காவலன்

Posted: Wednesday, February 9, 2011 | Posted by no-nononsense | Labels:
காவலன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ட்விட்டியதும்தான் எத்தனை கெக்கலிப்புகள்! புருவம் சுருக்கல்கள்! பரிதாப பார்வைகள்! விஜய் பாவமா அல்லது நான் பாவமா என்று புரியாமலே படம் பார்க்க ஆரம்பித்தேன்.

காவலன், முதல் பாதியில் எனக்கு பிடித்த விஜய் படமான வசீகராவை நினைவூட்டினான். எவ்வித அதீதங்களும் அலட்டல்களும் இல்லாத கதைப்போக்கில் விஜயின் underplay-வை ரசித்தபடியும், சித்திக்கின் நகைச்சுவை காட்சியில் மீண்டும் பரிமளித்த வடிவேலை கண்டு சிரித்தபடியும் இடைவேளை வரை படம் நன்றாகவே சென்றது. அதற்கு பிறகு திரைக்கதை soap opera ஆகி சொதப்பலாக மாறி எப்போது முடியும் என்றாகிவிட்டது. ரொம்பவே சுமாரான படம் !


விஜய் போன்ற பொதுமக்களின் அபிமானத்திற்குரிய நடிகர் மட்டும் இதில் நடித்திருக்கவில்லை என்றால் மிக மோசமான தோல்வியை இப்படம் தழுவியிருக்கும். இருந்தாலும் வாய்மொழியாக (word of mouth) ஒரு குறைந்த பட்ச நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறது என்றால் அதற்கும் காரணம் விஜய் தான். இதற்கு முன் விஜய் செய்த ஓவர் பில்டப்புகள் எதுவுமே இதில் இல்லை என்பதுதான் இப்படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட்! மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு பாராட்டுகிறார்கள்!

ஒல்லி அசினை பார்க்க சகிக்கவில்லை. அதைவிட ஒரு அட்டு ஃபிகரை அவருடனே அலையவிட்டு கடைசியில் விஜய்க்கும் ஜோடியாக்கி கொடுமை செய்துள்ளார்கள். இப்படி ஒரு ஃபிகர் வறட்சியானதொரு படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. போதாத குறைக்கு ‘ஏனிப்படி இங்கு கோவணத்துடன் ஆண்டியானாய்’ எனும்படி அசினுக்கு அம்மாவாக வரும் (சற்று குண்டாகிவிட்ட) ரோஜா வேறு முகத்தில் கடுமை ஏற்றி குரலை உயர்த்தி.. உஸ் அப்பா..!

குண்டு என்றதும் ஞாபகம் வரும் இன்னொரு விஷயம் பழைய குண்டு ஷர்மிலியை சில காட்சிகளில் படத்தில் ஓடவிட்டு ரசிகர்களை கடுமையாக தண்டித்திருக்கிறார்கள். அவர் இன்று சுமோ மல்யுத்த வீரனின் சைஸில் இருக்கிறார்! சித்திக் சார்..! நீங்க நிஜமாவே மலபார் தானா?!

ராஜ்கிரணை இப்படி இன்னும் எத்தனை படங்களில்தான் வீரதீரமான ஊர் பெரியவராக பார்ப்பது? அவரும் அதே அரைத்த மாவு நடிப்பையே அள்ளித் தெளிக்கிறார். இனி இவர் நடித்திருந்தால் அப்படத்தை பார்க்க ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பேன்.

விஜய் படத்தில் ஒரு பாட்டு கூட ஹிட் ஆகாத ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும். நடனத்திற்கும் அவ்வளவாக வேலையில்லை. விஜய் ஏனோ இப்போதெல்லாம் தன் படங்களின் பாடல்களில் ஏதாவது விக்கை மாட்டிக்கொண்டு ஆடுகிறார். சுத்தமாக பொருந்தவில்லை.

விஜய் - அசின் ஆகிய இரண்டே கதாபாத்திரங்களை சுற்றியே வழவழவென்று நகரும் திரைக்கதையின் ஒரே ஆறுதல், வடிவேலு !


என் குழந்தை விஜய் ரசிகை என்பதாலும், மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் சென்று நாளாகிவிட்டது என்பதாலும் மட்டுமல்ல, இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு விஜய் & கோ பட்ட பாட்டை படித்ததாலும் கூட [http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_19.html] இதை தியேட்டரில் சென்று பார்க்கவே விரும்பினேன். Mission completed !

***

பல காரணங்களாலும் தியேட்டர் சென்று சேரவே மணி 6.45 ஆகிவிட்டது. என் மனைவிக்கு படத்தை எழுத்து போடுவதில் இருந்தே பார்த்தால்தான் திருப்தி. இல்லையென்றால் வீடு வந்து சேர்ந்தாலுமே கூட தொடங்கிய மண்டகப்படி ஓய்ந்திருக்காது என்பதால் அடித்து பிடித்து தியேட்டரை ஏழு மணியளவில் அடைந்தோம். உள்ளே சென்று பார்த்தால் மொத்தமே இருபது பேர்தான் இருந்தார்கள் ! நேரம் ஆக ஆக இன்னும் ஒரு பத்து பேர் சேர்ந்திருக்கலாம்.

டிக்கெட் விலை 40 ரூபாய். 40*30 = 1200 ரூ. மொத்த வசூல்.

‘வெறும் ஆயிரத்து சொச்சத்துக்கெல்லாம் ஷோ ஓட்டி எப்படி உங்களுக்கு கட்டுபடியாகிறது..?’ என்று டூவீலர் பார்க்கிங்கில் டிக்கெட் கிழித்தவரைக் கேட்டேன்.

‘இன்னைக்கு பரவாயில்லைங்க.. 40 பேராவது இருக்காங்க. மத்த நாளெல்லாம் 7 பேர் சேர்ந்தாலே கூட போதும்னு ஓட்டுவோம்..!’ என்றார் அவர்.

இன்னும் சில ஆண்டுகள் கூட தியேட்டர்கள் தப்பி பிழைத்திருக்காது என்று தோன்றுகிறது.

இதில் குறைபட்டுக்கொள்ளவும் ஒன்றுமில்லை. கூத்து மேடை அழிந்து நாடக மேடை வந்தது. நாடக மேடை அழிந்து சினிமா கொட்டகை வந்தது. இப்போது சினிமா கொட்டகைகளுக்கு அழிவு காலம். கால மாற்றத்தில் இந்த மாற்றம் தவிர்க்க இயலாதது

0 comments:

Post a Comment