தமிழகத்தின் எல்லை தாவாக்கள் & கொல்லிமலை ஒரு சிறு பார்வை

Posted: Sunday, January 3, 2010 | Posted by no-nononsense | Labels: ,
கொல்லிமலையை ஒட்டி வேறு எந்த மாநிலத்தின் எல்லையாவது இருந்திருந்தால் இப்போது நாம் கற்பனையாக பேசிக் கொண்டிருப்பது நிஜமான விவாதப் பொருள் ஆகியிருக்கும்.

குமரியை கேரளாவும், கோவையை கர்நாடகாவும், கிருஷ்ணகிரியை ஆந்திராவும் உரிமை கொண்டாடுவது போல தமிழ்நாடு அக்கம் பக்கம் மாநிலத்தின் ஏதாவது இடத்தைப் பற்றி சர்ச்சை கிளப்பி இருக்கிறதா? அவ்வப்போது திருப்பதி போச்சே என்று பெருமூச்சு விடுவதோடு சரி. ஆனால் இது தகப்பன் வீடு மாதிரி. மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பாகப் பிரிவினை செய்து கொண்டுபோன பிள்ளைமார்கள்தான் நம் அண்டை மாநிலங்கள் எல்லாம். எனக்கு கொடுத்த பாகம் மறு கண் சுண்ணாம்பு என்று குறைபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். மனித இயல்பு.

இதையாவது பங்காளி தகராறு என்று விட்டுக்கொடுத்துப் போகலாம். ஆனால் கச்சதீவை தாரை வார்த்ததைவிட ஒரு இளிச்சவாய்த்தனம் இன்னொன்று இல்லை. கருணாநிதி செய்த தவறு இன்று மீனவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அசல் முட்டாள்தனம்!

*

கொல்லிமலை இன்றுவரை ஒரு மாசுபடாத மலைப்பிரதேசமாக நீடிக்கிறது. அதற்கு அதன் 72 கொண்டை ஊசி வளைவுகள்தான் கவச குண்டலம். மாற்று வழி போடப்பட்டுவிட்டால் (அ) கொண்டை ஊசிகள் அகற்றப்பட்டுவிட்டால், வரும் பத்தாண்டுகளில் நிலைமை மாறலாம்.

இன்றுவரை மேலே எந்த பெரிய நகரமும் கிடையாது. அப்படியொன்று உருவாக்கப்பட்டு கொல்லிமலை சுற்றுலாதளமாக promote செய்யப்படும் நாள் அதன் அழிவின் தொடக்க நாள். நகர் விரிவாக்கம், மக்களின் அதீத குடியேற்றம் ஆகியன நிகழுமாயின் அங்கேயுள்ள மரங்கள் வெட்டப்பட்டு கானகத்தின் பரப்பளவு குறையும். அதன் விளைவாக நாமக்கல் மழை மறைவு பிரதேசமாகி வறண்டு போகக்கூடும். ஆகவே கொல்லிமலை அதன் இன்றைய வனப்புடன், அறியப்படாத மர்மங்களுடன் தொடர்ந்து அப்படியே நீடிப்பதுதான் நல்லது. ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் ஆகியவற்றின் அன்றைய இன்றைய நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கூற்றின் பின்னாலுள்ள உண்மை புரியும்.

கொல்லிமலையின் அருமை நாமக்கல் மக்களால் இன்றுவரை உணரப்படவேவில்லை என்றே சொல்வேன்.

0 comments:

Post a Comment