கல்சா

Posted: Tuesday, October 26, 2010 | Posted by no-nononsense | Labels:
சீக்கிய மதகுருமார்களுக்கும் முகலாய அரசர்களுக்கும் இடையே நிலவி வந்த நட்பையும் பூசலையும் பற்றிய வரலாற்று குறிப்புகளை இன்று காலை வாசித்துக் கொண்டிருந்தேன். சுவாரசியமாக இருந்தது. 

இந்திய வரலாற்றில் சீக்கிய மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் முகலாய ஆட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் சமகாலத்தியவை. முகலாய சாம்ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், அதாவது அக்பர் காலம் வரை ஒரு சுமூகமான நல்லுறவில் இருவரும் இருந்து வந்திருக்கின்றனர். ஜகாங்கீர் காலத்தில்தான் மோதல் வந்திருக்கிறது. அது ஔரங்கசீப் காலத்தில் சீக்கியர்கள் ஒரு தீரம் மிக்க தனிப்படை தங்களுக்கென உருவாக்கிக்கொள்ளும் அளவிற்கு சென்றிருக்கிறது. அதுதான் ’கல்சா’. 

முகலாயர்களுக்கு எதிராக குருகோவிந்த் சிங் உருவாக்கிய ‘கல்சா’ ஜப்பானிய சமுராய் வாழ்க்கைமுறையை கிட்டத்தட்ட ஒத்ததாக உள்ளது. மத குருமார்களையும் அவர்களின் கோட்பாடுகளையும், ஆதிகிரந்தத்தின் அருமைகளையும் கட்டிக் காக்கும் பொருட்டு மிக கட்டுக்கோப்பான வரைமுறைகளுடன் அமைக்கப்பட்டிருந்த படை அது. 

கல்சா பற்றிய மேல்விரங்களுக்காக உள்ளூர் நூலகத்தில் முத்துக் குளித்து பார்த்தேன். தகுந்த தகவல் நூல்கள் கண்ணில் படவில்லை. இங்கே மேலதிகமாக அடைத்துக் கொண்டிருப்பதெல்லாம் புத்தகங்கள் என்னும் பெயரில் குப்பை கூளங்கள்தாம். அவையும் தலைப்பு வாரியாக அடுக்கப்பட்டிருக்காது. அங்கே நான் பட்ட அல்லல்களை தனியாக ஒரு காலம் எழுதலாம். பிரிட்டிஷ் லைப்ரரி போன்றவை இருக்கும் சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ நேர்பவர்கள் பொறாமைக்குரியவர்கள்.

* * * 

கல்சா பற்றி தெரிந்துகொள்ளலாமே என்று இணையத்தை ஆராயும் கிடைத்தப் படம் இது. கல்சா கடைபிடிக்கும் சீக்கியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய Five K's பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். அவை என்னென்ன என்பது பற்றிய விளக்கப்படம்.





நேற்று என் அலுவலகத்திற்கு வந்த சீக்கியனிடம் இந்த Five k's பற்றி வினவினேன். அதெல்லாம் கோவிலில் இருப்பவர்கள்தான் வைத்திருப்பார்கள் என்றதுடன் முடித்துக் கொண்டான்.

இங்கே எனக்கு சிம்ரஞ்சித் சிங் மான் நினைவுக்கு வருகிறார். சந்திரசேகர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட 1989 தேர்தலில் வெற்றி பெற்ற மான், இந்த Five K உடன் பாராளுமன்றத்தில் நுழைய முற்பட்டபோது kirpan என்னும் உடைவாளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. என் மத அடையாளங்களுடன் தான் நுழைவேன் இல்லையென்றால் பாராளுமன்றத்தில் என் கால் பதியாது என்று அவர் அந்தமுறை உள்ளே செல்லவேயில்லை. அப்போதுதான் இந்திரா காந்தி கொலை வழக்கில் சிறை சென்று மீண்டிருந்தார். பஞ்சாபை பொறுத்தவரை அவர் ஒரு பெரிய வீரனாக கருதப்பட்ட காலம் அது.

சிம்ரஞ்சித் சிங்கின் கால் பாரளுமன்றத்தில் பதியாமலே போய் விட்டதா என்றால், அதுதான் இல்லை. மான் மீண்டும் 1999-ல் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தமுறை kirpan-ஐ பாங்காக கழற்றி வைத்து விட்டு மக்கள் சேவையாற்றி தன் கடமை நிறைவு செய்தார். முன்பு தடுத்தாட்கொண்டது வீரம் என்றால், பத்து வருடங்கள் கழித்து அவருக்கு வந்திருந்தது விவேகம். 10 வருட அரசியல் கற்றுத் தந்த பதவி பாடம்!

0 comments:

Post a Comment