தாய்மொழியும் ஆன்மிகமும் - ஜெமோவுக்கு ஓர் எதிர்வினை

Posted: Tuesday, February 22, 2011 | Posted by no-nononsense | Labels:
மொழிக்கான தேவை என்பது அக்குழந்தைகளின் இயல்பான ஆன்மீக வல்லமை சார்ந்த விஷயம்.வெறுமே உலகியலார்வம் மட்டும் உள்ள குழந்ததைகளுக்கு ஒருவேளை தாய்மொழி தாய்நாடெல்லாம் பொருட்டாகத் தெரியாது. ஆனால் கணிசமான குழந்தைகள் அப்படி அல்ல. அவற்றுக்குள் ஆன்மீகமான ஒரு நாட்டம் உள்ளது. அவைதான் கலைகளையும் சிந்தனைகளையும் நோக்கிச் செல்கின்றன. - ஜெயமோகன்

ஜெயமோகனின் அரசியலை எளிமைப்படுத்திச் சொல்லி விடலாம். அது எந்த கருமாந்திரம் குறித்த உரையாடாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கான பதிலில் ஆன்மிகத்தையும், தேசிய இன உணர்வையும் கோட்டிங் வேலை செய்துவிட வேண்டும். உடனே கூட்டம் நாம் நடக்க நடக்க ‘லாலேலலலாலா...’ என்று பின்னால் கோரஸ் பாட ஆரம்பித்து விடும்.

மொழி உணர்வு குறித்து நான் எண்ணற்ற கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். இராம.கி(http://valavu.blogspot.com/) போன்ற உணர்வாளர்களுடன் நேரடி உரையாடல்களிலும் ஈடுபட்டிருக்கிறேன். பாவாணரில் மூழ்கி கிடந்திருக்கிறேன். பின்னால் அவரின் பல வாதங்களுடன் நான் ஒப்பவில்லை என்பது வேறு விசயம். ஆனால் அவர்களில் யாரிடமும் உள்ளடி அரசியல் கோட்டிங் வேலையை நான் காணவில்லை. குழந்தைகள் மொழி உணர்வுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு ஆன்மிக நாட்டம் இருக்கும். ஏனென்றால் அது அவர்களின் ஆன்மிக வல்லமை சார்ந்த விசயம். பலே ஜெயமோகன்! ஒரே வரியில் தமிழ்நாட்டின் கார்ப்போரேட் சாமியார்களின் பின்னால் ஆன்மிக நாட்டம் கொண்டு தன்னுணர்வற்று திரியும் மேட்டுகுடி வர்க்கத்தையே புறந்தள்ளிவிட்டார்.

உண்மையில் ஆன்மிக நாட்டத்திற்கும் மொழிக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. எந்த மொழியில் பொழிப்புரைத்தால் என்ன... ஆன்மிக நாட்டம் வளரவேச் செய்யும். அது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம். தத்துவம் சார்ந்த விருப்பம். ஓஷோ என்ன தமிழ் மொழியிலா ஆன்மிக தொண்டாற்றினார். இல்லை ஜெமோ இங்கே காட்டியிருக்கும் ராமாயணம் என்ன தமிழ் மொழியிலா இயற்றப்பட்டது? தமிழில் உள்ள பக்தி இலக்கியங்களின் காலம் என்ன? மிஞ்சிப் போனால் ஒரு நானூறு ஆண்டுகள்! தமிழின் தொன்மை ஜெமோவே கூறியுள்ளது போல ஐயாயிரம் ஆண்டுகளை தாண்டும். ஐயாயிரம் ஆண்டுகளில் வெறும் நானூறாண்டு பக்தி இலக்கியங்கள்தான் மொழியுணர்வை அளித்து ஆன்மிக நாட்டத்தை குழந்தைகளிடம் புகட்டுகின்றனவா?

தாய்மொழியின் அவசியம் என்ன? குறிப்பான தமிழை நம் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்வதன் நோக்கம் என்ன? தமிழின் தொன்மையும், அதன் இலக்கிய வளங்களும், அது அளிக்கும் முடிவற்ற சுவையும்தான். அதன் தொன்மையைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாலே இங்கே இடம் காணாது. எழுத திறனும் போதாது. உதாரணமாக,

“வைசிகன் பெறுமே வாணிப வாழ்க்கை”

இதன் அர்த்தத்தை விளக்கவும் வேண்டுமா? எல்லோருக்கும் புரியும் மொழிதான். அதாவது வைசிகன் (வணிகன்) வாணிபம் செய்யும் வாழ்க்கையை பெறுவான் என்பது பொருள்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம்.

“வேளான் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிக்ழ்ச்சி”

வேளாண்மை செய்பவனுக்கு உழுவதே தொழில். அதுவன்றி அவன் வேலை வேறு இல்லை.

எவ்வளவு எளிமையாக புரிகின்றன. இது தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் வரிகள். தமிழில் கிடைக்கப்பெற்ற ஆதி நூல் தொல்காப்பியம். அது வழிநூல் தான். அதற்கு மூலநூல் அகத்தியம் கிடைக்கவில்லை. தொல்காப்பியக் காலம் 4500 ஆண்டுகள் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. அது இடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல். இடைச்சங்கம் 3500 ஆண்டுகள் நடைபெற்றதா சொல்லப்படுகிறது. அது உண்மையானால் முதல் சங்க காலம் 7500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக்கூடும்.

இவ்வளவு தொன்மை வாய்ந்த தமிழ் இன்று வரை சிறு சிறு வரிவடிவ மாற்றங்களைத் தவிர மற்ற பெரும் மாறுதலின்றி தன்னுடன் எண்ணற்ற இலக்கியச் செல்வங்களை தாங்கிக்கொண்டு கடந்து வந்திருக்கிறது. காலமெல்லாம் அவற்றை கற்றுக்கொள்ள நினைத்தாலும் முடியாது. அதை ஆங்கிலம் என்னும் போலிகௌரவத்தின் காரணமாக நம் காலத்தில் அழியவிட வேண்டுமா? உலகில் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் முதிர்ச்சியுள்ள வேறு எந்த சமூகமும் செய்ய மனம் உவக்காத இந்தச் செயலை நாம் நம் காலத்தில் பிரக்ஞையற்று ஸ்மரணை செத்து செய்து கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு கேவலம்?

இதைப்பற்றியெல்லாம் என்னை விட அதிகம் எழுதும் விஷயஞானம் கொண்டவர் ஜெமோ என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நான் அறிவில் சிறியன். ஆனால் அதையெல்லாம் அவர் செய்ய மாட்டார். காரணம் அவரின் நோக்கம் அவரின் பீடம்.

0 comments:

Post a Comment