போலி கலாச்சார மதிப்பீடுகள்

Posted: Saturday, February 5, 2011 | Posted by no-nononsense | Labels:
கையில் பணமும் செல்வாக்குள்ள மனிதர்களை வளைக்கும் தந்திரமும் தெரிந்திருந்தால் இந்த நாட்டில் ஏழைகளை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்கு திவ்யாவின் படுகொலை ஒரு சாட்சி.

இந்த தற்கொலை சாவுக்கும் இந்த வரிகளுக்கும் என்ன சம்மந்தம் என்று வினவுக்கு மட்டுமே வெளிச்சம்.

இந்தப் பெண்ணுக்கு ‘திருடி’ பட்டம் கிடைத்து எள்ளி நகையாடப்பட்டு, அதன் அவமானம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் அது ஓரளவு புரிந்து கொள்ளக்கூடியதே. அதுதான் உண்மை என்றால் இதற்கு மேல் நான் எழுதுவதற்குள் செல்ல வேண்டியதில்லை.

ஆனால் நிர்வாணமாக சோதனை செய்தார்கள் என்பதற்காக தற்கொலையை நாடியிருந்தால், அது தவறான முடிவு! அந்த முடிவு இந்திய சமூகத்தில் நிலவி வரும் பாலியல் அடிப்படையிலான தவறான மனநிலை கட்டமைப்பை எடுத்துக்காட்டுவதாகவே உள்ளது. அது இந்திய இளைஞர்கள் மனதளவில் எந்தளவு பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. நிர்வாணத்திற்கும் கற்புக்கும் நாம் போட்டுவைத்துள்ள மாயமுடிச்சு உயிரையும் இறுக்கிக் கொல்லக்கூடியதாக உள்ளது.

நான் இன்னமும் அந்த ஆசிரியைகள் முழு நிர்வாணப்படுத்தி சோதனை செய்தார்கள் என்று நினைக்கவில்லை. உள்ளாடைகள் இருந்திருக்கலாம். அந்த பெண்ணின் கடிதத்தில் தகவல் முழுமையாக இல்லை. அப்படியே நடந்திருந்தாலும் ஆடைகளை களைந்து செய்யப்பட்ட சோதனை ஒரு சாதாரண விஷயம். அமெரிக்க விமான நிலையங்களில் இப்போதெல்லாம் நமது மந்திரிகளையே அப்படித்தான் செய்கிறார்கள். ஷாரூக்கானின் நிர்வாண ஸ்கேன் உருவப்படமெல்லாம் ஊடகங்களில் உலா வந்தன.

இந்த பெண்ணையுமே கூட ஏதேனும் காரணமாக விமான நிலைய சோதனை அறையில் இப்படி ஆடைகளை களைந்து சோதித்திருந்தால் அவருக்கு அது அவமானகரமாக இருந்திருக்காது என்று சொல்லமுடியும். பெருமையாக கூட வெளியே சொல்லிக் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் அதுவே மற்ற இடம் என்று வரும்போது ஆடை களைந்த சோதனையால் (
நிர்வாண சோதனை என்பது politically மிகைப்படுத்த சொல்லாடல் என்பது என் கருத்து) அவமானம் தலைவிரித்தாடி மனம் பட்டென்று உடைந்து உலகம் இருண்டு எல்லோரும் சுற்றி நின்று கைகொட்டி சிரிப்பதாக பிரமைகள் தோன்றி தற்கொலை எண்ணம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் சோதனை செய்தவர்களும் பெண்கள் தான்.

இந்த சம்பவத்தில் அந்த ஆசிரியைகளை கொலைகாரிகளை போல சித்தரிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. பணம் காணவில்லை; சில பேரின் மீது சந்தேகம் என்றால், அந்த இடத்தில் பொறுப்பானவர்களாக இருப்பவர்கள் அதற்கு தக்க நடவடிக்கை எடுத்து சோதனை செய்யாமல் வேறு என்ன செய்வார்கள்?!

இந்தப் பெண்ணின் தற்கொலை முடிவு பரிதாபத்துக்குரியது. அதற்குமேல் இதில் வர்க்கப் பிரச்னை எதுவும் உள்ளதாக நான் நினைக்கவில்லை. எல்லா இடங்களிலும் பணக்காரர்களை விட ஏழைகள் இரண்டாம் பட்சம் தான். உலகம் முழுவதுமே இப்படித்தான். நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் அதனை எதிர்கொண்டு வாழ பழகிக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். நூற்றாண்டு கால சமூக ஒடுக்குமுறை அதை அவர்களின் ஜீன்களில் எழுதி வைத்து விட்டிருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு வர்க்கப் பிரச்னையையும் தாண்டி மனதளவில் வேறு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். தொட்டாற்சுருங்கி என அவர் மனம் மிகவும் பலவீனமாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் இங்கே தினமும் பத்திரிக்கை செய்தியாக வந்து கொண்டிருக்கும்.

ஏழைகளின் குழந்தைகளை மட்டுமல்ல, யாருடைய குழந்தைகளாக இருந்தாலும் அவர்களை உலகம் தெரியாத கூட்டுப்புழுக்களாக போலியான கலாச்சார மதிப்பீடுகளை கற்றுக்கொடுத்து வளர்த்தால் நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளத் தெரியாமல் இது போன்ற எதிர்மறையான சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் தங்கள் மனதில் இடம் கொடுத்துவிடக்கூடும்.

பச்சைப் படுகொலை என்று தலைப்பு என்னவோ எடுப்பாகவே உள்ளது. ஆனால் ஒரு சாதாரண சம்பவத்துக்கு எப்படி எல்லாம் கண் காது மூக்கு வைத்து கற்பனை செய்து வர்க்கப் பிரச்னையை உள்ளே நுழைத்து எழுத்தாணியை ஓட விடமுடியும் என்பதற்கு இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு. தோழர்களின் வினவு கட்டுரைகள் சில காலமாக தேய்மானம் அடைந்து வருவது வருத்தத்துக்குரியது.

0 comments:

Post a Comment