ராஜராஜன் ஆட்சி காலம் பொற்காலமா?

Posted: Friday, February 11, 2011 | Posted by no-nononsense | Labels:
//ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். //

நிலவரி, கிராமசபை, குடவோலை, சமுதாய முன்னேற்றம் --- இதிலெல்லாம் பயனடைந்தவர்கள் குப்பனோ, சுப்பனோ, விவசாயியோ, வியாபாரியோ அல்ல. மேற்சொன்ன எதிலும் பங்கெடுத்துக் கொள்ள அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதனால் ராஜராஜன் காலம் பொற்காலம் என்றால், அது யாருக்கு பொற்காலம் என்பது முக்கியமான கேள்வியாகிறது. இன்னும் முழுமையான வரலாறுகள் எழுதப்படவேயில்லை. எழுதப்பட்டுள்ளவை எல்லாம் ஒருசார்பானவைகளாகவே உள்ளன. சோழர் சரித்திரத்தில், தமிழக வரலாற்றில் ராஜராஜன் மிக முக்கியமான மன்னன். பெரிய கோவிலைக் கட்டி அழியா புகழ்பெற்றவன். அதற்கு அப்பாலும் இருக்கும் வரலாறுதான் அறிந்து கொள்ளப்பட வேண்டியதாக இருப்பவை. அவை புதினங்களில் காணக் கிடைக்காது. காரணம் அடிப்படையில் அவை புனைவு கலந்தவை. ஒரு அறிமுகத்திற்காக வேண்டுமானால் படிக்கலாம். குறைந்த பட்சம் அதற்காகவாவது படிக்கலாம்.

-0-

அது மேலோட்டமான பார்வை.

ஆங்கிலேயரின் ஆட்சி காலம் என்பது திவான் பகதூர், ராவ் பகதூர் போன்ற பட்டம் பதவி பவிசுகளை அனுபவித்து வந்த சில ஜால்ராக்களுக்கு அப்போது பொற்காலம். அவர்கள் சரித்திரம் எழுதியிருந்தால், அதையும் அப்படியேதான் படித்து --எல்லா மக்களுக்கும் பொற்காலம்-- என்று சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் ஆங்கிலேயரின் ஆட்சி என்பது அன்னியரின் ஆட்சி காலமாக, அண்மை கால சரித்திரமாக போய், அதோடு அச்சு பத்திரிக்கை காலமாகவும் இருந்துவிட்ட படியால் அக்கால நிகழ்வுகள் இன்றும் படிக்க கிடைத்து உண்மையை அறிந்து கொள்கிறோம். ஆனால் பழங்கால மன்னர்களின் வரலாறு கல்வெட்டு, செப்பேடு, இலக்கியங்களின் மூலமாக மட்டும் அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் பேனாப் பிடித்தவன் இஷ்டத்திற்கு சரித்திரம் வளையும். வளைந்தது.

கலைஞர் கூட தன்னுடையதை பொற்கால ஆட்சி என்றே சொல்லிக் கொள்கிறார். கழக கரை வேட்டிகளுக்கும் அவரின் வாரிசுகளுக்கும் நிச்சயமாக இது பொற்காலம். கழக ஏடுகளிலும் இது அப்படியேதான் குறிக்கப்படும். அவர்களையும் தாண்டி பல பயனாளிகள் உண்டு. அவர்களுக்கு இலவச பொருட்கள் நிறைய கிடைத்தன. ஆனாலும் ஏன் பொதுவில் ஒரு அதிருப்தி நிலவுகிறது? காரணம் - குடும்ப/கட்சி உறுப்பினர்களின் ஆதிக்கம், எதேச்சதிகார மற்றும் சுரண்டல் வேலைகள்.

இப்போது கட்சியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்றால் ராஜராஜன் காலத்தில் பிராமணர்கள் அந்த இடத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு அது பொற்காலம். ஆனால் குப்பனுக்கும், சுப்பனுக்கும் அது மற்றொருமொரு மன்னனின் ஆட்சி - just one another king's rule. அவ்வளவுதான் வித்தியாசம்.

இந்தியாவில் அசோகர் காலம் பொற்காலம் எனப்படுகிறது. ஆனால் அவரின் மறுபக்கம் என்ன? கலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார். தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார். இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார். இது பிற்கால சரித்திர ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்ட விஷயம்.

எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. குறிப்பாக வரலாறுகளுக்கு. வரலாறுகளின் மிகப்பெரிய பொய் அந்த வரலாறுகளே என்பார்கள். ராஜராஜன் மட்டுமல்ல, சோழ மன்னர்களின் நெடும் ஆட்சி காலத்தின் பெரும் பயனாளிகள் என்றால், அது பிராமணர்களே. இன்னும் சொல்லப் போனால் சோழர்கள் மட்டுமல்ல, பிற்கால தமிழ் சரித்திரத்தில் ஆட்சியாளர்களாக குறிக்கப்படும் பலரின் நிர்வாக முறையும் பிராமண ஆதிக்கத்தில் பிடியுண்டு கிடந்தது என்பதே வரலாற்றின் மறுபக்கம்.

இதற்கு விதிவிலக்கு களப்பிரர் ஆட்சி காலம் மட்டுமே. அதைத்தான் வரலாறை எழுதிய பிராமணர்கள் ‘இருண்ட காலம்’ என்று குறித்து வைத்திருக்கிறார்கள். ஏன் அவர்கள் பார்வையில் அது இருண்ட காலம் என்பதை ஆராய்ந்தால், ஏன் சோழ மன்னனின் ஆட்சி காலம் பொற்காலம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

கிராம நிர்வாகம் பிராமணர்கள் மற்றும் மேல்சாதி வேளாளர்கள் கையில்தான் இருந்தது. வரிவசூல் செய்யும் காணிகளாகவும் அவர்களே இருந்தனர். கிராமங்கள் அவர்களுக்கு கொடையளிக்கப்பட்டன. அதன்மூலம் அவர்கள் பெரும் நிலக்கிழார்களாக இருந்தனர். ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் வரி கிடையாது. இந்திய ஜனநாயகத்தின் ஆதிகாலசான்று என குடவோலை முறையை குறிக்கிறோம். அதில் பெரும்நிலக்கிழார்களான பிராமணர்கள் அல்லது அவர்களை ஒத்த சாதியினர் மட்டுமே போட்டியிட முடியுமே தவிர, வேறு எந்த குடிமகனுக்கும் தகுதி இல்லை. இப்படியாக பல விதிகள் அதற்கு இருக்கின்றன. அவை எதற்கும் பொதுமக்களுக்கும் சம்மந்தமில்லை.

பிராமணர்கள் நன்றாக இருந்தால்தான் தங்கள் நல்வாழ்வு சுபிட்சமாகவும் இறைவனின் ஆசிர்வாதத்துடன் இருக்கும் என்பது அக்கால மன்னர்களிடம் பிராமணர்களால் வலிந்து ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கை. அக்காலம் பக்தி இயக்க காலம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் சொல்கிறேன்: மேலோட்டமாக பொற்காலம் என்று சொல்வது பொருந்தாது. பொற்காலம் என்றால் அது யாருக்கு என்பது ஆராய்ச்சிக்குரியது என்று. இதன் பேரில் ஆழ்ந்த வாசிப்பு அவசியமாகிறது. அதற்கு ஓரிரு புதினங்களும், சிற்சில இணைய தேடல்களும், பாடசாலை புத்தகங்களும் மட்டும் உதவாது. உண்மை அதற்கு அப்பால் இருக்கிறது. சரித்திரம் பற்றியும் வரலாற்று நாயர்கள் பற்றியும் ஒரு feel-good perception தான் வேண்டும்; அதுதான் எனக்குப் பிடிக்குமென்றால் அப்படியே இருந்து கொள்ளலாம். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை ;-)

-0-

ஒரு தகவலுக்காக சொல்கிறேன் - தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது மாமன்னன் ராஜராஜன் தான் என்பது ஒரு நூற்றாண்டு முன்பு வரையிலும் கூட யாருக்கும் தெரியாது. ஜி.யூ.போப் அதை காடுவெட்டிமன்னன் கட்டிய கோவில் என்றே எழுதி வைத்திருக்கிறார். கூல்சு என்பார்தான் 1900 ஆண்டு வாக்கில் அதைக் கட்டியவன் ராஜராஜன் என்பதை கோவில் கல்வெட்டிகளை மறுஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்தார்.

இதுதான் நம் சரித்திரங்களின் லட்சணம்.

-0-

சில துறைகளில் எனக்கு ஆய்வு ரீதியான வாசிப்பு உண்டு என்பதைத் தவிர இதில் பெரிதாக ஒன்றுமில்லை. புதினங்கள் சோழர்களை பற்றி ஒரு அறிமுகம் தரலாம். ஆனால் அதுவே வரலாறு காட்டும் உண்மையல்ல. காரணம் அவை வாசிப்பு சுவைக்காக கற்பனை கலந்து எழுதப்பட்டவை. புதினங்களையும் தாண்டி நம்முடைய வாசிப்பை நாம் நீட்டித்துக் கொள்ள வேண்டும். அக்கால அரச செயல்பாடுகள் குறித்து வெளிவந்துள்ள நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டும். விமர்சனங்களை தேடிப் படிக்க வேண்டும். அதன்மூலம் ஓரளவு உண்மையை நெருங்கிப் பார்க்க முடியும். நான் இங்கே பணி நேரத்தில் பாலாஜிக்கு எழுதிய பதில் முழுமையானது அல்ல. ராஜராஜனின் அரசு, ஆட்சிமுறை குறித்து பெரிய கட்டுரை எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அவன் நிச்சயமாக பேரரசன். சோழ வம்சத்தின் மிக ஆளுமையான மன்னன். ஆனால் அவனுடையது பொற்கால ஆட்சி என்பது சற்று மிகையான மதிப்பீடு என்பதுதான் சுருக்கமாக நான் சொல்ல வருவது.

0 comments:

Post a Comment