சுட்டுவிரலை சுட்டும் முன்

Posted: Wednesday, August 18, 2010 | Posted by no-nononsense | Labels:
நண்பர்களை பகடி செய்து எழுதியது. இந்து மதத்தை மட்டும் நான் அதிகம் விமர்சிக்கிறேன் என்பது அவர்களின் குறை :-) :

காட்சி: அண்ணன், தம்பிகளாகிய பஜேஷ், குஜேஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பஜேஷ்: தம்பி நம்ம வீடெல்லாம் ஒரே தூசும் தும்பும் அழுக்குமா கெடக்கு. இதையெல்லாம் கொஞ்சம் ஒட்டடையடிச்சி வெச்சிக்கினா பளிச்னு ஆயிடும். சுகாதாரத்துக்கு சுகாதாரம்.. அழகுக்கு அழகு!

குஜேஷ்: டாய்.. என்ன வார்த்த சொல்லிகின நம்ம வூட்டப் பத்தி. எதிர் வூட்டுக்காரன் வூட்டுல ஏழு நாளா தண்ணி வராம யாரும் சரியா ஆய் கழுவுல.. அத்த கேட்டுகினியா நீ? பக்கத்து வூட்டுக்கார பன்னாட பாதிநாளு பல்லே வெளக்கறதில்ல.. அத்தயாவது கேட்டுகினியா நீ? நம்ம வூட்டப் பத்தி பேச வந்துட்டான். டாய்..

பஜேஷ்: அதெல்லாம் அவன் பிரச்சன பா.. நான் நம்ம வூட்டப் பத்தி பேசினுக்கீறேன். முதல்ல நம்ம வூட்ட நாம சுத்தமா வெச்சிப்போம். அப்பால அடுத்தவன பத்தி பேசலாம்.

குஜேஷ்: டாய்.. நம்ம வூட்ட்டு அழுக்கப் பத்தி மட்டும் பேசிகின, அண்ணன்னு பாக்க மாட்டேன்.. கீச்சுடுவேன்.. வகுந்துடுவேன்..டாய்.. 

பஜேஷ்: தம்பி கொஞ்சம் பொறுமை பா.. நம்ம நல்லதுக்கு தானே சொல்றேன். இப்படி குப்பையா இருக்கறதால எத்தனை நோய் நொடி அண்டுது தெரியுமா? உனக்கு வீஸீங், எனக்கு பேதி, கடேசி தம்பிக்கு காய்ச்சல்- ன்னு அடிக்கடி வருதே, அதெல்லாம் ஏன்னு கொஞ்சம் யோசிச்சி பார்த்திருக்கியா?

குஜேஷ்: யார பாத்து என்ன வார்த்த சொல்லிகின.. சுத்தமாம்ல சுத்தம். அது சோறு போட்டிருக்காடா..  சொல்ல வந்துட்டாரு டீடெயில்லு. கை கழுவாம சாப்பிட்டா கபால மோட்சம்ங்கற அந்தகார அழுக்குணி சித்தர் பாட்டு தெரியுமா உனக்கு? 

டாய்.. அவன முதல்ல ஆய் கழுவச் சொல்லு.. நான் கை கழுவறேன். அவன பல்லு வெளக்கச் சொல்லு. அப்ப நான் பாத்ரூம் கழுவறேன். 

பஜேஷ்: தம்பி, நம்ம பொழப்பே நாறி கெடக்கும்போது, அடுத்தவன் பழம நமக்கு எதுக்கு. கொஞ்சம் அறிவுப்பூர்வமா சிந்திச்சி தான் பாரேன். எல்லாம் நம்ம நல்லதுக்குதான்.

குஜேஷ்: என்னது அறிவுப்பூர்வமா சிந்திக்கறதா.. என்னை சிந்திக்கச் சொன்னவன என் தாய் தடுத்தாலும் விடேன்.. டாய்.. டாய்.. முதல்ல அவனை ஆய் கழுவச் சொல்லு... அப்புறம் இவன பல்லு வெளக்கச் சொல்லு..  (என்றுகுஜேஷ் டெர்ரிஃபிக் டெஸிபலில் கத்தியபடி டெர்ரராகி கடிக்க வருகிறார்)

சரி. இவனுக்கு விளங்க வைக்கறதும் விஜய் ரசிகனுக்கு புத்தி சொல்றதும் ரெண்டும் ஒண்ணுதான் என்று பஜேஷ் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுகிறார். 

---

நான் எழுதியுள்ளதை கொஞ்சம் கவனமாக படித்தால் புரியும் நான் எந்த மதத்தை விமர்சித்திருக்கிறேன் என்று. என் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றித்தான் எனக்கு முழுமுதல் அக்கறை. என் வீட்டு அசுத்தம் பற்றி என் குடும்பத்தில் ஒருவரே சுட்டிக்காட்டி விமர்சிக்கும்போது அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு திருத்திக்கொள்ள முயற்சிப்பதோ, அல்லது அவர் சுட்டிக்காட்டும் விஷயம் குறித்தான மாற்று கருத்தை சரியான விதத்தில் முன்வைப்பதோ தான் சரியான விவாத திசையாக இருக்கமுடியும். மாறாக - அவன் வீட்டை பார்த்தியா கலீஜு; இவன் வீட்டை பார்த்தியா அழுக்கு; இதில் என் அழுக்கு மட்டும் எந்த விதத்தில் இழுக்கு? - என்று சால்ஜாப்பாக மறுமொழிவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.
//நம்ம ஊர்ல  வேற மதம் பத்தி பேசின//

நீ வேறு மதம் என்பது அநேகமாக இஸ்லாம் பற்றி என்று நினைக்கிறேன். இஸ்லாம் மீது விமர்சனம வைக்க இங்கே இதுவரை சூழல் அமையவில்லை. அமையும்போது பேசலாம். 

---

//ஹா! ஹா! நல்ல கற்பனை//

கற்பனையை விட கருத்துமுதல்வாதமே(idealism) இது எழுதப்பட்டதன் மையநோக்கம். பொதுவாக விமர்சன விரல் நம்மை நோக்கி நீளும்போது அது சுட்டும் பிரச்னையை விட்டு விட்டு, அந்த விரலின் நீள அகலங்களை பற்றிய விமர்சன ஆராய்ச்சிகளில் இறங்கி விடுவதையே நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் எல்லாவற்றிலும் சிறந்தது என் இனமே, என் மதமே, என் மொழியே, என் கலாச்சாரமே என்னும் ஓர் ஒற்றை பரிமாண சிந்தனைப் போக்கு. அதில் உண்மை இல்லை என்பதே உண்மை. எல்லா வாழ்வியல் முறைகளிலும் நிறை குறைகள் உண்டு. அந்த விதிக்கு நாம் மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியாது. 

மனதை திறந்து வைத்திருக்க வேண்டும். எல்லா கருத்துகளையும் உள்வாங்கி பரிசீலிக்கும் முனைப்பு வேண்டும். மற்ற சக இன,மத,கலாச்சார விழுமியங்களை பற்றிய அறிதல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரவருக்கு என்று ஓர் தெளிதலோ, அல்லது தெளிதலை நோக்கிய ஒரு குறைந்தபட்ச முயற்சியோ கூட சாத்தியம். 

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் சிகரத்தில் இப்போது அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஓரளவு சொல்லமுடியும். இந்த சிகரத்தை அடைய நாம் உரித்து போட்ட சட்டைகளை எண்ணி விட இயலுமா? ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நம்பிக்கை; அஃதாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சிந்தனை போக்கு தோன்றி அதுவரை மையமாக இழையோடிய  நம்பிக்கையை கேள்வுக்குள்ளாக்கி களைந்திருக்கிறது. அப்படி ஒரு களைதல் நிகழாமல் போனவர்களே இன்னும் பழங்குடிகளாக தொடர்கிறார்கள். நாம் முன்னிலும் மேம்பட வேண்டுமா அல்லது பழங்குடியின் பண்பாட்டு கூறுகளோடு தேங்கி விட வேண்டுமா என்பதை விமர்சன விரல்களை வெட்ட முற்படுபவர்களிடமே விட்டு விடுகிறேன். 

---


எனக்கும் உலக மதங்கள் பற்றி ரொம்ப எல்லாம் தெரியாது. எல்லாம் நுனிப்புல் மேய்ச்சல்தான். அதேபோல் பன்னாட்டு நண்பர்களும் ரொம்ப எல்லாம் கிடையாது. ஆனால் இரு பாகிஸ்தானிகளிடம் சில ஆண்டுகளாக அரசியல், மதம் குறித்து அரட்டை அடித்து வருகிறேன் என்பது உண்மை. (என்னை விட அவர்களுக்குத்தான் அதில் ஆர்வம் அதிகம். இதைப்பற்றி ஒருநாள் விரிவாக எழுத வேண்டும். சில விஷயங்கள் உண்டு) நீங்கள் தைரியம், பயம் என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டதால் அதை குறிப்பிட வேண்டிய அவசியம் வந்தது. 

எனக்கு இந்து மதத்தின் மீது எந்த காழ்ப்பும் கிடையாது. சில நேரங்களில் விமர்சிப்பதுண்டு. அதையும் கூட என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே செய்வேன். இங்கேயும் கூட சுரேஷும், மாதுவும் பேசியதால்தான் நான் மறுமொழிந்தேன். நேரில் நாம் மோதிக்கொள்வதன் நீட்சி என்று வைத்துக் கொள்ளேன். மற்றபடி மதங்களை பற்றிய விவாதங்கள் என்பது போகாத ஊருக்கு தேடப்படும் வழி என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் பலமுறை மதங்களையும், ஜாதிகளையும் பற்றி இங்கே விவாதம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் ஏன் இந்து மதத்தில் தொடர விரும்புகிறேன், இந்து மதம் எனக்கு ஏன் ஏற்புடையதாக இருக்கிறது என்பது குறித்து விரிவாக நித்தியானந்தர் இழையில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். படித்து பார்த்தால் என் நிலைப்பாடு புரியும். 

ஏன் இந்து மதம் விமர்சனத்திற்கு உரியது என்றால், அது அதனை அனுமதிக்கிறது. அதுதான் இந்து மதத்தின் அழகு(ரிஷி சொன்னானே அந்த beautiful imperfection! அது தன்னை காலத்திற்கேற்ப விமர்சனங்களின் வழியாக மேம்படுத்திக் கொண்டு வருகிறது. இதனை ராமாயணத்திலேயே காணலாம். ஜபாலி என்னும் முனிவர் நாத்திகவாதம் செய்வார். யாரிடம் - ராமனிடமே. இந்த மதச் சுதந்திரம் வேறு மதங்களில் இல்லை. 

இப்படி விமர்சனங்களை அனுமதிக்கும் மதம் என்பதால்தான் இன்று கொஞ்சம் மூர்க்கமான மத வழிபாட்டு முறைகளை கொண்ட தாந்த்ரீகம், கபாலிகம்(மயிலை கபாலீஸ்வரர்..!) போன்றவை காலாவதி ஆகிவிட்டன. இந்து மதம் தன்னை திருத்திக் கொண்டுள்ளபடியால்தான் இன்று “உடன்கட்டை” இல்லை. கணவனை இழந்த யாரும் வெள்ளையுடுத்துவதில்லை. பூவும் பொட்டும் கூட வைத்துக் கொள்கிறார்கள்.

இந்து மதம் இன்று சைவம், வைணவம், ஸ்மார்த்தம் மற்றும் மற்ற ஞானமரபுகளை எல்லாம் ஒருங்கே தன்னுள் ஏற்றுக்கொண்டு ஒருமுகமாக உலகுக்கு தன்னைக் காட்டிக்கொண்டு இருப்பது எல்லாம் அது விமர்சனங்களை எதிர்கொண்டதால்தான். முற்காலத்தில் அப்படி இல்லை. சைவர், வைணவரையும், சமணர்களையும் கழுவிலேற்றி கொன்று விடுவார்கள். 

இப்படி முற்றிலும் முற்போக்கான ஒரு மதம் உலகிலேயே இல்லை என்று சொல்லலாம். இதெல்லாம் பல காலங்களாக மாற்றங்களை தன்னுள் அது அனுமதித்ததால் மட்டுமே. அந்த மாற்றங்களுக்கான குரல் என்பது என் போன்றவர்களினுடையதே. அதை முற்றிலும் புறம்தள்ளி விட்டு துவேசமாக அடையாளப்படுத்தி விட முடியாது.

இது உங்களுக்கு தேவையான முதல் புரிதல்.

இரண்டாவது, நீ பாரா சொன்னதை மட்டும் எதிர்கொண்டிருந்தால், “எங்க பழக்கவழக்கம் அப்படித்தான் இவருக்கென்ன” என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பிரச்னை இல்லை. மற்ற மதங்களை அநாவசியமாக இழுக்கிறாய். அவற்றிலும் மூடநம்பிக்கை இல்லையா என்கிறாய். இது ஒருவகையில் சுயவாக்குமூலம் என்றாலும், இஸ்லாம் பற்றிய உன் அடிமன வெறுப்பையே காட்டுகிறது. அதுதான் கேட்கிறேன், அம்மதத்தின் எதை நீ மூடநம்பிக்கை என்கிறாய் என்று. 

உண்மையிலேயே உனக்கு தெரியாது. இங்கே இருப்பதால் அங்கேயும் இருக்கவேண்டும் என்பது உன் எண்ணம். அதுதான் தவறு என்கிறேன். உனக்கு எது தெரியுமோ அதைத்தான் நீ பேச வேண்டும். நீ பேசவில்லை. அதனால் நீ பாராவை கோழை என்பது விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாமல் வெட்டி மையக்கருத்தை திசை திருப்பும் வேலை என்கிறேன். 

இன்னும் ஒன்று. எங்கேயாவது சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் நான்கு கீதை வாசகங்களை மட்டும் படித்து விட்டு ‘பாரா’யணம் செய்யாதீர்கள். இந்து மதத்தில் இருந்து வந்தால், அதனை நேசித்தால், தடுத்தாட் கொண்டால் மட்டும் போதாது. கொஞ்சமாவது அதனை தெரிந்து கொள்ளுங்கள். அதனை படியுங்கள்.நிச்சயம் வேண்டாத வாதங்களை வைக்க மாட்டீர்கள். 

பேச நிறைய உண்டு. ஆனால் அதற்கான தயாரிப்புகளையும் அடிப்படை தெளிவுகளையும் நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விமர்சனம் என்பது புடம் போட்டுக்கொள்ள சமயம் அளிக்கும் வாய்ப்பு. அது இஸ்லாமில் கிடையாது. ஆனால் இந்து மதம் அனுமதிக்கிறது. அங்கேயே அது ஜெயித்து விடுகிறது. இந்த கோட்பாட்டை நீ சுட்டிக்காட்டி இருந்தாயேயானால் நீ சமர்த்தன் :-) அப்படிச் செய்யவில்லையே.

மதங்களை பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமான களத்தில் அமையாமல் விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு வேறு மதங்களையும் சந்திக்கு இழுத்து ஒரு குழாயடி சண்டை போல எல்லாம் மாறி விடுவதை கண்டதால்தான் அது வேண்டாம் என்று ஒதுங்கி விடச் சொல்கிறேன். அப்படியில்லாமல் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும் என்றால் பேச எவ்வளவோ உண்டு. எதையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லா எதிர்விளைவுகளும். 

0 comments:

Post a Comment