Buzzings - 2 (14.02.2010 to 21.02.2010)

Posted: Sunday, February 21, 2010 | Posted by no-nononsense | Labels:
  • என் நண்பன் என்னை வாழ்த்தினான். நான் அவனை வாழ்த்தினேன். காதலர் தினம் இனிதே முடிந்தது. சம்சாரியானதிலிருந்து சங்காத்தங்கள் இப்படித்தான் பரிமாணம் கொண்டிருக்கின்றன.

  • காதல் பரிசு: கடந்த மூன்று நாட்களாக காலை பொழுதில் நான் செய்யும் முதல் வேலை பிட்டு பிட்டாக இப்படத்தை பார்ப்பதுதான். நான் என்ன செய்ய? ஆனி புடுங்க நான் போகும் தேனி பஸ்ஸில் மார்னிங் மார்னிங் இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படி வேறு வழியில்லாமல் ஒரே படத்தை திரும்ப திரும்ப பார்க்க நேர்வதிலும் ஒரு நன்மை இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக கவனத்தை கதையிலிருந்து மற்ற தொழில் நுட்பங்களின் மீது செலுத்தமுடிகிறது. அப்படி கவனித்து பார்த்ததில் நாடோடிகளின் ஒளிப்பதிவு, காதல் பரிசின் வசனங்கள் சிலாக்கியமாக இருந்தன. எதிர்மறையான கருத்தை ஏற்படுத்தியது ‘தளபதி’ படம். இசை ஒன்றைத் தவிர வேறு எத்துறையிலும் தேறாத அதனை இன்றும் கொண்டாடும் என் நண்பர்கள்தான் அப்படத்தை விட என் ஆகப்பெரும் ஆச்சரியங்கள்!

    காதல் பரிசின் வசனங்கள் என்னை கவர்ந்தன.குறிப்பாக கமலும், அம்பிகாவும் சந்திக்கும் இடங்களில் அனல் பறக்கச் செய்ய பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் தெரிவில் நறுக்கு தெரிக்கிறது. யாரென்று தேடிப் பார்த்தேன். டைரக்சன் ஜகன்நாதன் என்று மட்டும் தெரிந்தது. வசனமும் அவராகவே இருக்கலாம். அதுதானே பின்நவீனத்துவ தமிழ் சினிமா தொடங்கி வைத்த புது டிரெண்ட்!

  • சாருவைப்பற்றி சதா கருத்து கேட்டு சதாய்க்கிறான் என் இலக்கிய ஆர்வ இளவல் ஒருவன். நகைமுரணை ரசிக்கலாம்; அதற்காக இலக்கியமென அதையே புசிக்கமுடியாது என்பதை எடுத்துச் சொன்னால் வாசகர்களுக்கு புரியும். ஆனால் ரசிகர்களுக்கு?!

  • எல்லா கணங்களிலும், எல்லா நிகழ்வுகளிலும் நாம் உற்றுப் பார்த்து உள்வாங்கிக்கொள்ள ஏதாவது உட்பொருள் இருக்கத்தான் செய்கிறது என்பதை எனக்கு நிர்தாட்சண்யமாக உணர்த்தச் செய்யும் நிகழ்கால நிரூபணங்களே என் அன்றாட பேருந்து பிரயாணங்கள் என்பதாக உணர்கிறேன்.

  • புறவய கவர்ச்சிக்கும் பாலியல் கிளர்ச்சிக்கும் பெரிதாக சம்மந்தமில்லை என்பதற்கு அத்தாட்சியானதொரு தம்பதியை சந்தித்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்!

  • தண்ணிய போட்டா சந்தோசம் பொறக்கும் - வறுமையின் நிறம் சிவப்பு, சிங்காரி சரக்கு - காக்கிசட்டைக்காரன், ஜாதியில்ல பேதமில்ல தண்ணி போட்டுட்டா - காதல் பரிசு, சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில், etcetera. எண்ணிப் பார்த்தால் தன் படங்களில் குடியை அதிகம் கொண்டாடிய நடிகராக கமல்தான் கண்ணில் தெரிகிறார்.

  • தன் சுருளான - அதனால் அழகான - தலைமுடியை அழகு நிலையம் சென்று அலங்கோலம் செய்துவந்து நிற்கும் தோழியை தோப்புகரணம் போட வைத்த பிறகும் ஆறவில்லை மனது. எதனால் தோழியானோம் என்பதையே சமயத்தில் மறந்து விடுகிறார்கள், என் செய்ய!

  • தனிப்பட்ட விருப்பம்; தனிமனித சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுவதற்கு முன் அஜித் முதலில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு, தன்னை அனைத்து சங்கங்களிலும் இருந்து விலக்கிக் கொண்டு அதனை சொல்லவேண்டும். தன்னை ஆதர்சமாக கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தன் பின்னால் அணி வகுக்கச் செய்திருக்கும் ஒருவருக்கு, உணர்வுபூர்வமான பொது விஷயங்களில் தன்னிஷ்டம் பற்றி பேசும் தகுதி கிடையாது. அதேபோல் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும்வரை அதன் முடிவுகளுக்கு எதிராக நடக்கவும் உரிமை இல்லை. எதிர்த்து பேசி விட்டதாலேயே கொண்டாடப்படுகிறார். என் மதிப்பிலிருந்து சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

  • கலைஞரை மனநோயாளி என்று விளித்திருக்கும் ஞாநியின்(இவரை எப்படி இன்னும் எழுத விட்டு வைத்திருக்கிறார்கள்?!) கட்டுரை வெளியாகியிருக்கும் அதே குமுதத்தில்தான் கலைஞரின் பேட்டியும் வெளியாகியிருக்கிறது. குமுதத்தின் சாமார்த்தியம் வியக்க வைக்கிறது!

  • ”என்னது, இந்திராகாந்தி இறந்துவிட்டாரா!” என்பதுபோல இருக்கிறது குமுதத்தில் பாலகுமாரனைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் கிசுகிசு.

  • சேவியரின் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏசு, மீட்பரானதின் பின்னால் உளவியல் காரணங்கள் உள்ளதாக தோன்றுகிறது.

0 comments:

Post a Comment