அங்காடித் தெரு விமர்சனம்

Posted: Sunday, March 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கதாநாயகர்களை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்த்திரைச் சூழலில் எவர் ஒருவர் இயக்குநர்களைப் பின்பற்றி படங்களுக்கான தன் விருப்பப் பட்டியலை(wish list) அமைத்துக் கொண்டிருக்கிறாரோ அவரின் எதிர்பார்ப்பும் சராசரிகளுக்கு அதிகமாகவே இருந்து விடுகிறது. அங்காடித் தெருவைப் பொருத்தவரை எனக்கும்
அப்படித்தான் ஆனது. வெயில் படம் மற்றும் அதனைத் தொடர்ந்த அவரின் பேட்டிகளின் மூலமாகவும், சில இலக்கிய கூட்டங்களில் அவரின் பங்கேற்புகள் மூலமாகவும் வசந்தபாலனைப்பற்றிய என் அபிப்ராயங்கள் வெகுவாக உயர்ந்திருந்தன. இப்படத்தில் உடன் ஜெயமோகன் வேறு பங்களித்திருந்தார். இப்படி மலையளவு எதிர்பார்ப்புகளை என்னுள் குவித்து வைத்துக்கொண்டு படைப்பை எதிர்கொள்ளும்போது, அது செய்நேர்த்தியாக இல்லாது போகும் பட்சத்தில் எழும் சிறிய ஏமாற்றம்தான் படம் பார்த்த உடனே என்னை வியாபித்திருந்தது.

சற்று நிதானம் கூடி இன்று யோசித்து பார்க்கும்போது இதை வேறு யாராவது ஒரு புதுமுக இயக்குநர் இயக்கியிருந்தால் எப்படி எல்லாம் பாராட்டியிருப்போம் என்பதை உணர முடிகிறது. ஒருவர் தன் ஆகச்சிறந்த படைப்பை வெளியிட்டு விட்ட பிறகு அவரிடமிருந்து அதற்கு நிகரான ஒன்றை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். இது பொதுபுத்திக்கு இயல்பான ஒன்றுதான். அதனை விலக்கி வைத்து விட்டு ஒவ்வொரு படைப்பையும் ஒரு நிர்மலமான மனநிலையுடன் அணுகும்போது மட்டும்தான் அதன் இயல்புத்தன்மை புலப்படுகிறது.

அங்காடித்தெருவின் இயல்பான கதையோட்டத்தை இப்போது நிதானமாக அசைபோட்டுப் பார்க்கிறேன். நம் எல்லோருக்கும் பழக்கமான கடைகள்தான் ரங்கநாதன் தெருவில் இருப்பவை அனைத்தும். குறிப்பாக சரவணா ஸ்டோர்ஸ். சென்னை செல்லும் எல்லா சமயங்களிலும் அங்கேச் செல்ல நான் தவறியதில்லை. அல்லது குறைந்த பட்சம் நேரத்திட்டங்களை முடிந்தவரை அங்கே செல்வதற்கேற்ப மாற்றியமைக்க பிரயத்தனப்பட்டிருக்கிறேன். ஒரே இடத்தில் விலை மலிவில் குடும்பத்துக்கு, இன்னும் குறிப்பாக குழந்தைக்கு தேவையான ஆடைகளை வாங்கி விட முடிவதுதான் காரணம். இப்படி ஒவ்வொருவருக்கும் அங்கேச் செல்ல ஒரு காரணம் இருக்கும்.

வருடம் முழுவதும் நெரிசல். வாடிக்கையாளர்களின் அலைமோதும் கூட்டம். சற்று ஆயாசப்படுத்திக்கொள்ளக்கூட அவகாசம் அற்ற வேலை சரவணா ஸ்டோர்ஸ்(படத்தில், செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்) ஊழியர்களினுடையது. அவர்களில் ஒருவனே படத்தின் கதாநாயகன்.

வழக்கம்போலவே நாயகனின் பின்புலம் சோகமானது. அப்பா இறந்ததால் தோளை அழுத்தும் குடும்பச் சுமை; படிக்கும் வயதுக்கு வந்த தங்கைகள் எல்லாம் சேர்ந்து அவனை சென்னைக்கு துரத்துகின்றன. அவனுடைய கிராமத்திற்கு சென்னையின் பெரிய ஜவுளிக்கடையிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்க வருகிறார்கள். அதில் சேர்ந்து சென்னைக்கு செல்கிறான்.

கடையின் வெளிப்புறத் தோற்றத்துக்கும் உள்விவகாரங்களுக்கும் பெரிய வித்தியாசத்தை காண்கிறான். ஊழியர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் கிடையாது. கொத்தடிமைகளைப்போல வேலை வாங்குகிறார்கள். சாப்பிட்டு வர ஒரு நிமிடமே தாமதம் என்றாலும் சம்பளத்தில் ஒரு ரூபாய் பிடித்தம். ’ம்’ என்றால் அடி! ‘ஏன்’ என்றால் வேலை காலி. குடும்பச்சூழலை கருத்தில்கொண்டு எல்லோரும் அடக்குமுறைகளை மௌனமாக ஏற்றுக்கொண்டு அடிப்பணிந்து வாழ்கிறார்கள். சில பாலியல் அத்துமீறல்களைக் கூட பெண் பணியாளர்கள் பெரிதுபடுத்துவதில்லை.

இந்நிலையில்தான் அங்கே சக பணியாளர்களாக இருக்கும் நாயகன் நாயகி இடையே காதல் அரும்புகிறது. ஆனால் ஏற்கெனவே காதல் விவகாரத்தில் ஒரு தற்கொலை சம்பவம் நடந்திருப்பதால், அங்கே காதல் என்னும் வார்த்தைக்கூட தடைச் செய்யப்பட்ட ஒன்று. இவர்களின் காதல் தெரிய வரும்போது, மிகக்கடுமையாக தாக்கப்பட்டு இருவரும் தெருவில் நிறுத்தப்படுகின்றனர். வேறு கடைகளில் வேலை கிடைக்காத காரணத்தினால் சொந்தமாக அதே தெருவில் கூவி விற்கும் வியாபாரம் துவங்குகின்றனர்.

துயரம் அவர்களை விடாமல் துரத்துகிறது. இரவில் படுக்க சென்ற பிளாட்பாரத்தின் மேல் வாகனம் ஏறியதில், நாயகிக்கு கால் போகிறது. அந்நிலையிலும் காதலை விட்டுக் கொடுக்காமல் திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் நடைபாதையில் கடை விரித்து வியாபாரத்தை தொடர்கின்றனர். சுருக்கமாக இவ்வளவுதான் கதை. இதை காட்சிபூர்வமாக வரிசைப்படுத்துவதில்தான் இயக்குநரின் திறமை இருக்கிறது. திறமை மிளிர்கிறதா என்றால், ஒரு நிலையான கதைக்களனை எடுத்துக்கொண்டு அதில் எவ்வளவு சொல்லமுடியும் என்பதையெல்லாம் பரிசீலித்து பார்க்கும்போது, நிச்சயமாக குறைசொல்ல ஒன்றும் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

சின்ன சின்ன சம்பவங்களை உருவாக்கி சீட்டுக்கட்டுகளைப்போல அடுக்கி வைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக ஒரு கனமான உருவகத்தை அது உருவாக்கி காட்டினாலும், தனித்தனியாக பிரித்து பார்க்கும்போது சில இடங்களில் பலஹீனமான இடைச்செருகல்கள் போல சில காட்சிகள் தனித்து தெரிகின்றன. எடுத்துக்காட்டாக நாயகியின் தங்கை ருதுவானதும் அவளை அவளின் எஜமானி தங்க வைத்திருக்கும் இடம். அவளை ஒரு நாய்கூண்டு போன்ற இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார் என்பது ஒரு அதிர்ச்சி மதிப்பிற்காக செய்யப்பட்டது போலத்தான் தோன்றுகிறது. இயக்குநர் குரூரம், அதிர்ச்சி இவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது கடைசி இரு படங்களையும் கருத்திக்கொண்டு பார்க்கும்போது தோன்றுகிறது. இப்படத்தில் நாயகனின் தந்தையை ஒரு ஆட்டோவில் ஏற்றி அதை ஒரு தண்டவாளத்தில் சிக்க வைத்து, அதன்மீது ரயில் ஏற்றி கொன்றிருக்கிறார்.

இன்னொரு இடத்தில் நாயகனின் தங்கை அண்ணன் வேலை செய்யும் கடையின் கைப்பையை கொண்டுசெல்லும் இருவரின் பின்னாலேயே சென்று அதை இரந்து பெற்று, அப்பாவின் படத்தருகில் அண்ணன் நினைவாக மாட்டி வைக்கிறாள். மனதோடு ஒட்டாத செயற்கையான காட்சி அது. விடுத்து, கதையுடன் ஒட்டி வரக்கூடியதாக சில செண்டிமெண்ட்களை இயக்குநர் யோசித்திருக்கலாம்.

படத்திற்கு நாயகன் ஒரு பெரிய குறை. சிலர் புதுமுகம் தானே என்று நடிப்பை பாராட்டுகிறார்கள். படத்தின் மையமான பாத்திரம் முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாதபடி பலவீனமாக இருப்பதை, வெறும் புதுமுகம் என்பதினால் மட்டுமே மன்னித்து விட முடியாது. காரணம் இது நாடகம் அல்ல; அடுத்த ஷோவில் தேறிவிடுவார் பையன் என்று சமாதானம் சொல்லிக்கொள்ள. இது சினிமா - எல்லாம் ஒருமுறைதான். ஆனால் பலமுறை ஒத்திகைப் பார்த்துக்கொள்ள முடியும். இருந்தும் சொதப்புகிறார். தேர்ந்த நடிப்பால் அப்பாத்திரத்தை தாங்கிப் பிடிக்கும் ஒருவராக பார்த்து நடிக்க வைத்திருக்க வேண்டும்.

நாயகனின் நடிப்பின் பின்னடவை நாம் கவனிக்க சந்தர்ப்பம் தராமல் தன் அற்புதமாக நடிப்பால் நாயகி அஞ்சலி நம் கண்களை தன் பக்கம் கவர்ந்து கொள்கிறார். படத்தின் முதுகெலும்பு அப்பெண்ணின் நடிப்பு. அடுத்து நாயகனின் நண்பனாக சக ஊழியனாக வலம் வரும் ’கனா காணும் காலங்கள்’ பாண்டி. எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. தமிழ் சினிமா எதிர்காலத்தில் நன்றாக பயன்படுத்திக்கொள்ள போகும் ஒரு நடிகர் என்று தோன்றுகிறது.

இப்படத்தில் floor manager ஆக டைரக்டர் ஏ.வெங்கடேஷூம் (ஏய், மலைமலை, சாக்லேட், குத்து, பகவதி..), ஜவுளிக்கடை உரிமையாளர் அண்ணாச்சியாக எழுத்தாளரும் தற்போதைய அதிமுக இலக்கிய அணி செயலாளருமாகிய பழ.கருப்பையாவும் நடித்திருக்கின்றனர். பொருத்தமான தேர்வுகள். இருவரும் பழுத்த அனுபவசாலிகள் என்பது அவர்களின் நடிப்பில் வெளிப்படுகிறது.

படத்தின் இசை பெரிதாக கவனத்தை கவரவில்லை. ஏற்கெனவே பிரபலமடைந்திருந்த ’அவள் அப்படி ஒன்றும்’ பாடல் மட்டுமே நினைவில் தங்குகிறது. வசனங்களில் ஜெயமோகன் சில இடங்களில் மட்டும் தென்படுகிறார். கடையில் இருப்பவர்கள் முழுக்கவே ‘எலேய்’ என்று நெல்லை தமிழ் பேசுவது சென்னையின் இயல்போடு ஒத்துவரவில்லை.

கதைக்களன் எனக்கு “The terminal" ஐ ஞாபகம் செய்கின்றது. ஒரு நிலையான களனை கையில் எடுத்துக்கொண்டு அலுப்பைத் தராமல் இரண்டு மணி நேரத்தில் சம்பவங்களை கோர்வைப்படுத்தி அதில் கதை சொல்லியிருப்பதைப்போல் மசாலத்தனங்கள் இல்லாமல் இங்கேயும் ஒரு தீவிரத்தன்மையுடன் கதைச் சொல்லும் சூழல் எப்போது வரும் என்பதுதான் மாற்றுப்படங்களை எதிர்நோக்கி இருக்கும் என்னைப் போன்றவர்களின் விடை தெரியா கேள்வி. அதற்கு விடை காண வசந்தபாலன் போன்ற இயக்குநர்களின் இதுபோன்ற முயற்சிகள் ஒரு வழி சமைத்ததாக வரலாறு பின்னால் ஒருநாளில் குறிக்கக் கூடும்.
மேலும்...

குல்தீப் நய்யாரின் “ஜட்ஜ்மென்ட்” நூலை முன்வைத்து

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
இரு நாட்கள் முன்பு பழைய புத்தகக் கடை ஒன்றில் குல்தீப் நய்யார் எழுதிய ‘The Judgment" இன் தமிழ் பதிப்பு கிடைத்தது. அதை கையில் எடுத்தது முதல் கீழே வைக்கவிடாமல், அதன் வேகமும் விறுவிறுப்பும் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

எமர்ஜென்ஸி பற்றி இதற்கு முன் திராவிட தலைவர்களின் உரைகளில் சிறு குறிப்புகளாக அறிய கிடைத்த தகவல்களைத் தவிர, பெரிதாக ஒன்றும் இதுவரை எனக்கு படிக்க கிடைக்கவில்லை. அதுவும்கூட மிசா சட்டத்தில் உள்ளே இருந்த தங்களின் தீரத்தை பறைசாற்றிக்கொள்ளும் விதமான உரைகளுக்கிடையே, ஒரு ஊறுகாய் அளவிற்குத்தான் எமர்ஜென்ஸி பற்றிய தகவல்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

துக்ளக்கை தொடர்ந்து வாசிப்பதால் சோ சில சமயம் எமர்ஜென்ஸி நேரத்தில் தான் எப்படியெல்லாம் தணிக்கை அதிகாரியை மண்டை காய விட்டேன் என்பதை அவருக்கேயுரிய அங்கதத்துடன் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன். அவருடைய அங்கதமே விஷயத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்யாமல் மேலெழுந்தவாரியாக அமைந்து விட்டது. அதனால் எனக்கு எமர்ஜென்ஸி பற்றி மனதில் இருந்த சித்திரம் ஒரு 144 அளவிலேயே இருந்தது. அக்குறையை இப்புத்தகம் தீர்த்து வைத்துள்ளது. நய்யார் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்துடன் பதிவு செய்துள்ளார்.


என்ன மாதிரி ஆள், இந்த சஞ்சய் காந்தி..! இவ்வளவு வானளவு அதிகாரத்தை ஆகக்கூடிய அனைத்து அராஜகங்களையும் நிகழ்த்தி ஒரு தனி நபரால் கைக்கொள்ள முடிகிறது என்றால், அதையெல்லாம் மௌனமாக அனுமதித்த, விதந்தோதிய அவருடைய அம்மையாரின் பதவி பெருவிருப்பத்தை [வெறி என்று இந்திராவைப் பார்த்துச் சொல்ல ஏனோ மனம் வரவில்லை. காரணம், சராசரி இந்தியர்களுக்கேயுரிய நேரு குடும்ப விசுவாச ரத்தமாக இருக்கலாம் :-) ] என்ன என்று சொல்ல? இந்திரா காந்தி பற்றி என் மனதில் இத்தனை நாளும் ஏடுகள் கட்டி வைத்திருந்த ஒரு உறுதியான பிம்பம், இன்று முற்றிலும் நிறம் மாறிவிட்டது! இன்று இருக்கும் பதவி வெறி பிடித்த நாலாந்தர அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அன்றே அவர் நடந்து கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது.

நினைத்த வடிவங்களுக்கு அரசியல் சட்டங்களை மாற்றுவதும், அதிகாரத்தின் அசுர பலத்தை சந்தேகப்படும் அனைத்து மனிதர்களின் மீதும் ஏவி விடுவதுமாக ஒரு சர்வாதிகாரியாக வாழ்ந்திருக்கிறார். இல்லை.. இல்லை.. சர்வாதிகாரியின் அம்மாவாக வேடிக்கைப் பார்த்திருக்கிறார்! இப்படி இரும்புக்கரம் கொண்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்ததினாலேதான் தானோ, என்னவோ, இவரை இந்தியாவின் இரும்பு பெண்மணி என்கிறார்கள்!

சஞ்சய் காந்தியின் அடிபொடிகளாக நய்யார் சுட்டிக்காட்டும் பன்சிலால், சுக்லா வகையறாக்களைப்பற்றி படிக்கும்போது இன்றிருக்கும் ஜனநாயக கேலிக்கூத்து அரசியலுக்கும் அன்றைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது புரிகிறது. அதிலும் பன்சிலால் மாநிலத்திலும் மத்தியிலும் வெகுசாமார்த்திய அரசியல் நடத்தி வந்திருக்கிறார்.

அப்புறம் சஞ்சய் காந்தியின் அந்த குடும்ப நலத் திட்டம் எவ்விதம் அமல்படுத்தப்பட்டது; அதற்கு ஆள் பிடிக்க ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் எது மாதிரியெல்லாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; மற்றும் துர்க்மன் கேட் பகுதியில் குடிசைகளை அகற்றும் பணியில் 150 பேர் கொல்லப்பட்டது ஆகியவற்றையெல்லாம் படிக்கும்போது சஞ்சய் காந்தி இன்னுமொரு முகம்மது பின் துக்ளக் என்றுதான் எண்ண தோன்றுகிறது. நல்லவேளையாக அவர் ரொம்பநாள் அரசியலில் நீடிக்கவில்லை!

நய்யார் குறிப்பாக லாரன்ஸ் பெர்ணான்டஸ் மற்றும் சினேகிதா ரெட்டி ஆகிய இருவரின் சிறை டைரியின் சில பகுதிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸைப்பற்றிய தகவல்களைக் கேட்டு அவரின் சகோதரரை எப்படியெல்லாம் துன்பப்படுத்தினார்கள் என்பதும், அதே ஜார்ஜ் பெர்ணாண்டஸின் நட்பு வட்டத்தில் இருந்தார் என்பதற்காக சினேகிதா ரெட்டியை படுத்திய பாடுகளும் ஒரு சோற்று பதமாகவே இருக்கமுடியும். இதுமாதிரி தேசம் முழுவதும் எத்தனை எத்தனை கைதுகள்; அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் எத்தனை எத்தனை கதைகள் என்பதெல்லாம் என்றும் வெளிவரப் போவதில்லை.

ஆனால் எல்லா அரசியல்வாதிகளின் நிழலாகவும் இப்படி யாராவது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். காரணம் இந்திராவுக்கு ஒரு சஞ்சய் காந்தி என்றால், எதிர்தரப்பில் மாற்றாக முன்நின்ற மொரார்ஜிக்கு ஒரு காந்தி பாய் தேசாய்! இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை நாம் அவர்கள்

காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள், இப்படி பல துன்பங்களை அனுபவித்து, எமர்ஜென்ஸியை வெற்றிகரமாக எதிர்கொண்டு 1977-ல் தாங்கள் பெற்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளாமல், மீண்டும் ஆட்சியை மக்கள் இந்திராவிடமேஅளிக்கும்படி ஒற்றுமையில்லாமல் நடந்து கொண்டது, இன்று மட்டுமல்ல அன்றும் கூட எதிர்தரப்பு அரசியல் என்பது வெறும் சந்தர்ப்பவாத அரசியலாகத்தான் இருந்திருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. மாற்று அரசியலை முன்வைத்த தலைவர்கள் ஜேபியுடன் மறைந்து விட்டார்கள். அல்லது காங்கிரஸ் அப்படி யாரையும் வளர விடவில்லை. பின்னால் வந்த பிஜேபி முன்வைப்பது மத ரீதியான பயமுறுத்தல். அதை மாற்று அரசியலில் சேர்த்து விவாதிக்க முடியாது என்றும் நம்புகிறேன். அதனால்தான் அதனால் எல்லா திசைகளிலும் காலூன்ற முடியவில்லை.

நய்யார் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார்.

மத்திய ராஜ்ய அமைச்சர் ஷா நவாஸ் கான் முஸாபர் நகர் குறித்து ஓர் அறிக்கையைப் பிரதமருக்கு அனுப்பினார். அதில் போலீஸார் வேண்டுமென்றே எப்படி கொடுமையாக நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் இருந்தன. அந்த அறிக்கை மிகைப் படுத்தப் பட்டிருப்பதாகக் கூறி விட்டார் திருமதி காந்தி.

அந்த அறிக்கையின் பிரதி பக்ருதீன் அலி அகமதிடம் தரப்பட்டது. அதைப் பார்த்த போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அதுப் பற்றி பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, தம்முடைய டயரியிலும் அவர் எழுதி வைத்தார்.

ஆனால் நய்யார், அது என்ன சம்பவம் என்று விளக்கவில்லை. எமர்ஜென்ஸி கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்த பக்ருதீன் அலி அகமதுவையே கோபப்படுத்தி விட்ட அந்த முஸாபர் நகர் சம்பம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

மொத்தத்தில் இந்த புத்தகம் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறது. விளைவாக சிற்சில மனச்சித்திரங்கள் முற்றிலும் கலையவும், மாற்றி அமையவும் செய்கின்றன.
மேலும்...

தமிழ் குறும்படச் சூழல்

Posted: Thursday, March 25, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கர்ண மோட்சத்தை முன்வைத்து;

இன்று இணையம் என்னும் தனிநபர் ஊடகம் இருப்பதாலேயே இதெல்லாம் காண கிடைக்கிறது. இல்லாதிருந்த காலங்களில் எத்தனையோ நல்ல படைப்புகள் குறுகிய வட்டங்களில் மட்டும் பார்க்கப்பட்டு பெட்டிக்குள் முடங்கி விட்டன. இதற்கு யாரையும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால் அப்படிப்பட்ட குறும்படங்களை திரட்டி வெளிகொணர தமிழில் ஒரு இயக்கம் தேவை. ஆங்கிலத்தில் அப்படிப்பட்ட இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அதற்கான முயற்சிகள் இன்னும் தொடங்கப்பட்டதாக தெரியவில்லை.

தமிழில் ’அச்சமில்லை அச்சமில்லை’ என்று படம் எடுத்த அருண் வைத்தியநாதன் தமிழ் பதிவுலகின் ஒரு ஆரம்ப கால பதிவர். அவர் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஒரு குறும்பட இயக்குநராகவே பரிமளித்துக் கொண்டிருந்தார். பல நல்ல ஆங்கில குறும்படங்களை அவர் பகிர்ந்துகொண்டதெல்லாம் இப்போது ஞாபகம் வருகிறது.

தமிழில் அதிக குறும்படங்கள் ஈழத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டன. அவற்றுள் நான் பார்த்த ’செருப்பு’ என்னால் என்றும் மறக்க இயலாதது. என்னிடம் சேமிப்பில் அது இருக்கிறது என்றே நினைக்கிறேன். தேடி பார்த்து கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்.

பிற்சேர்க்கை:
மேலும்...

எனக்கான குறிப்புகள் (2): கல்கி, ராஜேஷ்குமார்

Posted: Wednesday, March 24, 2010 | Posted by no-nononsense | Labels: , , 0 comments
கல்கி ஆசிரம வீடியோக்களைப்பற்றி என் வாடிக்கையாளர்கள் இருவர் என் அலுவலக முன்னறையில் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அதில் ஒருவர் கல்கியின் தீவிர பக்தர். இன்னொருவர் அவரின் நண்பர். இருவரும் அந்த வீடியோக்களையும் சன் டிவியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். 'கடவுளின் காலடியில் இருப்பவர்களையும் சாதாரண பக்தனையும் எப்படி ஒன்றாக ஒப்பிட முடியும். அவர்கள் இருந்ததுதான் பரவச நிலை’ என்பதாக கல்கி பக்தர் ஆவேசமாக பேசியபடி, கல்கியின் அற்புதங்களாக சிலவற்றை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரைக் காண எனக்கு பரிதாபமாக இருந்தது. சாமியார்களின் வண்டவாளம் வெளிச்சத்திற்கு வரும்போது இம்மாதிரி உண்மை பக்தர்கள்தான் மிகவும் சங்கடப்பட்டு போகிறார்கள்.

தாசஜிக்கள் என்னும் கல்கியின் சீடர்களின் செய்கையையெல்லாம காணும்போது அது உச்சக்கட்ட போதையாகத்தான் தெரிகிறது. ஆனால் எது அவர்களுக்கு இவ்வளவு போதையை தருகிறது என்பது குறித்தெல்லாம் இந்த வீடியோ விளக்கவில்லை. சில பக்தர்களுக்கு மனதிற்குள் தாண்டவமாடும் பித்துநிலை, இவர்களிடம் புறவயமாக வெளிப்பட்டிருக்கிறது. சுயசிந்தனையை மலுங்கடிப்பதுதான் சாமியார்கள் செய்யும் முதல் வேலை. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை கையாளுகிறார்கள். கல்கிக்கு போதை போலும்.

ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இந்த கல்கி என்னும் விஜயகுமாரின் மேல் அவருடன் பணிபுரிந்த அவரின் முன்னாள் நண்பர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் போலீஸில் புகார் கொடுத்து, அது பத்திரிக்கைகளில் பரபரப்பாக இருந்தது. அந்த புகாரெல்லாம் என்ன ஆனது, புகார் கொடுத்த நபர் என்ன ஆனார் என்பதெல்லாம் துருவினால் நிறைய வெளிவரலாம்.


கல்கி ஆரம்பத்தில் இந்த கெட்டப்பில்தான் பல சீடர்களையும் கவர்ந்தார். பிறகு அவர் மனைவியையும் ‘அம்மா பகவான்’ ஆக்கி, அவருக்கென்று ஒரு தனி பிஸினஸை ”oneness” என்ற நாமகரணத்தில் வைத்துக் கொடுத்தார். அவருக்கென்றும் தனியாக பக்தர்கள் குழாம் உருவாகியது.

சாமியார்களைப்பற்றி பேசவும் எழுதவும் கூடாது என்று நினைத்தாலும் முடியாது போலிருக்கிறது. நேற்று அதே சன் டிவில் இன்னொரு சாமியாரைப்பற்றிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இவர் பெயர் புருஷோத்தமன். சிவில் டிரெஸில் இருந்த இவரும் தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார். அவர் பக்தர்கள் கல்கியின் தாசாஜிக்களுக்கு குறைவில்லாமல் பித்து பிடித்தது போல ’சக்ரா’ என்று ஏதோ கத்துகிறார்கள்; உளறுகிறார்கள்; ஆடுகிறார்கள். ஒரு கல்லூரி மாணவி இங்கே வந்து ’மந்த்ரா’ கற்றுக்கொண்ட பிறகே வாழ்க்கை நன்றாக இருப்பதாக பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

இத்துடன் சாமியார்கள் பற்றி தொடர்ந்து நான் பிரஸ்தாபிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். நாட்டில் பேசவும் எழுதவும் மற்ற எத்தனையோ விஷயங்கள் இருக்க, என் நேரத்தை நாய் வால் நிமிராமல் இருப்பது குறித்து ஆராய்ச்சி செய்வதில் வீணடிக்க விரும்பவில்லை.

0

பேசாமல் நான் ஏதாவது இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் பத்திரிக்கை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் ;-) தினமும் வித விதமான க்ரைம் கதைகளுடன் வேலையை துவங்க முடியும் போலிருக்கிறது. காரணம் என் புத்தக உறவு துவங்கியதே ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களுடன் தான். அவரில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், தேவிபாலா, புஷ்பா தங்கதுரை என்று pulp fiction-களில் ஊன் உறக்கமற்று மூழ்கி கிடந்த காலம் என்று என் வாழ்வில் ஒன்று இருந்தது. சுபா, ப.பி எல்லாம் இப்போது சினிமாவில் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தேவிபாலா பல சீரியல்களுக்கும் கதை வசனம் எழுதி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ராஜேந்திரகுமார் மறைந்து விட்டார். புஷ்பா தங்கதுரைக்கு வயதாகி விட்டது. ஆனால் இன்று வரை சினிமாவை சுவீகரித்துக்கொள்ளாத ஒரு எழுத்தாளராக ராஜேஷ்குமார் மட்டும் இருந்து வருகிறார்.


novels.jpg

ராஜேஷ்குமார் என்றதும் தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பாய் கடைதான் புத்தகங்கள் வாங்க பிரபலமானது. வழக்கமாக அங்கே எனக்கு தேவையானதை மட்டும் வாங்கிக்கொண்டு உடனே நடையைக் கட்டிவிடுவேன். நேற்று ஒரு நண்பருக்காக அங்கே காத்திருக்க நேர்ந்ததால், தனியாக ஒரு ஓரத்தில் தொங்க விடப்பட்டிருந்த நாவல்கள் மீதும் கண்களை மேய விட்டேன். பத்துக்கு ஒன்பது ராஜேஷ்குமார் நாவல்கள் தாம்! தமிழ் க்ரைம் நாவல் உலகில் மனிதர் இன்றும் சூப்பர் ஸ்டாராகத்தான் திகழ்கிறார் என்பது புரிந்தது.

ராஜேஷ்குமார் 1000 நாவல்களை கடந்து விட்டார். அவரின் 1000-ஆவது நாவல் ”டைனமைட் 98” ஐ படிக்க ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடமாவது இருந்தால், கிடைத்தால் பகிர்ந்துகொள்ளவும்.
மேலும்...

எனக்கான குறிப்புகள் (1)

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
பங்குச்சந்தையில் பணிபுரிய நேர்வதன் விசித்திரங்களில் ஒன்று, அதன் விடுமுறை தினங்கள். இந்தியாவின் இருபெரும் சந்தைகளும் மும்பையில் அமைந்திருப்பதால், நாடு முழுமைக்கும் மஹாராஷ்டிர விடுமுறை காலண்டரை பின்பற்றியே விடுமுறை அறிவிக்கப்படும். அதனால் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் வேலைக்கு போவதும், வீட்டில் இருப்பதுமாக நிகழும். அப்படித்தான் இன்று ஸ்ரீராம நவமிக்கு விடப்பட்ட விடுமுறைக்கு வீட்டில் உட்கார்ந்துகொண்டு இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீராம நவமி என்றால் என்ன? பக்தராகப்பட்டவர்கள் இதுவரை குறைந்தது நான்கு பேர் என்னிடம் வினவி விட்டார்கள். எதை ஒன்றையும் பின்பற்றுவதற்கு முன்னால் அதைப்பற்றி குறைந்த பட்சமாகவாவது அறிந்து வைத்திருக்க வேண்டாமா என்று கேட்கத்தான் வாய் வருகிறது. இருந்தாலும் ’எட்டில் சனி இருந்துகொண்டு எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே வயிற்றைக் கட்டா விட்டாலும் பரவாயில்லை, நீ வாயைக் கட்டியிருப்பதுதான் உன் வம்சத்துக்கே நல்லது’ என்று இந்த சனிப்பெயர்ச்சிக்கு முருகு ராஜேந்திரன் சன் டிவில் மோதிர விரலை ஆட்டி ஆட்டி சொல்லியிருப்பதால், ’எனக்கும் தெரியாது’ என்று கன்னத்தில் போட்டபடி நகர்ந்துகொண்டு விட்டேன்.

ராம நவமிக்கு முந்தைய தினம் குளக்கரை மண்டபத்தில் வழக்கமாக உபன்யாசம் நடக்கும். சில ஆண்டுகள் முன்பு வரை அதனை தவறாமல் கேட்டு வந்திருக்கிறேன். சேலம், திருச்சி என்று வேலைக்காக அலைய நேரிட்ட பிறகு விட்டுப்போன பல விஷயங்களில் இப்படி இலக்கியம், உபன்யாசம் போன்ற கூட்டங்களை தவறவிடுவதும் ஒன்றாகிவிட்டது. நேற்று வேலைமுடிந்து மாலை ஊர் திரும்பிய பிறகும் உலாவ கொஞ்சம் நேரம் மிச்சம் இருந்ததால் குளக்கரை உபன்யாசத்தை சென்று எட்டிப் பார்த்தேன். மண்டபத்தை நெருங்க நெருங்க சுந்தரகாண்டத்தில் இருந்து சுலோகங்கள் காதில் விழுந்த வண்ணம் இருந்தன. உபன்யாசர் மூச்சுப் பயிற்சியில் வல்லவராக இருக்கவேண்டும். இடைவிடாமல் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

upanyasam.jpg

உள்ளே சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது, இருந்தது அவரையும் சேர்த்து மொத்தமே ஒரு பத்து பேர்தான் என்று. அப்புறம்தான் நினைவுக்கு வந்தது இது சீரியல்களின் ப்ரைம் டைம் ஆச்சே என்று. இந்த நேரம் பார்த்து இதெல்லாம் செய்துகொண்டிருப்பது இவர்கள் தவறா, பக்தர்கள் தவறா என்னும் கேள்விகளுக்குள் எல்லாம் நுழையாமல் கதையை செவி மடுக்க ஆரம்பித்தேன். மிக நன்றாக காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார். இல்லாத கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு உற்சாகமாக பேசுவது என்பது யாருக்கும் வெகு சிரமமான காரியம். இருந்தாலும், வாங்கிவிட்ட கட்டணத்துக்கு பேசித்தானே ஆகவேண்டும். உள்ளே ஒலியமைப்புகள் சரியாக இல்லாததால் என்னால் ரொம்ப நேரம் இருக்கமுடியவில்லை. அவர் முகம் பார்த்து பேச அவர் முன்னால் யாராவது ஒருவராவது கடைசி வரை இருப்பார்கள் என்னும் நம்பிக்கையுடன் வெளிவந்து, நாமக்கல்லின் அடையாளங்களுள் ஒன்றாகிய அம்பிகாஸுக்கு எதிரே இருக்கும் சுண்டல் கடையில் பூரி மசால் ஒன்று சாப்பிட்டு விட்டு நடையை கட்டினேன்.

00 00


குழந்தை கொஞ்சம் நடக்கவும் பேசவும் ஆரம்பித்த நாள் முதலே வீட்டில் ஆரம்பித்து விட்டார்கள் ”சும்மா அவள் வீட்டில் இருப்பதற்கு கொண்டுபோய் பால்வாடியிலாவது விட்டு வா” என்று. அக்கம் பக்கத்தில் யாரோ கொண்டுபோய் விட்டு விட்டார்கள் என்பதால்தான் இந்த பாடு. நம் வீட்டில் அரைக்கண் இருந்தாலும், அடுத்த வீட்டில் முழுக்கண்ணாக வைத்துக்கொண்டிருப்பதுதான் பெண்களின் சுபாவம். என்றாலும், நான் முற்றிலுமாக அதையெல்லாம் மறுத்து விட்டேன். அவளை நான்கு வயது வரை எங்கேயும் அனுப்புவதாக இல்லை என்று கறாராக சொல்லி விட்டேன். ஆனால் நாளாக நாளாக நம் பிடிவாதத்தால் நம் குழந்தை பின்தங்கிவிடுவாளோ என்று ஒரு பயம் உருவாகிவிட்டது. அதனால் இன்று சென்று தெரிந்த கிண்டர்கார்டனில் ஒரு இடம் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். (Pre-KG-க்கு அட்மிஷன் தொகை ரூ.5000)

இது ச.பே.புதூரிலேயே இருக்கிறது. குழந்தையை கொண்டுவிட்டு அழைத்து வர மெயின் ரோட்டுக்கு போக வேண்டியதில்லை என்பது இதன் முதல் பெரிய அனுகூலம். நாமக்கல்லில் பெண்கள் தனியாக ரோட்டில் வண்டியில் உலா வருவதை விட ஆபத்தான காரியம் வேறு ஒன்று இருக்கமுடியாது. அதற்கு உகந்த நிலை இங்கே இல்லை. நாம் வண்டியில் செல்லும்போதே சில சமயம் மயிரிழையில் உயிர் தப்பிக்க வேண்டியுள்ளது. சிலர் டிராபிக்குள் செய்யும் சாகசப் பயணங்களையும் வேகங்களையும் காணும்போது நமக்கே முதுகு தண்டு சில்லிடுகிறது. அதனால் நான் என் மனைவியை எல்லை தாண்ட விடுவதில்லை.

இது கொஞ்சம் அதீத முன்னெச்சரிக்கையாக தோன்றலாம். காரணம், டிராபிக் என்றதும் சில நண்பர்கள் பெங்களூர் டிராபிக்கை பேச ஆரம்பித்து விடுகிறார்கள். நாமக்கல் போன்ற சிறு நகரத்தின் சிறிய சாலைகளின் பெரு வண்டிகளின் இடிபாடுகளுக்கிடையே ஊர்ந்து செல்லும் டூ வீலர் டிராபிக்கிற்கும், கார்களில் ஹாரன் அடித்தபடி காத்திருக்கும் பெருநகர டிராபிக்கிற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் உயிராபத்து அதிகம். அதனால் முடிந்தவரை முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.

அந்த கிண்டர்கார்டனில் இருந்து வெளியே வரும்போதுதான் பார்த்தேன், பரமத்தி ரோட்டில் நான் அடிக்கடி உலாவும் இடத்திலேயே ஒரு பழைய புத்தக்கடை முளைத்திருப்பதை. பழைய புத்தக கடைகளும், பிளாட்பாரக் கடைகளும்தான் பல நல்மாணிக்கங்களை தம்முள் ஒளித்து வைத்திருக்கும் சுரங்கங்கள். இன்று அப்படி அக்கடையில் கிளறியதில் மூன்று புத்தகங்கள் கிடைத்தன.

1. ஜட்ஜ்மென்ட் - குல்தீப் நய்யார்
2. கீதைப் பேருரைகள் - வினோபா
3. குருவே சரணம் - பிரபுநந்த கிரிதர்

இப்புத்தகங்களில் கீதைக்கு வினோபாவின் உரை என்பது எளிதில் கிடைக்காத ஒன்று. கீதா ரகஸியம் என்று திலகர் ஆரம்பித்து வைத்த கீதைப் புகழை பிறகு காந்தியும் வினோபாவும் பெருமளவில் பரப்புரை செய்தனர். எனக்கு இதுவரை காந்தியின் எழுத்துக்கள் மட்டுமே படிக்க கிடைத்தன. திலகர் கிடைக்கவில்லை. இன்று வினோபா கிடைத்து விட்டார்.

இவற்றில் மூன்றாவது புத்தகத்தை இன்றே படித்துமுடித்துவிட்டேன். பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையில் தொடங்கி அமிர்தானந்தமயி, சாய்பாபா,ரமணர்...வள்ளலார் வரையிலான வாழ்க்கை வரலாறு. விகடன் வெளியீடு. ஏற்கெனவே வேறு வேறு இடங்களில் படித்தவற்றை ஒரு மறுவாசிப்பு செய்த அனுபவம் கிடைத்தது. மற்றவற்றையெல்லாம் ஆற அமரத்தான் படிக்கவேண்டும். விட்டு விட்டு படித்துக்கொண்டிருப்பவையே ஏராளமாக நிலுவையில் உள்ளன.
மேலும்...

மனதை தெரிந்து கொள்வோம்

Posted: Tuesday, March 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மனநோய் குறித்து ஒரு விளக்க கையேடு கிடைத்தது. பகிர்ந்துகொள்கிறேன்.

Dr Anandan Flex Book


மேலும்...

தண்ணீர் படும் பாடு

Posted: Monday, March 22, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
சில மாதங்களாகவே வண்டிக்கு ரூ.80 என்று மாதம் ஐந்தாறு முறை மாட்டு வண்டியில் நீர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். இது புழங்க பயன்படுத்தும் உப்பு நீர் மட்டுமே. ஐந்து பத்து சேர்த்து தரத் தயாராக இருந்த போதிலும் குடிநீர் முன்பு போல விலைக்கு எங்குமே கிடைப்பதில்லை.

கொல்லிமலை குடிநீர் என்று சில ஆண்டுகளாக ஊருக்குள் லாரிகளில் கொண்டு வந்து விற்கிறார்கள். அதைத்தான் மக்கள் வாங்கி குடிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கே இப்போது அது ஒரு நல்ல பிஸினஸ். ஆனால் கொல்லிமலைக்கும் அந்த லாரி தண்ணீருக்கும் ஸ்நானப்ராப்தியும் கிடையாது. அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் போர்வெல்களிலோ, கிணற்றிலிருந்தோதான் கொண்டு வந்து விற்கிறார்கள். சுகாதாரம் குறைவானது என்பதால் அதை நான் என் வீட்டில் வாங்க அனுமதிப்பதில்லை. ஆனால் இனியும் சுத்தம் சுகாதாரம் என்றெல்லாம் பேசிக்கொண்டு காலம் தள்ள முடியாது என்று புரிகிறது. எந்த தண்ணீர் கிடைத்தாலும் வாங்கி நிரப்பிக்கொள்ளா விட்டால், பிறகு அதுவும் கிடைக்காது என்பதே நிதர்சனம்.

அண்மையில் என் ஒரே வீட்டை இரண்டாக பிரித்து தனித்தனியாக நகராட்சியில் பதிவு செய்து, சொத்து வரி கட்டிவிட்டு வந்தேன். எல்லாம் இன்னொரு குடிநீர் இணைப்பு பெறுவதற்காகவே. விரைவில் போர்வெல் போடவும் எண்ணியிருக்கிறேன். இதுவரை அதற்கான தேவை வந்ததில்லை. வரும் என்றும் நினைத்ததுமில்லை. அந்தளவிற்கு போதும் போதும் எனும்படி காவிரி நீரே குடிநீர் பைப்பில் வந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு பிடித்தது போக மீதியை இடமில்லாமல் பாத்ரூம் கழுவி விட்டுக் கொண்டிருந்தோம்.

அப்படியெல்லாம் வீணடித்ததன் வினைப் பயன் தான் இப்போது ”வண்டிக்காரன் எப்போது வருவான்; தொட்டி எப்போது நிரம்பும்” என்று வாசலிலேயே தவம் கிடக்க வேண்டிய நிலை. அது அகமாக இருந்தாலும் சரி; புறமாக இருந்தாலும் சரி, வருமுன் காப்பது என்பது தமிழனின் வம்சத்திலேயே கிடையாது.

ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளவே நிறைய செலவளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
மேலும்...

பேச ஒன்றும் இல்லை

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
கருணாநிதியும் அவர் குடும்பமும் பகுத்தறிவு வேடம் போடுகிறது என்பதன் மீதான விவாதத்தில் என் கருத்து;

ஒருவன் பகுத்தறிவுவாதியாக இருக்கிறான் என்பதனால் மட்டுமே அவனின் ஒட்டு மொத்த குடும்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் மிலிட்டரி சட்டமும் போடமுடியாது. இதெல்லாம் அவரவர் மனத் தெளிவைப் பொருத்தது.

என் திருமணம் நடந்தது கோவிலில். எல்லா விஷேஷ தினங்களிலும் ஏதாவது தெய்வத்தின் சன்னதியில் மனைவியுடன் என்னைக் காணலாம். குழந்தைக்கு மொட்டை அடிக்க பழநி, சமயபுரம் உள்ளிட்ட பல கோவில் வாசல்களையும் மிதித்து விட்டேன். பிரதி வெள்ளி தோறும் என் வீட்டில் அப்பா செய்யும் பூஜையின் போது என்னிடம் காட்டப்படும் தீபாராதனையை நான் நிராகரித்தது இல்லை. முன்பு அம்மாவும் இப்போது மனைவியும் வலுக்கட்டாயமாக நெற்றியில் இடும் திருநீரை ஓரிரு முறைக்கு மேல் மறுத்து பேசுவதில்லை. காலண்டரில் இருக்கும் தெய்வ படத்தைக் கண்டாலும் கூட என் குழந்தை கைகூப்புகிறது; சமயத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறது. எல்லாம் என் குடும்பத்தினரின் பயிற்சி. என் குழந்தையிடம் நான் எதிர்பார்த்தே வேறு. இருந்தாலும் நான் தடுத்ததில்லை. என் மனைவி என் கையில் கட்டி விட்ட சாமி கயிறுடன் தான் இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.

திருச்சியில் என் அருமை நண்பர் ஸ்ரீநிவாசன் என் நலனுக்காக என்று சொல்லி அன்புகூர்ந்து என்னை நாச்சியார் முன்பும், திருவரங்கன் முன்பும் கொண்டுபோய் நிறுத்திய போதும், நம்மாழ்வாரின் பாசுரங்களை வாய் விட்டு பாடிய போதும் மௌனமாக அதை அங்கீகரித்திருக்கிறேன். அவரிடம் நாத்திகம் பேசியதில்லை. இன்று வரை அவருக்கு எனக்கு அதிலுள்ள விமர்சனங்கள் எதுவும் தெரியாது. என் பல நண்பர்கள் ஐயப்பனுக்கு மாலை போட்ட போதெல்லாம் அவர்களின் விரதத்திற்கு உகந்த அத்தனையும் செய்திருக்கிறேன். பயண காசு கொடுக்க தவறுவதில்லை.

இதையெல்லாம் நான் செய்வதாலேயே நான் ஆத்திகவாதி என்றும், எல்லாம் எனக்கும் ஏற்புடையன என்றும் நீங்கள் கூறுவீர்களேயானால், அது உங்களின் சொந்த முடிவு. உண்மை வேறு!

இத்தனையையும் மறுத்து எதிர்த்து நான் வாதம் செய்து கொண்டிருந்தால் என் அன்புக்குரியவர்களின் மனம் புண்படுவதைத் தவிர, வேறு ஒரு பயனும் உண்டாகப் போவதில்லை. பிரச்சாரம் செய்தோ விவாதம் செய்தோ எந்த மனத் தெளிவையும் உண்டாக்க முடியாது. அதற்கு அவரவருக்கு மனதில் அடிப்படையான ஒரு தேடல் இருக்க வேண்டும். மாற்றுக்கருத்துக்களை பரிசீலிக்கத் தேவையான திறந்த மனது இருக்க வேண்டும். முக்கியமாக நிறைய படிக்க, படித்தவற்றின் மீது சிந்திக்க தயாராக இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாது போகும் பட்சத்தில் விவாதங்களினால் பயனில்லை.

அதனால் என் அத்யந்த நண்பர்களிடம் கூட விடாப்பிடியாக அவர்களின் நம்பிக்கைகளின் மேல் நான் விவாதிப்பதில்லை. அவர்களுடன் இயைந்து போவதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி; எனக்கும் ஒரு குறைவும் இல்லை.

*

கருணாநிதியையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். அவரின் பகுத்தறிவு கொள்கைகளின் மீது எனக்கு நாளது தேதி வரை எந்த ஐயமும் இல்லை. பல நேரங்களில் ஆழமான பகுத்தறிவு வாதங்களை அவர் கடிதங்களில் முன்வைப்பார்; ஆனால் அதனை நீட்டித்து உள் புக மாட்டார். காரணம் ஓட்டரசியல் தான். மஞ்சள் துண்டு போடுவது ஒரு அடையாளத்திற்காக என்பதும் ஏற்கக் கூடியதே. அப்படிப் பார்த்தால், கருப்பு சட்டை பெரியாருக்கு ராசியானது என்று யாரோ ஜோஸியம் சொன்னதால்தான் அவர் காலமெல்லாம் கருப்பு சட்டை அணிந்திருந்தார் என்றும் கூட சொல்லமுடியும். ஆனால் ஏற்றுக்கொள்வார் யார்?

இக்கட்டுரை மட்டும் அல்ல; நான் தொடர்ந்து பலரிடமும் காணும் ஓர் அம்சம் என்னவென்றால் பெரியாரை படிக்காமலேயே விமர்சிக்க துணிகிறார்கள். “பெரியாரே கடைசி காலத்தில் யாருக்கும் தெரியாமல் சாமி கும்பிட்டாராமே, தெரியமா’ என்று அடித்து விடுகிறார்கள். அவர்களுடன் பேச ஒன்றும் இல்லை.

அதேபோல்தான் இப்படி குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையை நம் மீதும் ஏற்றி பேசுபவர்களிடமும் பேச ஒன்றும் இல்லை.
மேலும்...

ஒரு நாடகமன்றோ நடந்தது

Posted: Sunday, March 21, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை போல இதற்குமுன் இவ்வளவு ஒற்றுமையாக வேறு எந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். இதில் மாற்றுக்கருத்து கூறினால் எங்கே பெண்களுக்கு எதிரான போக்காக அது பிரச்சாரம் செய்யப்பட்டு விடுமோ, பெண்கள் ஓட்டு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் எல்லா கட்சிகளும் ஆதரித்து விட்டார்கள் - இடதுசாரிகள் உட்பட!

லாலு மற்றும் முலாயம் கட்சிகள் மட்டுமே இதை எதிர்த்தன. எதிர்த்தன என்றால் அது மசோதாவை அல்ல. அதன் தற்போதைய வடிவை. இடஒதுக்கீடிற்குள் தாழ்த்தப்பட்டவற்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனியாக உள் ஒதுக்கீடு கேட்கிறார்கள்.

அதென்ன தாழ்த்தப்பட்டவர்களிலேயே தாழ்த்தப்பட்டவர்கள்?

இதற்கு உதாரணமாக சொல்லவேண்டுமானால், தமிழகத்தில் அருந்ததியரை(சக்கிலியர்) சொல்லலாம். அவர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பொதுப்பிரிவின் கீழ்தான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றாலும், அவர்களை மற்ற இருபெரும் தாழ்த்தப்பட்ட சாதியினரான ஆதிதிராவிடர் (பறையர்), தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) ஆகியோர் சரிநிகராக நடத்துவதில்லை. அவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதுகின்றனர்; நடத்துகின்றனர். காரணம் ஒரு காலத்தில் இச்சாதியினரே மலம் அள்ளும் வேலையை செய்துகொண்டிருந்தனர். இன்றும் கூட சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் இவர்களே!

அதனால்தான் அவர்களுக்கு என தனி உள் ஒதுக்கீடு அவசியமாகிறது. எனவே லாலு முலாயம் வகையறாக்கள் எழுப்பும் குரலில் நியாயம் இல்லாமல் இல்லை.

*

இந்த மகளிர் இட ஒதுக்கீட்டினால் பெண்களுக்கு ஏதோ பெரிய நன்மை நடந்து விடப்போவது போல பலரும் கட்டுரைகளும் பேட்டிகளும் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பலகாலமாக சோ வலியுறுத்திவரும் கருத்துதான் என்னுடையதும். இன்று ஒரு தொகுதியில் அங்கே செல்வாக்குள்ள அரசியல்வாதி நிற்கிறார் என்றால், நாளை அத்தொகுதி மகளிருக்கு ஒதுக்கப்பட்டால் அப்போது அவரின் மனைவியோ, மகளோ, மருமகளோ அல்லது உறவினரோ தான் நிற்க வைக்கப்படுவார். இதனால் பெண் குலத்திற்கு என்ன பெரிய நலம் விளைவிக்கும் செயல் நடந்துவிடப் போகிறது.

சேலம் தொகுதி நாளை மகளிர் தொகுதி ஆக்கப்பட்டால் அப்போதும் அங்கே வீரபாண்டி ஆறுமுகத்திற்கு வேண்டிய ஒருவர்தான் போட்டியிடுவார். வேறு ஒரு மாற்றமும் வந்துவிடாது.

எல்லோரையும் சாட்சியாக கொண்ட ஒரு நாடகமன்றோ நடந்தது!
மேலும்...

நண்பனாக முயற்சிப்பவனே!

Posted: Saturday, March 20, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பனாக முயற்சிப்பவனே!


என்னுடன் எப்போதும் உன்னை ஒப்பிட்டு
ஏன் வீணில் குழப்பிக்கொள்கிறாய்?

என் மீது உனை சூழந்தப் பிரச்னைகளை
ஏன் பொருத்திப்பார்க்க முயல்கிறாய்?

உன்னால் முடியாததால் என்னாலும் முடியாதென
எப்படி உன்னால் எண்ணமுடிகிறது?

உனக்கு புரியாத சூட்சுமங்கள் எனக்கும் புரியாதென
பொதுவில் எவ்வாறு முடிவுசெய்கிறாய்?

என் எண்ணங்களின் அலைவரிசையை உற்றுப் பார்த்தே
உணர்ந்துகொண்டதாக எண்ணத் துணிந்தது எப்படி?

என்னுள் மேலிடும் ஆர்வங்களையெல்லாம்
எளிதில் உனக்கு புரியவைப்பது எப்படி?

உன் சங்கடங்களையும்; என் சௌகரியங்களையும்;
ஒரே தராசில் நிரப்பியளக்க நீ முனைந்தது எங்ஙனம்?

என் ரசனை எனது; உன் ரசனை உனது; இவ்வாறிருக்க,
உன் அசூயைகளை நான் எவ்விதம் பொறுக்க?

கோணலான கோணமொன்றில் நீ பார்த்துவிட்டு
நான் நடப்பது தலைகீழாய் என்கிறாய்!

எனக்கொவ்வா கருத்துக்களாக நீயுரைத்துவிட்டு
எதையும் ஏற்கவில்லையென நிதம் குமுறுகிறாய்!

நட்புக்கு பொருந்தாத நாசூக்குத்தனங்களெல்லாம்
என்னிடம் எதிர்பார்த்து ஏமாறுகிறாய்!

நண்பனாக முயற்சிப்பவனே!

என்னை நானாக நீ பார்க்கும் ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!

ஏட்டு சுரைக்காயை நீசமைக்காத ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!

உன்தலை ஒளிவட்டம் நீவிலக்கும் ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!

எனக்கான அடையாளங்களை நீதிருத்தாத ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!

ஆம், நாமும் ஒருநாள் நட்பாக கூடும்!
மேலும்...

சினிமா ரசிகர்கள்

Posted: Friday, March 19, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இப்பதிவில் என் மறுமொழி:

ரசிகர்கள் பல விதம். அவர்களில் நம் ஊர் சினிமா ரசிகர்கள் அளவிற்கு கண்மூடித்தனமான பின்பற்றுதல் மற்ற துறை ரசிகர்களிடம் இருக்கிறது என்று சொல்லமுடியாது. எஸ்.பி.பியை ஒருவர் ரசிக்கிறார், பாடல்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்றால், பாடகரின் திறமை மீது கொண்ட லயிப்பாக அதனை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அதற்கு மாறாக நம் சினிமா ரசிகர்களோ வெற்று பிம்பங்களுக்கு மாலையணிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய பாணி சினிமாக்களுக்கும் மற்ற அயல்நாட்டு சினிமாக்களுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பட்டியலிட்டு, இந்தியச் சூழலையும் உளவியலையும் கணக்கில் கொண்டு சிந்தித்தால் இதற்கு ஓரளவு காரணம் பிடிபடும் என்று தோன்றுகிறது.

இங்கேயுள்ளது போல வேற்று தேச சினிமாக்களில் சூழ்நிலைக்கேற்ற பின்னணி பாடல்கள் கிடையாது. பஞ்ச் டயலாக் கிடையாது. ஒரே அடியில் ஒன்பது பேரை வீழ்த்தும் சூப்பர் ஹீரோயிஸம் கிடையாது. முக்கியமாக, கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ஹீரோவே இறுதியில் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் ’சம்பவாமி யுகே யுகே’ கிடையாது. அதனால் அங்கேயெல்லாம் நம் ரசிகர்களைப்போல தொழல் கிடையாது. அங்கேயும் cult இருக்கலாம். ஆனால் அது வாழ்க்கையை தொலைத்துவிட்டு ‘தலைவா’ என்று திரியும் அளவிற்கு இருக்காது என்று நம்பலாம்.

இங்கே கதையை முன்னிறுத்தி அல்ல; கதாநாயகனை முன்னிறுத்தியே காட்சிகள் கட்டமைக்கப்படுகின்றன. தன்னுடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பற்பல தனி மனித சாகசங்களையே தெய்வச் செயல்களாக படித்தும் கேட்டும் வளர்ந்துள்ள ஒருவனால், சினிமா முன்னிறுத்தும் சாகசங்களின் நாயகனுடனும் வெகு இயல்பாக பொருந்திப் போக முடிகிறது. எல்லோராலும் அல்ல என்றாலும், கணிசமான மனிதர்களிடம், குறிப்பாக வாழ்க்கையை அதன் ஆகசாத்தியமான அத்தனை கொண்டாட்டங்களுடனும் அறிந்துகொள்ளும் முனைப்பில் இருக்கும் இளந்தலைமுறையினரிடம் அதன் தீவீர பாதிப்பை காணமுடிகிறது. சிலர், இளங்கன்றுப் பருவம் மாறி, நடப்புகளைப்பற்றிய அடிப்படையான புரிதல்கள் ஏற்பட்டதும் கடந்துவிடுகிறார்கள். சிலரால் முடிவதில்லை.

இவர்களின் இந்த பலவீனத்தை சில நடிகர்கள் திறமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களைக் கொண்டே அரசியல் பேரங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அடிமட்ட தொண்டன் எவனுக்கும் ஒரு பிரயோஜனமும் கிடையாது என்பதற்கு விஜயகாந்த் நிகழ்கால உதாரணமாக திகழ்கிறார். வேறு கட்சிகளில் போணியாகாத லோக்கல் பெரும்புள்ளிகள்தான் இப்போது விஜயகாந்த் கட்சியில் நிறைந்து காணப்படுகிறார்களேத் தவிர, விஜயகாந்தை இந்த உயரத்துக்கு ஏற்றிவிட்ட அவரின் ரசிகர்கள் அல்ல.

மாற்று சினிமாக்களின் எண்ணிக்கை பெருகும் நாட்களில் இதுவும் மாறும் என்றே நம்பலாம்.
மேலும்...

போலிகளின் மருத்துவம் - தொடரும் உரையாடல்

Posted: Thursday, March 18, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
//படித்தவர்களாலேயே அறிந்து கொள்ள முடியாது எனும்போது //
புரிந்துகொள்ள முடியாது என சொல்வதற்கில்லை... ஒரு அசால்ட் லுக்.. வரும் முன் காப்போம் என்பதை மறந்து வந்த பின் அனுபவிக்க வேண்டியது தான்

படித்தவர்களாலேயே அறிந்துகொள்ள முடியாது என்று நான் சொன்னது எதனையென்றால்:

உணவு பொருட்களில் போலிகளை எளிதில் இனம் காணுவது போல, மருத்துகளை கையில் எடுத்துப் பார்த்தோ நுகர்ந்து பார்த்தோ அல்லது சிறிய சோதனைகளின் மூலமோ அது உண்மையா போலியா என்று எளிதில் அறிந்துகொள்ள முடியாது என்பதை.

மருந்துப் பொருள் போலிகளில் பல வகை உண்டு.

1. சரியான அளவில் உட்பொருட்கள் இல்லாதவை
2. தவறான உட்பொருட்கள் கொண்டவை
3. ஆபத்து விளைவிக்கும் உட்பொருட்கள் கொண்டவை

இப்படி இன்னும் பல இருக்கலாம். (எப்போதோ படித்ததை வைத்து வகைப்படுத்தியிருக்கிறேன். துறை வல்லுநர்களுக்கே உள் நிலவரம் தெரியும்)

இதையெல்லாம் அத்துறையில் பயிற்சி உள்ளவர்களாலுமே கூட உடனே கண்டுபிடித்துவிட முடியாது. மருந்தை பரிசோதனைகூடம் அனுப்பி, அதன் முடிவுகளைப் பார்த்தால்தான் அவர்களாலும் சொல்லமுடியும். இப்படிப்பட்ட நிலையில் படித்தவர்களே மருந்து வாங்க சென்றாலும் கூட, எவ்வளவுதான் உஷாராக உற்று உற்று படித்துப் பார்த்தாலும் மருந்தின் உண்மைத் தன்மையை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? நம்மால் முடிந்ததெல்லாம் expiry date -ஐ நன்கு கவனித்து வாங்குவது மட்டுமே.

இதில் முதலில் தார்மீக அக்கறையை வெளிப்படுத்த வேண்டிய கடமை டாக்டர்களுக்கே உள்ளது. அவர்களுக்கு ஓரளவுக்கு எந்த கம்பெனியின் மருந்துகள் போலி அல்லது தரமற்றவை என்பது தெரிய வாய்ப்புள்ளது. இருந்தாலும், பெரும்பாலும் எந்த கம்பெனி தங்களை நன்கு ‘கவனிக்கிறதோ’, அவர்களின் மருந்துகளே பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த கவனித்தலில் ஆளுக்கு தகுந்தபடி பணம், பவுன் முதல் ’பட்டாயா’ வரை அத்தனையும் அடக்கம்.

இன்னொன்று கேள்விப்பட்டேன். பிரசவ ஆஸ்பத்திரிகளில் தான் தற்சமயம் அதிக அளவில் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் தரமற்றவைகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்றார் லேப் நண்பர் ஒருவர். காரணம் அதில் உபரியாக தனியாக ஒரு மார்ஜின் நிற்கிறதாம் :(

உடலில் நோயும் உபாதையும் வந்து விட்டால் நாம் செய்வதெல்லாம் மருத்துவர்களையும் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தெய்வமாக நம்புவது மட்டும்தான்! நமக்கு நம்பிக்கை! அவர்களுக்கு கேஸ் கணக்கு; பெட் கணக்கு!


Its not at all possible in Inida as per current situation..even in future too.. lot of basic changes are supposed to come..

இந்தியாவில் முதலில் பெரிய ரூபாய் நோட்டுக்கள்(500, 1000) ஒழிய வேண்டும் என்று நம் நண்பர்களில் ஒருவன் ஒருநாள் சொன்னான். அப்போதுதான் அதிகப் பணங்களை சூட்கேஸில் கைமாற்றுவது, கரன்ஸி மாலை போட்டு பகட்டு காட்டுவது எல்லாம் ஒழியும்; எல்லா பரிவர்த்தனைகளும் வங்கி கணக்குகள் மூலம் நடைபெறும் என்பது அவ்வுரையாடலின் சாராம்சம். அதுபோன்ற அடிப்படை மாற்றங்களில் ஒன்றுதான் மெடிக்கல் இன்சூரன்ஸின் அவசியமும்.

இதெல்லாம் நடைமுறைக்கு வர வேண்டும் என்பது விருப்பம். வந்தால் நல்லது. வர விடமாட்டார்கள் என்பது தலையெழுத்து!
மேலும்...

போலிகளின் மருத்துவம்

Posted: Wednesday, March 17, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இச்செய்தியை முன்வைத்து:

வேறு எத்தனையோ துறைகளில் போலிகள் இருந்தாலும், உயிர் காக்கும் மருத்துவ துறையிலும் போலிகள் மலிந்திருப்பதுதான் மிகக்கொடுமை. இங்கே போலிகள் என்பதை பட்டம் பெறாத போலி டாக்டர்களுடன், பட்டம் பெற்ற சில உண்மை டாக்டர்களையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்.

பட்டம் பெற்றவர்களில் வைத்தியத்தில் சரியான பயிற்சி இல்லாமல் ஏனோதானோ சிகிச்சை அளிப்பவர்கள் ஒரு வகை போலி என்றால், வைத்தியம் தெரிந்தும் தன்னுடைய மருந்து கடையில் தேங்கி கிடக்கும் மருந்துகளை எக்ஸ்பைரி தேதி முடியும் முன்னர் விற்றுத்தள்ள வேண்டிய வணிக நிர்பந்தத்தில், சம்மந்தமில்லா நோய்களுக்கு கூட அவற்றை பரிந்துரை செய்யும் போலிகள் இன்னொரு வகை. இதையெல்லாம் படித்தவர்களாலேயே அறிந்து கொள்ள முடியாது எனும்போது பாமரர்களைப்பற்றியெல்லாம் பேசவே வேண்டியதில்லை.

[இவர்களுக்கிடையே நிறைய நல்ல டாக்டர்களும் இருக்கவே செய்கிறார்கள் என்பதை எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு டிஸ்கிளைமராக சொல்லி வைக்கிறேன். The reason is so obvious! :-) ]

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் pharma-துறையில்தான் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இங்கே அதிக மக்கள்; பூஜ்ஜிய சுகாதாரம்; அதிக நோயாளிகள். மாத்திரைகளின் சகவாசமின்றி வாழ்பவர்கள் வெகு குறைவு. மருத்துவர்களை விட மருந்து தயாரிப்பு கம்பெனிகளும் மருந்து விற்பனையாளர்களும்தான் இத்துறையை பாழ்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விற்பனை ஒன்றே நோக்கம். வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகளையும்கூட இங்கே தாராளமாக தயாரித்து விற்கிறார்கள். அரசு தரப்பிலிருந்து ஒரு நடவடிக்கையும் கிடையாது.

இதனையெல்லாம் கண்காணிக்க சோதனை நடத்த எல்லா ஊர்களிலும் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆய்வாளர்களின் கையை வழக்கம்போல் கையூட்டு கட்டிப்போட்டு விடுகிறது. மேலும், அவர்களின் குடும்பத்தேவைக்கான நல்ல மருந்துகள் இலவசமாகவே கிடைத்துவிடுகின்றன எனும்போது, மக்களுக்கு கிடைப்பது எதுவாக இருந்தால்தான் அவர்களுக்கு என்ன?

ஏன் இந்தியாவில் இதற்கு எதிராக ஒரு பெரிய மக்கள் இயக்கம் இல்லை என்பதுதான் அவ்வப்போது என் மனதில் தொக்கி நிற்கும் கேள்வி. இடதுசாரி இயக்கங்கள் கூட இதற்கு எதிராக பெரிய போராட்டங்கள் நடத்தியதாக தெரியவில்லை. காரணமும் புரிகிறது. மருந்துகளில் எது நல்ல மருந்து; எது குறைபாடு கொண்டது; எது முற்றிலும் போலி என்பதையெல்லாம் அதில் நிபுணத்துவம் இல்லாமல் அவர்கள் மட்டும் எப்படி கண்டுகொள்ளமுடியும்? நிபுணத்துவம் கொண்டவர்களில் ஒரு சிலராவது சமூக நன்மை கருதி கையில் தரவுகளுடன் போராட்டக் களத்திற்கு வந்தாலே இது சாத்தியம். ஆனால், இம்மாதிரி முறைகேடுகளில் பெரும்பாலும் அதில் சம்மந்தப்பட்டுள்ள எல்லோராலும் ஒரு கள்ளமௌனமே கடைபிடிக்கப்படுகிறது. அத்தனையும் மனிதநேயத்தை விலக்கிய வர்த்தக நலன்களுக்காக என்பதுதான் மனிதர்கள் மீதான நம்பிக்கையை குலைக்கிறது.

அதிசயமாக சமீபத்தில் சென்னையிலுள்ள மருந்து கடைகளில் பெரிய அளவில் ஒரு ரெய்டு நடத்தப்பட்டது. அதில் எக்ஸ்பைரி தேதி முடிந்த மருந்துகளின் மேல் புதிதாக லேபிள் ஒட்டி விற்பனைக்கு வைத்திருந்த மருந்துகள் மட்டும் பல லட்சம் மதிப்பில் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன.

Surely a tip of the iceberg!

*

போலிகள் ஒருபுறம் இருக்க, இங்கே மக்களால் மேற்கொள்ளப்படும் சுயவைத்தியம் குறித்தும் பெரிதாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. எப்போது மருந்து கடைக்குச் சென்றாலும் அங்கே யாராவது சிலர் ஏதாவது உடல் உபாதையை சொல்லி, அங்கேயுள்ள மருந்து விற்பனையாளரிடமே அதற்கு மருந்து மாத்திரைகளை பெற்றுச் செல்லும் காட்சியை காணமுடியும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. அதில் சில சமயம் நாமும் ஒருவராக இருந்து வருகிறோம்.

Over-the-counter இல் விற்பனை செய்ய வகைப்படுத்தப்பட்டுள்ள மருந்து பொருட்களெல்லாம் எவை எவையென மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. இந்தியாவில் எல்லா மருந்துகளுமே OTC தான். அயல்நாடுகளில் அப்படி OTC அல்லாத பொருட்களை தாமாக வாங்கிவிட முடியாது என்று நிச்சயம் நம்புகிறேன்.

[சுயவைத்தியத்தின் தீங்கை மையக்கருத்தாகக் கொண்டு பாண்டியராஜன் ‘டபுள்ஸ்’ என்று ஒரு படம் எடுத்திருந்தார். அவர் இயக்கிய கடைசிப்படம் அதுதான் என்று நினைக்கிறேன்]

என்னைப் பொருத்தவரை, மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல மெடிக்கல் இன்சூரன்ஸ் இங்கேயும் கட்டாயமாக்கப்பட வேண்டும்(அங்கே கட்டாயம் என்றே நினைக்கிறேன். இல்லையென்றால் நண்பர்கள் திருத்தலாம்). அப்போதுதான் இந்த போலிகள் மற்றும் சுயவைத்தியப் பிரச்னைகள் எல்லாம் ஒழியும்.

தமிழ்நாட்டில் இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஒரு ஏமாற்று வேலையே அன்றி வேறு அல்ல. அதில் தங்களை இணைத்துக் கொண்டிருந்த மருத்துவமனைகள் கூட அதிலிருந்து விலகிக்கொள்ளவோ, அல்லது அப்படி ஒன்று எங்கள் மருத்துவமனையில் இல்லை என்று சொல்லிவிடவோ முனைகின்றன. காரணம், சிகிச்சைக்கான பில் தொகையில் மார்ஜின் குறைவாக இருக்கிறதாம். மேலும், பில் கிளைம் ஆகி வர தாமதமாகிறதாம். இக்குறைபாடுகளையெல்லாம் களைய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலே அரசு மார்தட்டிக்கொள்வதும் அதைப்பற்றி மக்களும் ஒரு கவலையும் இல்லாமல் இருப்பதும் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
மேலும்...

பெண்ணியம் பேசுதல்

Posted: Saturday, March 13, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கல்வியறிவு பெருக பெருக காலமும் மாறிக்கொண்டிருக்கிறது. இதில் எழுதப்பட்டுள்ளவையெல்லாம் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இன்று நிலைமை அப்படியல்ல.

என்னதான் பெண்ணியம் பேசினாலும் இயற்கையாகவே பெண்கள் இரண்டாம் நிலையில்தான் பல விஷயங்களிலும் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவானது. அதனால் ஒருநாளும் சரிநிகர் சமானமாவது முடியாது. இவர்கள் எழுதுவதையெல்லாம் பார்த்தால், நான் மட்டும் ஏன் வேட்டைக்குப் போக வேண்டும் என்று பெண் சிங்கம் ஆண் சிங்கத்திடம் சண்டைக்கு போகவேண்டியிருக்கும் :-) இயற்கையின் படைப்பு அவ்விதம்; அவ்வளவுதான்.

பெண்களின் மீது காட்டப்படும் அடக்குமுறைகளை, மறுக்கப்படும் உரிமைகளைப்பற்றி குரல் கொடுப்பதில் பிரச்னையில்லை. ஆனால் நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் சமூக வாழ்க்கையில், ஓட்டுநர் இருக்கையில் ஆண்கள் அமர்வது தவிர்க்கமுடியாதது. அதைப்பற்றியே மீண்டும் மீண்டும் கவிதைகளும், வசனங்களையும் வாரிவிட்டுக்கொண்டிருப்பதெல்லாம் வெட்டி வேலை.

குடும்பத்தில் பெண்களின் உரிமைகளை, சுதந்திரத்தை அக்குடும்பத்தின் சூழ்நிலைகளும், அம்மனிதர்களுக்கிடையேயான புரிதல்களுமே நிர்ணயிக்கின்றன. பொதுவான ஒரு சட்டம் போட்டு இதையெல்லாம் பொதுமைப்படுத்திவிட முடியாது.

-பெண்களின் நிலைப்பற்றிய உரையாடலிலிருந்து..
மேலும்...

மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய ஒரு விவாதம்

Posted: | Posted by no-nononsense | Labels: , 0 comments
பொதுவாக நான் எந்த வலைப்பதிவிலும் மறுமொழி எழுதுவதில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு அப்படி ஒன்றை ஒரு பதிவில் எழுதப்போக, அது இப்போது அங்கே மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய தத்துவவிசாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. விவாதம் மேலும் வளர்ந்தால் அதில் இறுதிவரை ஈடுபடவும் எண்ணம் உண்டு. அதன் சுட்டியை பின்னர் கொடுக்கிறேன். இப்போதைக்கு அங்கே பதியப்பெற்ற என் சில கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

(1)

சாமியார்களை ஆதரிப்பதையும், பிறகு அம்பலங்கள் அரங்கேறியதும் தடிகொண்டு தாக்குவதையும் - இரண்டையுமே பக்தர்களாகப்பட்டவர்கள் ஒருவித கண்மூடித்தனத்துடன் செய்வதுதான் பிரச்னை.

இந்தப் பிரச்னையில் அதன் ஆனி வேரான மதநம்பிக்கையை சுட்டிக்காட்டியிருப்பது நான் படித்தவரை அநேகமாக நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நடக்க சாத்தியமில்லா விட்டாலும் தீர்வு என்பது அதுதான் எனும்போது, அதை ஒரு பதிவாககூட முன்மொழிய இங்கே பலரும் தயங்குவதுதான் புதிராக உள்ளது.

சாமியார்களின் போலித்தனங்களை ஆயிரம் ஆதாரங்கள் கொண்டு நிரூபித்தாலும், அதையெல்லாம் புறங்கையால் விலக்கி விட்டு மறக்காமல் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பிடிவாதமான பக்திக்கு பின்னால் மரபு ரீதியான காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது. காலம் காலமாக ஏதாவது உருவத்தை வழிபட்டே வாழ்ந்துவிட்டார்கள். அது சிலையாகவும் இருக்கலாம்; அதிமானிடமாகவும் இருக்கலாம். எதிலாவது தங்களை ஒப்புவித்துக்கொள்வதில் இயல்பான மனோபாவத்தை கொண்டிருக்கிறார்கள்.

(2)

Basicaana manidha charaterai gavanikka marandhu vitteergal. Manidhargalukku unmai pidikkaadhu. aarudhal mattumey pidikkum. Nithyanandha unmai peysiyirundhaal oru aalum appodhey avarai madhiththirukka maattaargal. Nithyanandha peysiyadhellaam manidhargal yedhai keytka virumbinaargalo adhaiye

உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது. இது வெற்றிகரமான சாமியார்கள்/பிரசங்கிகள் எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். வெகுஜன உளவியலுக்கு மாறான கலக கருத்துக்களின் பின்னால் — அது மெய்ஞான போதனையாகவே இருப்பினும் — எப்போதும் மெஜாரிட்டி சேர்வதில்லை. எங்கே மெஜாரிட்டி கூடுகிறதோ, அங்கே அவர்களின் முன்முடிவுகளை ஒட்டிய பிரசங்கம் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

(3)

மதங்கள் மனிதர்களுக்கு என்ன அளிக்கின்றன என்னும் வழமையான பார்வையை கொஞ்சம் மாற்றி, மனிதர்களுக்கு மதங்களின் தேவை ஏன் ஏற்படுகிறது என்ற கோணத்தில் சிந்திக்கும்போது சில விஷயங்களின் மேல் உத்தேசமான ஒரு தெளிவு கிடைக்கிறது. புதிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் புத்தர் போன்ற மஹான்கள் ஏற்கெனவே கண்டறிந்து சொன்ன அவைதீக கோட்பாடுதான்.

அஃதாவது, மனிதன் பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய மூன்றின் மீதும் ஆதிகாலம் முதல் இன்று வரை பெரும் அச்சம் கொண்டவனாக இருக்கின்றான். அவற்றிலிருந்து தன்னை விடுவிக்கும் மதம்/மார்க்கம்/வழிபாட்டுமுறை எதிலாவது தன்னை ஒப்பிவித்துக்கொள்வதில் தாளாத முயற்சியுடையவனாக இருக்கிறான். அதை கண்டறிதலுக்கான தேடல், அவனில் எப்போதும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கான தீர்வு சிலருக்கு அவரவர் பிறக்கும்போது உடன் சுமத்தப்பட்ட மத வழிபாட்டு முறையிலேயே கிடைத்து விடுகிறது. சிலருக்கு அதையும் தாண்டியதொரு தேடலாக நீள்கிறது.

இந்த இடத்தில்தான், சாமியார்களின் தேவை உருவாகிறது. கண்டவர்கள் விண்டதில்லை; விண்டவர்கள் கண்டதில்லை எனும்படி தங்களால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியாதபடி புதிராக இருக்கும் கடவுளிடம், தாங்கள் நேரடி தொடர்பில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களை, கடவுளுக்கும் தங்களுக்கும் இடையேயான மீடியமாக காண்கிறார்கள் - தேடலில் ஈடுபட்டிருக்கும் நம்பிக்கையாளர்கள். அதிலும் அச்சாமியார்களே உபாதைகளை சொஸ்தப்படுத்துபவர்களாகவும் அற்புதங்களை நிகழ்த்துபவர்களாக அமைந்துவிடும் பட்சத்தில், சிலருக்கு அவர்களே எளிதில் கடவுளாகவும் ஆகிவிடுகிறார்கள்.

யுகம் யுகமாக தேடல்கள் புதிய புதிய திசைகளில் அமைந்துகொண்டே இருக்கின்றன. அதை நிறைவு செய்யும் புதுப் புது சாமியார்களின் தேவையும், அவர்கள் போதிக்கும் வேறு வேறான வழிபாட்டு முறைகளும் ஓயாமல் உருவாகியபடியே இருக்கின்றன. ஒன்றுக்கொன்று முரணாக அல்லது மேம்பட்டதாக தோன்றும்/பிரசங்கிக்கப்படும் இவை ஒவ்வொன்றின் தொடக்கத்தையும் முடிவையும் ஒரு நூல் கொண்டு இணைத்துப் பார்த்தால் கிடைக்கும் உருவம், மேற்சொன்ன மூன்று தலையாய பிரச்னைகளின் நிவாரணத்திற்கான எத்தனங்களாகவே இருக்கக் காணலாம்.

இங்கே பிணி என்பதை பாபங்களில் இருந்து விடுதலை, நல்வாழ்வு குறித்தான பெருவிருப்பம் எனும்படி உட்கூறாக கிளை பிரித்து இன்னும் ஆழமாக சென்று பேசமுடியும். ஆனால் எல்லாவற்றின் உள்ளீடான பொருளும் முடிவில் ஒன்றாக இருக்கமுடியும்.

இங்கே சாமியார்கள் என்றால் மேற்காசியாவில் தொடர்ந்து மெஸ்ஸையாக்களின் தேவை இருந்துகொண்டே இருந்திருக்கிறது. மறுதலிக்க முடியாத மார்க்கமாக தெரியும் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பின்னால் வந்த மீட்பர்களால்/தேவதூதர்களால்/நற்செய்தியாளர்களால் மறுதலிக்கப்பட்டே வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் நம்பிக்கையாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இந்த உளவியலில் அறிவியலாலும்கூட பெரிய மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியவில்லை. காரணம், இதன் பின்னாலுள்ள காரணங்கள் மரபு ரீதியானவை.

மதத்தைப்பற்றி மார்கஸ் சொன்ன ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். அதில் அந்த கடைசி வரியாகிய ‘opium of the mass' என்பதற்குத்தான் வரலாற்றில் போர்களாகவும், உயிரிழப்புகளாகவும் எத்தனை எத்தனை எண்ணற்ற உதாரணங்கள்!

மதத்தின் வரையறையாக நான் படித்தனவற்றுள் ‘இயற்கையின் போக்கையும், மனித வாழ்வையும் கட்டுப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் மனிதசக்திக்கும் மேலான ஒரு சக்தியுடன் நல்லிணக்கம் செய்து கொள்ளுதல்’ என்று எங்கேயோ படித்தது இன்னும் நீங்காமல் நினைவில் நீடிக்கிறது. இதற்கும் வெளியே சென்று பெரிதாக எதையும் பகுத்தாய்ந்து விட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
மேலும்...

சக்ஸஸ்ஃபுல் சாமியாராவது எப்படி?

Posted: Thursday, March 11, 2010 | Posted by no-nononsense | Labels: , , 1 comments
சாமியார்கள் பற்றி தொடரும் உரையாடல்:

அடியேனும் அதை எதிர்பார்க்கிறேன்.அதற்க்கான வாய்ப்புண்டா என்று உனக்கு தெரிந்த ஒரு சுவாமிகளிடம் கேட்டு ஒரு சீட் வாங்கி தா

முன்னெச்சரிக்கை: பக்தர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

எனக்கு ஆசாமிகளைத் தவிர ஒரு சாமியுடனும் சங்காத்தம் இல்லை. தவிரவும், சாதாரணமாக எல்லாம் சக்ஸஸ்ஃபுல் சாமியார் ஆகிவிடமுடியாது.

-ஊன் உறக்கம் தவிர்த்து பல மணி நேரங்கள் நிஷ்டையில் ஆழ்ந்துவிடும் திறமை வேண்டும். அல்லது அப்படி நடிக்கவாவது தெரிய வேண்டும். உறக்கம் தவிர்ப்பாய்; ஊன் உனக்கு கஷ்டம்.

-சமஸ்கிருதம் கற்றுவைத்துக்கொண்டு அதிலிருந்து அவ்வப்போது சுலோகங்களை அள்ளிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாமா மாமிக்கள் நம்புவா. அவர்கள் கூட்டம் கூடினால்தான் உனக்கு பரிசுத்தர் பட்டம் கிடைக்கும். சினிமா செய்தி இல்லையெனில், அரைப்பக்கத்துக்கும் மேல் எந்த புத்தகத்தையும் திருப்பி பழக்கமில்லாத உனக்கிது ஆகாதவேலை.

-குருடர்கள் பார்க்கிறார்கள்; முடவர்கள் நடக்கிறார்கள்; சர்வ ரோகமும் சடுதியில் சொஸ்தமாகிறது என்றெல்லாம் விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் உத்தியில் வல்லவனாக இருக்கவேண்டும். அரைமணி நேரம்கூட வெளியே அலைந்து திரிய அலுத்துக்கொள்கிறாய். உனக்கு இதுவும் கஷ்டம்.

-எதைப்பற்றிக் கேட்டாலும் ஆத்மா, ஜீவன், முக்தி, கிரகம், கர்மா, வினைப்பயன், தியானம், பாவம், ஸவரஞான, பரிபூரண .. etc etc, என்று எளிதில் புரியாத வார்த்தைகளை ஆங்காங்கே தூவி விட்டு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பதில் பேசத் தெரிய வேண்டும். அதுவும் கேட்பவன் தமிழன் என்றால் கண்டிப்பாக அவனிடம் 50% ஆங்கிலம் கலந்த தங்லீஸுல்தான் உரையாட வேண்டும். தூய தமிழில் பேசினால் ஒரே ஒரு வெள்ளை காலர் சிஷ்ய(யை)கோடி கூட கிடைக்க மாட்டான். அப்புறம் ஒரு பீடிக்குகூட வழி பிறக்காது. ஆண்களிடம் அலுக்காமல் பேசுவதென்பது உனக்கு ஒத்து வருமா, சொல்?? ம்ஹூம்!

-ஓஷோ, ஜேகே, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானதர், தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், ஆரிய பிரம்ம குமாரிகள் சமாஜ தியாஸபிகல் முன்னோடிகளின் பிரசங்கங்களையெல்லாம் மிக்ஸியில் போட்டடித்து உனக்கென ஒரு மார்க்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ”இவங்க சினிமாவெல்லாம் நான் பார்த்ததேயில்லையே” என்பாய் நீ. உன்னை நானெப்படி சாமியார் ஆக்கி அழகிகள் சூழ அழகு பார்க்க?

-மேலும், முதலில் உன் மார்க்கத்துக்கென ஸ்வஸ்திக்கோ லிங்கமோ அல்லது இரண்டையும் கலந்த மாதிரியோ ஒரு குறிச்சின்னம் வடிவமைக்க வேண்டும். அது குறிப்பதாகச் சொல்ல என ஈஸ்வரனின் ரூபங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டும்.(எல்லா பெரிய சாமியார்களும் ஈஸ்வரனை வழிபடுபவர்களாக இருப்பதன் பின்னால் உளவியல் காரணம் ஒன்று புலப்படுகிறது). இருக்கும் எல்லா சாமியார்களும் ஏற்கெனவே எல்லாவற்றையும் பிராண்ட் செய்து லேபிள் ஒட்டிவிட்டார்கள்தான் என்றாலும், நம் ஊரில் கடவுள்களின் ரூபங்களுக்கா பஞ்சம்? அதிலொன்றை இந்துத்துவ நிபுணர்களை கலந்தாலோசித்து கப்பென்று பிடித்துக்கொள். அதிலும் ஒரு கண்டிஷன், அது மாரியம்மன், காளியம்மன் என்று B-C செண்டர் சாமிகளாக இருக்கக்கூடாது. அவற்றின் பக்கமெல்லாம் மழைக்கும் ஒதுங்கக்கூடாது.

-இதெல்லாம் முடிவான பிறகு உங்கள் கம்பெனிக்கென, மன்னிக்கவும், கம்யூனுக்கென ஒரு யூனிஃபார்மும் டிஸைன் செய்ய வேண்டும்(சிவப்பை பங்காரு பேடண்ட் வாங்கிவிட்டார்). அது வெள்ளையாக இருப்பது ஷேமம். அப்போதுதான் ஹைடெக் களை கிட்டும்.

-இதுபோக, வாரா வாரம் ஏதாவது பத்திரிக்கையில் தொடர் எழுதுதல், பக்தர்களிடம் சின்ன சின்ன சித்து வேலைகள் செய்தல், அரசியல்வாதிகளுக்கு ஜோஸியம் பார்த்தல் மற்றும் ஒரே நாளில் ஒரு கோடி மரம் நடுதல், ஒரு லட்சம் பேருடன் உட்கார்ந்து மழைவேண்டி மஹாயாகங்கள் செய்தல் போன்ற ஹைஜீனிக்-ஹைடெக்-எண்வைரன்மெண்டல் சமூகப்பணிகளில் ஈடுபடுதல் என்று இன்னும் எவ்வளவோ இருக்கிறது. (சமூகப்பணி என்று சொல்லிக்கொண்டு சேரிப்பக்கமெல்லாம் போனால் அப்புறம் உன்னை ஒரு வெள்ளைக்காலர் பக்த(தை)னும் மதிக்க மாட்டான்; பணம் கொட்டவே கொட்டாது. கவனம்!)

அதனால், கார்ப்போரேட் சாமியார் ஆவதொன்றும் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் பஸ்கி சாமியார், விஸ்கி சாமியார், சுருட்டு சாமியார் மாதிரி நீ ’பீர் சாமியார்’ லெவலுக்கு ஏதாவது முயற்சி செய்து பாரேன்! வேலையும் பெயரும் கனப்பொருத்தமாக இருக்கும் :-))

ஓஸானா சூன்யஸ்ரீ சுரேஷானந்த பரம்ஹம்ஸம்!! :)
மேலும்...

நித்தியானந்தா சர்ச்சை - ஹிந்து மதத்துக்கெதிரான சதியா?

Posted: Friday, March 5, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
it is attempt to defame him and all hindus, please dear brothers and sisters do not write bad comments about him - A comment by someone for us to think about the truth.
இந்த சின்ன விஷயத்தை ஏன் பலரும் ஹிந்து மதத்திற்கு ஏற்பட்ட இடராக, அதை அழிக்க நினைக்கும் ஆபத்தாக பார்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. முதலில் ஹிந்து என்பதை ஒரு மதம் என்று சொல்வதைவிட, அதை ஒரு வாழ்க்கைமுறை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். காரணம் இதற்கென பிரத்தியேக மதநூலோ(பகவத் கீதை மதநூல் அல்ல), நெறிமுறைகளோ, கோட்பாடுகளோ கிடையாது. உருவ வழிபாட்டை மையக் கருத்தாகக் கொண்டு அவரவருக்கு தோன்றிய மாதிரி அவரவர் வழிபாடுகள், சடங்குகள் சம்பிரதாயங்களை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இஸ்லாம் போன்ற அந்நிய மதங்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோதுதான் இந்த வாழ்க்கைமுறைக்கென தனி மத அடையாளம் ஏற்பட்டது.

இதைவிட ஒரு முற்போக்கான மதத்தை பார்க்கமுடியாது. இதனை எதிர்த்துக் கொண்டே இதனுள் நீங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். எல்லா விமர்சனங்களையும் அது சகிப்புத்தன்மையுடன் அனுமதிக்கிறது. இப்போதுதான் என்று இல்லை, வேத காலம் தொட்டே விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் இதன் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கின்றன.

ராமாயணத்தில்கூட ஜபாலி என்பவரின் நாத்திக வாதம் அக்கதையினுள் ஒரு சம்பவமாக இன்றுவரை இடம்பெற்றிருக்கின்றன. அதை யாரும் நீக்கி விட வில்லை. சார்வாகர்கள் என்போர் ஹிந்து மதத்தின் வர்ணம்/சாதி முறைகளை எதிர்த்து பெரிய தர்க்கங்களை நிகழ்த்திய பதிவுகள் இருக்கின்றன. பிற்காலத்தில் சமணம், பௌத்தம் எல்லாம் ஹிந்து மதத்தின் வைதீக போக்கை எதிர்த்து ஹிந்து மதத்தினுள் இருந்து உதித்தவைதான்.

கி.பி முதலாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் முற்றிலும் சமணமும் பௌத்தமுமே தழைத்திருந்தன. களப்பிரர் என்னும் முற்போக்கு ஆட்சியாளர்களால் அந்த காலகட்டத்தில் ஹிந்து மதம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. அப்போதுதான் பக்தி இயக்கம் தோன்றி ஆழ்வார்களும் நாயன்மார்களும் மீண்டும் பக்தி மார்க்கத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். ஹிந்து மத வாழ்க்கைமுறை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடைப்பட்டிருந்த உருவ வழிபாடு மீண்டும் தொடங்கியது. காரணம் இதில் கழுத்தை நெறிக்கும் கட்டுப்பாடுகள் இல்லை; கைக்கொள்ள மிக எளிதானது. அதனால் இது அழிய வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் புதுப் புது பிரசங்கிகளும், அவர்கள் தோற்றுவிக்கும் புதுப் புது உட்பிரிவுகளும் அவ்வப்போது தோன்றி மறைந்து வடிவம் மாறலாமேயொழிய, தேய்ந்து அழிந்து போக என் சிற்றறிவுக்கு எட்டியவரை காரணங்கள் கிடையாது.

ஹிந்து மதம் காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை அப்டேட் செய்துகொள்வதும் இதற்கு முக்கியமான காரணம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும், மதச்சட்டமான ஷரியாவும் சிறிதும் மாறப் போவதில்லை. அதில் கை வைக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதேபோல்தான் கிறிஸ்துவமும். பரிசுத்த வேதாகமமே காலத்திற்கும் வாழ்வியலுக்கான மறை.

ஆனால் ஹிந்து மதத்தில் அப்படி எந்த கட்டுப்பாடும் கிடையாது. காலை அலுவலகம் வந்ததும் கம்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு பட்டனை க்ளிக் செய்தால், அதுவே மணியடித்து தீபாராதனை காட்டி நமக்கு பதில் பூஜை செய்து முடித்துவிடுகிறது. கையை கூப்பியோ, கன்னத்தில் போட்டுக்கொண்டோ வேலையை தொடங்கி விடலாம். இப்படி ஒரு சௌகரியத்தை எந்த மதத்தின் கோட்பாடுகளிலும் பார்க்க முடியாது. இந்தளவு கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்கும் ஒரு மத ரீதியான வாழ்க்கைமுறையிலிருந்து மக்கள் மாறிவிடுவார்கள் என்று நம்ப இடமில்லை.

எனக்கு ஹிந்து மதத்தின் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்; நண்பர்கள் அறிவார்கள். ஆனால் என்னை ஏதாவது ஒரு மதத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டுதான் ஆகவேண்டும் என்னும் நிலை வந்தால், இதில் பிறந்ததால் மட்டுமல்ல, அதைப்பற்றிய அறிதல் இருப்பதாலுமேகூட சொல்கிறேன், இந்த வாழ்க்கைமுறைதான் என் சாய்ஸ். ஆனால் நான் விரும்பி ஏற்கும் ஹிந்து மதம் இப்போது நீங்கள் பின்பற்றும் வழிபாட்டு வாழ்க்கைமுறையாக இருக்காது. ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றோர் நிகழ்த்திக் காட்டிய பௌத்தத்தின் சாரங்கள் நிறைந்த தர்க்க ரீதியிலான ஹிந்து வாழ்க்கைமுறையாக அது இருக்கும். ஹிந்து மதம் காலம் காலமாக அனுமதிக்கும் உட்பிரிவுதான்; அதன் இன்னொரு பரிமாணம்தான் அதுவும். உருவ வழிபாடு கொண்டும் வாழலாம். அது இல்லாமலும் வாழலாம். இதை இன்னொரு மதத்துடன் ஒப்பிடமுடியாது.

ஏதோ சில மத சாமியார்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வரையறுத்து வைத்த சடங்குகள் சம்பிரதாயங்கள் வழிபாட்டு முறைகளை மட்டுமே ஹிந்து மதம் என்று எண்ணி அதை மட்டுமே உரைகல்லாக கொண்டு இதனை அளக்காதீர்கள். இதன் ஆகிருதி அது எல்லாவற்றையும் மீறியது. அளவிடமுடியாதது.

ஆகவே இந்த நித்தியானந்தா போனால் இன்னொரு முக்தியானந்தா வருவார். யாருக்கு எதில் விருப்பமோ அதையதை அவரவர் பின்பற்றுவார்கள். ஹிந்து மதம் தொடர்ந்து அப்படியே நீடிக்கும் - அதன் மீதான விமர்சனங்களுடன்.

இதன் மீது பேச இன்னும் நிறைய இருக்கிறது. நேரம்தான் இல்லை, இருவருக்குமே.

- நண்பர்களுடனான உரையாடலின் ஒரு பகுதி...
மேலும்...

நித்தியானந்தா சர்ச்சை - மேலும் சில கருத்துக்கள்

Posted: Wednesday, March 3, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
முன்பு பார்த்து விட்டு ஓரம் கட்டி வைத்திருந்த நித்தியானந்தா வீடியோக்களை மீண்டும் ஒருமுறை தேடியெடுத்து ஓடவிட்டுப் பார்த்தேன். வாழ்க்கையின் கூறுகளைப்பற்றிய அருமையான பொழிப்புரைகள்! அழுத்தம் திருத்தமான மொழியாளுகை! இதுதான் மற்ற சாமியார்களிடமிருந்து இவரை தனித்துக் காட்டியது.

எனக்கு இவர் பெயர் அறிமுகமானது வலம்புரி ஜான் மூலமாக. இவரின் வித்யாஞானம் பற்றி அவர் விதந்தோதி ஒருமுறை எழுதியிருந்தார். வலம்புரி ஜானை வாசித்து வந்தவர்களுக்கு அவருடைய தேர்வுகளின் மீது நிச்சயம் ஒரு கவனம் இருக்கும். அவரின் மொழி விளையாட்டுகளின் மீது ஏற்பட்ட லயிப்பின் காரணமாக எனக்கு கொஞ்சம் அதிகமாகவே அது உண்டு. அப்படி அவர் எழுதியிருந்த கொஞ்ச நாளிலேயே நாமக்கல்லில் நித்தியானந்தாவின் கூட்டம் ஒன்று பிரம்மாண்டமாக ஏற்பாடாகியது. சௌத் ஸ்கூலில் நடந்த அக்கூட்டத்திற்கு தாமதமாகத்தான் சென்றேன்; ஆனால் பேச்சில் கட்டுண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். அதுமுதல் நித்தியாவின் பேச்சுக்கள் கேட்க கிடைக்கும் போதெல்லாம் செவிமடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். சில நல்ல விஷயங்கள் அறிய கிடைக்கும்.

நித்தியாவின் பேச்சு கவர்ந்த அளவிற்கு அவருடைய குமுதம் தொடர் என்னை கவரவில்லை. அண்மை காலமாக நித்தியாவை இணைய உலகில் அதிக வாசகர்களைக் கொண்டிருக்கும் சாருநிவேதிதா வெகுவாக ஆதரித்து வந்தார். சர்வரோகங்களையும் ஸொஸ்தப்படுத்த வந்த கடவுளாக தன் எழுத்தில் சித்தரித்து வந்தார். இன்று அதனாலேயே மிகவும் அவமானப்பட்டு நிற்கிறார். இப்படி நிற்பது அவருக்கு வழக்கம் என்பதால், அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

பேச்சு திசை மாறுகிறது.

நித்தியானந்தா போலவே என்னை கவர்ந்த இன்னொரு கார்ப்போரேட் சாமியார், ஜக்கி வாசுதேவ். எதேச்சையாகத்தான் அவர் உரையாற்றிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டேன்(இதுவும் நம்ம ஸ்கூலில்தான்). பேச்சு பொருள் நிறைந்ததாக இருந்து கவனத்தை கவர்ந்தது. அதுமுதல் அவருடைய பேச்சுக்களையும் கேட்டு வருகிறேன். தேவையானதை எடுத்துக் கொண்டு, அபத்தங்களை விட்டு விடுகிறேன்.

இந்த impression எனக்கு தமிழகத்தின் மூன்றாம் பிரபல சாமியாராகிய பூஜ்யஸ்ரீ ரவிசங்கரிடம் வரவில்லை. அவர் உரைகள் சாதாவாகவே தெரிகின்றன. என் நண்பன் ஒருவன் விடாப்பிடியாக என்னை கொண்டுபோய் அவர்களின் அறிமுக வகுப்பு ஒன்றில் உட்கார வைத்தான். அரை மணி நேரத்திலேயே அடித்து பிடித்து ஓடி வந்து விட்டேன். ஜெய் குருதேவ் ஜெய் மஹாதேவ் சொல்லித்தான் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் கட்டுப்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. யோகாவை கிம்மிக் இல்லாமல் கற்றுக்கொடுக்கும் ஒரு யோகா ஆசிரியரை இன்றுவரை தேடிவருகிறேன். கிடைத்தபாடில்லை. எல்லோரும் ஆன்மிக பிஸினஸுடன் யோகாவையும் பிணைத்து வைத்து கழுத்தறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

*

என் வீட்டின் எதிர் வீட்டு காம்பௌண்டில் குடியிருக்கும் நிராதரவான பெண் ஒருவர் தீவிரமான நித்தியானந்தா பக்தை. எந்தளவு என்றால் போன வாரம் ச.பே.புதூரில் நடந்த பகவதியம்மன் பண்டிகைக்கு அனைத்து குடிமக்களும் பொங்கல் வைத்து எடுத்துச் சென்றபோது, நான் கும்பிடும் கடவுள் இனி நித்தியானந்தர் தான். அதனால் இனி வேறு எந்த பண்டிகையிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டவர். காதலித்து மணந்தவன் ஒரு கயவனாக போனதால் இரண்டு குழந்தைகளுடன் சுயமாக உழைத்து பிழைக்கும் அவர் மீது வீதியில் எல்லோருக்கும் அனுதாபம் உண்டு. ஆனால் இந்த நித்தியா விஷயத்தில் அவர் காட்டிய தீவிர பக்தி மற்றும் இந்து மதத்திலிருந்து தன்னை விலக்கி நடந்து கொண்டது எல்லாம் குறித்து வீதி பெண்களிடம் பொருமல் உண்டு.

நித்தியா விஷயம் இப்படி ஆனதும் இன்று காலை அவரை எல்லோரும் பிலுபிலு என்று பிடித்துக் கொண்டார்களாம். எப்போதும் அவர்கள் வீட்டில் எல்லோரும் அணிந்திருக்கும் டாலரை எல்லாம் கழற்ற வைத்து, போட்டோக்களை எடுத்தெறிந்து, அறிவுரையாக வழங்கியதில் இன்று அவமானப்பட்டு சங்கடப்பட்டு அவர்கள் யாரும் தெருவில் நடமாடவேயில்லை. வழக்கமாக அவர் குழந்தைகள் மாலை என் குழந்தையுடன்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். எங்கே இன்று காணோம் என்று கேட்டபோதே இது தெரியவந்தது.

நம்பி வணங்கியது ஒன்றைத் தவிர இவர் போன்ற அப்பாவிகள் எல்லாம் என்ன தவறு செய்தார்கள் இப்படி அவமானம் சந்திக்க? இவர் போன்றவர்கள்தான் நித்தியா செய்த பித்தலாட்ட ஆன்மிக பிஸினஸின் பாதிப்பின் அடையாளங்கள். இவர்களின் மீது செக்ஸ் சாமியாரின் பக்தை என்று நிரந்தரமாக ஒரு முத்திரை விழுந்தது விழுந்ததுதான். இதனாலேயே நித்தியாவின் குற்றம் மன்னிக்க முடியாததாகிறது.
மேலும்...

தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆரையும் வைகோவையும் முன்வைக்கும் அரசியல்

Posted: Monday, March 1, 2010 | Posted by no-nononsense | Labels: , 2 comments
தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆர், வைகோவை முன்வைத்த விவாதத்திலிருந்து:

எம்ஜிஆர் சாகும்போது அவருக்கு 70 வயது. இன்னும் உயிருடன் இருந்திருந்தால் தற்போது 93 வயது ஆகியிருக்கும். அவருக்கு இருந்த உடல் உபாதைகளில் இதெல்லாம் நடக்கிற காரியமா? இந்த ஈழப் பிரச்சினையைப்பற்றி பேசும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஏன் இன்னும் ”எம்ஜிஆர் மட்டும் இருந்திருந்தால்..” என்று இறந்து புதைத்து விட்ட செய்தி ஒன்றுக்கு பூ வைத்து பொட்டு வைத்து உதார் விடுகிறார்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிர்.

எம்ஜிஆர் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்; கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என்பதெல்லாம் அதை அவர் கொடுத்த காலத்தில் சுலபமான காரியம். அப்போது ராஜிவ்காந்தியோ பத்பநாபாவோ இந்தியாவில் புலிகளால் கொல்லப்பட்டிருக்கவில்லை. மேலும், ஈழப் பிரச்சினையை அங்கே அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்க அமிர்தலிங்கம் போன்ற மக்கள் ஆதரவை பெற்ற மிதவாத தலைவர்களெல்லாம் இருந்தனர். அதனால் ஆயுதம் அரசியல் என இருபுறமும் போராட்ட களன் சமநிலை பெற்றிருந்தது.

ஆனால் ராஜிவ் கொலைக்கு பிறகு இந்திய தேசிய அரசியலில் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும்கூட புலிகளைப்பற்றிய பார்வை முற்றிலும் மாறி விட்டது. எம்ஜிஆரே அப்போது ஆட்சியில் இருந்திருந்தாலும்கூட அந்த நிகழ்வுக்காக அவர் கோபித்துக் கொண்டிருப்பார் என்று நம்ப இடமிருக்கிறது. அந்தளவு எம்ஜிஆரும் ராஜிவ்காந்தியும் கூட்டணி அரசியலில் வெகு இணக்கமாக இருந்தனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலைகளையும் அப்போதையை சில நிகழ்வுகளையும் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இன்னும் அதையே அசைபோட்டுக்கொண்டு பின்தங்கி கிடக்காதீர்கள் புலி ஆதரவாளர்களே. பிராந்திய அரசியல் அதற்கு பிறகு எவ்வளவோ மாற்றம் கண்டு விட்டது என்பதை உணருங்கள்.

அப்புறம், வைகோ..?!

கடந்த பத்தாண்டுகளில் இவருடைய கட்சிக்கு தமிழ்நாடு குறைந்தது பத்து எம்.பிக்களையாவது கொடுத்திருக்கிறது. அவர்களைக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு வால் பிடித்ததைத் தவிர இவர் வேறு என்ன சாதித்தார் என்பதை முதலில் பரிசீலித்து விட்டு பிறகு அதன்மேல் கட்டுங்கள் கனவையும் அதில் கோட்டையையும்.

If 'ifs' and 'buts' were candy and nuts, we'd all have a Merry Christmas.. என்பதெல்லாம் கழிவிரக்கத்தை காட்டுகிறதேயன்றி, அடுத்து ஆகவேண்டிய காரியத்தை அலசுவதாக இல்லை.
மேலும்...