம் அசைவமே எடுத்துக்கொள்கிறார்கள்), அடையாறு ஆனந்தபவன் பலகாரம், மூட்டையாக துணிகளை கட்டிச்செல்லும்படியான ரெங்கநாதன் தெரு - பாண்டி பஜார் ஷாப்பிங் என்று வழமையாக கீழைநாட்டுத் தமிழர்கள் சுகித்து மகிழ்ந்து பாராட்டும் விஷயங்களே இவரையும் கவர்ந்திருந்தன. ஆனால் இவைகளுக்கும், அவர் எதிர்பார்த்து வந்திறங்கிய பண்பாட்டு அடையாளங்களுக்கும் ப்ராப்தி இல்லை என்பதை என்னால் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

அவர் விடை பெற்றுக்கொண்ட பிறகு சுற்றுலா பயணிகளை நமது தேசம் எதிர்கொள்ளும்விதம் பற்றி மனதில் வெகுநேரம் அசை போட்டுக்கொண்டு இருந்தேன். அதிதி தேவோ பவா என்னும் அளவிற்கு கடவுளாக விருந்தினரை உபசரிக்கவில்லை என்றாலும்கூட அவர்கள் முகம் சுழிக்கும்வண்ணம் பணம் பறிக்கும் வேலை செய்யாமல் இருக்கலாம். அதற்கென இருக்கும் அமைப்புகள் அவற்றை கண்காணிக்கலாம்.

ஆயிரம் சிறப்புகள் கொண்ட தேசமாக பாயிரம் ஆயிரம் பாடி வைத்துக்கொள்வது மட்டுமே ஒரு தேசத்தின் அடையாளம் ஆகிவிடாது. அது உண்மையில் இங்கேயுள்ள மனிதர்களிடம் இருக்கிறது.
மேலும்...

கமல் பற்றி மேலும் ...

Posted: Tuesday, December 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
தான் ஒரு சகலகலா வல்லவன் என்று மற்றவர்கள் புகழ்வதை நம்பி கமல் எதிலும் நீக்கமற நிறைந்திருக்க நினைக்கிறார். நடிக்க மட்டும் செய்தால் நல்லது.

எந்த மாதிரி வேண்டுமானாலும் நவரசங்களை வெளிப்படுத்தி நடிக்கட்டும். ஆனால் சமீபமாக ”இதோ, கமல்ஹாசன் நடிக்கிறேன், பார்” எனும்படி கன்னக்கதுப்புகளில் வித்தக கர்வத்தை தேக்கி வைத்துக்கொண்டு நடிக்கும் நடிப்பு வேண்டாம். இது கமல்ஹாசனின் இயல்பு அல்ல. எல்லோரும் அவரை ஒரேடியாக புகழ்ந்து புகழ்ந்து அவரும் முகஸ்துதிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு அதை நடிப்பில் வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டாரோ என்று சந்தேகமாக உள்ளது. 70-களில் சிவாஜி கணேசனை இப்படித்தான் பாழ்படுத்தினார்கள். இப்போது கமல் முறை.

ரஜினியையும் சூப்பர் ஸ்டார். எளிமையான மனிதர்.. அப்படி இப்படி என்று உச்சி குளிர வைக்கிறார்கள். ஆனால் அவை யாவும் அவருடைய தனிப்பட்ட குணாம்சங்களை பற்றிய கருத்துக்கள்; பாராட்டுக்கள். அதனால் அவர் அதைக் காப்பாற்றிக்கொள்ள மேலும் மேலும் எளிமையான மனிதராகவும், பெருந்தன்மையானவராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். இது ஒரு மனிதரை புகழ்வதன் பாஸிடிவான விளைவு. ஆனால் கமலை புகழ்பவர்கள் எல்லோரும் உலக நாயகனே, அறிவுகடலே, சகலகலாவல்லவனே என்று அவரின் திறமையை வாய் வலிக்க புகழ்கிறார்கள். அதனால் அவர் தன் அறிவுஜீவித்தனத்தை தன்னுடைய அத்தனை திரைப்பரிமாணங்களிலும் காட்டிவிட முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. அது ஒவ்வாமையையே விளைவாக தருகிறது.

ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கிறோம் என்றால் கிரேசி மோகன் இல்லாத கமலை முன்பெல்லாம் பார்க்க முடியாது. இன்று அதையும் அவரே எழுத நினைக்கிறார். ஹாஸ்யம் எழுவதற்கு அதீத திறமை வேண்டும். எல்லோராலும் இயலக்கூடிய காரியம் அல்ல. அவருடைய எல்லா பாடல்களையும் அவரே பாடி கஷ்டப்படுத்துகிறார். ஒரு வாதத்திற்காக ரோபோவில் கமல் நடித்திருந்தால் அதன் பாடல்களையெல்லாம் குரலை மாற்றி மாற்றி அவரே பாடியிருப்பார் என்றுச் சொல்ல முடியும். அதற்காக கமலுக்கு பாடத் தெரியாது என்று அர்த்தமில்லை. இன்றைய அவர் வயதுக்கு ஏற்றபடி மாற்றம் கண்டிருக்கும் குரலுக்கு தகுந்த பாடல்களை பாடலாம்.

இப்போது நடிப்புடன், கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டம்மியாக ஒரு டைரக்டரை போட்டு தானே டைரக்சனும் செய்து, பாடல் எழுதி - அதை தானே பாடி பெரும் பிரயத்தனப்பட்டு... முடிவாக சொதப்பிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து விடுபட்டு தன்னுடைய பழைய இயல்பான நடிப்புக்கு திரும்புவது அவருக்கும் நல்லது; நமக்கும் நல்லது.

உதாரணமாக வசூல்ராஜா MBBS எடுத்துக்கொள்ளலாம். டைரக்சன் சரண், வசனம் கிரேசி, கதை ஏற்கெனவே வெற்றி பெற்ற கதை. கமலுக்கு வேலை அந்த பாத்திரத்தை அழகாக செய்து கொடுத்துவிட்டு போவது. என்ன அருமையாக செய்திருந்தார். இப்போது பார்த்தாலும் ரசிக்க முடிகிறது. அந்த மாதிரி கமல்தான் தேவை.
மேலும்...

அவலை நினைத்து உரலை

Posted: Sunday, December 26, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்"
(ஆண்டாள் திருப்பாவை)

நீராடப் போதுவீர்.... ! ஹ்ம்ம்ம்....., இன்று எந்த கன்னிமார் அறிவார் அந்த பாவை நோன்பு?!

திருப்பாவை போடு; திருப்பள்ளியெழுச்சி பாடு; ஈரம் சொட்ட சொட்ட மாரியம்மன் கோவிலுக்கு ஓடு. என்ன செய்கிறோம் என்பதைப்பற்றியெல்லாம் என்ன கவலை. அந்தக் கவலை வந்து விட்டால் கோவில் குளம் பக்கமெல்லாம் பிறகென்ன வேலை?

பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள். இன்னோசண்ட் ஃபெல்லோஸ். ஓ பிதாவே.. இவர்களை ரட்சியும். இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தாரில்லை. ஆமென்! (மார்கழி மாசத்துல கிறிஸ்துமஸும் வருதே!)

-0-

//பட் ஐ லைக் திஸ் பண்டல்டு ஹிந்து பீபிள்//
:) :)

உண்மையில் இந்த என்னுடைய பகடிக்கு பின்னால் சமரச சன்மார்க்க தத்துவமே உள்ளது. ஏனென்றால் திருப்பாவைக்கும் மாரியம்மனுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இந்து மதத்தில் திருப்பாவை வைணவ மரபின் வழியான தெய்வத்தின் மீது மையல் கொண்டு பாடியது. ஆனால் நம் இந்து மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால் அதை வீட்டில் ஒலிக்க விட்டு தலைக்கு குளித்து மாரியம்மன் கோவிலுக்குச் செல்கிறார்கள். ஆண் தெய்வக் காதல் பாட்டை அறவே புரிந்து கொள்ளாமல் பெண் தெய்வம் குறித்த பக்தியுணர்வாக உணர்கிறார்கள். சிலர் பிள்ளையார் கோவில். இன்னும் சில சிவன். இவை எல்லாமே வேறு வேறு இந்து மதப் பிரிவுகள். ஒருவரை ஒருவர் ஏற்காமல் கழுவிலேற்றிக்கொண்ட காலங்களும் உண்டு. இன்று எல்லாம் ஒரு பண்டலாகி விட்டன என்பதுவே நான் கிண்டலடித்தக் காரணம்.

கைபோன போக்கில் எழுதுகிறேன் என்பதற்காக போகிற போக்கில் வாய்போன போக்கில் எல்லாவற்றையும் சொல்லி வைக்கிறேன் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது அல்லவா :-)

-0-

நம்ப ஆளுங்களுக்கு (most of the people i guess) இது எல்லாம் மேட்டரே இல்ல... எல்லாம் சாமி பாட்டு தென். எல்லாம் கலந்து கட்டி சாமி என்கிற பெயரில் கும்பிட்டு கிட்டு போய் கிட்டு இருக்கற ஆளு. அதுல ஒண்ணும் தப்பும் இல்லைன்னு நான் நினைக்கிறன்..தனிப்பட்ட கருத்து.


ஆனால் தோழர், அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பதால் பயன் கிடைக்காமல் போய்விடுமே ;-) உங்கள் கடவுள் நம்பிக்கை சரிதானா, நீங்கள் கடைபிடிக்கும் மார்க்கம் அறிவுப்பூர்வமானதா என்னும் கேள்விகளுக்குள் நான் செல்லவில்லை. குறைந்த பட்சம் தாங்கள் செய்வது இன்னது என்றாவது தெரிந்து செய்ய வேண்டாமா என்னும் வருத்தம் தான் ஏசுவிடம் உங்களுக்காக ரட்சகம் கேட்டது ;-) உங்கள் கலந்து கட்டலில் அவர் இல்லை எனபதால் இந்த பஞ்சாயத்துக்கு அவர் neutral observer. அப்புறம் ஏசுவை எப்படி எங்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வைக்கலாம் என்றெல்லாம் அப்பாவித்தனமாக கேட்கக்கூடாது. ஏசுவும் கிருஷ்ண அவதாரமும் ஒன்று என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. எல்லாம் நீ இப்ப சொன்ன மாதிரி ஒரு கலந்து கட்டல் நம்பிக்கைதான். அதனால் ஒரு கலந்து கட்டல் இன்னொரு கலந்து கட்டலை மறுக்க முடியாது. அப்புறம் உங்க லாஜிக் தான் அடி வாங்கும்.. என்ன நான் சொல்றது.. ஹாஹா ;-)))
மேலும்...

தேகம்

Posted: | Posted by no-nononsense | 0 comments
இரண்டு நூல்களை தற்சமயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று முன்பே சொன்னது போல பல்லவி ஐயரின் சீனா-விலகும் திரை. அதை ஒரே நாளில் படித்து முடித்துவிட வேண்டும் என்னும் என் முயற்சி ஜெயமாகவில்லை. என் நேரம் என்னுடையதாக மட்டும் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

மற்றொன்று என்னுடைய சென்னை நண்பன் எனக்கு படிக்க கொடுத்திருக்கும் ‘தேகம்’.


இந்த தேகம் நாவல் தான் சாருநிவேதிதா அண்மையில் எழுதி வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சை நாவலை சுற்றி அல்ல, அந்த வெளியீட்டு விழாவைப் பற்றி என்பதுதான் வேடிக்கை. வேடிக்கை சாருவுக்கு வாடிக்கை. அது ஒருபுறம் இருக்க, எனக்கு இந்த நாவலை கொண்டு வந்து கொடுத்திருக்கும் சென்னை நண்பன் ஒரு அத்யந்த சாரு ரசிகன். ரசிகன் என்று சொல்ல காரணம் எழுத்தாளர்களுக்கு பொதுவாக வாசகர்கள்தான் இருப்பார்கள். சாரு நிவேதிதாவுக்கு ரசிகர்களும் உண்டு. குறிப்பாக அனைவரும் இளைஞர்கள். எவ்வாறு அப்படி என்பதற்கு விளக்கங்கள் அநாவசியம். அவருடைய எழுத்துக்களை படித்தாலே விளங்கும்.

இவ்வாறாக சாருவின் நூலை கொண்டு வந்து கொடுத்து அது குறித்து என் கருத்தை எதிர்பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆர்வம். எனக்கு உண்மையில் சாருவின் நூல்கள் மற்றும் அவருடைய வசீகர எழுத்து நடை குறித்தெல்லாம் எப்போதும் தாழ்வான அபிப்ராயம் கிடையாது. என்னை போன்ற பலருடைய விமர்சனங்களும் அவருடைய குழாயடி அரசியல் மீதுதான். ஒரு கவன ஈர்ப்புக்காக தடாலடியாக யாரையாவது வசைமாரி பொழிவது அவருடைய வழக்கம். எங்கே அடிதடி என்றாலும் அங்கே சென்று வேடிக்கை பார்க்க ஆர்வம் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும். அப்படி ஒரு கூட்டம்தான் இண்டர்நெட்டில் அவருடைய இணையதளத்தை மொய்த்துக்கொண்டு இருக்கிறது. அவருடைய இணைய எழுத்து மட்டுமே அவருடைய எழுத்துக்கான மதிப்பீடு அல்ல. சரி எழுத்துக்கு வருவோம்.

எழுத்துக்களில் பலவகை உண்டு. காமம் விரவிய erotica-வும் அதில் ஒன்றுதான். மேலும் பலரும் தொடத் தயங்கும் வாழ்க்கையின் பகுதிகளை, நிகழ்வுகளை எழுத என்று யார்தான் முன்வருவது? அந்த வேலையை செய்பவைதான் சாருவின் எழுத்துக்கள். அதில் ஒன்றும் பாதகமில்லை. போலியான மதிப்பீடுகளை வாழ்க்கையின் வழிகாட்டிகளாக கொண்டு வாழ்ந்து வரும் சமுதாயத்தில் இந்த மாதிரி எழுத்துக்கள் ஹராம் என்று ஒதுக்கப்படுவது இயல்பு. அதை இழப்பவர்களுக்கு அதன் அருமை தெரிய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம். அல்லது ஆச்சாரம் மேலும் வளர்ந்து தெரியாமலே போகலாம்.

ஆனால் இலக்கிய வாசிப்பின் வழி நீ என்ன மாதிரி அனுபவங்களை தரிசிக்க எண்ணுகிறாய் என்பதுதான் ஒரு வாசகனாக நீ தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விசயம். எனக்கான தீர்மானங்களில் ஹராம் எதுவும் கிடையாது என்பதால் எல்லா எழுத்துக்களும் எனக்கு ஏற்புடையவையே. சாருவை பொறுத்தவரை இணையத்தில் எழுதப்படும் வசை கட்டுரைகளை மட்டும் படிக்காமல் அவருடைய புனைவு எழுத்துக்களையும் வாசித்தால் தான் நான் கூறுவதை உணர முடியும்.

தேகம் நாவலை ஓரிரவுக்குள் முடித்து விட வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு அதன்படி கிட்டத்தட்ட முடிவை நெருங்கி விட்டேன். மோசமில்லை. வதைகளை பதிவு செய்யும் எழுத்து. இதன் ஆரம்பம் அத்யாயம் எனக்கு apocalypto -வின் ஆரம்பக் காட்சிகளை நினைவு படுத்தியது. ஆனாலும் இது அசல் லோக்கல் வெர்சன். முழுவதும் முடித்ததும் சின்னதாகவாச்சும் ஒரு மதிப்புரை எழுத உத்தேசம். இன்ஸா அல்லாஹ்!
மேலும்...

2010 இல் பிடித்தப் படங்கள்

Posted: Saturday, December 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
2010-ல் நான் பார்த்த படங்கள் குறைவு. படம் நன்றாக இருக்கிறது என்று கிடைக்கும் செய்திகளை அடியொட்டியே என் படத் தேர்வுகள் அமைந்தன. அவற்றில் எனக்கு பிடித்திருந்தவை:

  • களவாணி
  • ஆயிரத்தில் ஒருவன்
  • நான் மகான் அல்ல
  • எந்திரன்
  • பாஸ் எ பாஸ்கரன்

மைனா, மதராசாபட்டினம் - நல்ல படங்கள் என்று கேள்வி. ஆனால் நான் இன்னும் பார்க்கவில்லை.

பார்த்ததில் சுமாரான படங்கள்

  • தமிழ்ப் படம்
  • இரும்புகோட்டை முரட்டு சிங்கம்
  • நந்தலாலா
  • அங்காடித்தெரு
  • சிங்கம்

பார்த்து நொந்தவை

  • கோவா
  • ராவணன்
  • சுறா
  • மாஞ்சா வேலு
  • ஜக்குபாய்
மேலும்...

டி.ஆர் பற்றி

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
”இது குழந்தை பாடும் தாலாட்டு” பாடலை கேட்டு விட்டு இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கண்ணதாசன் பெரிதும் பாராட்டினாராம். அது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிக்கு சமம். ஒரு பாடலாசிரியராக டி.ஆருக்கு நான் மிகப் பெரிய ரசிகன்.

நாம் என்னதான் எள்ளி நகையாடினாலும் ராஜேந்தர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர். எடுத்துக்கொண்ட துறையில் அவர் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஒரு தாயின் சபதம் படத்திற்கு கிடைத்த ஓபனிங் எல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. தான் மட்டுமல்ல திட்டமிட்டு அடித்தளமிட்டு தன் மகனையும் வெற்றி பெற வைத்தவர். அதையெல்லாம் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மற்றபடி இந்த காமெடி பீஸ் விவகாரம் அவர் அறிந்தே செய்கிறார். அவரால் எதையாவது செய்யாமல் இருக்க முடியாது. யார் எப்படி கிண்டலடித்தாலும் எத்ற்கும் மனிதர் அசருவதில்லை. நாமும் பார்த்து சிரிக்கிறோம். முடியலை என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து செய்கிறோம். இருவருக்கும் பொழுது போகிறது.
மேலும்...

ராகுல் காந்தியின் அரசியல்

Posted: Thursday, December 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ராகுலை விமர்சிக்க என்ன இருக்கிறது இவர்களுக்கு? வெறும் அர்த்தமற்ற பிதற்றல்கள். அவர் இளைஞர் காங்கிரஸூக்கு அடித்தளமிடும் பாணி, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் ஒருமுறைகூட கருணாநிதியை சந்தித்து மரியாதை நிமித்தம் முதுகு சொறியாத குணம் இதெல்லாம் அவருக்கென்று அரசியலில் ஒரு தனிப்பாதை இருப்பதையே காட்டுகிறது. அண்மையில் இந்து தீவிரவாதம் பற்றி அவர் பேசியுள்ளதை காணும்போது பொதுபுத்திக்கு தன்னை அவர் ஒப்புக்கொடுத்துவிட வில்லை என்பதையும் உணர முடிகிறது. இதே போக்கில் அவர் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டால் பிற்காலத்தில் ஒரு நல்ல அரசியல் தலைவராக உருவாக வாய்ப்புண்டு. அவர் பயணம் நெடியது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆனா மகனே உங்க குடும்பத்துக்கு காந்தினு பேரு இருக்குறது மட்டும் மகாத்மா காந்திக்கு தெரிஞ்சுச்சு, தடியாலயே உங்கள அடிச்சு போட்டுட்டு கரண்ட் கம்பிய புடிச்சு தொங்கிருவாரு.

அது ஒரு தனி கதை. இந்திரா தான் தன் பெயருடன் முதலில் காந்தி என்று பயன்படுத்த ஆரம்பித்தார். அந்த பெயரை அவர் இரவல் பெற்றுக் கொண்டது தன் கணவர் குடும்பத்திடமிருந்து. (ஆனால் கணவருடன் இணைந்து வாழ்ந்த காலம் மிகக் குறைவு). கணவர் பெயர் ஃபெரோஸ் காந்தி (Feroze Gandhy). நேரு குடும்ப வாரிசுவின் பெயருடன் (மாஹாத்மா) காந்தியின் பெயரும் இணைந்தவுடன் அதன் ரீச் பொதுமக்களிடம் பெரிதாக இருந்தது. அதுதான் இன்று வருண் காந்தி வரை தொடர்கிறது. ஓட்டும் பெற்றுத் தருகிறது.
மேலும்...

இது பணக்காரர்களுக்கான தேசம்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
நடப்பை நிர்தாட்சண்யமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரை. இதில் முதல் குற்றவாளி நம்மை ஆளும் அரசுகளே. இந்த மாதிரி அலட்சிய போக்குகளையெல்லாம் படிக்க படிக்க இந்தியனாக பிறக்க மாபாவம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குடிமக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கம். கொண்டு வரப்படும் எல்லா திட்டங்களும் ஓட்டுக்களை குறிவைத்து மட்டுமே. எல்லாவற்றிலும் ஊழல்கள். ஆனால் அவற்றை கண்டித்து ஒரு பொதுநல கிளர்ச்சியும் இங்கே கிடையாது. பொதுவாகவே காலம் காலமாக இந்தியர்களிடையே ஒற்றுமை கிடையாது. அதனால்தான் வியாபாரம் செய்யவந்த கம்பெனியார் நாட்டை கைப்பற்றிக்கொள்ள முடிந்தது.

இந்தியா நிச்சயமாக சொர்க்கம்.. ஆனால் பணம் உள்ளவனுக்கு மட்டும்.
நடுத்தர வர்க்கத்தில் அவதிப்படுபவனுக்கு கடனையும், விளிம்பு நிலையில் வாழ்பவனுக்கு முடிவற்ற துயரத்தையும் வாதைகளுடன் கூடிய மரணத்தையும் மட்டுமே அளிக்கும் இந்த தேசம் போலியான ஜெய் ஹிந்த் கூச்சல்களுடன் என்றென்றும் இப்படியேதான் இருக்கும். காரணம் சுரணையை முனை மழுங்கிய மக்கள். சாலையில் விபத்தை உருவாக்கிக்கொண்டு இடைஞ்சலாக இருக்கும் ஒரு கோவிலை இடித்தால் உடனே கொதிப்பான்; ஆர்பரிப்பான். ஆனால் ஒரு ஊரையே அடித்து உலையில் போட்டுக்கொண்டால் கூட நானாச்சு என் லௌகீகம் ஆச்சு என்று டிவி முன்னால் தவம் கிடப்பான். இந்த மனோபாவம் என்றென்றும் உருப்படாது. Comparatively okay தான்பா என்பவர்களுக்கு இருக்கும் வளத்தைக்கொண்டு comparatively இன்னும் எவ்வளவு better ஆக வாழ முடியும் என்பது குறித்து ஒரு அறிவும் இல்லை.
என்னுடைய இந்த எல்லா அக்கறையும் வாழ முடியாத குடிமக்களின் மீது இந்த தேசம் காட்டும் அலட்சியம் பற்றி. வெட்டுவதை வெட்டி தள்ளுவதைத் தள்ளி வாழ முடியக்கூடிய வசதியானவர்கள் வாயார உரக்கச் சொல்லுங்கள் ’பாரத் மாதா கி ஜே!’
மேலும்...

கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்

Posted: Tuesday, December 21, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கமல் யாருடைய கட்டாயத்தின் காரணமாக நீக்கியிருந்தாலும் அது நல்ல முடிவு. இனி மக்களின் கவனம் படத்தின் மீது மட்டும் இருக்கும். அநாவசிய சர்ச்சைகளின் மீது இருக்காது.

வாய் நாற்றம், காமக் கழிவு போன்ற வார்த்தைகள் வெகுசனவெளியில் பயன்படுத்தத் தக்கன அல்ல. இதையே கமல் ஒரு நூலாக வெளியிட்டு அதில் தன் கருத்துகளை கவிதைகளாக்கி இருந்தால், அங்கே வார்த்தைகளைப்பற்றிய வாதங்களுக்கு இடமில்லாமல் கருத்துக்களை மட்டும் முன்வைத்து விவாதிக்கலாம். ஆனால் சினிமா என்பது U சான்றிதழ் பார்த்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் இடம். கொஞ்சம் கவனம் தேவைதான். செக்ஸ் கல்வி அவசியம்தான் என்றாலும் அதற்கும் ஒரு வயது வரம்பு இருக்கிறதல்லவா.

ஆனால் கவிபாடியதே குற்றம் என்னும் கூக்குரல்களின் அறியாமை பற்றி முன்பே சொன்னதுபோல் பரிதாபம் தான் உண்டாகிறது. அங்க அவயங்களையும் கொங்கைகளையும் பற்றி பழந்தமிழ் பாடல்களில் இல்லாத வார்த்தையாடல்களையா இனி வரும் கவிஞர்கள் பாடிவிட முடியும்? ஆண்டாளின் பாடல் ஒன்றை இதற்கு முன்பே வேறு ஒரு உரையாடலில் உதாரணம் காட்டியிருக்கிறேன். கமல் பாடியதும் பரமன் குறித்துதான்; ஆண்டாளும் செய்தது அதுவேதான். அறியாதவர்கள் கூச்சலிடுகிறார்கள். அறிந்தவர்கள் அடுத்த வேலையை பார்க்கிறார்கள்.

நேற்று ஒரு புராணக் கதை படித்தேன். சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் புரிந்த ரகசியம் குறித்தான ஆகம குறிப்பு அது. கதையைப் படித்து முடித்தவுடன் கண நேரத்துக்கு கண் அவிந்து போனது. ஈஸ்வரோ ரக்ஷது!

-0-

வாலி, வைரமுத்தெல்லாம் இப்படி பொட்டிலறைந்தாற் போல பொசுக்கென்று வார்த்தை போட்டு எழுதி வம்பில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் இவற்றை எப்படி தேன் தடவித் தரவேண்டும் என்று. அவர்கள் பாடலிலேயே முன்னுதாரணங்களும் உண்டு.

கமலை பொறுத்தவரை, அவர் மீது இருக்கும் பகுத்தறிவு அடையாளம் காரணமாக அவர் என்ன செய்தாலும் பேசினாலும் பக்தர்கள் உலகம் உற்று பார்க்கிறது. வாதத்தால் வீழ்த்த இயலாது என்பதால் உணர்வுரீதியான மோதல்களை முன்னெடுக்கிறது. இப்படி ஒரு திறமைசாலி, ஒரு அறிவுஜீவி கடவுள் இல்லையென்று நம் நம்பிக்கைக்கு எதிராக பேசுகிறாரே என்னும் கவலையில் அவர்களுக்கு உள்ளூர குரல் கம்முகிறது. அதை மறைத்துக்கொண்டு கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொள்கிறார்கள்.

-0-

இங்கே கருத்து சுதந்திரத்தை விஞ்சி நிற்பது மத மேலாதிக்கம். அமெரிக்காவில் ஏசுவை விமர்சித்து சினிமா எடுத்துவிட முடியும். இங்கே ஒரு வசனம் கூட அதிகப்படியாக வைத்துவிட முடியாது. எதையும் தர்க்கரீதியாக அணுகும் போக்கு ரத்தத்திலேயே கிடையாது. அது சாமியோ, சாமியாரோ, அல்லது நடிகரோ.. கண்கள் மூடிக்கொள்ளும்; கரம் ஷேவிக்கும்.

மேலும்...

ஊர்ப் புலிகளும் ஒரிஜினல் புலிகளும்

Posted: Monday, November 29, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments




இரண்டு நாள்கள் முன்பு சன் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் சுந்தரவன காடுகளை ஒட்டி வாழும் கிராம மக்களின் வாழக்கையைப் பற்றி காட்டிக் கொண்டிருந்தார்கள். சுந்தரவனக் காடுகளை பற்றி நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அவை மாங்குரோவ் மரங்களை அதிகளவில் கொண்டிருக்கும் சதுப்பு நிலக் காடுகள். கங்கை நதியின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளன. 

இந்த காடுகளில்தான் அழிந்து வரும் இனமான வங்காளப் புலிகள் (Royal Bengal Tigers) வசிக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருந்த அவைகள், சுந்தரவன காடுகள் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பிறகு (Sundarban National Park)இருநூறு வரை உயர்ந்துள்ளன. இது ஓரளவு நல்ல எண்ணிக்கை என்றே சொல்லலாம். 

புலிகளின் வாழ்க்கைமுறை தனித்துவமானது. அது தனக்கென வகுத்துக்கொண்ட சுயஎல்லைகளை கொண்டது. ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிமாக இருந்தால் அதன் பல்லுயிரியம் (bio-ecology) இன்னும் பாழ்படாமல் ஆரோக்கியமாக உள்ளது என்று வேறெந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளும் முன்பே கூறிவிட முடியும். எப்படி என்பது தனியாக விரிவாக பேச வேண்டிய விசயம். சுவாரஸ்யமானதும் கூட. இங்கே சுந்தரவனக் காடுகளை ஒட்டி வாழும் மக்களைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் அது வேறொரு நாள். 

காடுகளை ஒட்டி வாழும் மக்களுக்கு அக்காடுகளுக்கு உள்ளே சென்று விறகு, சுள்ளிகள் பொறுக்குவது, தேனெடுப்பது ஆகியவை முக்கிய தொழிலாக இருக்கும். குறிப்பாக தேனெடுப்பது நல்ல வருமானம் தரக்கூடியது. ஆனால் இம்மாதிரி புலிகள் வசிக்கும் காடுகளில் தேனெடுப்பது மிகவும் ஆபத்தான காரியம். ஏன் என்று சொல்ல வேண்டியதில்லை. இருந்தும் கூட்டமாக பலர் சேர்ந்து தீப்பந்தங்கள் கொளுத்திக்கொண்டு புலிகளின் கால் தடங்களை அவதானித்தபடி முன்னேறிச் செல்கிறார்கள். 

கூட்டமாக ஆட்கள் வந்தால் புலிகள் உடனடியாக தாக்காது. பதுங்கி மறைந்திருக்கும். ஏதாவது சந்தர்ப்பத்தில் கூட்டத்திலிருந்து யாராவது தனித்து நடமாடினால் மேலே பாய்ந்து விடும். பாய்வதையும் நாம் சட்டென்று உணர்ந்து விலகி ஓடி விட முடியாது. ஏனென்றால் புலிகள் எப்போதும் பின்னாலிருந்துதான் தாக்கும். 

இதனால் தேனெடுக்கச் செல்பவர்கள் என்ன செய்தார்கள் என்றால், பின்னாலும் முகம் இருக்கும்படி முகமூடி ஒன்றை அணிய ஆரம்பித்தார்கள். அதாவது முன்பக்கம் நிஜமுகம் இருக்கும். பின்னால் பார்த்தால் முகம் போன்ற முகமூடி இருக்கும். இதனால் புலிகள் குழம்பி போயின. சில காலங்களுக்கு புலிகளின் தாக்குதல் முற்றிலுமாக குறைந்திருந்தது. ஆனால் புத்திசாலி புலிகள் வெகுசீக்கிரமே அந்த தந்திரத்தை புரிந்துகொண்டு தாக்க ஆரம்பித்தன. 

புலிகளிடம் தரையில் உள்ள ஆபத்தை விட அவைகளிடம் மரத்திலோ, தண்ணீரிலோ மாட்டிக் கொண்டால் ஏற்படும் ஆபத்து அதிகம். புலிகள் மரம் ஏறும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தண்ணீரிலும் அவை வேகமாக நீந்தக்கூடியன.  இதனால் அலையாத்தி காடுகளினூடே படகுகளில் செல்வோர் அடிக்கடி ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். படகுகளை நோக்கி அவை நீந்தி வந்து தாக்குகின்றன. பசித்திருக்கும் புலியின் ஆவேச தாக்குதலின் முன்பு மனிதனின் ஜீவ மரணப் போராட்டம் மிகவும் பலஹீனமானது. 

இப்படி காடுகளிலும், நீரிலும் புலியடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் என்றால், ஊருக்குள் புகுந்து தாக்கும் அவைகளிடம் மாட்டிக்கொண்டு இறந்தோர், அங்கமிழந்தோர் வீட்டுக்கு ஒருவராவது இருப்பார்கள் என்றார் கிராமவாசி ஒருவர். பேசிக்கொண்டே பனியனை கழற்றி அல்லையை காண்பித்தார். பாதியை காணவில்லை. பின்னாலிருந்து தாக்கி அல்லையில் கடித்த புலியை கையில் இருந்த கத்தியால் முகத்தில் குத்தவும் அது விட்டு விட்டு ஓடி விட்டது என்றார். கையில் அப்போது கத்தி இருந்ததால் மட்டுமல்ல, இதயம் உறுதியாக இருந்ததினாலும் தான் தப்பித்திருக்கிறார். புலி தாக்கி உறுமும்போதே பலருக்கும் முதுகு தண்டு சில்லிட்டு பயத்தில் உயிர் போய்விடும். 

“புலிகளின் முகம் பார்க்கத்தான் அழகாக இருக்கிறது. ஆனால் அவைகள் இரையை(மனிதர்களை) தாக்கும்போது அது மிக கொடூரமாக, மிகுந்த அச்சமூட்டுவதாக மாறி குலை நடுங்கச் செய்யும். அதைக் கண்ட அதிர்ச்சியிலேயே நிலைகுலைந்து விடுவோம். அந்த சில நொடிகள் போதும் - எல்லாம் முடிந்துவிடும்” என்றார் ஒரு கிராமவாசி. 

புலிகள் தங்களை தாக்கினாலும் ஊர் மக்கள் முடிந்தவரை அவற்றின் உயிருக்கு ஊறு செய்வதில்லை. வளைத்து பிடித்து மீண்டும் காட்டுக்குள் கொண்டு விடவே செய்கின்றனர். சரணாலய பகுதி என்பதால் கொல்வது குற்றம் என கருதலாம். அல்லது அது ஒரு மரபாகவும் இருக்கலாம். எதுவாகிலும் அவர்கள் ஆபத்துடனேயே வாழப் பழகிக் கொண்டு விட்டனர். 


இதுவரை நாம் பேசியது வனப்புலிகள் பற்றி. அவற்றினுடைய படைப்பின் இயல்பே இரையை அடித்து சாப்பிடுவதுதான். அவைகள் வாழும் பகுதியில் சென்று வாழ்வதும் நடமாடுவதும் அவைகளின் தவறல்ல; நம் தவறே. இதில் புலிகளை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் ஊருக்குள் சிலப் புலிகள் இருக்கின்றன. அவற்றின் இயல்பும் வேட்டையாடி உண்பதுதான். சில சமயம் வலுத்தவனுக்கு முதுகு சொறிந்தும், பல சமயங்களில் இளைத்தவனின் வயிற்றில் அடித்தும், எல்லா சமயங்களிலும் முகம் பார்க்க புன்னகை செய்து; ஆனால் முதுகுக்கு பின்னால் புறம் பேசியும்(character assassination) அவைகள் பிழைக்கின்றன. வனப்புலிகள் போலவே இவைகளும் பதுங்கி பின்னாலிருந்துதான் தாக்கும். அப்போது அவற்றின் நிஜமுகம் வெளிப்பட்டு, கோரமாக விகாரமடைந்து மேலும் மேலும் அஷ்டகோணலாவதை மனக்கண்ணில் காணமுடியும். மாறாக கண்ணை திறந்து பார்த்தால் அதன் மனிதமுகம் புன்னகைத்தபடி அப்பாவியென தோற்றம் காட்டும்.

அப்புலிகளின் கால்தடத்தை நாமும் அறிந்து நடந்துகொள்ள வேண்டுமானால் நாமும் அப்புலிகளின் இயல்பில் சிலவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது களவும் கற்று மற என்னும் கணக்கில். கற்று மறந்து விடாமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கவேண்டும். மேலும், அவற்றின் இயல்பை வெறும் உடல்மொழி மூலம் மட்டும் அறிந்துகொள்வது சுலபமல்ல. அவற்றின் நடத்தை மொழியை கூர்ந்து கவனித்து வர வேண்டும். 

அதற்காக மனித முகத்துடன் திரியும் எல்லோரையும் உஷாராக கவனித்து வருவது சாத்தியமா என்று கேட்கலாம். அம்மாதிரி அம்மாஞ்சிகளுக்கு இவ்வுலகத்தில் எள்ளளவும் இடமில்லை. அதையும் மீறி வாழ்பவர்கள் தாம் பிறவிப் பெருங்கடலை நீந்தாமல் நீந்தி தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர். அது முடியாதவர்கள் பேசாமல் வனாந்திரப்பகுதியில் வசிக்கச் சென்று விடலாம். அங்கே வசிக்கும் வனப்புலிகள் குறைந்தபட்சம் நேர்மையானவை. பசித்தால் மட்டுமே இரை தேடும். அல்லது தன்வழியில் குறுக்கிட்டால் மட்டுமே தாக்கும்.
மேலும்...

நிஷ்காமிய கர்மம் - ஒரு தர்க்கம்

Posted: Friday, November 26, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
வாலி என்றதும் அவர் இந்தவார விகடனில் எழுதியுள்ள தொடர் ஞாபகம் வருகிறது. கீதை வலியுறுத்தும், கருப்பு சட்டைக்காரர்கள் கண்டனம் செய்யும் நிஷ்காமிய கர்மத்தைப்பற்றி உயர்வுநவிற்சியாக எழுதி மகிழ்ந்திருக்கிறார். துட்டுக்கு பாட்டு என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செய்யும் அவரளவில் அதில் பிரச்னையில்லை. அதை குறிப்பிட்ட சாதியினரின் மீது ஏவி விடும்போதுதான் பிரச்னை உண்டாகிறது. உண்டாகி பல பழம் பழக்கங்கள் துண்டானதும் இப்படித்தான்.

ஒரு சில வருடங்கள் முன்பு ரஜினி ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். அந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த தட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம் அதிலிருந்த, ‘கடமையை செய்; பலனை எதிர்பார்’ என்னும் வாசகம். கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே என்னும் கீதை வரிகளுக்கு மாறான பொருளில் அமைந்த அது பின்னர் இந்துத்துவ கும்பல்களிடம் விமர்சனத்தையும் சம்பாதித்தது. இங்கேயும் இரண்டு தத்துவக்கோளாறுகளே காரணம். அந்த நிஷ்காமிய கர்மம், சுதர்மம் பற்றிய என் சில கருத்துகளை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.
அதை விரித்து இன்னும் பேச தோன்றுகிறது.

ஆனால் இதுபோன்ற தத்துவவிசார தர்க்கமெல்லாம் தவறியும் காலை வைத்துவிட்டால் உள்ளிழுத்துக் கொள்ளும் பெரும் சுழல். உள்ளே உள்ளதெல்லாம் உண்மையென நம்பச் சொல்லும் வெறும் நிழல். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளாக கொள்ள மட்டுமே நேரமுள்ள ஒரு நேரத்தில் உள்ளபடியே இயலாது. தொடரும் மனநிலைக்கு அது என்றுமே கூட இயலாமல் போகலாம். Who cares? :-) அவரவர் கர்மம்; அவரவர் தர்மம்.

ததாஸ்து!

-0-

எதிர்வினை:

நித்திய + காமிய + கர்ம + அனுஷ்டானம் = ===> " நிஷ்காமிய கர்மம் "
எப்பபொழுதும் + செய்யக்கூடிய + தொழிலில் + கடைபிடிப்பது

அவரவர் செய்யகூடிய தொழிலில்
நீதி , நேர்மையுடன் தொழிலை தர்மம் பிசகாமல் செய்யவேண்டும்
அதுவே நிஷ்காமிய கர்மம் ஆகும்
ஒருவர் அவருடைய செயலில் , முழு மனதோடு , ஈடுபாட்டுடன் , அர்ப்பணிப்பு , மற்றும் நீதி, நேர்மை , தர்மத்துடன் செய்யவேண்டும் என்பதே இதன் கருத்து

என்னை பெறுத்தவரை ,
இங்கு ஜாதி , மதம் இவற்ற்றை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை ,

சொல்லப்படும் கருத்தே முக்கியம்

வாலி எந்த மதத்தை சொல்கிறார், உயர்வாக குறிபிடுகிறார் , ஏவி விடுகிறார் என்பதை பற்றி
நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம்

இருத்த போதிலும் வாலி, ரகுமானை என்னய்யா பாடல் வரிகளில் கூட
(தெய்வம் vs தேவதை = நியூ படத்தில் வரும் பட்டு )
என்ன என்பதனையும் , கோபித்து கொண்டதை பற்றியும் குறிபிட்டுள்ளார்

கவிஞர் வாலி,
பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்
அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது
என்னக்கு பெரிய ஏமாற்றம்மே

பதில்: அக்கால அனுஷ்டான வைதீகம் முதல் இக்கால அப்டேட்டட் கார்ப்போரேட் வைதீகம் வரை இவ்வாறுதான் நிஷ்காமிய கர்மத்திற்கு பதம் பிரித்து அருஞ்சொற்பொருள் கூறி அதை அப்படியே சிரமேற்கொண்டு வாழ்வில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. அதன் லிடரல் மீனிங் என்னவோ பலரும் மேலோட்டமாக கொண்டிருக்கும் அதே ‘பலனை பற்றி கவலைப்படாமல் கடமையை செய்’ புரிதல்தான். கேட்கவும் கடைபிடிக்கவும் நன்றாக இருக்கும் இது, இக்காலத்தில் சௌகரியமாக, சாய்ந்து அமர்ந்து கொண்டு, சாயா சிப்பியபடி கணினியில் கண் பதித்து வேலை செய்பவர்களுக்காக உபதேசிக்கப்பட்டது அல்ல. சொல்லப் போனால், இவ்வாறான மேலோட்டமான நேரடி அர்த்தங்கள் தரும் புரிதல்களை விட்டு விட்டு பார்த்தால் இந்த நூற்றாண்டுக்கும் இந்த வாசகங்களுக்குமே சம்மந்தமில்லை. இதற்கான வரலாறு வேத காலத்திற்கும் பிந்தைய உபநிடதங்களுக்கு சுலோகம் இயற்றப்பட்ட காலத்தில் இருக்கிறது.

அக்காலத்தில் ஏன் அதற்கான அவசியம் ஏற்பட்டது என்பதற்கு பதில் வைதீகம் வேகமாக பரவ ஆரம்பித்ததிலும், பழங்குடியினரின் மத மாற்றத்திலும், அதற்கு அவசியமான எளிமையான புரிதல்களுக்கு இணக்கமான ஓர் உபதேசம் தேவைப்பட்ட காரணத்திலும் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப உருவானதே கீதை. கீதையின் வரலாறு பகவானின் அருள்வாக்கில் இருக்கிறது என்று முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு வரலாற்று நோக்கில் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவுகள் நம்ப கடினமாக இருக்கும். ஆனால் அது மட்டுமே தர்க்க ரீதியான படிநிலைகளுக்கு ஆதாரமான ஒரே அம்சம். மற்றவையெல்லாம் வெறும் நம்பிக்கை என்னும் ஒற்றை பரிமாண புலனறிவை மட்டுமே ஆதாரமாக கொண்ட கருத்தாக்கங்கள்.

நிஷ்காமிய கர்மம் மற்றும் உனக்கு விதிக்கப்பட்ட வேலையை நீயே செய்ய கடவாய் என்னும் வர்ணாசிரம சுவதர்மம் ஆகிய இரண்டும் வைதீகம் தன்னுடைய மேலாட்சியை நிலைப்படுத்திக் கொள்ள கையாண்ட சூத்திரங்கள். இது யாருக்கு விதிக்கப்பட்டது; யாருக்கு பலனளித்தது என்பதெல்லாம் அக்காலத்தில் நீ சூத்திரனாகவோ, பஞ்சமனாகவோ பிறந்திருந்தால் அனுபவத்தில் கண்டிருப்பாய். இன்று அதை பிரத்திடய்சமாக உணர்ந்து கருத்துரைப்பது தன் கருத்தியல் நிலையை வெறும் நம்பிக்கையின் மீது மட்டும் கட்டமைத்துக் கொண்டிருந்தால் சாத்தியமில்லை.

இந்த பரஸ்பர விளக்கங்கள் விவாதமாக வடிவெடுத்தால் அது மேலதிகமாக கீதையையே மையம் கொள்ளும். காரணம் இந்த உபதேசங்களின் மூலம் கீதை. ஆனால், 1) கீதையை நாம் எந்தளவு புரிந்து கொண்டிருக்கிறோம், 2) கீதை இந்திய வாழ்வியலில் கலந்தது எப்போதிருந்து, 3) பரவலாக கீதை என்னும் ஒரு நூல் அறியப்பட்டது எந்த நூற்றாண்டு முதல் 4) கீதைக்கு முதலில் வியாக்கியானம் எழுதப்பட்டது யாரால் 5) அவர் சார்ந்திருந்த சமயம் அல்லது அப்போது நிலவிய சமய சூழல் என்ன .. என்பன போன்று கிளைத்துச் செல்லும் கேள்விகளுக்கு விடை காணாமல், இன்று சலூன் கடைகளிலும், செல்போன் மெஸேஜ்களிலும் படிக்க கிடைக்கும் “எதை கொண்டு வந்தாய் அதை கொண்டு போக” என்னும் — முன்பு சொன்ன அந்த மேலோட்டமான லிடரல் மீனிங் — கீதாசாரங்களில் மட்டும் தேடிக் கொண்டிருந்தால் புரிந்து கொள்ள முடியாது.

ஆக, நாம் நிஷ்காமிய கர்மத்திற்கும் சுவதர்மத்திற்கும் மேலோட்டமான அர்த்தத்தை மட்டும் வைத்து அதன் உட்பொருளை, அது வரலாற்றில் ஏற்படுத்திய மேலாதிக்கத்தையும் வடுக்களையும் உணர்ந்து கொள்ள முடியாது என்பதே என் வாதம். இதில் வாலிக்கும் அவர் எழுதிய நாலு வரி துணுக்குகளுக்கும் சம்மந்தமில்லை.

கீதையின் இவ்விரண்டு அதிகம் விதந்தோதப்படும், அதேசமயம் விமர்சிக்கப்படும் சாரங்களையும் கடுமையாக விமர்சித்தவர், விவேகானந்தர்! விசாரங்களுக்கு பொதுவில் வேதாந்திகளால் வழங்கப்படும் தேன் தடவிய விளக்கங்களை விலக்கி உள்சென்று வரலாற்றின் ஏடுகளில் படிந்திருக்கும் உள்ளார்ந்த அரசியல் குறித்தும் ஓரளவு சிந்திந்த ஆன்மிகவாதி அவர்.

பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது என்னக்கு பெரிய ஏமாற்றம்மே


இளையராஜா நிஷ்காமிய கர்மத்தின் வரையறைக்குள் வரமாட்டார். ஒரு வாதத்திற்காக அது உயர்வான தர்மம் என்று வைத்துக் கொண்டால், அந்த தகுதி நிலையில் இளையராஜா இல்லை. வாலி போல செய்யும் தொழிலில் தன் விருப்பு வெறுப்புகளை வெளியே நிறுத்தி ஈடுபடக் கூடியவர் அல்ல அவர்.

உதாரணத்திற்கு விகடனில் வாலி சொல்லியுள்ளதை போல: தான் ஒரு ஆத்திகராக இருப்பினும் சினிமாவுக்காக பாடல் எழுத அமரும்போது அங்கே தனக்கு பணிக்கப்பட்ட சூழ்நிலைக்கு தாள்பணிந்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்று பாடல் எழுதினார். அந்த உயர்நிலை கர்மம் இளையராஜாவிடம் இல்லை என்பது அவரை பெரியார் படத்திற்கு ஒப்பந்த செய்ய அணுகிய போது வெளிப்பட்டது. கடவுள் இல்லை என்று சொன்னவரின் படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

ஜேசுதாஸும் சற்று பிடிவாதக்காரர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அனுபவஸ்தரான வாலி அறிந்தே இருவரையும் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மேலும்...

வானும் மண்ணும்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
பொழுது போகாத நேரங்களில், நூல்களும் உடன் சேர்ந்து அலுப்பூட்டும் பொழுதுகளில் இசையை கேட்பதுடன் அதன் வரிகளை கவனமாக கவனித்து ரசிப்பது எனக்கு வாடிக்கை. இக்குழுவின் whats happening சந்துமுனையில் கூட நான் அவ்வாறு பல சிந்துகளை பாடி திரிந்தது உண்டு. லய, சந்த, தாளங்களுக்கு ஏற்ப மெட்டுக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இட்டுக் கட்டுவது ஒரு தனி கலை. அது எல்லோருக்கும் எளிதில் கைவரக் கூடியதல்ல. கூடி வரப்பெற்றவர்களின் புகழ் எளிதில் அகலக் கூடியதும் அல்ல. 

அதனால்தான் ‘அள்ளி தந்த பூமி அன்னையல்லவா.. சொல்லி தந்த வானம் தந்தையல்லவா’ என்ற ஒரே பாடலின் மூலம் மட்டும் இன்று வரை அதை எழுதிய மதுக்கூர் கண்ணன் என் நினைவில் நீங்காமல் இருக்கிறார். (இவர்தான் பின்னாட்களில் ‘யார்’ கண்ணன் என்ற பெயரில் தொடர்ந்து பேய் படங்களாக எடுத்தவர்).

இன்று மைனா பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். ஜிங்கிலி ஜிங்கிலி லேட்டஸ்ட் ஹிட் முடிந்து அடுத்து கேட்ட பாடல், 

’நீயும் நானும்
வானும் மண்ணும்
நெனைச்சது நடக்கும் புள்ள
வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நெனைச்சது கிடைக்கும் புள்ள’

பாடல் நல்ல மெல்லிசையாக கேட்க இதமாகவே உள்ளது. இருந்தாலும் பாடல் வரிகளில் பொருள் தளை தட்டுவதாக எனக்கு ஒரு சம்சயம். நீயும் நானும் எப்படி வானும் மண்ணும் ஆகமுடியும்? வானும் மண்ணும் சேரும் காலம் என்று ஒன்று கிடையாதே. வானாகி, மண்ணாகி பயனில்லை. வளியாகி, ஒளியாகி வேண்டுமானால் இணைய முடியும். மேலும், அதென்ன காதலின் உன்னதமான வேளையில் போய் மண் என்றெல்லாம் பாடிக் கொண்டிருப்பது? சகிக்கவில்லை. அடுத்த இரண்டு வரிகளும் கூட அப்படித்தான். இதே போன்ற ஒரு சூழலில் வைரமுத்துவின் பேனா எப்படி எழுதியது என்றால், 

‘நீ மழை, நான் பூமி,
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்’

கவிஞர்களும் கவியரசர்களும் வேறுபடுவது இங்கே தான். 

இளையராஜா 80-களின் பிற்பகுதியில், அதாவது வைரமுத்துவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு இப்படித்தான் பல அபத்த வரிகளை பாடல்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவற்றுள் கேட்கும்போதெல்லாம் எனக்கு சொல்லொனா எரிச்சலை ஏற்படுத்துவது, ‘மாறுகோ மாறுகோ’ பாடல். ‘மாலையில் ஆடிக்கோ; மந்திரம் பாடிக்கோ’ என்று முடியும் அதில் ஒரு பொருளையும் நான் காணவில்லை. சும்மா மெட்டுக்கு வாயில் வந்ததை போட்டிருக்கிறார்கள். அதை எழுதியவர் வாலி என்று நினைக்கிறேன். அதிலொன்றும் ஆச்சரியமும் இல்லை. வாலி பேனா எப்படியும் வளையும். சமயத்தில் இப்படித்தான் முனை உடையும்.
மேலும்...

கார்த்திகை தீபம் - சில நினைவுகள்

Posted: Monday, November 22, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தீபமா அல்லது இன்னொரு தீபாவளியா என்று சந்தேகிக்கும்படியான பட்டாசு வெடிச் சத்தங்களுடன் நேற்று கார்த்திகை தீபம் ஜோராக கடந்து சென்றிருக்கிறது. ஒருநாளும் இல்லாத திருநாளாக கடைக்கு அழைத்துச் சென்று டிஸன் தேர்வு செய்து விளக்கு வாங்கிக் கொடுத்தது முதல், அதற்கு திரி திரித்து தந்து, எண்ணை ஊற்றி வைத்து, விளக்கை வைக்க வாழையிலையை கச்சிதமாக கத்தரித்து தந்து, காற்றுடன் மல்லுக்கட்டி ஒளி விளக்கை ஒழியா விளக்காக குறைந்தது 1 மணி நேரம் வரை தூண்டி விட்டு கட்டிக்காத்தது வரை.. என்னளவில் ஒருமாதிரி கொண்டாட்டமாகத்தான் போனது நேற்றைய பொழுது.

பண்டிகைகளின் பின்னுள்ள புராணகதைகளெல்லாம் எவ்வளவு அபத்த குப்பைகளாக இருப்பினும், வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வகை செய்யும் harmless days, அவைகள். அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ள ஒரு பகுத்தறிவுவாதியாக எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.



6-8 விளக்கு வைத்து முடிந்ததும் 8 மணிக்கு மேல் ஊர் பிள்ளையார் கோவில்(!) முன் வைக்கப்படும் சொக்கப்பனையை(கூம்பு) பார்க்க மகளுடன் போயிருந்தேன். அது ஒரு தனி அனுபவம். அதன் மலரும் நினைவுகளை சென்ற வருட கார்த்திகை தீபம் சமயத்திலேயே எழுதி இருக்கிறேன் என்பதால், நெல்லை கண்ணனின் மகனும் டைரக்டரும், சிறந்த எழுத்தாளருமாகிய சுகா எழுதிய நெல்லைத் தமிழ் கொஞ்சும் சொக்கப்பனை பதிவை படிக்கலாம்: http://venuvanamsuka.blogspot.com/2010/02/blog-post.html
மேலும்...

பருவமழை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
மழைக்கால மேகங்கள் தங்கள் வாடிக்கைக்கு திரும்பி விட்டனவா, அல்லது கிளைமேட் சேஞ்ச் தமிழகத்துக்கு மட்டும் அளித்துள்ள பாஸிடிவ் எஃபக்டா.., எதுவாகிலும் மேட்டூர் அணை 111 அடியை எட்டும் அளவிற்கு இந்தமுறை பருவமழை கருணை மழை பொழிந்துள்ளது. மகிழ்ச்சி! விவசாயம் செழிக்கட்டும். அதன்போதாவது உணவு பொருள்கள், குறிப்பாக காய்கறிகள் விலை குறையட்டும். 

மழை பொழியும் போதெல்லாம் என் மகள் தனக்கு தெரிந்த ஒரே மழைப்பாடலான rain rain go away-ஐ பாடுகிறாள். நானும் உடன் சேர்ந்து உற்சாகமாக பாடிக்கொண்டுதான் இருந்தேன் - மாலனின் இந்த வரிகளை படிக்கும் வரை:

....மழை என்றால் சந்தோஷமான அனுபவம் காத்திருக்கிறது என்ற மனநிலையை அந்தப் பாடல் ஏற்படுத்தியது.இன்று குழந்தைகள் Rain Rain Go away என்று பாடுவதைக் கேட்கிறேன். விளையாடுவதற்கு மழை இடையூறாக இருப்பதாக அந்தப் பாடல் சொல்கிறது. 

இயற்கை குறித்து இது எந்த மாதிரியான மனநிலைகளை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்த்தால் கவலையாக இருக்கிறது. ஏற்படுத்தும் என்ன, ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது.மனிதனுடைய 'சந்தோஷத்திற்கு' இயற்கை இடையூறாக இருக்கிறது என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஓர் தலைமுறைக்கு ஊட்டப்பட்டுவிட்டது.

ஈரம் படிந்த இலக்கியமாக இருந்திருக்க வேண்டிய குழந்தைகள் பீங்கான் ஜாடிக்குள் செருகிய பிளாஸ்டிக் பூக்களாகப் பரிணமித்துவிட்டார்கள்.

இந்த தேசத்திற்கு நேர்ந்த இழப்புக்களில் இது மிகப் பெரிது.

(முழுதாய் படிக்க: http://jannal.blogspot.com/2010/11/blog-post.html)

இயற்கையோடு இயைந்து வாழ நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க மறக்கிறோம். அல்லது நமக்கே தெரியவில்லை. நம் இன்றைய வாழ்க்கைச் சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும்போது இரண்டாவது தான் பெரும்பாலும் காரணமாக இருக்க வாய்ப்புண்டு. 

வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டம் முதலில் எத்தனை பேருக்கு உண்டு என்பது பற்றியே எனக்கு ஐயம் உண்டு. பணம், சினிமா, டிவி, மது, மாது - முடிந்தது ரசனை! அவ்வளவு தானா உலகம். அவ்வளவுதான் உலகம் என்று நம்புபவர்கள் மனக்கிணற்றுக்கு வெளியே தலையை நீட்ட முதலில் மனம்கொள்ள வேண்டும். 

இதற்கு மேல் இதைப்பற்றி பேசினால் ஊருக்கு உபதேசமாகி விடும். பிறகு ஊருக்குதான் உபதேசம் என்று என்னை நோக்கி சொல்லும் சந்தர்ப்பத்திற்காக ஊர் காத்திருக்க வாய்ப்பாகி விடும். உபதேசம் உபன்யாசம் இரண்டையும் செய்ய ஊருக்குள் நிறைய சாமியார்கள் உண்டு. வேண்டாம் நமக்கந்த வேலை :-)

ஆனாலும் வாழ்க்கையின் ரசனையான பக்கங்களை பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு அறை எண் 305-ல் கடவுளில் பிரகாஷ்ராஜ் பேசும் சிம்புதேவனின் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. ரிடையர்டு அரசு அதிகாரியான டெல்லி கணேஷிடம் வாழ்க்கையைப்பற்றிய மாறுபட்ட பார்வையை சில கேள்விகள் மூலம் கேட்பார். நான் ரசித்த ரசமான காட்சியது. அப்படம் மறுமுறை காணும்போது கவனித்து பாருங்கள்.
மேலும்...

கைபோன போக்கில் (4)

Posted: Friday, November 19, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தினமும் ஒரு எழுத்துப் பயிற்சியாக ஒரு மணி நேரம் எதையாவது கைபோன போக்கில் கிறுக்கித் தள்ள வேண்டும் என்று எண்ணிதான் இந்த தொடரை ஆரம்பித்தேன். ஒரு சில நாட்கள் கூட தொடர்ந்து எழுத முடியவில்லை. லௌகீகம் உள்ளிழுத்துக் கொண்டது. இன்றிலிருந்தாவது குறைந்தது ஒரு வாரத்திற்காகவது முடிகிறதா என்று பார்ப்போம்.

**

சற்று முன்பு லண்டனில் Mcjob செய்து கொண்டிருந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். 3 மாதமாக வேலையில்லாமல் இருக்கிறாராம். ஸ்காட்லாந்தில் ரெண்டால் நம்பர் பிஸினஸ் ஒன்றுக்கு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அங்கேயே போய்விடப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். ரெண்டாம் நம்பர் பிஸினஸ் என்பதை வங்கியில் கிரெடிட் ரேட்டிங்கிற்காக செய்யப்படும் கோல்மால் வேலை என்று கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ’இவ்வளவு தூரம் வந்து வெட்டியா பொழுது போக்கிக்கிட்டு இருக்கறதுக்கு, அந்த பிஸினஸையும் செஞ்சிதான் பார்ப்போமே, மாட்டினா ஊருக்கு அனுப்பிடுவான்.. அவ்வளவு தானே’ என்கிறார். லண்டனில் உடலுழைப்பு வேலைக்காக சென்றுள்ள தமிழர்களின் நிலை இழிநிலைக்கும் சற்றும் மேல் என்பதை தவிர சொல்லிக்கொள்ளும்படியா இல்லை. இருந்தும் இன்னும் லண்டன் கனவில் சிலர் நல்ல புரோக்கரை தேடிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். இது அவர்களின் இழிநிலை அன்று. இத்தேசத்தின் இழிநிலை. மண்ணின் மைந்தர்களுக்கு இன்னும் நம்மால் வேலைவாய்ப்பில் உத்தரவாதம் அமைத்துக் கொடுக்க முடியவில்லை. ஆனால் லட்சம் கோடி ஊழல் கணக்கில் கூட்டல் கழித்தல் செய்து கொண்டிருக்கிறோம். நல்ல தேசம்! நல்ல வாக்காளர்கள்!

**




ரூ. 1200 ரூபாய்க்கு FORME என்னும் ஒரு dual sim மொபைல் வாங்கியுள்ளேன். 2GB மெமரி கார்டுடன் ரூ. 1400-க்கு விலை அடக்கம் ஆனது. கைக்கு கச்சிதமாக உபயோகிக்க சுலபமாக உள்ளார்ந்த வசதிகளில் வளமாக உள்ள அது என்னை கவர்ந்து விட்டது. மலிவு விலையில் மொபைல் வாங்க விரும்புவோருக்கு என் சிபாரிசு அது. அப்புறம் இது சீன தயாரிப்பு இல்லை என்பது கூடுதல் தகவல். சென்னையில்தான் தயாரிக்கிறார்கள் என்றது இதன் வெப்சைட். சைனா மொபைலில் அதிகம் விற்பனையாகும் Gfive-ன் OS எனக்கும் பிடிக்கவில்லை.
மேலும்...

கமல் - ரஜினி மோதல் (1981)

Posted: Tuesday, November 16, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments





அது கமல், ரஜினி இருவருமே கே.பாலாஜி தயாரித்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரம். ரஜினி திருமணமும் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. அது சமயம் திருமணத்தையொட்டி பாலாஜி சினிமா முக்கியஸ்தர்களுக்கு ஒரு விருந்து கொடுத்திருந்தார். நட்சத்திரங்களின் சங்கமத்தில் மது கரைபுரண்டோடுவது இயற்கை. மது தந்த மயக்கத்தில் தனி நபர் விமர்சனங்கள் தலை தூக்கின. அது களேபரத்தில் முடிந்தது. அடுத்த நாள் ரஜினி-கமல் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின. அப்போது குமுதம் லைட்ஸ் ஆனில் எழுதப்பட்ட கிசுகிசு:

ஏழுமலையான் பெயர் கொண்ட தயாரிப்பாளரின் பார்ட்டியில் இரண்டு பெரிய நடிகர்கள் மோதிக் கொண்டதை பற்றி எல்லா பத்திரிக்கையிலும் செய்திகள் வெளியாகின. அவற்றை படித்தால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் நடைபெற்றிருப்பதாக மட்டுமே தோன்றும்.

More than that ஸ்டைல்காரர் கமலாரின் சட்டைக் காலரை பிடித்தாராம். அதுவரை பொறுமையோடு இருந்த அவர், இதற்கு மேல் இடம் கொடுக்க கூடாதென்று விட்டாராம் ஒரு குத்து. தடாரென்று விழுந்து விட்டாராம் முரட்டுக்காளை

(குமுதம் 28.05.1981)

பிறகு நடந்தவை கமலின் வார்த்தைகளில்:

ஜெய்சங்கர் குறுக்கே புகுந்து விலக்கி இருவரையும் சமாதானம் செய்தார். அதனாலேயே ஜெய் சாரை எங்கள் இருவருக்கும் பிடிக்கும். 

இந்த சம்பவம் நடந்த மறுநாள் நான் வாகினி ஸ்டூடியோவில் இருந்தேன். என்னை பார்க்க ரஜினி வேகமாக வந்து கொண்டிருந்தார். வந்த வேகத்தை பார்த்தால் தகராறு செய்வதற்குத் தான் வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தேன். வரட்டும், வந்தால் இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியதுதான் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் வந்த ரஜினி என் கையை அழுத்தமாக பிடித்தார். அடுத்த விளைவுக்கு நான் தயாரான போது, “ஸாரி.. நேத்து நடந்ததுக்கு என்னை மன்னிச்சுடுங்க” என்றார். எனக்கு வெட்கமாகி விட்டது. அவரது பெருந்தன்மை என்னை சுட்டது. 

மறுநாள் ரஜினி தன்னோடு பேசிக் கொண்டிருந்தவர்களிடம், “கமலிடம் மன்னிப்பு கேட்க போனபோது பகை உணர்ச்சியை மறக்க மாட்டாரோ என்று நினைத்தேன். ஆனால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்” என்று கூறியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட போது நாம் முந்திக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நொந்து கொண்டேன். 

(கமல் முழுமையான வாழ்க்கை வரலாறு நூலில்)


ரஜினி ஒரு பெருந்தன்மையான மனிதர் என்பதற்கு 30 வருடங்களுக்கு முன்பே அத்தாட்சியான சம்பவம் இது. நமக்குதான் அவர்கள் ஐகான்கள். அவர்களுக்கு அவர்கள் மனிதர்கள் தாம். சடுதியில் உணர்ச்சிவயப்படுவது எல்லா மனிதர்களுக்கும் இயல்புதாம்.

இந்த முட்டல் மோதல்களையெல்லாம் தாண்டியும், சுற்றியுள்ளவர்களின் திருகு வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு பாதை வகுத்துக் கொண்டு இவ்வளவு நாளும் நட்புடன் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெரிய விஷயம். 

கமல் 50-ல் ரஜினி பேசியதை கண்டு கண்கள் பனிக்க கமல் சொல்வார், ‘எவன் பேசுவான் இப்படி...?’ என்று. மனதிலிருந்து வந்த வார்த்தைகள்!

மேலும்...

மம்மி டாடி

Posted: Friday, November 12, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
காலையில் அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். இடையூறாக திடீரென்று வெடித்து கிளம்பியது என் மகளின் அழுகுரல். ‘ரம்பஸ்கி கடிச்சிருச்சி..’ என்று ஒரே அழுகை. அது வேறு ஒன்றுமில்லை, கொசு கடித்திருக்கிறது. உடனே எந்திரனில் வரும் ரங்கூஸ்கி கொசு அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. உடனே ரோபோ போடு என்று அடுத்த அடம். ரோபோ என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் படமும், ரஜினி, ஐஸ்வர்யா ராய் பெயர்களும் அவள் ரசனைக்கு அத்துபடி.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய காலம் போய் நடிகர்களை காட்டி சன்சோறு ஊட்டப்படும் காலமிது. குழந்தை வளர வளர வீட்டில் டிவி மற்றும் சினிமா சம்மந்தமான சூழலை வெகுவாக குறைத்துக் கொள்வதைப்பற்றி மனதில் பரிசீலித்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் அதற்கு இன்னும் காலமிருக்கிறது. இப்போதைக்கு அவளின் குழந்தை பருவத்தை தனக்கு பிடித்த வழியில் அவள் கொண்டாடிக் கொள்ளட்டும்.

*

நேற்று வேலையில் இருந்து திரும்பிய என்னை என் மகள் அழைத்த விதம் கொஞ்சம் துணுக்குறச் செய்தது. என்றும் இல்லாத வழக்கமாக திடீரென்று வார்த்தைக்கு வார்த்தை ‘டாடி’ போட்டு பேசினாள். நீ என்னை அப்பான்னே கூப்பிடு டாடி சொல்ல வேண்டியதில்லை என்றாலும் கேட்கவில்லை. ‘டாடி தான் சொல்லணும்’ என்றாள். போலவே அம்மாவையும் மம்மி என்றே அழைத்தாள். இனி அப்பா அம்மாவை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று யூகிக்கிறேன். தாங்கள் குழந்தைக்கு ஆங்கிலம் சிறப்பாக கற்பிக்கிறோம் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தச் செய்ய இந்த டாடி-மம்மி அவர்களுக்கு ஒரு வழிமுறை. சில பெற்றோர்களும் இதை எதிர்பார்ப்பதால் ஒருவகையில் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு செயலாக இது அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் அமைந்து விடுகிறது.

அந்நியமொழி ஆங்கிலத்தை ஓர் உலகளாவிய தொடர்பு சாதனமாக, வேலைதேடலில் முன்னுரிமை பெற்றுத் தரும் ஒரு சிறப்பு தகுதியாக, அறிவுதேடலுக்கு உதவும் ஒரு மீடியமாக மட்டும் நெஞ்சில் நிறுத்தி அதை ஒரு மொழி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் நன்கு கற்றறிந்தால் போதும். மேற்கொண்டு அதிலென்ன பெருமை இருக்கிறது?

ஆனால் இதையெல்லாம் எடுத்தியம்பும் வயதில் அவளோ அதற்கான மனமுதிர்ச்சியில் குடும்பத்தாரோ இல்லை. அவர்களுக்கு மம்மி-டாடி என்று குழந்தை அழைத்ததில் ஆகபெருமை. இதிலெல்லாம் நான் தலையிட போவதுமில்லை. அவள் பாட்டுக்கு அவள் ஆங்கிலத்தில் புலமை பெறட்டும். நான் தமிழிலும் தக்க ஆர்வம் அவளுக்கு ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்து கொள்வேன். ஆனால் முனைப்பு மட்டும் போதாது; காலத்தே கவனமும் தேவை.

NRI-களின் குழந்தைகள் மட்டுமல்ல நானறிந்த சில ஐரோப்பிய தேசங்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும் கூட தாய்மொழி தமிழ் எழுதப் படிக்க சுத்தமாக தெரியவில்லை. அதிலும் டச்சு நாட்டில் வாழும் ஒரு அம்மணி அங்கேயே பிறந்து வளர்ந்து படித்து வரும் தன் மகளுக்கு தமிழில் ஓரிடு வார்த்தைகளுக்கு மேல் பேசகூட தெரியாது என்று என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார். நம்ப கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. சில நேரங்களில் எப்படி இவர்கள் மொழி என்னும் ஓர் இனத்தின் உயிர்நாடியான ஒரு முக்கிய நரம்பை அற்று போக அனுமதிக்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாவதுண்டு.

இவர்களுக்காவது பிழைக்க/வேலைக்காக சென்ற இடத்தில் இருக்கும் survival பிரச்னையில் மொழியில் எல்லாம் கவனம் செலுத்தி கொண்டிருக்க முடியாது என்ற ஒரு எதார்த்த பிரச்னை உள்ளது. ஆனால் நம் சென்னை போன்ற மெட்ரோக்களின் மேட்டுகுடி வர்க்க குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமே அறியும் என்பது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட வருத்தம். காரணம் அவர்களின் பெற்றோர்களும் தமிழில் பேசுவதில்லை. அப்படி ஒரு நபரையும் குழந்தையையும் நான் கோவையில் கூட சந்தித்திருக்கிறேன். என்னிடம் நல்ல தமிழில் பேசிய அவர் மனைவியும் அவரும் குழந்தையிடம் முற்றாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினர்.

மொழிவெறி என்பது அரசியல்வாதிகள் ஓட்டுக்காக காட்டுவது. மொழியுணர்வு என்பது அடிப்படையிலேயே ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கவேண்டியது. தமிழ் மொழியின் தொன்மையை அறியா தமிழராயிருக்கிறோம். இது பிறமொழி போல சொற்களை கடன் வாங்கி உருவானதல்ல. இதற்கு இலக்கண நூலே (தொல்காப்பியம்) குறைந்தது 3500 - 4000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி விட்டது எனில், அதற்கு முன் இது எவ்வளவு காலமாக பேசப்பட்டிருந்தால் அது இலக்கண விதிகள் வகுக்கும் அளவிற்கு குலைந்து மெருகேறி ஒரு அழகிய வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும்! எண்ணிப் பாருங்கள் தமிழர்களே! அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும்...

படித்தால் மட்டும் போதுமா?

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
மிஸ்கின் இதேபோல் உதவி இயக்குநர்களை விமர்சித்ததை இன்னொரு பேட்டியிலும் பார்த்திருக்கிறேன். புத்தகம் அதிகம் படிப்பவர்கள் அதை சொல்லி பெருமைபட்டுக் கொள்வதை விட படிப்பார்வம் இல்லாதவர்களை படிக்க ஊக்குவிப்பதிலேதான் அதிக விருபபார்வம் கொண்டிருப்பார்கள். இப்படி விமர்சிப்பதில் அல்ல. மிஸ்கினும் நிறைய படிக்கக் கூடியவர் தான். சொல்லப்போனால் இவர் அளவுக்கு இலக்கியம் படித்தவர்கள் எழுத்தாளர்களிலேயே கூட அதிகம் இருக்க மாட்டார்கள். அதற்கு அவரின் ‘மிஸ்கின்’ என்னும் புனைபெயரே அத்தாட்சி. ஆனால் அதிகம் படிப்பவர்களுக்கு இயல்பாக ஏற்படும் நிறைகுடம் தளும்பா அடக்கம் இவருக்கு இன்னும் வந்ததாக தெரியவில்லை. 


மிஸ்கின் இப்படி சொல்லி இருப்பது என்பதை விட தொடர்ந்து சொல்லிவருவது என்பதே பொருத்தம். ஒரு வருடம் முன்பு மிஸ்கின் கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு லேண்ட்மார்க்கில் நின்றுகொண்டு அளித்த பேட்டி ஒன்று யூடியூபில் தேடினால் கிடைக்கலாம். அதை பார்த்தால் தெரியும் உ.இகள் பற்றி அதிலும் எவ்வளவு காட்டமாக விமர்சித்திருப்பார் என்று. 

“எதையும் படிக்காம அனுபவம் அனுபவம்னு சொல்றான். என்னடா உனக்கெல்லாம் பெரிசா அனுபவம் இருக்கப் போவுது.. ஃப்யில் ஆகி எஙகயாவது ஓட்டல்ல வேலை செஞ்சிருப்ப.. அப்பா கடங்காரனாகியிருப்பான்.. தங்கச்சி ஓடிப் போயிருப்பா.. உனக்கு லவ் ஃபெயிலியர் ஆகியிருக்கும்.. இதுதான் அனுபவமா.. புத்தகங்களை வாசிக்கணும்...” - இந்த ரீதியில் போனது அந்த பேட்டி. அப்போதே எனக்கு இவர் என்ன இப்படி பேசுகிறார் என்று புருவம் உயர்ந்தது. 

 நீ நேரடியாக ஒருவனை விமர்சிப்பது என்பது வேறு; அதை பொதுதளத்தில் பொதுப்படையாக(இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர்களை நினைச்சா) எல்லோரையும் செய்வது என்பது வேறு. உ.இ.களின் எதிர்வினையிலுள்ள தனிப்பட்ட தாக்குதலை நான் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவர்களின் கோபக்குரலில் நியாயம் இல்லாமலில்லை என்பதுதான் என் கருத்து. குறிப்பாக சுயஇன்பமே அவர்களின் அனுபவம் என்றெல்லாம் சொன்னது யாருடைய தன்மானத்தையும் சீண்டி பார்ப்பது. எனக்கும் மிஸ்கின் படங்கள் பிடிக்கும். இயக்குநர்களின் படைப்பையும், அவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. இவரின் வாய்துடுக்கு அவருக்கே சத்ரு. 

அப்புறம் இவர் சாருவால்தான் இப்படி ஆனார் என்பதை விட இருவருக்குள்ளும் உள்ள இணக்கத்திற்கு இனம் இனத்தோட சேர்ந்த கதை காரணமாக இருக்கலாம்:-)
மேலும்...

கைபோன போக்கில் (3)

Posted: Thursday, November 11, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஐந்து வருடங்களாக வைத்திருந்த செல்போன் எண்ணை என் அசிரத்தையால் கோட்டை விட்டு விட்டேன் என்பது இன்றைய நாளின் சோகமான சங்கதி. திருச்சியிலிருந்து கம்பெனி மாறி தற்போது பணியாற்றும் கம்பெனியில் சேர்ந்ததும் இங்கே ஒரு சிம் பயன்படுத்தக் கொடுத்தார்கள். ஒரு மொபைல் போனே எனக்கெல்லாம் எதேஷ்டம் என்பதால் இன்னொன்றை கழற்றி வைத்து விட்டேன். இருந்தாலும் எண்ணை விட்டு விடக் கூடாதேயென அவ்வபோது இயக்கி பார்த்துவிட்டு வைத்து விடுவேன். சில மாதங்களாக அதை செய்ய மறந்து போனதில் நம்பர் கையை விட்டு போய், தற்சமயம் அதை வேறு ஒரு சகமனிதர் வாங்கி விட்டதாக அறிந்து கொண்டேன். அவர் யாராக இருந்தாலும் குறைவாக பேசி நிறைவாக வாழக் கடவது!


அதனால் நண்பர்களே என்னுடைய பழைய எண்ணை (*******) இன்னும் யாரேனும் வைத்துக் கொண்டிருந்தால் அழித்து விடவும்.

பொதுவாக நான் எண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதிலும் குறிப்பாக நியூமராலஜி பேத்தல்களில் எல்லாம் துளியும் நம்பிக்கையில்லை. ஆனாலும் சில எண்கள் நம் வாழ்வில் கலந்து நினைவுக்கு சுலபமாகி விடுகின்றன. அவற்றை இழக்கும்போது ஏற்படும் சின்ன வருத்தம் மட்டுமே இது.

*

‘வ குவாட்டர் கட்டிங்’ படம் பற்றி படிக்கும் ரிவியூ எல்லாமே படுமட்டாக படத்தை திட்டுகின்றன. இருந்தாலும் விடப் போவதில்லை. இந்த வாரயிறுதியில் பார்த்தே தீருவது என்று முடிவு செய்து விட்டேன். இன்றுதான் கவனித்தேன் என் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள தியேட்டரிலேயே அப்படம் ஓடுகிறது என்பதை. கரூர் வந்த பிறகு இதுவரை ஒரு படம் கூட பார்த்ததில்லை என்னும் குறை இந்த படத்தால் தீரலாம். நல்ல படம் என்று நண்பர்கள் சிபாரிசு செய்து எத்தனையோ மரணமொக்கைகளையே பார்த்து வெந்தாகி விட்டது. மொக்கை என்று தெரிந்தே ஒரு படம் பார்த்துதான் வருவோமே (இது எனக்கு நானேயான சமாதானம்!). இரவு நேர சென்னைதான் கதைக்களம் என்பதுதான் என்னை ஈர்க்கிறது.

இன்று எதிரேயுள்ள தியேட்டரில் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். அது - மிர்ச்சி சிவாவுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய ரசிகர் மன்ற தட்டியை. ஆனாலும் ஆச்சரியமில்லை. சிவாவின் துடுக்கான பேச்சுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பது புரிந்துகொள்ள கூடியதே. இல்லையென்றால் RJ ஆக இருந்திருக்க முடியுமா.

*

இரண்டு நாள்களாக மழை சிறிதும் பெரிதுமாக ஊரை நனைத்துக் கொண்டிருக்கிறது. இந்தமுறை மழைக்காலம் பருவத்தே பொழிந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. எல்லா மழையும் புயலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெய்து முடித்து சென்னையை சுத்தப்படுத்தி வைத்திருக்கட்டும். மாதக் கடைசியில் சில பல நாள்கள் அங்கே ஜாகை போட நாளது தேதி வரை திட்டத்தில் இருக்கிறேன். அதற்கு பங்கம் வராமல் இருந்தால் சரி.

*


இந்த தீபாவளிக்கு டிவிப் பெட்டியே சரணாகதியென்றானவர்களுக்கு கமல், ரஜினி என்று நல்ல நிகழ்ச்சி விருந்து. நான் கமல் கலந்துகொண்ட காஃபி வித் அனு மட்டும் பார்த்தேன். அதில் இறுதியாக கமல் இரு வெண்பாக்களை கூறுவார். இரண்டில் ஒன்றை முழுமையாக எழுத்தாக்க முடிந்துள்ளது. நானல்ல இணைத்தில் ஒருவர் செய்திருந்தார். அதை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆத்தமா னார்(அ)யலார் பள்ளிப் பறித்தெடுத்து
மூத்தவர்யா மெனக்கூறி அமர்ந்திருக்கும் சூத்திரத்தைச்
சொல்லின்றிக் கூறிவிடும் பழங்கோயில் கேட்டுப்பார்
கல்லும்சொல் லாதோ கதை.

‘ஆத்தமா னார் அயலவர் கூடி’ என்பதை தான் திருவாசகத்தில் இருந்து எடுத்தாண்டதாகச் சொன்னார். இந்த ‘கல்லும்சொல் லாதோ கதை’ போல ஒன்றை எழுதிப் பார்க்க முயற்சிக்கிறேன். எனக்கே திருப்தியானால் பகிர்ந்து கொள்கிறேன்.

அடிப்படையான விதிமுறைகளை தெரிந்து கொண்டு கொஞ்சம் மொழியில் சொல்லாட்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் வெண்பா எழுதுவது சுலபமே. (இளையராஜா வெண்பாவில் வல்லவரானது இப்படி கற்றுக்கொண்டுதான்).

முன்பு Forum hub காலத்தில் சிலவற்றை கிறுக்கி பார்த்து தளை தட்டியதால் விட்டு விட்டேன். இந்த நிகழ்ச்சி மீண்டும் என் ஆர்வத்திற்கு தூபம் போட்டிருக்கிறது.

நிகழ்ச்சி முடியும்போது கமல் கடைசியாக ஒரு கவிதை படித்தார். வார்த்தைகளிலும் பொருளிலும் சம வீரியமாக தோன்றிய அதை எழுத்தாக்கி வாசித்து பார்க்க விரும்புகிறேன். நேரம் இருக்கும்போது செய்யவேண்டும்.

*

கமல் நிகழ்ச்சியில் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. அனுவிடம் ஆன்மிகம் பற்றி பேசும்போது ‘அதெல்லாம் செக்ஸ் போல ரொம்ப பர்சனல்; ஃபர்ட்ஸ்ட் நைட் முடிஞ்சி வந்தவன் கிட்ட எப்படியிருந்ததுன்னு கேட்க முடியுமா’ என்ற பொருளில் சரளமாக உரையாடிக் கொண்டிருந்தார். அனு மகள் முறை என்பதற்காகவெல்லாம் வார்த்தைகளை வடிகட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதில் எனக்கு கொஞ்சம் ஆச்சரியமே!
மேலும்...