பாலியல் எழுத்துக்கள் ஒரு பார்வை

Posted: Saturday, December 26, 2009 | Posted by no-nononsense | Labels:
பாலியல் கதைகள் குறித்து நண்பனுடனான உரையாடலின் ஒரு பகுதி:

எந்த புத்தகம் என்று கேட்பதிலிருந்து நீ ஏராளமாகப் படித்திருக்கிறாய் என்பது புலனாகிறது. ஏதோ முன்பு ஒருமுறை ஜேப்பியார் பற்றி பேச்சு வரும்போது நண்பர் ஒருவர் சொன்ன தகவலைத்தான் பகிர்ந்து கொண்டேன். அதற்காக புள்ளி விவரமெல்லாம் கேட்பது அநியாயம் ;-))

எனக்கு இந்த வகையறாவில் மருதம் என்கிற ஒரு புத்தகத்தின் பெயர் மட்டுமே ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் அதுதான் நான் படித்த முதல் புத்தகம். அதற்கு பிறகு உன்னைப் போல ஏராளமாக இல்லாவிட்டாலும், தாராளமாக நானும் கொஞ்சம் படித்து தள்ளியதில், பெயரெல்லாம் மறந்துவிட்டது. அம்மாதிரி புத்தகங்களுக்கு பெயரா முக்கியம்? மேலும், வாங்கியதும் முதலில் செய்வதே அட்டையை கிழித்து எறிவதுதான். அவ்வளவு கலர்ஃபுல்லாக அட்டை இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் கூட கண் அவிந்துபோகும்!

இதெல்லாம் பதின்ம வயதில். பின்னர் எழுத்தில் படித்த நாயகர்களை விட எகிடு தகிடான scandalists சிலரை நண்பர்களாக வாய்க்க பெற்றபின், காம கதை புகழ் சரோஜாதேவியெல்லாம் சாதாதேவியாகவே தெரிகிறார்.

கமல் ஒருமுறை கவிதை எழுதினாராம்,

எந்த பெண்ணை
தொட்டாலும்
அம்பரீஷ் வாசம்
அடிக்கிறதே!

- என்று. திரையுலகில் கமல் ஒரு காஸனோவா என்றால் அம்பரீஷ் ஒரு ரஸ்புடின். இவர்களெல்லாம் ஜூஜூபி என்னும்படியாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான். பார்க்க பரமசாதுவாக இருந்தவனுடன் ஒருமுறை பைக்கில் திருச்செங்கோடு வரை பயணிக்க நேர்ந்தது. உள்ளே கொஞ்சம் உற்சாக பானம் சென்றிருந்ததால் -மனதளவில் என்ன பிரச்னையோ- உன்மத்தம் பிடித்து ஒவ்வொரு அனுபவமாக உளற ஆரம்பித்தான். காதில் புகைவர நொந்து நூலாகி அன்று விட்டதுதான், அதற்கு பிறகு கற்பனை செக்ஸ் கதைகளை தொடவே இல்லை. கேள்விப்படும் ரியல் கதைகளை விட ரீல் கதைகளுக்கு சுரத்து குறைவுதான்.

ஆங்கிலத்தில் erotica literature என்று இலக்கிய வகையே உண்டு. அதில் மட்டுமே புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இங்கே போல், அங்கே அது நாலாந்தரமாக பார்க்கப்படுவதில்லை. நம் ஊரில் அப்படி ஒரு எழுத்தாளரை சொல்ல வேண்டுமானால் சாரு நிவேதிதாவை சொல்லலாம். அவருடைய ஜீரோ டிகிரி, காம ரூப கதைகள், மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் எல்லாம் அந்த வகைதான். தமிழில் அதிக ஹிட்ஸ் கிடைப்பதும் அவர் தளத்திற்குத்தான்.

பழந்தமிழ் இலக்கியத்தில் காமம் தொட்டு எழுதியவர்களில் என்னைப் பொருத்தவரை எழுத்தின் தரத்தில், சுவை நயத்தில் விரத தாபம் மேலிடும் ஆண்டாளின் சில பாடல் வரிகளுக்கு அருகில் நிற்க கூட இன்றுவரை ஆள் கிடையாது என்பேன். (இது தெரியாமலேத்தான் மார்கழி முழுவதும் கோவில்களில் திருப்பாவையையும் திருமொழியையும் பஜனை செய்து கொண்டிருக்கிறார்கள் நம் ஊர் பெண்கள்). உதாரணம்:

1. குற்றமற்ற முலைதன்னைக்
குமரன் கோலப்பணைத்தோளோடு
அற்றகுற்றம் அவைதீர
அணைய அமுக்கிக்கட்டீரே!

2. பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை ஆகூலம் செய்யும்!

- ஆண்டாளின் நாச்சியார் திருமொழி

அவருக்குப் பிறகு கம்பர் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார். கம்பராமாயணம் பற்றி எழுத வேண்டுமானால் நாளெல்லாம் எழுதிக் கொண்டே இருக்கலாம். நாம் ’அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்று படித்திருக்கிறோம். பயன்படுத்தியும் வருகிறோம். ஆனால் அண்ணல் எங்கே நோக்கினான்; அவள் எங்கே நோக்கினாள் என்பதை கம்பராமாயணம் கற்று அறிக.


பி.கு: நேரம் இப்போது 8.55 AM. காலையில் பேப்பர் படிக்கலாம் என்றுதான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்தேன். என்னை கிளறிவிட்டு, பாக்ஸிங் டே அன்று பாலியல் எழுத்து பற்றி பாராயணம் செய்ய வைத்ததற்கு அருமை நண்பர்கள் நீங்களே பொறுப்பு!

ஈஸ்வரோ ரக்‌ஷது!

0 comments:

Post a Comment