மாற்றங்களை மறுக்கும் தமிழ்த் திரை ரசனை

Posted: Sunday, January 24, 2010 | Posted by no-nononsense | Labels:
Reply to my friends question on reasoning the mystic scenes in AO:

அப்பனே..! மேஜிக் என்ற பிறகும் அதன் மாயையான காட்சிகளுக்கு எல்லாம் லாஜிக் கேட்டுக்கொண்டிருந்தால் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர்களுக்கு அப்படியெல்லாம் தோன்றுகிறது. ஆனால் எதுவுமே உண்மையில்லை. எனக்கு தெரிந்த எளிமையான மொழியில் சொன்னால் அவ்வளவுதான்.

ஏவி விடப்பட்ட மாந்த்ரீகம் உண்டாக்கும் மன மயக்கங்களை காட்சிப்படுத்தும்போது, அதை அப்பாத்திரங்களின் கண்ணோட்டத்தில்தான் சொல்ல முடியும். வேறு மாதிரி கோணத்தில் சொன்னால் அது நாடக பாணியில் இருக்குமே தவிர, நவீனத்துவ சினிமாவுக்கான முயற்சி அங்கே அடிபட்டு போகும்.

செல்வராகவன் அந்த காட்சியை இப்படி எடுத்திருந்தால் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்: கார்த்திக், ஆண்ட்ரியா, ரீமா மூவரும் ஆடிப்பாடும்போது அதை மறைவான இடத்தில் ஒளிந்திருந்து மந்திரவாதி பார்ப்பதை கேமரா காட்டுகிறது. அடுத்தக் காட்சியில் தன் மடிப்பையிலிருந்து ஒரு கைப்பிடி விபூதியை அவர் எடுக்கிறார். கண்ணைமூடி நெற்றியின் மத்தியில் வைத்து ‘ஓம் க்ரீம். ஜாலராகினி மாயமோகினி மொட்டக்கோபுரமுனி க்ரீம் க்ரீம்’ என்று மந்திரம் போட்டு, விபூதியை மூவரும் இருக்கும் திசை நோக்கி எறிகிறார். உடனே அவர்கள் அந்த மந்திரத்தின் வசியத்துக்கு கட்டுப்பட்டு பித்துகுளியாக நடந்துகொள்கிறார்கள். அதையெல்லாம் கேமரா மந்திரவாதியின் முதுகுக்கு பின்னாலிருந்து காட்டுகிறது.

இப்படி வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால்தான் புரியும் என்றால், உஸ்ஸ்.. அப்பா.. எனக்கு கண்ணை கட்டுகிறது.

*

இங்கே எதையுமே பூடமாக சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் நாடக பாணியில் prompting செய்ய வேண்டியுள்ளது. இன்றுவரை ஒரு பாத்திரத்தை டாக்டர் என்று காட்சிபூர்வமாக விளக்கிவிட முடிவதில்லை. “அதோ டாக்டரே வர்றாரே” என்று ஒருவர் சொல்ல வேண்டும்; அப்போது வெள்ளை கோட் அணிந்து, கழுத்தைச் சுற்றி ஸ்டெதாஸ்கோப் போட்டபடி - சில சமயம் கையில் கண்ணாடியை கழற்றியபடி - டாக்டர் வருவார். பெரும்பாலும் இப்படித்தான். போலீஸ் என்றால் கையில் லத்தியை வைத்து உருட்டிக்கொண்டிருக்க வேண்டும். அந்த இடம் ஏதாவது பர்த்டே பார்ட்டியாக கூட இருக்கலாம்.

பத்து பக்க வசனங்களாலும், வர்ணனைகளாலும் விளக்கிவிட முடியாததையெல்லாம் நுணுக்கமான சின்ன சின்ன காட்சியமைப்புகளின் மூலம் புரியவைத்துவிடக்கூடிய சாத்தியம் கொண்ட visual media-தான் சினிமா என்பது இன்னும் இங்கே உணரப்படவேயில்லை. தமிழ் சினிமா சந்தைக்கடை போல எப்போதும் சத்தம் நிறைந்து காணப்படுகிறது. இன்றுவரை இங்கே சிறந்த நடிப்பு என்பது கட்டபொம்மனில் சிவாஜி கண்ணை உருட்டியபடி நாபி கமலத்தின் நரம்புகள் தெறிக்க கத்திப் பேசும் அந்த ஒரே வசனம்தான். இல்லையென்றால் பராசக்தியின் ‘ஓடினாள் ஓடினாள்...”. இவற்றை தாண்டி அடுத்த கட்டத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டுபோக யாராவது முயற்சி செய்தால் ஒன்றுமே புரியவில்லை என்று காட்டு கூச்சலாக இருக்கிறது. தயவு செய்து கொஞ்சம் உலக சினிமா பக்கமும் பார்வையை திருப்புங்கள். தேங்கியே கிடக்காதீர்கள்.

0 comments:

Post a Comment