மரபு சுற்றுலாக்கள்

Posted: Friday, February 11, 2011 | Posted by no-nononsense | Labels:
வருடம் ஒருமுறை நடக்கும் சந்திப்புகளை கொஞ்சம் திட்டமிட்டால் இந்த மாதிரி புராதன இடங்களை சென்று பார்க்கும் heritage tour-களாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அடிப்படையில் அதற்கெல்லாம் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படிப்பட்டவர்கள் பத்து பேருக்கும் ஒருவர் தேறினால் பெரிய விஷயம்.

தஞ்சை பெரியகோவில் என்றால் பொதுவில் நந்தி சிலையும், கோவிலும், கற்கோபுரமும் தான் அதன் சிறப்பு என்று நினைக்கிறோம். ஆனால் ராஜராஜ சோழனின் ஆட்சியில் அது ஒரு கருவூலமாக, ஜமீனாக, வங்கியாக, வரி வசூல் மையமாக, ஆடல் மகளிரின் இருப்பிடமாக ... இன்னும் பலவாறான செயல்பாடுகளுடன் தனித்துவமாக விளங்கியது. அது போன்ற அரசியல் முக்கியத்துவம் வேறு கோவில்களுக்கு கிடைத்ததில்லை என்று சொல்லலாம். அதையெல்லாம் படித்து விட்டு கோவிலை பார்க்கச் சென்றால் அந்த பார்வையே முற்றிலும் வேறுபட்டதாக நம்மை கால இயந்திரத்தில் ஏற்றிப் பின்னால் கொண்டு சென்று விடும்.

-0-

நாமக்கல்லின் சிறப்பு மிக்க குகை குடைவரை கோவில்களாகிய நரசிம்மர் கோவில், ரங்கநாதர் கோவில் ஆகியன பல்லவர் கால புடைப்பு சிற்பங்களுக்கு புகழ்பெற்றவனாவாக விளங்குகின்றன. அதன் அருமை தெரிந்து பல கலை ஆர்வலர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் வந்து பார்த்து, படமெடுத்துச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரின் கட்டுரைகளை நான் இணையத்தில் கூட படித்திருக்கிறேன். ஆனால் உள்ளூரில் அதன் பெருமை, பூஜ்ஜியம்!

ஓராண்டு முன்பு நான் இங்கே Namakkal should be rediscovered என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு தகவலாக --- இந்த இரண்டு கோவில்களின் சிற்பங்களும் பல்லவர் கால சிற்ப கலையை ஒத்தவையாக இருக்கின்றன. ஆனால் நாமக்கல் பகுதியை பல்லவர்கள் ஆளாத போது இது எப்படி என்று தெரியவில்லை --- என்று குறிப்பிட்டிருந்தேன். அதிலிருந்து ஒரு முன்னேற்றமாக இக்கோவில்கள் பல்லவர்களின் கீழேயிருந்து திருச்சி, புதுகோட்டை பகுதிகளில் குறுநில மன்னர்களாக ஆட்சி செலுத்திய அதியர்களால் (முத்தரையர் மரபு) கட்டப்பட்டிருக்கலாம் என்பது வரை வந்திருக்கிறேன். இன்னும் பல தகவல்கள் தேவைப்படுகின்றன. கிடைத்ததும் அதன் அடிப்படையில் நாமக்கல் கோவில்களின் கலை சிற்ப புராதன சிறப்புகள் குறித்து உருப்படியாக ஒரு கட்டுரை எழுதி இணையத்தில் போட்டுவைக்க இருக்கிறேன். நாமக்கல் பற்றி தேட முற்படுபவர்களுக்கு என்றைக்காவது எதற்காகவாவது உதவும். அதாவது இன்றைக்கு இருக்கும் ‘இல்லை’ என்னும் நிலை பிற்காலத்தில் இருக்கக்கூடாது.

என்னுடைய ஆர்வமும், முயற்சியும் நான் பிறந்த மண்ணின் சிறப்புகள் பற்றி அறிந்துகொள்வது என்பது மட்டுமே. ஒரு சுயதிருப்திக்காக.

0 comments:

Post a Comment