பொதுபுத்தியின் எஸ்கேபிஸம்

Posted: Saturday, January 9, 2010 | Posted by no-nononsense | Labels:
இச்செய்தியை முன்வைத்து நடந்த உரையாடலில் என் கருத்து:

கொஞ்சம் புகைமூட்டம் அடங்கட்டும் கருத்துக்கூறலாம் என்று நினைத்தேன். பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி பிறகு அச்சம்பவத்தின் பின்னுள்ள உண்மை வேறாக இருக்க கண்டிருக்கிறேன். இதிலும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான். முதலில் அரை மணி நேரம் வேடிக்கைப் பார்த்தார்கள் என்றார்கள். பிறகு 20 நிமிடம்; இன்றைய செய்தியில் 10 நிமிடம் என்று சம்பவத்தை நிமிட வாரியாக தினமலரில் விளக்கியிருக்கிறார்கள்.

வெடிகுண்டு வீசப்பட்டதால் அருகில் செல்ல பயந்ததாகச் சொல்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள். பயந்தவர்கள் காவல்துறையினர் என்பதுதான் இதில் வேடிக்கை. இம்மாதிரி குண்டுகள் வீசப்பட்டால் அதை சமாளிப்பது எப்படியென சிறிதும் பயிற்சியில்லாத காவலர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை.

சட்டம் ஒழுங்கு எல்லாம் இந்தியாவைப் பொருத்தவரை ஒரு போங்கு. சிவப்பு விளக்குச் சுழல செல்பவர்களைத் தவிர இங்கே யாருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பு என்பது கிடையாது.

நடந்த இச்சம்பவமுமே கூட கேமிராவில் சிக்கியதாலும் அதில் அமைச்சர்களும் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டிருந்ததாலும் தான் வெளியே கசிந்து பரபரப்பாகி இருக்கிறது. இதுபோல அன்றாடம் சாமானியர்களை நோக்கி அதிகாரத்தில் இருப்பவர்களால் காட்டப்படும் அலட்சியம் கணக்கில் அடங்காதது. கணக்கில் வராதது. நேரில் பார்க்க வேண்டும் என்றால் சில நாட்கள் போலீஸ் ஸ்டேசன் பக்கமும் ஜி.எச் பக்கமும் சென்று வாருங்கள். தெரியும்.

*

இந்த சம்பவத்தில் இவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் ஒட்டு மொத்த வெகுஜன மனோபாவத்தின் ஒரு குறியீடு மட்டுமே. இவர்களை விமர்சிக்கும் நேர்மை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது அவரவர் தங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ரோட்டில் அடிபட்டு கிடப்பவரை வேடிக்கைப் பார்த்தவாறே கவனமாக விலகி கடந்து போகும் மனிதாபிமானமற்ற ஒரு வித சுயநல மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. மாறாக அந்த கணத்தின் எல்லா கமிட்மெண்ட்களிலும் இருந்து தன்னை கத்தரித்துக்கொண்டு உடனே களம் இறங்கி உயிரை காப்பாற்ற முனைபவர்களை இந்தியச்சூழலில் காண்பது அரிது.

மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலின் போது குண்டடிப்பட்ட தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கார்கரே மற்றும் உடனிருந்த இரு அதிகாரிகள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அடிபட்ட இடத்திலேயே இதேபோல் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்திருக்கின்றனர். அதன் பிறகே ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. அதுவரை மக்கள் வழக்கம்போல் அவர்களை வேடிக்கை மட்டும் பார்த்திருக்கின்றனர்.

அந்நியன் படத்தில் விபத்தில் அடிபட்டவரைச் சுற்றி கூடிய கூட்டத்தார் “யாராவது ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்களேப்பா.. யாராவது ஹெல்ப் பண்ணுங்களேப்பா” என்று கூறும் காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது.

*

சென்ற வருடத்தில் ஒருநாள் திருச்சியில் நான் தங்கியிருந்த உறையூரிலிருந்து பஸ் பிடித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். திருச்சியின் உள்ளூர் பஸ் போக்குவரத்து என்பது சத்திரம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கி ஒரு ஒரு மணி நேரத்தில் மீண்டும் அங்கேயே முடியும்படியான ஒரு வட்ட வடிவ வழித்தடம் கொண்டது. இடையில் எங்கேயாவது டிராபிக் ஜாம் ஆனால் கிட்டத்தட்ட நகரமே ஸ்தம்பித்து போகும். அப்படி ஒரு டிராபிக் ஜாமில் மாட்டி அன்று பாதி வழியிலேயே இறங்கி அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வழியில் திருச்சி கோர்ட் காம்பவுண்ட் சுவரை ஒட்டி நீளும் பிளாட்பாரத்தில் ஒரு வயதான மனிதர் மயங்கிய நிலையில் வலியால் முனகியபடி கிடந்தார். பார்க்கும் எவருக்கும் மனம் பதை பதைக்கும்படி அவர் நிலை இருந்தது. இருந்தும் நெரிசலில் சிக்கி பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்திருந்த பலரும் ஒரு கணம் கண்ணை உயர்த்தி பார்த்து விட்டு கடந்து போய்க்கொண்டே இருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அதன் பின்னர் நாள் முழுவதும் அந்த குற்ற உணர்வு என் நெஞ்சை அழுத்திய வண்ணம் இருந்தது. உடன் பணிபுரிவோரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்களில் ஒருவர் கூட அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாததோடு இதுபோல் அவர்கள் கடந்து சென்ற சம்பவங்களை கோர்வைப் படுத்த ஆரம்பித்தனர். அடுத்த நாள் உள்ளூர் செய்திகளில் தேடிப் பார்த்தேன். குறிப்பான செய்திகள் எதுவுமில்லை. அவர் யாராலாவது காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று நம்பிக்கொள்கிறேன். எஸ்கேபிஸ பொதுபுத்தி கொண்டிருக்கும்வரை வேறுவழி?

0 comments:

Post a Comment