Showing posts with label சுயம். Show all posts
Showing posts with label சுயம். Show all posts

குழலும் யாழும் குரலினில் தொனிக்க

Posted: Wednesday, June 29, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இன்று மாலை பேருந்தில் ஏறியமர்ந்ததும் மூளையின் ஏதோ ஒரு நியூரானில் சேமிக்கப்பட்டிருந்த இந்தப் பாடலின் ஞாபகத்திற்கு உயிர் வந்துவிட்டது. அப்போதிருந்து முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறேன்.

யேசுதாஸின் குரல் ஒரு அமானுஷ்யம் போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வீடு வந்து அடங்கியதும் இணையத்தில் கிடைக்கிறதா என தேடிப்பார்தேன். இந்த இணையத் தொடர்புதான் எத்தனை அற்புதமான சாதனம்! யாரோ ஓர் அன்பர் வலையேற்றி வைத்திருந்த பாடல் கேட்கக் கிடைத்தது. இதோ கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

“குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!”

http://www.youtube.com/watch?v=c9P-G0ICzbE

திருச்சி வானொலி நிலையத்தின் காலை 6 மணி பக்திமாலையில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட இந்தப் பாடல் போல இன்னும் பல பாடல்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்தவையாக உள்ளன. ஏசு, அரவிந்தர்-அன்னை, அல்லா என்று பல கடவுள்கள் குறித்தும் பாடப்பட்ட அவைகளின் இசையமைப்பும், வரிகளும் என் உணர்வுகளில் கலந்தவை. இன்று போல எப்போதாவது அவைகள் ஞாபகத்திற்கு மீளும் போது உடன் பால்யத்தின் நினைவுகளையும் சுமந்து வந்து நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்துவிடுகின்றன.

“மலர் போல மலர்கின்றன் மணம் வேண்டும் தாயே
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னையே
வணங்கினோம் உன்னையே”

கங்கை அமரனின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் சில நாட்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவு வேளையில் என்னை தாலாட்டிக்கொண்டிருந்தது. உடன் துண்டு துண்டாய் அக்காலத்தின் அதிகாலைப் பொழுதின் மிச்சம் மீதியான சில நினைவுகளும்...

இவைகள் ஒரு நீண்ட பட்டியலின் இரு உதாரணங்கள் மட்டுமே. இவைகளை நான் வானொலியில் கேட்டது தவிர்த்து வேறு எங்குமே கேட்டதில்லை. இதுபோல் டி.எம்.எஸ்ஸின் பல முருகன் பக்தி பாடல்களும் உள்ளம் உருக வைக்கின்றன. ஏகாந்தமாக வீற்றிருந்து அவற்றைக் கேட்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கரம் என் உள்ளங்கையை அழுத்திப் பிடித்து ஆறுதல் சொல்வது போலவே இருக்கிறது. சில நொடிகளாகவது பழைய வீட்டின் சிதிலமடைந்த தாழ்வாரத்தின் கட்டிலில் கண்ணை கசக்கி படுத்துக் கிடந்து பழைய வாழ்க்கையை வாழ்கிறேன்.

உண்மையில் இவைகளில் மனம் லயிக்கக் காரணம் இப்பாடல்கள் தானா? இல்லை, இவைகளில் ஊறிக் கிடக்கும் பால்யத்தின் வாசனையா? சொல்லத் தெரியவில்லை. அனுபவிக்க முடிகிற எல்லாவற்றையும் விவரித்துவிட முடிந்துவிட்டால் மொழியின் தேவை என்றோ முடிந்து போயிருக்கும்.
மேலும்...

என்னுடைய ஆதர்சம்

Posted: Sunday, June 26, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நான் எனக்கு ஆதர்சமாக கொண்டிருப்பவரைப் பற்றி இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.


252560_226869870674359_100000540440253_896500_3372928_n.jpg

அவர் கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர்.ஜெயபாரதி. 2002 முதல் அவர் எழுத்துக்களை இணையத்தில் படித்து வருகிறேன். எனக்கு தமிழ் மரபு, பண்பாடு, வரலாறு, தொன்மம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட அவர் எழுத்துக்கள் தாம் காரணம். அகத்தியர் என்னும் இணைய குழுமத்தை பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். 50,000 மடல்களை கொண்ட குழுமம் அது. அதில் திரு.ஜேபி மட்டும் 20,000 மடல்கள் எழுதியுள்ளார். அத்தனையும் அறிவுக் களஞ்சியம்.

டாக்டர் என்றால் அவர் உண்மையிலேயே டாக்டராக மலேசிய சுகாதரத்துறையில் பணிபுரிந்தவர். பெரிய பதவிகளை வகித்தவர். ஊடாக ஒரு பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர். அவரைப் பற்றி ஒருநாள் விரிவாக எழுத எண்ணம். அதற்கு முன் அவரைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளதை படிக்கலாம் --> http://www.sramakrishnan.com/?p=2436

நான் இணையத்தில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவர, பல விஷயங்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள, எழுத்துக்களையும், தகவல்களையும் பகுத்துணர்ந்து நீரை விலக்கி பாலை அருந்தும் முதிர்ச்சியை நோக்கி என்னை நகர்த்திச் செல்ல அவரால் நான் அடையப்பெற்ற inspiration-க்கு முக்கிய இடமுண்டு.

அவரிடம் வம்பு, வசை, அரசியல் இல்லாததால் இளைஞர்களின் குதூகலமான எழுத்து தேடலுக்கு ஏற்ற தீனி அவரிடம் கிடைக்காது. அதனால் ஆய்வு ரீதியான எழுத்துக்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு உகந்த இடமாக அகத்தியம் இருக்காது. சங்கத்தமிழ், வரலாறு, ஆன்மிக, தொன்மை சார்ந்த சீரியஸான விவாதங்கள் மட்டுமே அதில் நடக்கும்:
http://groups.yahoo.com/group/agathiyar/

ஜேபி அய்யாவின் சில வீடியோ உரைகள் அண்மையில் வலையேற்றப்பட்டன. அவைகளை காண விரும்பினால் -->


இவர் போல இன்னும் சிலர் உண்டு. சமயம் வரும்போது எழுதுகிறேன்.

rojamuthaiya_jaybee1.jpg

ரோஜா முத்தையாவுடன் டாக்டர்.ஜேபி
மேலும்...

சம்மந்தமில்லாத சங்கடங்கள்

Posted: Thursday, June 16, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments

குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு, ஃபோன் டாப்-அப் செய்வதற்காக பரமத்தி ரோட்டில் ஒரு கடை முன்னால் வண்டியில் சென்று இறங்கினேன். உள்ளே நாலைந்து பேர் அடைத்துக்கொண்டு நின்றிருந்தனர். கும்பல் குறையட்டும் என்று அதை ஒட்டியிருந்த படிக்கட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினேன். இது போன்ற கடைகளில் எப்போதும் அப்பி கிடக்கும் கூட்டத்தை காணும்போது, பேசாமல் நாமும் இப்படி ஒரு டாப் அப் கடை வைத்தாலென்ன என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.


அப்போது பின்னால் படிக்கட்டில் இறங்கி வந்தவர் ‘கொஞ்சம் வழி..’ என்றுச் சொல்ல, பதறி விலகி நின்று, கடந்து சென்றவரின் முகம் பார்த்தேன். இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. நொடிப்பொழுதில் அவர் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி, சிறிது நாணத்துடன் வேகமாக கடந்து சென்றுவிட்டார். தெரிந்தவர்தான். அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரும் அவர்தான்.


வேகமாக கடந்து செல்ல அவசியமில்லாத தருணங்களில் கூட, சில காலமாக அவர் என்னைக் கண்டால் அப்படித்தான் நடந்து கொள்கிறார். இத்தனைக்கும் முன்பெல்லாம் இருவரும் எங்கே சந்தித்தாலும் சில நிமிடங்களாவது நின்று பேசிக்கொண்டு இருக்காமல் கடந்து சென்றதில்லை. இந்த மாற்றமெல்லாம் சில ஆண்டுகளாகத்தான்.


ஆனால் ஏன்?


இந்தக் கேள்விக்கு விடையளிக்க கொசுவர்த்தியை சுழலவிட்டு உங்களை ஊட்டி வரை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.


என் கம்பெனியின் வருடாந்திர ஆய்வு கூட்டத்திற்காக எங்களை ஊட்டிக்கு அழைத்திருந்தார்கள். ஷேர் மார்க்கெட்டின் பொற்காலம் அது. ஆய்வு கூட்டங்கள் படோபமாக பல வித கொண்டாட்டங்களுடன் ஊட்டி, கொச்சி போன்ற இடங்களில் ரிஸார்ட்களில் நடக்கும். இன்றைய நிலைமையில் CEO-க்கள் அவர்களாகவே ஃபர்பார்மன்ஸ் ஷீட்டை எடுத்துக்கொண்டு, அந்தந்த கிளைகளுக்கு நேரில் வந்து ஆய்வு கூட்டம் நடத்தி, டார்கெட் கொடுத்துவிட்டு, கார் ஏறி அடுத்த கிளைக்க்கு பறந்துவிடுகிறார்கள். நிலைமை அப்படி ஆகிவிட்டது.


ஊட்டியின் பிரபலமான ஸ்டெர்லிங் ரிஸார்ட்டில் நடந்து கொண்டிருந்த ஆய்வு கூட்டத்தின் இடைவெளியில், அந்த ரிஸார்ட்டை சகாக்களுடன் சுற்றிப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் ஏதாவது ‘க்ளிக்’ செய்து கொண்டேயிருப்பது என் ஹாபி. ரிஸார்ட்டின் முன்புறமுள்ள பூந்தோட்டம், பக்கவாட்டிலுள்ள மலைச்சரிவு எல்லாம் எடுத்து முடித்து, உள்ளே கலைநயமான பொருட்களின் காட்சியகம் உள்ள இடத்தில் வலம் வந்து கொண்டிருந்தேன். அதையொட்டிதான் ரெஸ்டாரண்ட் இருந்தது.


ஏதேச்சையாக கவனித்தபோது, ரெஸ்டாரண்டின் முன்புற மேசையில் எனக்கு நன்கு பழக்கமான மணிமாறன் இருந்தார். தினமும் என் அலுவலகம் வந்துசெல்லக்கூடிய வாடிக்கையாளர். குடும்ப சகிதமாக டூர் வந்திருப்பார் போலுள்ளது - அவருடன் அவர் மனைவியும் இருந்தார். அவர்களுடன் மற்றும் சிலர் குடும்பமாக அமர்ந்து மேசையை நிறைத்திருந்தனர். தொந்தரவு செய்ய வேண்டாமே என்று ‘ஹலோ, மணி சார்’ என்று அழைத்து கையசைத்து விட்டு நகர்ந்துவிட்டேன்.


கூட்டம் முடிந்து, ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த நாளே அடித்து பிடித்து எல்லோரும் ஊர் போய் சேர்ந்தோம்.


தினமும் சரியாக டீ டைமில் அலுவலகம் வந்து, ஓஸி டீ, போண்டாவின் தரத்தை திட்டிக்கொண்டே சாப்பிட்டுச் செல்லும் மணிமாறனை அடுத்த சில நாட்களாக ஆளையே காணவில்லை. எனக்கு அவரில்லாமல் போராக இருந்தது. எதையாவது வாய் வலிக்க விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். அவர் சீரியஸாக பேசுவது நமக்கு சிரிப்பாக இருக்கும். போன் செய்தாலும் சரியாக பதில் இல்லை. நான் அவரை அழைப்பதையே அடுத்த சில நாட்களில் மறந்து போனேன்.


நாலைந்து நாள் கழித்து அவராகவே டீ டைமில் ஆஜரானார். ஆனால் பழைய கலகலப்பு இல்லை. நானாக ஆரம்பித்தேன்.


“என்ன சார் ஊட்டி டூரெல்லாம் ஜோர் தானே? வெயில்தான் கொஞ்சம் ஜாஸ்தியில்ல?”


“ஆமாமா. சரி சரி, இப்ப அதப்பத்தி என்ன. விடு”. ஏனோ, மனுசன் பிடி கொடுத்தே பேசவில்லை.


இப்படியாக இரண்டொரு நாள் போனது. மூன்றாவது நாளில் அவராக ஊட்டியை பற்றி ஆரம்பித்தார்.


“சிவா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லச் சொன்னார், சார்”


குரல் வழக்கத்தை விட கனிவாக இருந்தது.


”எந்த சிவா, சார்?”


”அதாம்பா, லாம்ப்ரட்டா ஸ்கூட்டர்ல வருவாரே.. சந்தை பேட்ட புதூர் சிவா”


“ஓ! அவரா... என்ன சொல்ல சொன்னார் சார்”


“ப்ச்.. இதான வேண்டாங்கறது. அந்த ஊட்டி மேட்டர் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணான்னார். முக்கியமா ரகோத்தமன் கிட்ட”.


ரகோத்தமன் இங்கே பேசப்படும் சிவாவின் பார்ட்னர். எனக்கு நல்ல பழக்கமானவர்.


“என்ன ஊட்டி மேட்டர்? என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியலையே”


“ப்ச்.. மறுபடியும் பாரேன்... அதான் அங்க ஊட்டியில எங்கள பார்த்துட்டியே! அதைத்தான் சொல்ல வேண்டாம்”


”சரி, சொல்லலை. ஆனால் டூர் வந்ததெல்லாம் பெரிய விஷயமா சார். இதில் மறைக்க என்ன இருக்குன்னு தெரியலை” என்றேன்.


“என்னாபா இப்படி சொல்ற, நீ பாட்டுக்கு எங்கள ஆளுக்கொரு ‘மேட்டரோட’ ஊட்டில பார்த்தேன்னு சொல்லிட்டியின்னா, வீட்டில் என்னாவறது?. சுத்தி சுத்தி வந்து போட்டோல்லாம் வேற எடுத்த. அதான் சிவா பயப்படுறான். போட்டோ இருந்த அழிச்சிட சொல்லி சொல்ல சொன்னான்”


ஓஹ்! ஓஹ்! ஓஹ்! மேட்டர் அப்படி வருதா!


நான் அன்று பார்த்தது இந்த மணிமாறனை மட்டும்தான். அதுவும் அவருடன் இருந்தவரை அவருடைய மனைவி என்றுதான் நினைத்துக்கொண்டேன். அவர் முகத்தைக்கூட சரியாக பார்க்கவில்லை. ஆனால் இவரை விட இளமையாக இருந்த மாதிரி ஒரு பூசினாற் போன்ற ஞாபகம் மட்டுமே உண்டு. ஸோ அண்ட் ஸோ... இவர்களெல்லாம் ஆளுக்கொரு ஜோடியை ஏற்பாடு செய்துகொண்டு ஊட்டியை உல்லாசபுரி ஆக்கியிருக்கிறார்கள். அதைத்தான் நான் பார்த்துவிட்டேன் என்று இப்போது பயப்படுகிறார்கள். இப்போது விஷயம் தெளிவாக புரிந்துவிட்டது.


இவர்களின் குடும்ப விவரங்கள் எனக்கு ஓரளவு தெரியும். இவர்கள் இருவருக்கும் வயது சுமார் 45 இருக்கும். தோளை எட்டிப் பிடித்து விட்ட பிள்ளைகள் உண்டு. அந்த சிவாவிற்கு சிங்கப்பூரில் படிப்பை முடித்துவிட்டு வந்த கல்யாண வயது பெண் பிள்ளையே உண்டு. சபே.புதூரில் நில புலன்களுடன் வசதியாக வாழ்பவர். என் மாமன்களின் சம வயது தோழர் என்று பேச்சிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறேன். எங்கேயாவது எதிர்பட்டால் சந்தை நிலவரம் பற்றி பேசிக்கொள்வோம். அந்த அளவில் சொல்லப் போனால் ஒரு சாதாரண உறவுதான் எங்களிடையே நிலவியது.


பேச்சை தொடர்ந்தேன்.


“என்னது ‘மேட்டரா’?! நான் அது உங்க வைஃப்ன்னு தான நினைச்சிட்டிருந்தேன். முகம் கூட சரியாக பாக்கலை. சிவா சாரையெல்லாம் நான் பார்க்கவேயில்லையே... அன்னைக்கு அவரும் உங்க கூட தான் இருந்தாரா?!”


“அட, என்னாபா.. அன்னைக்கு நீ எங்களை பார்த்துட்டன்னு சிவா ரொம்ப பயந்துட்டு இருக்கான். நீ என்னடான்னா பாக்கவேயில்லைன்னு சொல்ற.. அப்ப நாங்களாத்தான் உளறிட்டமா..” என்றார் வெட்கச் சிரிப்புடன்.


“அதான் இப்ப தெரிஞ்சிப் போச்சில்ல..ஹஹ்ஹஹ்ஹா!”


“சரி, போவுது. இத உன்னோட வெச்சிக்க. புதூர்ல யார்கிட்டயும் பேச்சு வாக்கில கூட சொல்லிடாத”


ஏன் சார், எனக்கு வேற வேலையில்லையா? இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு நான் போயி பேசிட்டு வேற இருக்கனா?”.


அத்துடன் இது சம்மந்தமான சம்பாஷணைகள் முடிவுக்கு வந்தன.


மணிமாறன் - அதற்கு பிறகு எப்போதும் போல் சகஜமாகி விட்டார். ஆனால் சிவா... மனுசன் எங்கே பார்த்தாலும் நாணி கோணி சிரித்துக்கொண்டே அகன்று விடுகிறார். அது, அவரை விட எனக்கு சங்கடமாக இருக்கிறது.


மேலும்...

என்னை தெரியலையா?

Posted: Sunday, June 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒரு அலுவலாக கடைவீதியிலுள்ள நகைக்கடை ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வாத்சல்யமாக ஒரு கை கண்ணை பொத்தியது. ‘அட, இன்னும் என்னுடன் கண்ணை பொத்தி விளையாடவும் ஆளுண்டா’ என்று எண்ணியபடி கையை விலக்கிப் பார்த்தால் தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் பெயர் சட்டென ஞாபகம் வரவில்லை. ‘தெரியலைங்களே..’ என்ற அசடு வழிதலுக்குப் பிறகு அவன் வெங்கட்ராமன் - சௌத் ஸ்கூல் கிளாஸ்மேட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘அட பயலே, இப்போது ஞாபகம் வந்துவிட்டது’ என்று பிறகு ஷேமநலன்கலை விசாரித்து பேசிக்கொண்டிருந்தேன். ஆனால், அப்போது என் நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி - ‘வெங்கட்ராமன் என்று நினைத்துதானே அன்று ஒருநாள் புரோட்டா கடையில் ஒருவனிடம் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்... அப்போது அவன் யாராக இருக்கும்?!’.

இது அடிக்கடி எனக்கு நிகழும் ஒரு விஷயமாக இருக்கிறது. எங்கேயாவது யாராவது எதிர்பட்டு, என் பெயரை சரியாக குறிப்பிட்டு என்னுடன் உரையாடுகின்றனர். ஆனால், அவர்களைப் பற்றிய ஞாபகங்களை நான் முற்றிலுமாக இழந்து விட்டிருக்கிறேன். அல்லது மசமசவென்று ஒரு தெளிவில்லாத பிம்பங்களாய் சில விஷயங்கள் நிழலாடுகின்றன. பெயர் என்ன யோசித்தும் நினைவுக்கு வருவதில்லை. ஆரம்பத்தில் நானும் தெரிந்த மாதிரி நடித்து ஹிஹி என்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். இப்பவெல்லாம் நாகரிகமாக ‘மன்னிக்கவும், மறந்துவிட்டேன்’ என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

நேற்றும் அப்படித்தான் - ஒரு அலுமினிய டெகரேசன் வேலையாக ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். அவர் என் பக்கத்து தெருவில் குடியிருப்பவர் என்பதால் அதை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே என்று ‘நான் உங்க வீட்டு பக்கத்துல தாங்க குடியிருக்கேன்..’ என்று ஆரம்பித்து ஆரம்பிக்கும் முன்னாலேயே அவர் புன்னகைத்தவாறு, என் வாழ்க்கை வரலாற்றில் ரகசிய பக்கங்களை தவிர அத்தனையையும் சொல்ல ஆரம்பித்து விட்டார் - ஒரு கைகலப்பில் நானும் என் மாமாவும் இறங்கி பின்னர் கொஞ்சிக் கொண்ட குடும்ப ரகசியம் முதற்கொண்டு!

சமூகத்தை நாம் உதாசீணப்படுத்தி நம் போக்கில் சென்றாலும், மனிதர்கள் நம்மை உற்று கவனித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
மேலும்...

பத்தாம் வகுப்பு தேர்வு - ஒரு நனவிடை தோய்தல்

Posted: Tuesday, April 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஹ்ம்ம்.. கொசுவர்த்தி சுத்த வைக்கிறாய்.

கடைசி பரிட்சை முடிந்ததும் சினிமா போகவேண்டும் என்று முன்பே பேசி வைத்திருந்தோம் என்று நினைக்கிறேன். தினமும் பள்ளியிலேயே படுத்துப் படித்த பசங்க யார் யாரென்று ஞாபகப்படுத்திப் பார்த்தால் அன்று யார் யார் சினிமா போனோம் என்று தெரிந்து விடும்.

பாட்டை யார் பாடியது என்று விவாதித்தது ஞாபகம் இல்லை, ஆனால் எஸ்.பி.பி.யை நகலெடுத்து இருந்த மனோவின் குரலை வியந்து கேட்டது ஞாபகம் இருக்கிறது. அப்புறம் நாள் செல்ல செல்ல இரண்டு குரல்களுக்கும் இடையேயான வித்தியாசததை அறிந்துணர செவிப்புலன்கள் பழகிக் கொண்டுவிட்டன.

தேர்வை முடித்துக்கொண்டு நான் பார்த்தது அந்தப் படம் என்றால், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில் எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு படம் சென்று பார்த்தேன்: புது மனிதன். பார்க்க அப்படத்தைத் தேர்வு செய்ததிலும், அழைத்துச் சென்றதிலும் எனக்கு கூட்டாளி - போதுப்பட்டி இளங்கோ. அவன் அப்போது சத்யராஜின் தீவிர ரசிகன். இப்போது எப்படி என்று கேட்பது சரியாக இருக்காது. ஆனாலும் இரண்டு வருடங்களுக்கும் முன்பு திருச்சியிலிருந்து ஊர் திரும்பும்போது பேருந்தில் சந்தித்தபோது, பழைய சம்பவங்களை நினைவுபடுத்திக் கேட்டேன். ஹிஹி என்று சிரித்தான். என்ன அர்த்தம் என்று ஆராய விரும்பவில்லை.

-0-

பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து கிடைத்த இரண்டு மாத விடுமுறையும் அவ்வளவு கொண்டாட்டமானவை. கவலைகள் ஏதுமின்றி கால் போன போக்கில் மகிழ்ந்து விளையாடித் திரிந்தவை. புதிய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்தவை. அந்த இன்பகரமான தருணங்களை எல்லாம் நினைத்தால் நெஞ்சம் விம்மும்.

அதற்குப் பிறகு காலம் காட்டாற்று போக்கான தன் வழியில் தக்கையென இழுத்துச் சென்று பல மூலைகளிலும் முகடுகளிலும் முட்டவைத்து அனுபவ புத்தியை அளிக்க பல வகைகளிலும் அலைக்கழித்து முடிவில் கரை ஒதுக்கி விட்டது. இன்றைய என் மனநிலையின் முதிர்ச்சியையும் இருபது வருடங்களுக்கு முன்பிருந்த மனநிலையின் சிறுபிள்ளைத்தனத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அந்த சிறுபிள்ளைத்தனம் சிலாக்கியமானது என்பதை மறுநொடியே சொல்லிவிடலாம்.

அதில் வாழ்க்கையை அந்த நாளின் அந்த நொடியின் இன்பத்திற்காக செலவிட்ட ஒரு சௌகரியம்; அதிஇன்பம் இருந்தது. குடும்பம், எதிர்காலம், நிதி ஆதாரம், நில உடமை குறித்த கவலைகள் கிஞ்சித்தும் இல்லாமல் சிறகடித்த பறவைகளாய் இப்பிரபஞ்ச பேரின்ப பெருவெளியின் சிறுபுள்ளிகளாய் சுற்றித் திரிந்தோம். அந்தக் கள்ளம், கபடு, சூது, துரோகம், முதுகு சொறிதல், வஞ்சம் இல்லாத ஒரு உலகம் இனி திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அதன் ஞாபகம் வரும்போதெல்லாம் இருக்கும் உலகத்தில் பெருமூச்சுகள் விட்டு நாள் கடத்த வேண்டியதுதான். காலம் கறந்த பால் இனி மடி புகாது!
மேலும்...

ஞாநியுடன் ஒரு சந்திப்பு

Posted: Tuesday, March 8, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நேற்று ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நாமக்கல் வந்திருந்த ஞாநியுடன் கணிசமான பொழுது செலவிடும் நல்வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் தனிமையில் நடைபெற்ற உரையாடல்கள் என்பதால் யாருடைய  குறுக்கீடுகளும் இருக்கவில்லை. பெரியார், திராவிடம், சமகால இலக்கியம், சமூகம், அரசியல், இந்திய தேசியம், தமிழ் தேசியம் என்று நிறைய கேள்விகள் கேட்டேன், அவர் பதிலில் நிறைய குறுக்கிட்டேன், நிறைய உள்வாங்கிக் கொண்டேன். எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியவில்லை. சில நிமிடங்கள் இருவரும் மௌனமாக பேச விஷமின்றி அமர்ந்திருக்கும் அளவுக்கு உரையாடல்களின் விஸ்தீரணம் சமயங்களில் நீண்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாத ரொம்ப உற்சாகமான மனிதர். 

அவருடன் ஹோட்டல் அறையில் இருந்தப்பொழுது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரில் மாணவர்களுடன் சந்திப்புக்கு போனில் அழைத்தார். தன்னுடையது நண்பர்களை மட்டும் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் என்றும் சந்திப்புகளுக்கு ஒப்புக்கொள்ள நேரமில்லை என்றும் கூறி ஞாநி மறுத்து விட்டார்.  மறுமுனையில் பேசிய நபரோ விடுவதாயில்லை, தான் மட்டுமாவது நேரில் சந்தித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து ஹோட்டல் அறைக்கே வந்துவிட்டார். வந்தவர் நேரே சாஷ்டாங்கமாக ஞாநி காலில் விழுந்து கண்ணீர் மல்க ஆரம்பித்து விட்டார். அல்லது அப்படி ஒரு பௌயமான த்வனியை அவரின் குரலில் உணர முடிந்தது. பின்னர், ”உங்களை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி/நடிகர்/எழுத்தாளர் யார்’ என்பது மாதிரி சில கேள்விகளை வந்தவர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் போன பிறகு எப்படிப்பட்ட விசித்திரமான கேள்விகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா என்பதுபோல் புன்முறுவல் புரிந்தார் ஞாநி. இந்த அழகில் வந்தவர் ஒரு நூல் கூட எழுதியிருக்கிறாராம்! நாமக்கல்லில் நாமறியாத எழுத்தாளர்கள் பலரும் இருக்கிறார்கள் போலுள்ளது. 

இதை நான் குறிப்பிட்டு எழுதக் காரணம் எழுத்தாளர்களை தெய்வங்களாக கொண்டாடும் சில மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுக்காக. ஞாநியின் நேர்மையும், தன் கருத்தில் காட்டும் உறுதியும், அதிகாரத்தை நோக்கி சமரசமின்றி கேள்வி எழுப்பும் தீரமும் அவருக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை கொடுத்திருந்தால் அதில் தவறும் இல்லை. போலியான பிம்பங்கள் நாயகர்களாக ஆராதிக்கப்படும் சமூகத்தில் சிந்தனையை செழுமைப்படுத்தும் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது நல்ல விஷயம் தான்.

பிறகு ஞாநியை சந்திக்க வேல்சாமி, பெருமாள் முருகன் வந்திருந்தனர். உண்மையில் நான் வேல்சாமியை சந்திக்கவே ஞாநியின் அறையில் காத்திருந்தேன். அதை அறைக்கு வந்த வேல்சாமியிடம் ஞாநி சொன்னதும் அவருக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. என்னுடன் ஆவலாக உரையாடினார். ஏனென்றால் வேல்சாமி ஆய்வு ரீதியான எழுத்துக்களில் மிக முக்கியமான ஆளுமை. நான் மிகவும் மதிப்பு கொண்ட ஒரு எழுத்தாளர். ஆனால் உள்ளூரில் அவரை ஒரு முட்டை வியாபாரி என்னும் அளவுக்கு மேல் யாருக்கும் தெரியாது.

பிறகு ஞாநி, வேல்சாமியும் தங்களின் நட்பு ரீதியான உரையாடலை துவக்க, பெருமாள் முருகனும் இணைந்து கொள்ள, சிற்சில இடங்களில் நானும் ஆர்வமாக பங்கெடுக்க, பேச்சுக் கச்சேரி களைகட்டியது. அந்த இடத்தில் நான் என்னை ஒரு புது ஆளாகவே உணரவில்லை. பெரும்பாலும் பெரியார் மற்றும் நடப்பு அரசியல் குறித்து பேசப்பட்டதில் நிறைய புது தகவல்கள் கிடைத்தன. நல்ல ஓர் அனுபவம்.

பிறகு ஞாநி கிளம்பி ராசிபுரம் எஸ்.ஆர்.வி பள்ளிக்குச் சென்று விட்டார்.
மேலும்...

சுயநிவாரண முயற்சியும் யோகமும்

Posted: Monday, January 31, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தலைவலி வந்தால் எல்லோரும் என்ன செய்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். சிலர் போர்த்தி படுத்துவிடுகிறார்கள். சிலர் ஜண்டு பாம், விக்ஸ், டைகர் பாம் என்று வித விதமாக தைலம் தேய்த்துக்கொள்கிறார்கள். நானறிந்த சிலருக்கு தலைவலியே வந்ததில்லையோ என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஒருநாளும் தலைவலிப்பதாக குறைபட்டு நான் கண்டதில்லை. ஆனால் எனக்கு சில காலமாக அடிக்கடி வருகிறது. கண்களை சுற்றிய ஓரங்களிலும் பொட்டிலும்தான் அதிகம் உணர்வேன். கணினி முன்னால் தவம் கிடப்பதால் தான் இப்படி என்று வீட்டில் குறைபடுவார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். என்னைவிட ஐ.டி மக்கள் தான் அதிகம் கிடக்கிறார்கள். இனி இதெல்லாம் தவிர்க்க முடியாதது.

அப்படி தலைவலி வந்தால் உடனடி வலி நிவாரணியாக நான் நாடுவது
நோவால்ஜின் மாத்திரைகளையே. இது அந்த நேரத்திற்கான தாற்காலிக நிவாரணமாக தொடங்கி பின்னர் ஒரு பழக்கமாக என்னை பீடித்துக் கொண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் நானே அதை உணர்ந்து, அதற்கு பிறகு வலிக்கும் நேரங்களில் உடனடியாக எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு கண்களை மூடி முடிவற்ற ஓய்வை நாடி தூங்கி விடுகிறேன். எனக்கான காரணம் எப்போதும் சரியான தூக்கமின்மை என்பதால், தூக்கம் எனக்கு நிவாரணம் தருகிறது. அதன்மூலம் பழைய மாத்திரை பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துவிட்டேன் என்றும் சொல்லலாம்.

(யோசித்து பார்த்தால் இது என் பெற்றோரிடம் இருந்து எனக்கு வந்த பழக்கம் என்று தெரிகிறது. என் வீட்டில் சின்ன வயதில் இருந்தே இந்த மாத்திரைகள் ஒரு முழு அட்டையாக தயாராக இருக்கும். அக்கம் பக்கம் வீடுகளுக்கு கூட மாத்திரை சப்ளை நடக்கும்).

பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டுவிட்ட போதிலும் நான் எப்போதும் கைவ்சம் தலைவலி மாத்திரை வைத்துக்கொண்டிருப்பதையே பாதுகாப்பாக உணர்வேன். வீட்டிலும் அலுவலகத்திலும் என் மேஜையில் அது எப்போதும்
என்னுடன் இருக்கும். ஒரு வாரம் முன்பு அலுவலக நேரத்தில் தலை பாரமாகி கனக்க துவங்க, கைகள் மாத்திரையை தேடின. சுத்தமாக தீர்ந்திருந்தது. பக்கத்து மெடிக்கல் கடையில் ஆள்விட்டு 4 மாத்திரை வாங்கி வரச்சொன்னேன். 4 மாத்திரை 7 ரூபாய்.

*

நாமக்கல்லில் கோட்டை ரோட்டில் கொங்கு கூட்டுறவு மருந்துக்கடை என்ற ஒன்றை துவங்கி இருக்கிறார்கள். அங்கே மருந்துகள் நியாயமான விலையில் கிடைப்பதாக ஊருக்குள் பேச்சு உண்டு. அது உண்மைதான் என்பதை என் தந்தையும் - சீதா மெடிக்கல்லில் 70 ரூபாய்க்கு வாங்கிய மருந்தை இங்கே 10 ரூபாய் குறைவாக 60 ரூபாய்க்கு வாங்கியதற்கான இரு பில்களையும் காட்டி - என்னிடம் நிரூபித்திருந்தார்.
நேற்று அந்த கடைக்கு அம்மாவுக்கான சில மருந்துகள் வாங்கச் சென்றிருந்தேன். அதனுடன் எதற்கும் இருக்கட்டும் என்று 4 நோவால்ஜின் வாங்கினேன். 3 ரூபாய்.

ஆச்சரியத்துடன் அட்டையில் இருந்த MRP பார்த்தேன். ஒரு மாத்திரை தோராயமாக 70 காசுகள். 4 மாத்திரையும் ரூ. 2.80 வருகிறது. ரவுண்ட் ஆஃப் செய்து 3 ரூ வாங்கியிருக்கிறார்கள்.

ஒரே கம்பெனி தயாரிக்கும் ஒரே மாத்திரை கரூரில் 7 ரூபாய். நாமக்கல்லில் 3 ரூபாய் !
இது பெரும்பாலும் உதிரியாக வாங்கப்படும் மாத்திரைகளின் விஷயத்திலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அதிலும் சிறிய அளவில் வைத்திருக்கும் மருந்துக்கடைகளில்தான் அதிகம் நடக்கிறது.

மருந்துக்கடைகளின் விற்பனைப் பொருட்களின் மீது வைக்கப்படும் மார்ஜின் பற்றி கிசுகிசுப்புகள் எப்போதும் உலவுவதுண்டு. ஆனால் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தது இம்முறைதான். மருந்துக்கடைகளின் லாபவிகிதங்களை ஆராய முற்பட்டால், மயக்கத்தைத் தெளிய வைக்கும் மருந்தை தேடி ஓட வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

-0-

மைக்ரேன் தாக்குதலை கண்கூடாக கண்டிருக்கிறேன். அவர் எங்கள் குடும்ப நண்பராகிய 50 வயது பெண்மணி. கனடாவாசி. விடுமுறையில் இங்கே சுற்றுலா வந்திருந்தார். வந்த இடத்தில் வெயிலின் கடுமை ஒத்துக்கொள்ளவில்லை. தலைவலி, வாந்தி, மயக்கம் என்று ஒருநாள் முழுவதும் மிகவும் சிரமப்பட்டுவிட்டார். ஆனால் முன்னெச்சரிக்கையாக மைக்ரேனுக்கான மாத்திரைகளை கையோடு வைத்திருந்ததால் உள்ளூரில் டாக்டர் தேடி அலையவேண்டியிருக்கவில்லை.

இங்கே அது ஒரு பெரிய பாடு. பிரசவத்திற்கும், எலும்பு முறிவிற்கும், காது-மூக்கு-தொண்டை-கண்ணுக்கும் தெருவுக்கு தெரு டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு காய்ச்சல், தலைவலி என்றால் யாரிடம் செல்வது என்று பெரிய குழப்பமாக இருக்கிறது. இதில் என்ன குழப்பம் என்று படிக்கும்போது தோன்றலாம். நாமக்கல்லில் அனுபவபூர்வமாக அதை வாழ்ந்து பார்க்கும்போதே உணர முடியும். ஒரே மாத்திரையை வேறு வேறு பிராண்ட் நேம்களில் பிரிஸ்க்ரைப் செய்தபடி சில பழம்பெரிசு டாக்டர்கள்
பொழுதுபோகாமல் இன்னும் ’பிராக்டிஸ்’ செய்துகொண்டுள்ளன. அவர்கள்தான் இதற்கெல்லாம் இப்பவும் ஒரே அடைக்கலம்.

-0-

யோகம் கற்றுக்கொள்ள பெருவிருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை ஆன்மிக பம்மாத்துக்கள், ‘ஜெய்குருதேவ்’ கோஷங்கள் இல்லாமல் கற்றுத்தரும் ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு குழுவை என்னால் இதுவரை கண்டடைய முடியவில்லை. ஈஷா யோகாவில் அப்படியெல்லாம் கிடையாது என்று நீ உறுதி கூறுவாயானால் அவசியம் கலந்துகொள்கிறேன். அதாவது யோகம் மற்றுமே கற்றுத்தர வேண்டும். ஆன்மிக பஜனை பாடுவது, ஊடாக ஜக்கி புகழ் பாடுவது போன்ற வேலைகள் இருக்கக்கூடாது.

இருந்தால் என்ன என்றால் அந்த ’பழத்துக்கு புகைபோடும் வேலையை’ கண்டு எனக்கு கடும் எரிச்சலாக இருக்கும். மன அமைதி கெடும். அந்த அமைதி போனால் கற்றுக்கொள்வதில் நாட்டமும் போய்விடும். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் எனக்கு ஒவ்வாத இடங்களில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்துவிடுவது என் இயல்பு. அது அநாவசிய சங்கடம். அதனால்தான் தொடர் அழைப்பு இருந்தாலும் எனக்கு ஒத்து வராது என்று தோன்றும் இடங்களில் நான் உள்நுழைவதில்லை. இதில் சில நட்பு வட்டங்களும் அடங்கும்.

ஆனால் ஜக்கியின் உரையை கேட்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் தொடர்ந்து எப்போதும் ஜக்கி, நித்தியானதா போன்ற சிலரின் உரைகளை கேட்கிறேன். முக்கியமாக ஓஷோவின் உரைகளை (யூடியூபில் கிடைக்கின்றன). வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் உட்பொதிந்துள்ளவை அவை. நேற்று கூட மனிதர்களின் அறிவுஜீவித்தனத்தைப் பற்றிய நித்தியானதாவின் உரையை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டிருந்தேன். அற்புதம்!

அவர்களின் பிசங்கங்கள் வேறு
. பிஸினஸ் வேறு. ஆனால், பிரசங்களில் தாங்கள் மனிதர்களிடம் விதைக்கும் தம் மீதான ஈர்ப்புதான் தங்களின் ஆன்மிக பிஸினஸுக்கே அடிப்படை என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அதை நாமும் அறிந்துகொள்ளும்போது பிரச்னை அகல்கிறது. அவர்களின் பேச்சையும் எழுத்தையும் ஒரு சுயமுன்னேற்ற நூல் போன்று உள்வாங்கிக் கொண்டால் போதும்.

எதையும் ஒருமுறை பரிசீலித்து பின்னர் சேர்த்தலும் விலக்கலும் ஒரு மனப் பயிற்சியாக இருப்பது நல்லது. எளிய உதாரணத்தில் சொல்லப் போனால் அன்னம் போல.

-0-

//வராமல் எதுவும் பேசக்கூடாது சரியா//

வராமலே எப்படி ‘ஜெய்குருதேவ்’ சொல்ல முடியும்? ஈஷா யோகாவை பக்கம் தலைகாட்டவில்லை என்றால் நான் வேறு எங்குமே சென்று முயற்சிக்கவில்லை என்று நீ நினைப்பது உன் சொந்தக் கற்பனை. Art of living வகுப்பில் சென்று அமர்ந்து இது சரிவராது என்று திரும்பி வந்த கதையை வைத்துதான் சொல்கிறேன். அங்கேதான் இந்த ஜெய்குருதேவ் பஜனை.

யோகம் என்பது ஒரு கலை. அந்தக் கலையை கற்றுத்தர அவசியம் ஒரு குரு தேவைதான். அந்த குருவை வணங்கி கற்றுக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் வெறும் உருவப்படமாக இல்லாமல் எனக்கு கற்றுத்தரும் ரத்தமும் சதையுமான ஆசிரியராக இருக்கவேண்டும். மாறாக சுவரில் இருக்கும் படத்தை காட்டி அவர்தான் கற்றுத்தருகிறார்.. நாங்களல்ல.. இங்கே கற்றுக்கொள்; அங்கே பார்த்து வணங்கு; அவர்தம் பஜனை பாடு என்றால்.. அதைதான் புகைபோடும் வேலை என்று சொன்னேன்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த சாமியார்களின் துணை இல்லாமலே யோகா கற்றுத்தரும் நிறைய இடங்கள் இருக்கின்றன. அங்கேயெல்லாம் யோகா மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அம்மாதிரி மாஸ்டர்களை வணங்கி மரியாதை செலுத்தி அவர்களிடம் கற்றுக்கொண்டு தினமும் வீட்டில் பயிற்சி செய்வதுதான் காலம் காலமாக இக்கலையின் அடிப்படை வழிமுறையாக இருந்திருக்கிறது. இப்போதுதான் இதனுடன் ஆன்மிகம், சுயமுன்னேற்ற பிரசங்கம் எல்லாவற்றையும் கலந்து பண்டலாக விற்கிறார்கள்.

ஈஷா யோகாவைப் பற்றி அதில் கலந்து கொள்ளாமலே நான் அவதூறு பேசிவிட்டேன் என்று நினைப்பாயேயானால் அங்கே நடப்பது என்ன என்று விரிவாகத்தான் எழுதேன். நீயும் கிளாஸிற்கு ரொம்ப நாளாக அழைத்துக் கொண்டிருக்கிறாய். என்னாலும் கரூரில் வேலை செய்துகொண்டு கலந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதை நீயும் அறிவாய். இன்னும் ஓரிரு மாதங்களில் நான் கலந்துகொள்ளக்கூடிய நிலையில் நாமக்கல்லிலேயே இருப்பேன். அதற்குமுன் எனக்கு இருக்கும் மனத்தடையை அகற்ற வேண்டியது உன் கடமை.


அப்புறம் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்: தயவுசெய்து அடுத்தமுறை ஏதாவது பேசும்போதாவது இந்த ‘சேற்றில் செந்தாமரை’ உவமையை மாற்றி வேறு ஏதாவது சொல்லவும். ரொம்ப போர் அடிக்கிறது. எனக்கு ஏன் செந்தாமரை வேண்டும்? சேற்றில் மலராத எத்தனையோ நல்ல மலர்கள் இருக்கின்றன. அவைகளை பறித்து சுடர்கொடியிடம் சூடிக்கொள்ள கொடுத்தால் மலரும் மனமும் மணக்காமலா போய்விடும்?

இதைத்தான் masochism என்பது. உற்றது அற்றது அறிந்திருந்தும் தன் மனதின் திசையில் தன்னை இயங்கவிட்டு தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி விண்ணை முட்டி நிற்கும் மரத்தின் உச்சியிலுள்ள பொந்தின் உள்ளே சென்றால் எதிர்படும் அரக்கர்களை வீழ்த்தி கிடைக்கும் கூண்டின் உள்ளிருக்கும் கிளியின் இதயத்துக்குள்தான் நம் உயிரை காக்கும் மருந்து இருக்கிறது என்றால்... வேறு வழியில்லை, அத்தனை சேறு ஆறு கடல் மலைகளையும் தாண்டிச் சென்று வென்று வந்து நீ சொன்ன மாதிரி கரையேறி கால் கழுவிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், அவ்வளவு எல்லாம் முக்கியமில்லை, அல்டர்நேட் இருக்கிறது என்றால் ஏன் வீணே நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டும்? ஒன்று
masochist ஆக இருக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டில் முடங்கிக் கிடப்பதாக அர்த்தம். நல்ல கொள்கைதான் ;-)

மேலும்...

மனதின் சமநிலை குறித்து ஓர் உரையாடல்

Posted: Sunday, January 16, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நான்: என் மனநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவக்கூடிய உன்னதமான மனிதர்கள் குறித்தான தேடலை அநேகமாக என்னிடம் அப்படி ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை எனும்படியான என்னை அவதானிப்போரின் நினைப்புகளுக்கிடையே செய்துவருகிறேன். புத்தகத்தின் உறையை மட்டுமே பார்த்து உள்ளடக்கத்தை முடிவு செய்யும் உலகைப்பற்றி ஒருநாளும் எனக்கு கவலையில்லை.

தோழர்: மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள மனிதர்களின் வரலற்றை விட இன போராட்டங்கள் பற்றிய வரலாறு சரியான தேர்வாக இருக்கும் என்பது என் கருத்து.

நான்: மன சமநிலைக்கு தேவை மன அமைதி. அந்த அமைதிக்குத் தேவை உள்ளத்தை எழுச்சி கொள்ளச் செய்யும் விஷயங்களில் இருந்து விலக்கு. அதற்கு இனப் போராட்டங்களின் வரலாறு சரியான தேர்வாக இருக்காது என்பது என் கருத்து. இனப் போராட்ட வரலாறுகள் ஒருவித மனவெழுச்சியை அளிக்க வல்லன.

போராட்டங்கள் என்றாலே அரசியல் தாம். போராட்டங்களையும் அவற்றைச் சுற்றி நிலவும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாது. அவற்றின் நெடுக ஊடுபாவி வருவது துரோகமும் துவேஷமும். உதாரணமாக ஈழம் அல்லது பாலஸ்தீன போராட்டங்களை எடுத்துக்கொண்டால் இரண்டிலும் இன அழிப்பு நடந்தாலும், பாலஸ்தீனம் பற்றி உலகம் கொள்ளும் அக்கறையில் ஒரு பாதிகூட உள்ளூர் தமிழர்களிடையே ஈழம் குறித்து கிடையாது. ஈழத் தமிழர்களிடமும்கூட முழுமையாக கிடையாது. இது நம் ஊர் இனப் போராட்ட கதை.

யூதர்கள் ஹிட்லரிடம் எதிர்கொண்ட இன அழிப்பையும், அதிலிருந்து கண்ட மீட்சியும் பெரும் கண்ணீர் கதை. உலகம் உள்ள வரை நினைவில் வைத்திருக்கப் போகும் சரித்திரம். 1948-ல் இஸ்ரேல் உருவாகிறது. ஒரு இன அழிப்பையும், அதற்கு எதிரான ஓட்டத்தையும் போராட்டத்தை எதிர்கொண்ட ஒரு இனம் அதற்குப் பிறகு தாங்கள் சென்று ஆக்கிரமித்துக் கொண்ட வேறு ஒரு இனத்தின் நிலத்தில் நடந்துகொண்ட விதம் தான் என்ன? அதே இன அழிப்பு - நிலத்துக்காக!

இனங்களின் செயல்பாடுகள் அனைத்துமே சுயநலமானவை. இனம் → மதம் → சாதி என்று ஒவ்வொன்று ஒவ்வொரு அடுக்காக செயல்படுகின்றன. இவற்றின் பொதுவான ஒரு தொடர்பு சங்கிலி வர்க்க பேதம் எனலாம். மேலடுக்காக செயல்படும் இனங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒரு போராட்டத்தை தங்களின் இருப்புக்கான ஆதார தேவைகளை உறுதி செய்துகொள்ள சில போராட்டங்களை செய்திருக்கின்றன. இன்று ஈழத்தில் சிங்களவனுக்கு எதிராக நடக்கும் இனப் போராட்டத்தின் ஆதிகால வரலாறு மகாவம்சத்திலிருந்தே தொடங்குவதாக கொள்ளலாம்.

இனப் போராட்டங்களின் தென்படும் அர்ப்பணிப்பு உணர்வு என்பது குறுகிய எல்லைகளையும் ஆகிருதிகளையும் கொண்டது. ஒருவித மூர்க்கம்தான் போராட்டத்தை தக்கவைக்கிறது. அந்த மூர்க்கம் அஹிம்சை, ஆயுதம் என்று இருவழிகளிலும் இருக்கலாம். இரண்டுமே அதனதன் விதத்தில் படிக்க ஹிம்சைதான்.

போராட்ட வரலாறுகளை எல்லாம் படிக்குங்கால், சுயநலங்களையும் துரோகங்களையும் நினைத்து மனம் குலையவோ அல்லது ஒடுக்குமுறைகளை சினந்து எழுச்சிகொள்ளவோ செய்யுமே தவிர மனம் சமநிலையை அடையாது.
இதில் மாற்று கருத்துகள் இருப்பின் உரையாடலை மேலும் வளர்த்தெடுக்கலாம்.
மேலும்...

முடிவற்ற முடிவான இலக்கு

Posted: Monday, January 10, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இலக்கின்றி ஓர் பயணம் - ஓர் இடத்தில் இப்படி ஒரு வரியை படித்த கணம் முதல் அதைச் சுற்றியே சிந்தனை மையம் கொள்கிறது.

இலக்கு இல்லாமல் பயணங்கள் சாத்தியமா? இல்லை என்றே தோன்றுகிறது. ஒன்று இலக்கை நீ நிர்ணயிக்கிறாய். அல்லது அப்பயணமே நிர்ணயித்து, காட்டாற்றின் வெள்ளத்தில் மிதந்து செல்லும் தக்கையென உன்னையும் தன்னுடன் பயணிக்க வைக்கிறது. எல்லோருக்கும் முடிவான முடிவே அதன் முடிவு. வேறு வார்த்தையில் சொல்லப் போனால் இலக்கு. புரியாதவர்களுக்கு இன்னும் எளிமை படுத்திச் சொல்ல வேண்டுமானால் ‘மரணம்’.

மரணத்தை ஒன்று நீ தழுவுகிறாய் அல்லது அது உன்னைத் தழுவுகிறது. எல்லா வகையிலும் இறுதியான இலக்கு அதுவே. எந்த விதமான சமரசங்களுக்கும் பரிகாரங்களுக்கும் ஆட்படுத்திவிட முடியாத ஒரே சாஸ்வதம்.

இதைத்தான் ஆன்மிகவாதி மாயை என்று அழைத்து யாரும் அறியாத ஒன்றை புரியவைப்பதாகச் சொல்லி தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் காட்ட முயலுகிறான். ’ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா’ (பஜகோவிந்தம்)என்றெல்லாம் தேவபாஷையில் ஸ்லோகம் சொல்லி பிரம்மம் ஒன்றே சாஸ்வதம் என்கிறான். அதை மேலும் பகுத்தறிந்து கொண்டு போனால் இறுதியில் கிடைக்கும் இலக்கு மேற்சொன்னதில் இருந்து வேறுபட்டதல்ல.

ஆனால் அதை அறிந்துகொள்ள சுயசிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் மனிதகுலத்தை பீடித்திருக்கும் மாயை என நம் சிந்தனையில் கவிழ்ந்திருக்கும் சோம்பலை சொல்லலாம். அதை விரட்டாமல் ஒளிவட்டங்களின் உண்மைத்தன்மையை உணரும் திறன் என்றும் வாய்க்காது.

மரணம் தான் இலக்கு. அறிவியல், ஆன்மிகம் இரண்டினாலும் தவிர்க்க இயலா ஒரே நிகழ்வு. இலக்கு உறுதியான பிறகும் ஏன் வாழ்க்கையை கண்டு இவ்வளவு பயம்? வாழ்க்கையை கண்டு பயமா அல்ல்து தற்காலிகமான சுகபோகங்களை அடைய இடையே இருக்கும் சிரமங்கள் தரும் ஏக்கமா?

‘உண்பது நாழி உடுப்பது இரண்டே’ என்று வாழ என்ன மனத்தடை? தடையது லௌகீக கயிறு பிணைத்து வைத்திருக்கும் பந்தங்களில் இருக்கிறது. அதற்காக பந்தங்களை உதறித் தள்ளிவிட முடியுமா? எந்த மார்க்கம் ஏற்றுக்கொண்டாலும் அவை எல்லாம் இட்டுச் செல்லும் ஒரே இலக்கு எதுவென தெரிந்தவன் செய்ய வேண்டியது என்ன?

இறக்கும் வாழ்க்கையிது இலக்கை அடையும் வரை தடுக்கும் தடைகளை தவிர்க்கும் மார்க்கம் தேடி வீணில் அலையாமல் உவப்புடன் எதிர்கொண்டு உள்ளச் சிறப்புடன் வாழ்ந்து முடிப்பதே உத்தமோத்தமமான ஒரே வழி. மறுக்க முடியுமா? மறுப்பதும்கூட மறுமை போன்ற மாற்று மார்க்கங்களையே விடையாகத் தருகிறது எனும்போது அந்த மறுப்பு வலுவிழக்கிறது.

மரண பயம் மனிதர்களின் மனதில் தோற்றுவிக்கும் எண்ணங்கள் தான் எத்தனை எத்தனை விசித்திரமானவை. அந்த விசித்திரமானவைகளைப் பற்றிய வெகுமனசித்திரம் என்னும் நூல்புரி இட்டுச் செல்லும் பாதையின் சிக்கல்களை சிடுக்கெடுத்தபடிச் சென்றால், அது எண்ணிலடங்கா மதங்களின் வரலாற்றை அக காட்சிப்படுத்துவதாக அல்லவா அமைகிறது.

அந்த அக காட்சியை கண்டு தெளிய தேவை - சுயசிந்தனை. நம் மக்களுக்கு எட்டிக்காயாக கசக்கும் ஒரு சொல் இதுவன்றி வேறிருக்க முடியாது. சிந்தனையின்றி தர்க்கங்கள் சாத்தியமில்லை. தர்க்கிக்காமல் மனத்தெளிவு சாத்தியமில்லை. மொத்தத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே அவை எதுவுமே முற்றிலும் சாத்தியமாக இல்லை. ஆனாலும் பயணம் தொடர்கிறது ஓரிருவரின் தெளிவின் ஒளியை தனதாக்கிக் கொண்டு ஒரு முடிவற்ற முடிவான இலக்கை நோக்கி.
மேலும்...

மம்மி டாடி

Posted: Friday, November 12, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
காலையில் அவசரம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். இடையூறாக திடீரென்று வெடித்து கிளம்பியது என் மகளின் அழுகுரல். ‘ரம்பஸ்கி கடிச்சிருச்சி..’ என்று ஒரே அழுகை. அது வேறு ஒன்றுமில்லை, கொசு கடித்திருக்கிறது. உடனே எந்திரனில் வரும் ரங்கூஸ்கி கொசு அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. உடனே ரோபோ போடு என்று அடுத்த அடம். ரோபோ என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் படமும், ரஜினி, ஐஸ்வர்யா ராய் பெயர்களும் அவள் ரசனைக்கு அத்துபடி.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய காலம் போய் நடிகர்களை காட்டி சன்சோறு ஊட்டப்படும் காலமிது. குழந்தை வளர வளர வீட்டில் டிவி மற்றும் சினிமா சம்மந்தமான சூழலை வெகுவாக குறைத்துக் கொள்வதைப்பற்றி மனதில் பரிசீலித்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் அதற்கு இன்னும் காலமிருக்கிறது. இப்போதைக்கு அவளின் குழந்தை பருவத்தை தனக்கு பிடித்த வழியில் அவள் கொண்டாடிக் கொள்ளட்டும்.

*

நேற்று வேலையில் இருந்து திரும்பிய என்னை என் மகள் அழைத்த விதம் கொஞ்சம் துணுக்குறச் செய்தது. என்றும் இல்லாத வழக்கமாக திடீரென்று வார்த்தைக்கு வார்த்தை ‘டாடி’ போட்டு பேசினாள். நீ என்னை அப்பான்னே கூப்பிடு டாடி சொல்ல வேண்டியதில்லை என்றாலும் கேட்கவில்லை. ‘டாடி தான் சொல்லணும்’ என்றாள். போலவே அம்மாவையும் மம்மி என்றே அழைத்தாள். இனி அப்பா அம்மாவை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று யூகிக்கிறேன். தாங்கள் குழந்தைக்கு ஆங்கிலம் சிறப்பாக கற்பிக்கிறோம் என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்தச் செய்ய இந்த டாடி-மம்மி அவர்களுக்கு ஒரு வழிமுறை. சில பெற்றோர்களும் இதை எதிர்பார்ப்பதால் ஒருவகையில் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு செயலாக இது அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் அமைந்து விடுகிறது.

அந்நியமொழி ஆங்கிலத்தை ஓர் உலகளாவிய தொடர்பு சாதனமாக, வேலைதேடலில் முன்னுரிமை பெற்றுத் தரும் ஒரு சிறப்பு தகுதியாக, அறிவுதேடலுக்கு உதவும் ஒரு மீடியமாக மட்டும் நெஞ்சில் நிறுத்தி அதை ஒரு மொழி என்னும் கண்ணோட்டத்தில் மட்டும் நன்கு கற்றறிந்தால் போதும். மேற்கொண்டு அதிலென்ன பெருமை இருக்கிறது?

ஆனால் இதையெல்லாம் எடுத்தியம்பும் வயதில் அவளோ அதற்கான மனமுதிர்ச்சியில் குடும்பத்தாரோ இல்லை. அவர்களுக்கு மம்மி-டாடி என்று குழந்தை அழைத்ததில் ஆகபெருமை. இதிலெல்லாம் நான் தலையிட போவதுமில்லை. அவள் பாட்டுக்கு அவள் ஆங்கிலத்தில் புலமை பெறட்டும். நான் தமிழிலும் தக்க ஆர்வம் அவளுக்கு ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்து கொள்வேன். ஆனால் முனைப்பு மட்டும் போதாது; காலத்தே கவனமும் தேவை.

NRI-களின் குழந்தைகள் மட்டுமல்ல நானறிந்த சில ஐரோப்பிய தேசங்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கும் கூட தாய்மொழி தமிழ் எழுதப் படிக்க சுத்தமாக தெரியவில்லை. அதிலும் டச்சு நாட்டில் வாழும் ஒரு அம்மணி அங்கேயே பிறந்து வளர்ந்து படித்து வரும் தன் மகளுக்கு தமிழில் ஓரிடு வார்த்தைகளுக்கு மேல் பேசகூட தெரியாது என்று என்னிடம் வருத்தப்பட்டிருக்கிறார். நம்ப கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. சில நேரங்களில் எப்படி இவர்கள் மொழி என்னும் ஓர் இனத்தின் உயிர்நாடியான ஒரு முக்கிய நரம்பை அற்று போக அனுமதிக்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாவதுண்டு.

இவர்களுக்காவது பிழைக்க/வேலைக்காக சென்ற இடத்தில் இருக்கும் survival பிரச்னையில் மொழியில் எல்லாம் கவனம் செலுத்தி கொண்டிருக்க முடியாது என்ற ஒரு எதார்த்த பிரச்னை உள்ளது. ஆனால் நம் சென்னை போன்ற மெட்ரோக்களின் மேட்டுகுடி வர்க்க குழந்தைகள் ஆங்கிலம் மட்டுமே அறியும் என்பது விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட வருத்தம். காரணம் அவர்களின் பெற்றோர்களும் தமிழில் பேசுவதில்லை. அப்படி ஒரு நபரையும் குழந்தையையும் நான் கோவையில் கூட சந்தித்திருக்கிறேன். என்னிடம் நல்ல தமிழில் பேசிய அவர் மனைவியும் அவரும் குழந்தையிடம் முற்றாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடினர்.

மொழிவெறி என்பது அரசியல்வாதிகள் ஓட்டுக்காக காட்டுவது. மொழியுணர்வு என்பது அடிப்படையிலேயே ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கவேண்டியது. தமிழ் மொழியின் தொன்மையை அறியா தமிழராயிருக்கிறோம். இது பிறமொழி போல சொற்களை கடன் வாங்கி உருவானதல்ல. இதற்கு இலக்கண நூலே (தொல்காப்பியம்) குறைந்தது 3500 - 4000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி விட்டது எனில், அதற்கு முன் இது எவ்வளவு காலமாக பேசப்பட்டிருந்தால் அது இலக்கண விதிகள் வகுக்கும் அளவிற்கு குலைந்து மெருகேறி ஒரு அழகிய வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும்! எண்ணிப் பாருங்கள் தமிழர்களே! அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும்...

யாகாவாராயினும் நாகாக்க

Posted: Wednesday, October 20, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர் பேச பேச எனக்குள் நரம்புகள் முறுக்கேறிக் கொண்டிருந்தன.

மானசீகமாக மனதிற்குள் எத்தனையோவாவது முறையாக அதே சபதத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்தமுறை கண்டிப்பாக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று ஒரு வெறி மனதிற்குள் குடி கொண்டது.

அதே எண்ணத்துடன் தூங்கப் போனவன், அதிகாலை அலாரம் வைத்து எழுந்து விறுவிறுவென தகுந்த உடைகளை உடுத்திக் கொண்டு பள்ளி மைதானம் நோக்கி விரைந்தேன்.

மனதிற்குள் எப்போதோ படித்த உதயமூர்த்தி வந்து ‘தம்பி! உன்னால் முடியும் தம்பி!’ என்று உச்சஸ்தாயில் உரக்கச் சொல்லிக் கொண்டே இருந்தார்’. உந்துதல் கூடி நாடி கூடுதலாக துடிக்கத் தொடங்கியது.

ஒருவழியாக நெற்றி வியர்வை நிலத்தில் சொட்ட அங்கங்கே அல்லும் சில்லும் விட்டுப் போக வெற்றிகரமாக நடந்து முடித்து வீடு வந்தேன்.

உள்ளே நுழையும்போதே கமகம சாம்பார் மணம். இந்த அம்மாவின் கைப்பக்குவம் இப்போது பார்த்துதானா இவளுக்கு கைவர வேண்டும் என்று கருவிக் கொண்டே குளித்து வந்தேன்.

அதற்குள் சாப்பாட்டு மேசையில் நான்கு தோசைகள் நன்றாக எண்ணை ஊற்றி சுடப்பட்டு முறுவலாக காத்திருந்தன.

‘இதெல்லாம் இனி நான் சாப்பிடப் போறதில்லை. எண்ணை தடவாம ரெண்டே இட்லி போதும்’

‘க்ஹூம்.. சுட்டத என்னா பண்றதாம்..’ என்று மென்மையாக தொடங்கிய மண்டகப்படி உச்சிகால பூஜையை அடைவதற்குள் அத்தனை தோசையும் என் வாயினுள் அடைக்கலம் ஆகியிருந்தன.

ஆரம்பமே ஜெர்க் அடிக்குதே என்று நினைத்தபடி அலுவலகம் சென்றடைந்தவனை வரவேற்றன ஆம வடைகள்.

பஜ்ஜிக்கு அப்புறம் ஒரு வடையில் ஒரு அவுன்ஸ் அளவுக்கு எண்ணையை பிழிந்தெடுக்க முடிந்ததை இன்றே கண்டேன். ஏதோ இலாபம் என்று ஒரு ஏமாளி க்ளையண்ட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

‘ஏன் சார்.. வாங்கித்தர வேற எதுவும் கிடைக்கலையா’... மனதிற்குள்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது. படியளக்கும் உபதெய்வம் அல்லவா!

இரவு நரம்புகளை முறுக்கேற வைத்த நண்பரிடம் மனதிற்குள் மன்னாப்பு கேட்டுக்கொண்டு சாம்பிளுக்கு இரண்டை மட்டும் லபக்கினேன்.

‘என்னா சார் இப்படி பல்லுபடாம சாப்பிட்டுக்கிட்டு.. நீங்கதான் எதுவும் வாங்கி தரதில்ல, நாங்க வாங்கி தரதாச்சும் தாராளமா சாப்பிடுங்க’ என்றபடி முரட்டுத்தனமாக தட்டை என் பக்கம் தள்ளியவர் எதிரமர்ந்து கொண்டு,

‘அப்புறம் அந்த கோல் இண்டியா ஐபிஓ வருதில்லைங்களா..’ என்று ஆக்ஸாபிளேடை கழுத்தி வைக்கத் தொடங்கினார்.

வடைகளும் வழக்கமான பாடாவதி டீயும் உள்ளே சென்று வயிற்றின் அனைத்து டிரைனேஜ்களையும் அடைத்துக் கொண்டு விட்டதில் பசி என்பது ருசிக்கும் இல்லை. மணி 3.30 ஆனது.

இன்னொரு க்ளையண்ட் ஒருவருடன் தவிர்க்க முடியாமல் இரண்டு விதமான சொதியுடன் ஒரு குஸ்கா, ஐஸ்கிரீம் - பிஸினஸுக்காக கம்பெனி கொடுக்க என்று ஸ்வாகா ஆனது.

‘இத்தோடு எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்’ என்று மனதிற்குள் முந்தைய தின சபதங்களையும் மீண்டும் உதயமூர்த்தியையும் ஒலிக்க விட்டபடி வீடு வந்து சேர்ந்தவனை வருக வருகவென்றது மீன் மணம்!

நன்கு மொறுவலாக பொறிந்து வரக்கூடிய முரல் மீனை ஃப்ரை செய்து வைத்திருந்தார் சகதர்மினி :(

நான் விரும்பி வாடியபோதெல்லாம் என் வாயை கூடாமல் போன இந்த முரல், தேகம் கூடி ஆடி அடங்கி அகஸ்தமாக வீரம் வந்து வாயை கட்ட பார்க்கும் வேளையில் தேடி வந்து நாசியை தீண்டும் திமிரென்ன என்று வந்த கோபத்தில்......... அதை அப்படியே வாயில் போட்டு சாப்பிட்டு விட்டு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு அமர்ந்து கொண்டேன்.

இல்லையென்றால் நேற்று ஆயிரம் அறிவுரை வழங்கிய அந்த அபூர்வ டயடீசியன் நண்பர் அழைத்து நான் இன்று என் சபதத்தை கட்டிக் காத்ததன் வீர பிரதாபங்களை ஆவலுடன் கேட்பார். நல்ல நண்பர் என்பதால் நாளை சமாளித்துக் கொள்ளலாம்.

ஆ! இதென்ன, குழந்தை கையில் காட்பரீஸுடன் திரிகிறாள்.

‘ஏ பாப்பா.. நேத்து நைட்டுதானே இதெல்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னேன். ஒண்ண சாப்பிடப்படாதுன்னா படாதுதான்.. you should stick to your words ma.. கொண்டா இப்படி’

லபக் !!!
மேலும்...

உடற்பயிற்‘சீ’

Posted: Friday, October 15, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மேற்கத்திய நாகரிகத்திடமிருந்து எதைக் கற்றுக்கொண்டாலும் தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை மட்டும் கற்க மறுக்கிறோம். வேலை செய்யும் கம்பெனியிலேயே காசு கொடுத்து போகச் சொன்னாலும் வாய் காரணத்தை முணுமுணுக்கிறதே தவிர, உடம்பு வளைவதில்லை. நம் பிள்ளைகளுக்காவது அந்தப் பழக்கம் வாய்ப்பதாக.

மேலும், நமக்கு பாடிபில்டிங்கிற்கும் உடற்பயிற்சிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ஜிம்முக்கு போவது உடம்பை தேத்த என்றுதானே பேசிக் கொண்டிருக்கிறோம். 

இதெல்லாம் பள்ளிகளில் இருந்து பழக்கமாக வேண்டும். அங்கே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் பிடி பீரியடில் கல் பொறுக்கிக் கொண்டும் செடி வெட்டிக் கொண்டும் இருக்கும் வரை இதன்பேரில் ஒரு முன்னேற்றமும் வராது. 

இப்படி உடற்பயிற்சியை பற்றி வியாக்யானம் பண்ணி விட்டு நான் என்ன செய்யப்போகிறேன்? 12 மணி வரை கொட்ட கொட்ட விழித்திருந்து விட்டு 7 மணி நேர தூக்க கணக்கிற்கு 7 மணி வரை கவுந்தடித்து தூங்குவேன். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது பிழைப்பு. டிபிகல் இந்தியன் அல்லவா!
மேலும்...

விட்டில் பூச்சி வாழ்க்கை

Posted: Friday, September 24, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இன்றைய பேருந்து பயணத்தில் பயணிகளின் களைப்பை போக்கவேண்டி தில்லாலங்கடி படம் போட்டிருந்தார்கள். வழக்கமான மசாலா படம்தான் போல என்று ஏனோ தானோவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சென்டிமெண்ட் காட்சி: 

அது - கணவன், மனைவி மற்றும் ஐந்து வயது பெண் குழந்தை கொண்ட ஒரு அழகான குடும்பம். குழந்தையின் மீது மிகுந்த அன்பு செலுத்தி செல்லம் பாராட்டி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இன்பமான வாழ்க்கைக்கு இடையூறாக அந்த குழந்தைக்கு தீராத வியாதி ஒன்று வந்து விடுகிறது. அதற்கு மருத்துவ செலவு, ஆபரேசன் என்று பெரும்பணம் தேவைப்படுகிறது. 
யார் யாரையோ கெஞ்சியும் அழுதும் எதுவும் நடக்கவில்லை. இறுதில் அவள் சிறிது சிறிதாக உடல் நலிவுற்று இறப்பதை காண சகியாமல், அவளை கொண்டுபோய் ஒரு ஆசிரமத்தில் சேர்ப்பித்து விட்டு, இவர்கள் மட்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

கணநேரத்தில் மனது கனத்து போனது. அந்த மூன்று பேர் கொண்ட மகிழ்ச்சியான குடும்பத்தில் என்னுடையதை பொருத்தி பார்த்ததுதான் காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 

வாழ்வில் இந்த மாதிரி எதிர்பாராத பெரும் சோகங்கள் நிகழும்போது அதனை எப்படி எதிர்கொள்ள போகிறேன்? உலகளாவிய தத்துவங்களையெல்லாம் பக்கம் பக்கமாக படித்து, நண்பருக்கோ உறவினருக்கோ இதுபோல் நடக்கும்போதெல்லாம் அதிலிருந்து மேற்கோள் காட்டி ஆறுதல் வார்த்தைகளாக உதிர்ப்பது போல் எனக்கும் நானே சொல்லிக்கொள்ள முடியுமா? அவ்வளவு ஆழ்ந்த ஞானமும், மனோதிடமும், பரிபக்குவம் முயன்றாலும் அடைதல் சாத்தியம் தானா?

இப்படியெல்லாம் சில சிந்தனைகள் பேருந்தை விட்டு இறங்கும் வரை என்னை ஆட்கொண்டி
மேலும்...

சுட முயலும் பெருமூச்சுகள்

Posted: Thursday, September 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அரசு அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வேண்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணி முடித்து விட்டு இருக்கும் அவகாசத்தில் ஏதாவது எழுதலாமே என்று இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன். 
நிச்சயமாக அவர் தன் கடமை தவறி எதையும் செய்ய அல்ல. கடமையை செய்யத்தான் இந்த பணம்.  ஆனாலும் கூச்சநாச்சம் எதுவுமின்றி பல்லை இளிக்கிறார் அந்த பெரிய அதிகாரி. 

இன்று காலை என்னுடன் பேருந்தில் பயணித்த இரு அரசு அதிகாரிகளின் பேச்சு இந்த இடத்தில் ஞாபகம் வருகிறது. அகவிலை படி உயர்வு குறித்து பேசிக் கொண்டிருந்தனர். பேச்சில் ஆணவமென்றால் அப்படி ஒரு ஆணவம். அதையெல்லாம் விரிவாக எழுதி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. வேலையில் அலட்சியம். சேவையில் ஊழல். சமூகம் குறித்த அக்கறை துளியுமில்லாத சுயநலம். இவர்களின் இந்த போக்கில் என்று வரும் மாற்றம் என்றுதான் தெரியவில்லை. 

***

கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தால்ல் நீயும் இப்படி ஒரு ‘நல்ல’ நிலையை அடைந்திருக்கலாம் என்று வழக்கமாக சில பெருமூச்சுகள் என் மேல் விடப்படுவது உண்டு. 

இந்த பெருமூச்சுகளால் தாக்கப்பட்டே என் தோளின் நிறம் கூட கொஞ்சம் மங்கி விட்டது. அவற்றை புன்னகையால் எதிர்கொண்டே அந்த மென்னகையின் பொலிவுகூட கொஞ்சம் குறைந்து விட்டது. என் முன் நான் காணும் ராஜபாட்டையையும், எனக்குள் நான் வாழ்ந்து வரும் ராஜவாழ்க்கையையும் பாவம் அவர் அறியார். படியை கொண்டு மலையை அளக்க முயல்வது இயலாத காரியம் என்பதை மழலை அறியாது. என்னை தாக்கும் பெருமூச்சுகளும் அப்படித்தான். 

கடந்த 15 ஆண்டு காலகட்டம் என்பது, எத்தனை பொன் கொடுத்தாலும் யாரிடமிருந்தும் கற்றிட முடியாத வாழ்க்கை பாடங்கள். எதெல்லாம் அந்தரம்; எதெல்லாம் நிரந்தரம் என்பதை அக புற இரு உலகங்களிலும் எனக்கு உணர்த்திய பரீட்சார்த்த பொழுதுகள். வாழ்க்கையை பற்றிய தெளிவு என் மனதில் தன் விழுதை அழுத்தமாக ஊன்றி விட்டது. அதனிடம் பெருமூச்சுகள் நொடிபொழுது சலனத்தையும் கூட ஏற்படுத்திடும் வலுவை இழந்து விட்டன. இருந்தாலும் அன்புகூர்ந்து விடப்படும் பெருமூச்சுகளை அனுமதித்து புன்னகைத்து வைக்கிறேன்.

அதெல்லாம் சரி. இதெல்லாம் இப்போது
 ஏன்?

சில நிமிடம் முன்புதான் தொலைபேசி வழியே
 மேலும் ஒரு பெருமூச்சு என்னை சுட முயற்சித்தது. :-)
மேலும்...

இளமையில் மரணம்

Posted: Thursday, September 9, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
புனரபி ஜனனம் புனரபி மரணம் - மீண்டும் மீண்டும் பிறப்பு மீண்டும் மீண்டும் இறப்பு (பஜகோவிந்ததில் ஆதிசங்கரர்). இது எல்லா நொடிகளிலும் யாராவது சிலருக்கு நடந்து கொண்டிருப்பதுதான். நமக்கு தெரிந்தவர்களுக்கு நிகழும்போது மட்டும் அதன் வலியை நிதானித்து உணர்கிறோம்.

முரளியின் ரசிகரல்லாத பலரையும்கூட அவருடைய மரணம் சோகம்கொள்ள வைத்திருப்பதை காணமுடிகிறது. காரணம் வயதுதான். 40-களில் இயற்கை எய்துவதை நம் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மரணம் குறித்து பொதுவில் நாம் போட்டு வைத்திருக்கும் மனக்கணக்குக்கு முரணான இந்த நிகழ்வைக் கண்டு துணுக்குறச் செய்கிறோம். இதுவே சாலை விபத்து போன்ற அகால மரணமாக இருந்திருந்தால்கூட அது இந்தளவுக்கு அதிர்ச்சியை தந்திருக்காது. ஆனால் முதுமைக்கு முன்பே உடல் தானாக இயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளது நம்மை சற்று பீதியடையச் செய்கிறது. நம்முடைய சொந்த மரணம் குறித்த அச்சத்தை நாமும் லேசாக மனதில் உணரும் தருணங்கள் இவை. 

மரணத்தை நெருக்கத்தில் காணும் எல்லா சமயங்களிலும் எதுதான் நிலை என்பன போன்ற தத்துவவிசாரங்களை வாய் தானாக முணுமுணுக்கிறது. சிந்தனையில் மனம் ஆழ்ந்து light at the end of the tunnel-ஆக இம்மானுட ஜென்மம் பற்றி ஏதோ தெளிவு பிறந்துவிட்டது போலகூட தோன்றுகிறது. ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே’ போன்ற பட்டினத்தார் வாசகங்களெல்லாம் எண்ணத்தில் வந்து அலை மோதுகின்றன.

ஆனால் எல்லாம் சில தினங்களுக்கு மட்டுமே. 

துவும் கடந்து போய் லௌகீகம் வந்து மீண்டும் தழுவிக்கொள்கிறது. ஆஸ்தியும், அந்தஸ்தும், கௌரவமும் மீண்டும் பிரதானமாகிறது. வஞ்சினம், வெஞ்சினம், கோபம், குரோதம் மற்றும் இத்யாதிகளெல்லாம் மீண்டும் வந்து குடிகொள்கின்றன. அடுத்த மரணத்தை நெஞ்சில் உணரும் வரை விட்ட இடத்திலிருந்து பழைய ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கிறது.

உண்மையில் இது ஒரு இயல்பான மனசுழற்சி. இதில் சரி என்றும் தவறு என்றும் எதுவுமில்லை. 
மேலும்...

தோல்விக்கோப்பைக்கான வீர விளையாட்டு

Posted: Wednesday, September 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 1 comments
எழுதலாம் என்று எண்ணியிருந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாக மறந்து கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட நேரங்கள் அருகி வருவதாக உணர்கிறேன். ஓரளவு எழுதும் விருப்பமும்கூட. 

லௌகீகத்திற்கும் சுயாதீனத்திற்கும் இடையிலான அல்லாடல் இது. 

தன்விருப்பங்களுக்கும் சூழ்நிலையின் அழுத்தங்களுக்கும் இடையேயான முடிவில்லா பகடையாட்டம் என்றும் சொல்லலாம். 

சில நேரங்களில் தோல்விக்கோப்பைக்கு நடக்கும் விநோத விளையாட்டாகவும் தோன்றுகிறது. ஆனாலும் சுவாரசியமாகவே ஆடிக் கொண்டிருக்கிறேன். 

வேறு வழியுமில்லை. 

கடைசி கட்டம் வரை காயை நகர்த்திதான் ஆகவேண்டும். பாதியில் முடித்துக்கொள்வது வீரனுக்கு அழகல்ல.

ஆனால் வீரமென்பதே பயமில்லாமல் நடிப்பதுதான். 

எதற்கும் என்றும் சாஸ்வதமில்லை எனும்போது எதைக்கண்டு இந்த பயம்? 

மானுட அச்சங்களின் தாத்பரியத்தை கண்டாருமில்லை. கண்டு விண்டாருமில்லை!

###

(இதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தேன். உயர்த்தனி அறிவுஜீவித்தனம் சொட்டுகிறது. வார்த்தைகளில் விளையாடி எழுத்தென ஏந்திப் பிடிப்பது இப்படித்தான் போலும்! )

மேலும்...

கிடாவெட்டு

Posted: Monday, August 30, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
விர்ர்ர்ரூம்.......!

என்னதான் வண்டியில் செல்ஃப் ஸ்டார்ட்டர் இருந்தாலும் அதை ஒரு உதைவிட்டு ஸ்டார்ட் செய்து சுற்றம் அதிர முறுக்கிவிட்டு ஓட விடுவதில்தான் ஒரு கெத்து இருக்கிறது. பரமசாதுக்களாக பைக்குகளை பாவிப்பவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கும். கனரக பைக்குகள் கம்பீரமான ஆண்மையின் அடையாளம்! என்ஃபீல்டு புல்லட் சவாரிகளைப் போல!

நான் விட்டு கிளம்பிய இடம் மோகனூர் நவலடியான் கோவில். அங்கே ஒரு நண்பரை சந்திப்பதற்காக சென்று விட்டு, ஆரியூர் நோக்கி பைக்கை விரட்டிக்கொண்டு இருந்தேன். கிடாவெட்டு இருந்தது. கோவிலில் இருந்து பாதி பர்லாங்கு தூரம்கூட கடந்திருக்க மாட்டேன். ஒரு சிறிய உருவம் லிப்ட் கேட்டு கைகாட்டியது. முதுகும் சற்றே கூன் போட்டிருந்தது. அம்மனிதருக்கு இருந்தால் 45 வயது இருக்கலாம்.

பொதுவாக யார் லிப்ட் கேட்டாலும் நான் கொடுத்து விடுவது என் வழக்கம். எயிட்ஸ் ஊசி என்று ஒரு கதை முன்பு பரப்பப்பட்டபோது மட்டும் கொஞ்சம் அஞ்சியிருக்கிறேன். மற்றபடி தயங்குவதில்லை. சக மனிதர்கள் மேல் இன்னும் முற்றாக நம்பிக்கையிழக்கவில்லை.

“ரொம்ப நன்றிங்க சார். ஞாயித்து கெழம பார்த்து டூட்டியும் வெச்சிட்டாங்க சார். கோயில்ல கிடாவெட்டும் இருந்துச்சி. ரெண்டையும் விடமுடியாம ஓடிட்டு இருக்கேங்க”

“அது பரவாயில்லைங்க. எங்க இறங்கணுங்க?”

“பஸ் ஸ்டாண்டுல விட்டாங்க போதுங்க சார். மாணிக்கம் பாளையம் போய் சேரணுங்க. டூட்டியிருக்கு”

“அவ்வளவு தொலைவா.. என்ன டூட்டிங்க?”

“கம்பவுண்டரா இருக்கேங்க. 82-ல எம்ஜிஆர் பீரியடுலயே ஜாயின் பண்ணிட்டேன். டிகிரி முடிச்சதும் கெடச்சதுங்க”

நான் மௌனமாக தலையை ஆட்டியபடி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். அவரே தொடர்ந்தார்.

“அதுல பாருங்க. எம்ஜிஆர் தான் வேலை கொடுத்தாருன்னாலும், டீயெம்கேல ஆட்சியில தான் சம்பளம் பாஞ்சாயிரம் ஆகியிருக்குங்க. முன்னைக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லைங்க. அடுத்தாப்லயும் கலைஞர் வந்துட்டா மேலும் கொஞ்சம் போடுவாருன்னு சொல்றாங்க. அவர் செய்வாருங்க”

“ஓ..!” என்று தலையாட்டினேன். டிபிகல் தமிழக அரசு ஊழிய மனோபாவம்.

“நம்ம வீட்டுல இன்னைக்கு வேற விசேஷம் போயிட்டாங்கங்க. பசங்க சின்னவங்க. அதான் நாம இங்க ஓடியாறதா போச்சிங்க. டூட்டியில்லைன்னா இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி சாப்பிட்டுருக்கலாம்”

“இருந்தாலும் டூட்டிய வெச்சிகிட்டு ஏன் இப்படி சிரமப்படணும். உங்கள பார்த்த அதிகம் அலையமுடியாதவர்ன்னு தோணுது. வர முடியலைன்னு சொல்லியிருக்கலாமே”

“அதெப்படிங்க. கிடாவெட்டுன்னா நமக்குதான் கால் நிக்காதுங்களே!”, சொல்லிவிட்டு வாய்விட்டு சிரித்தார். அதற்குள் பஸ் ஸ்டாண்டு வந்திருந்தது. குறைந்தது மூன்று முறையாவது நன்றி கூறிவிட்டு அகன்றார்.

மிஞ்சிப் போனால் இரண்டு கி.மீ கூட இருக்காது. ஐந்து நிமிட பயண தூரத்திற்குள் வெகு சகஜமாக வேலை, குடும்பம், அரசியல் என்று எத்தனை விஷயங்களை பகிர்ந்துகொண்டு விட்டார் இம்மனிதர் என்று வியப்பாக இருந்தது. வெள்ளந்தியானவராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

சிலர் இப்படித்தான். கணநேர சந்திப்பே கூட அவர்களுக்கு போதுமானது. நீண்ட நாள் பழக்கம்போல் கடகடவென பேச ஆரம்பித்து விடுவார்கள். பஸ் பயணங்களில் அப்படிச் சிலரை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. பல மணி நேர ரயில் சிநேகிதம் கூட இல்லை; சில நிமிட பஸ் சிநேகிதங்களே அவை. ஆனாலும் ஒரு சகஜத்தை(comfort level) அவர்களிடம் உணர முடியும். அப்படி நான் பழகிய ஒரு புனே என்ஜினியரிங் மாணவன் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறான். என்னுடைய குணாம்சம் சட்டென்று யாரிடனும் எளிதில் பழகிவிடக் கூடியதில்லை என்றபோதிலும், இம்மாதிரி நபர்களை ஏனோ எனக்கு பிடிக்கவே செய்கிறது.

வண்டி மோகனூருக்கு முன்பாக போட்டிருக்கும் மிகப்பெரிய ரயில்வே பாலத்தை இப்போது கடந்து கொண்டிருந்தது. அநேகமாக நாமக்கல் வட்டாரத்தில் இதுதான் பெரிய பாலம் என்று நினைக்கிறேன். மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 2-ஐ தாண்டியிருந்தது. வண்டியின் வேகத்தை மேலும் அதிகரித்து விரைந்து ஆரியூரை அடைந்தேன். விருந்து இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை.

விருந்துகள் எப்போதும் ஒரு குதூகலமான மனநிலையை நம்மில் தோற்றுவிக்கின்றன. விருந்தின் தன்மைக்கேற்றவாறு சில முன்தயாரிப்புகளை நாம் செய்துகொள்கிறோம். விருந்தில் நன்றாக சாப்பிடவேண்டும் என்று முந்தைய வேளைகளில் குறைவாக உண்பவர்களும் உண்டு. விருந்தளிப்பவரின் வசதி நிலைகளை பொறுத்து சில எதிர்பார்ப்புகளை மனம் ஏற்படுத்திக்கொள்கிறது. அதை அவர் நிறைவு செய்வதை பொறுத்து அந்த விருந்தின் வெற்றியும் தோல்வியும் அமைகிறது. ஒருவகையில் அவ்விசேஷத்தின் வெற்றி தோல்வியும் என்றுகூடச் சொல்லலாம்.

கிடாவெட்டைப் பொறுத்தவரை இவை அனைத்துமே இருமடங்காக இருக்கும். கல்யாணத்தை உள்ளூரில் வைத்தால் வரும் கும்பலில் பாதிகூட அசலூரில் வைத்தால் வராது. ஆனால் கிடாவெட்டை எந்த குக்கிராம கோவிலில் கொண்டுபோய் வைத்தாலும் கண்டுபிடித்து, சென்று சேர்ந்து, உண்டு களித்து வருபவர்களே நம்மில் அதிகம். அசைவப் பெருவிருப்பம் கொண்டவர்கள் நாம். அதற்கும் காரணம் அடிப்படையில் நம் சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்களாக இருப்பதுதான். என்றாவது கிடைக்கும் சுவையுணவின் மீது இயல்பாக ஏற்படும் ஒரு மிகைவிருப்பம்!

என்னைப் பொறுத்தவரை அசைவ உணவுகளில் என்னுடைய விருப்பங்களெல்லாம் கோழி, மீன் ஆகியன மட்டும்தான். ஆட்டிறைச்சியை என் விருப்பப் பட்டியலில் இருந்து விட்டு விலக்கி மாமாங்கம் ஆகிவிட்டது. அதனால் கிடாவெட்டுகளில் விருந்தை முன்வைக்காமல் உறவுகளை மதித்து(!) கலந்துகொள்வதே என் விழைவாக உள்ளது. அதிலும் விசேஷங்கள் நடைபெறும் இடம் கோவில்கள் என்றால் அண்மைகாலமாக என்னை வியாபித்துள்ள சிற்ப ஆராய்ச்சி ஆர்வம் என்னை மேலும் உந்தித்தள்ளிவிடும்.

நான் சென்றடைந்தது ஆரியூர் முத்துசாமி, கன்னிமார் கோவில். சமீப காலத்தில்தான் அங்கேயுள்ள விதானங்களும், உள்ளரங்கங்களும் புதுப்பிப்பப்பட்டன போலும். பழைய சிற்பங்களுக்கெல்லாம் பெயிண்டால் கோட்டிங் வேலை நடந்து கண்ணை உறுத்திற்று. நம் பழையை சிற்ப வேலைப்பாடுகளின் தனித்தன்மையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு முற்றிலுமாக நம்மிடமில்லை. காவல் தேவதை சிலைகள் மட்டும் இன்னும் பழையனவாகவே இருந்தன. சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன்.

இப்படி தன் போக்கில் சுற்றிக்கொண்டிந்தவனின் தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினால்.. பள்ளிநாட்களில் சில இதமான பொழுதுகளை பகிர்ந்துகொண்ட பழைய நண்பன் ஒருவன் முகம் மலர நின்றிருந்தான். நடப்புகால நட்புகளை பரிசீலிக்கும்போது, இவன் போன்ற பல பால்ய தோழமைகள் இடைநின்று போனது பேரிழப்பாக சில நேரங்களில் தோன்றுவதுண்டு. இருவரும் கண்டுபேசி கணகாலம் ஆகியிருந்ததால் உபயகுசலோபரிகளை செய்துகொண்டு, பரஸ்பர தொழில் விவகாரங்களைப்பற்றி பேச்சு ஆரம்பித்தது. நண்பனுக்கும் பங்குசந்தை தொழில் உண்டு என்பதால் பேச்சு அதில் மையம் கொண்டது. வாரம் முழுவதும் அதிலேயே தோய்ந்து கிடப்பதால், வாரயிறுதிகளில் யாராவது ‘ஷேர்.. மார்க்கெட்..’ என்று ஆரம்பித்தால் காதை பொத்திக்கொண்டு காததூரம் ஓடி விடுவேன். ஆனால் சிலரிடம் அப்படி முடிவதில்லை.

சுவாரசியாமாக உரையாடல் சென்று கொண்டிருக்கையில் மனிதர்களிடையே ஒரு பரபரப்பு ஏற்பட்டதை கவனிக்கமுடிந்தது. விருந்து ஆரம்பித்து விட்டிருந்தது. நண்பன் முந்திக்கொள்ள முன்னால் நகர்ந்தான். நான் பிந்திக்கொண்டு பின்னால் வந்து பிரகாரங்களை சுற்றிப் பார்த்தபடி வலம் வந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தடியில் சிலர் வேகவேகமாக குடித்துக் கொண்டிருந்தார்கள்.

“அதெப்படிங்க. கிடாவெட்டுன்னா நமக்குதான் கால் நிக்காதுங்களே!”... என்னும் கம்பவுண்டர் வரிகளை கொஞ்சம் மாற்றிப் போடத் தோன்றியது. தலையும் நிற்காது.

கல்யாணம், கச்சேரி போன்ற மற்ற எந்த கூடுகையிலும் குற்றமாக கருதப்படும், உள்ளம் அநாவசியமாக குறுகுறுக்கும் செயலாகிய குடி, கிடாவெட்டில் மட்டும் விசேஷத்தின் ஓர் அங்கமாக கருதப்படுவது நம் சமூகத்தின் முரண்நகைகளில் ஒன்று. இதை இன்னும் மறைமுகமாக மட்டும் கொண்டாடிக்கொள்ள முடியும். பொதுவெளியில் அளவாக நாகரிகமாக குடித்து தடுமாறாமல் பேச நாம் கற்றுக்கொள்ளும் வரை அது அப்படி நீடிப்பதுதான் நல்லதும்கூட.

மணி 3 ஆகியிருந்தது. அடுத்த பந்திக்கும் சேர்த்து இப்பவே இடம்பிடித்தபடி மனிதர்கள் நின்றிருந்தார்கள். சாப்பிடும் எண்ணத்தை கைவிட்டு நகர்ந்தேன்.

உணவை விட ஞாயிறு பிற்பகல்களின் ஓய்வு எனக்கு அதிமுக்கியம். வார நாட்களில் மிகநெருக்கடியாக பொழுதுகளை கட்டமைத்துக்கொண்டு, அந்த இடைவெளிக்குள் வாழ முற்படுபவன் நான். அதற்கு அத்தியாவசியமான ஓய்வை ஞாயிறுகளின் நெகிழ்வான உறக்கம் அளிப்பதாக எப்பவும் ஓர் உள்ளுணர்வு. ஓய்வற்று ஒரு ஞாயிறு கடந்து விட்டாலும் கூட அதைத் தொடர்ந்து வரும் வாரம் முழுவதும் எவ்வளவு உறங்கினாலும் மனம் சோர்வாகவே உணரும். அது ஏன் அப்படி என்பதெல்லாம் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட நுண்ணுனர்வு சார்ந்த விஷயங்கள்.

விர்ர்ர்ரூம்.......!

கிளம்பி விட்டேன்.
மேலும்...