NAMAKKAL SHOULD BE REDISCOVERED - தொடரும் உரையாடல்

Posted: Tuesday, January 12, 2010 | Posted by no-nononsense | Labels: ,
மாது: எனக்கு தெரிந்தவரை மாரியம்மன் கோவிலுக்கு அருகே ஒரு ஈஸ்வரன் கோவில் உள்ளது அது காமட்சியம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்,
மலையின் பெயரே நாமகிரி தாயார் என்று வந்துள்ளது.
திருத்தம் ராஜா தியேட்டர் இப்பொழுது MGM என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளது

புஷ்பராஜ்:
வள்ளிபுரத்தில் சில வருடங்களாக செழித்தோங்கும் ஈஸ்வரன் கோவிலையும் உன் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். இவையெல்லாம் மிக சமீபமாக கட்டப்பட்டவை. இவற்றின் பின்னால் ஒரு நூறு, வேண்டாம், ஒரு ஐம்பது வருட வரலாறு கூட கிடையாது. அதனால் பழம்பெருமையில்லாத இவற்றை சைவ சமயத்தின் தாக்கத்தால் எழும்பியவை என்று சொல்ல முடியாது. நாமக்கல்லை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மற்ற சிவதலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் இதனை நீ அறியலாம்.

உதாரணமாக சேலம் சுகவனேஸ்வரர் குறைந்தது ஐநூறு வருடங்கள் பழமையானது. திருச்சியின் திருவானைக்கோவில் நாயன்மார்களால் பாடப்பெற்ற பெருமைக்கொண்ட பஞ்சபூத சிவதலம். ஈரோடு மாவட்டத்தில் பல பழமையான கோவில்கள் உண்டு. அவற்றுள் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் குறிப்பிடத்தக்கது. கொல்லிமலையின் அறப்பளீஸ்வரர் கூட பழமையான கோவில்தான். பாடப்பெற்ற ஸ்தலம் என்றும் நினைக்கிறேன்.

இம்மாதிரி ஒரு சிவன் கோவிலும் நாமக்கல் பகுதியில் கிடையாது. பரமத்தி-வேலூர் நன்செய் இடையாறில் இருக்கும் ஒரு கோவில் மட்டும்தான் இங்கே சுற்றுபுறத்தில் பழமையான கோவில். பெயர் எனக்கு நினைவில்லை.

நாமக்கல் இதற்கு முன்பு பெரிய ஊர் கிடையாது என்பதால் மற்ற பெரிய ஊர்களுடன் இதை ஒப்பிட முடியாது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் கூட, இங்கே நாமக்கல் மலையில் மட்டும் மேலொன்றும், இடம் வலம் இரண்டாக மொத்தம் மூன்று பெருமாள் கோவில்கள் இருப்பது இடிக்கிறது.

இவற்றையெல்லாம் ஒப்புநோக்கும்போது இந்த பகுதியில் சைவத்தை விட வைணவத்தின் தாக்கம் அதிகம் இருந்திருப்பதாக தெரிகிறது.

நாமக்கல்லின் பழம் வரலாறு குறித்து ஆராய முற்படுவதன் தொடக்கப் புள்ளி சேலத்தின் வரலாற்று ஏடுகளை புரட்டுவதில்தான் ஆரம்பிக்கிறது. காரணம் பண்டைய காலம் முதல் இதனை சேலத்தின் ஒரு பகுதியாக வகை பிரித்தே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment