இந்திய தேசியம் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளல் மற்றும் தமிழ் தேசியம்

Posted: Saturday, January 16, 2010 | Posted by no-nononsense | Labels:
My reply to my friend's comment on criticizing Indian social political happenings:

பாலா, எப்போது பார்த்தாலும் குற்றம் குறை ’மட்டும்’ சொல்லிக்கொண்டிருக்கும் ஒருவர் மீது ஏற்படும் அலுப்புதான் உன் கருத்துக்கு காரணம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் சொல்லவருவது என்னவென்றால் அப்படி சொல்லும் விஷயத்தில் பொய்யும், திரிபும் இல்லாதவரை அதில் பிரச்னை இல்லை என்பதை.

அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், அலட்சியங்கள் தொடர்ந்து யாராலாவது கவனப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியம். எங்கேயாவது ஒரு மூலையில் இருந்தாவது ஒரு கலக குரலாவது தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பது, சமூகம் தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ளுதலுக்கு தேவையான ஒன்று.

நான் தினத்தந்தியை திருப்ப மாட்டேன். அதில் எப்போது பார்த்தாலும் வெட்டு குத்து, கள்ளகாதல் செய்திகள்தான் வருகின்றன என்று ஒருவன் சொல்லுவது அவனுடைய தேர்வு. ஆனால் சமூகத்தின் நிகழ்வுகள் அப்படி இருக்கும்போது செய்தியும் அப்படித்தான் வர முடியும். இதை நான் பகலவனின் எழுத்துக்களை மட்டும் முன்வைத்து சொல்லவில்லை. பொதுவாக இதுபோன்ற விமர்சன எழுத்துக்களை நாம் அணுகவேண்டியவிதத்தைப் பற்றி கூறுகிறேன்.

மேலும் இந்தியாவைப் பற்றி நெகடிவ்வான இமேஜை புதிதாக யாரும் கட்டமைக்க வேண்டியதில்லை. சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு அரசியலை உற்று நோக்கும் எவருக்கும் அது மார்தட்டி சொல்லிக்கொள்ளும் சமநீதி, இறையாண்மை என்பனவற்றுடன் கடுமையான கருத்துவேறுபாடு தோன்றும் அளவிற்கு நிகழ்வுகள் இருந்துவருகின்றன. அது நம் தாத்தா அப்பாக்களை பாதிக்கவில்லை என்பதால் உனக்கும் எனக்கும் அதன் வலி உறைக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் அதேமாதிரி என்று சொல்ல முடியாது.

1947-க்கு முன்பு இந்தியா என்று ஒரு தேசம் கிடையாது. பிரிட்டிஷ் எதிர்ப்பை முன்வைத்துதான் ‘இந்திய தேசியம்’ என்னும் கருத்தாக்கமே அறிவுதளத்திலும், தலைவர்கள் பேச்சிலும் உருவாக்கப்பட்டது. அது அப்போது மக்களை ஒன்று திரட்ட ஒரு ஊன்றுகோலாக உதவியது. இதில் நீ பகவத்கீதை போன்ற இந்துத்துவ மேற்கோள்களின் பங்கையும் சேர்த்துக்கொள்ளலாம். (பகவத்கீதை வலியுறுத்தும் பிற்போக்குத்தன ‘நிஷ்காமிய தர்மம்’, ’சுதர்மம்’ இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி பிறகு ஒருநாள் விரிவாக எழுத எண்ணம்). அப்படி முன்னெடுக்கப்பட்ட இந்திய தேசியம் அதன் நோக்கமான சுதந்திரத்தை அடைந்ததற்கு பிறகு கண்டுள்ள பரிணாமம், மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்ட கனவு தேசத்திற்கு எதிரானதாக அமைந்து, இந்திய தேசியத்தை ஒரு விலக்கிவிடமுடியாத மாயையாக மட்டும் ஆக்கிவிட்டிருக்கிறது. இதனுள் நீ வாழும்வரை வாழலாம். ஆனால் இது நிஜம் அல்ல.

இங்கே காஷ்மீரியும், மங்கோலிய முகம் கொண்ட அஸ்ஸாமியும், நாகாவும் தன்னை ஒருபோதும் இந்தியனாக ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தும் அவர்களையெல்லாம் இன்னும் பிடிக்குள் வைத்திருப்பது ராணுவத்தின் துப்பாக்கிமுனை தானே தவிர இந்திய தேசியத்தின் மீதான தேசபக்தி அல்ல. மற்ற பிரதேசங்களில் (கன்னியாகுமரி முதல், ஜம்மு வரை) மக்களின் ஒரே மாதிரியான வழிபாட்டு முறையும், சினிமாவும், கிரிக்கெட்டும் அந்த பணியை செய்து வருகின்றன. (இதனை கருபொருளாகக் கொண்டு அருமையான தீஸிஸ் தயார் செய்ய முடியும். Phd-க்கு நல்ல சப்ஜெக்ட்!).

இங்கே ஒரு வட இந்தியன் ஆஸ்திரேலியாவில் கொல்லப்படுகிறான் என்றாலுமேகூட வெளியுறவு துறையின் உச்சி மயிர் நட்டுக்கொள்வதையும், வட இந்திய ஊடகங்களின் குய்யோ முறையோ கூப்பாடுகளையும் தாங்க முடியவில்லை. ஆனால் எத்தனையோ தமிழ் மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்ட போதும் அதற்கொரு தீர்வை நோக்கி அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. அதைபற்றி ஊடகங்களிலும் எந்த விவாதமும் இல்லை.

இந்தியாவின் பாரம்பரிய பழங்குடியின மக்களின் வாழிடங்கள் அதன் தாதுவளம் காரணமாக வேதாந்தா(சட்டீஸ்கர்), போஸ்கோ(ஒரிஸ்ஸா) போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு பங்கு போடப்படுகின்றன. எதிர்க்கும் அம்மண்ணின் மைந்தர்கள் மீது ’ரெட் காரிடார்’ என்று முத்திரை குத்தி ’ஆபரேசன் கிரீன் ஹண்ட்’ என்ற பெயரில் ஐம்பதாயிரம் ராணுவத்தினர் ஏவிவிடப்படுகின்றனர். (ஆப்கானிஸ்தானில்கூட மூவாயிரம் அமெரிக்க துருப்புகள்தான் போரிட்டு வருகின்றன). காஷ்மீரில் பத்து மீட்டருக்கு ஒரு வீரன் பாரா பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்திய தேசியத்தை நாம் இப்படித்தான் தக்கவைத்து வருகிறோம்.

இங்கே நான் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை கணக்கில் சேர்க்கவில்லை.

இப்படி சுயமுரண்களின் முழுவடிவமாக திகழும் இந்திய தேசியத்தின் மீது விமர்சனங்கள் எழுவது தவிர்க்க இயலாதது. அதை நாம் நெகடிவ் அப்ரோச் என்னும் விதத்தில் எதிர்கொள்ள வேண்டியதில்லை. உண்மையை ஏற்றுக்கொண்டு நமக்கு அதில் ஏதேனும் செய்தி இருந்தால் அதை மட்டும் உள்வாங்கிக்கொண்டு கடந்து போக வேண்டியதுதான்.

*

இங்கே நான் இந்திய தேசியத்தை விமர்சனம் செய்திருந்தாலும் ஒரு சில தமிழின பற்றாளர்களால் முன்வைக்கப்படும் ‘தனி தமிழ் தேசியத்தை” நான் முற்றும் முழுதாக நிராகரிக்கிறேன். இந்தியா இன்றிருக்கும் இதே கூட்டாட்சி தத்துவ முறையில் இன்னும்கூட ஒற்றுமையாக உறுதிபடுவதும், அதில் தமிழகம் தொடர்ந்து நீடித்து வருவதும் அரசியல், பொருளாதார, சமூகவியல் காரணிகளை முன்வைத்து சிந்திக்கும்போது தமிழகத்துக்கு மிக அவசியமான ஒன்று என்பதை உணரலாம்.

தமிழகம் எந்த வகையிலும் சுயசார்பு கொண்ட பிரதேசம் அல்ல. இந்தியாவின் மொத்த வரியின வருவாயிலிருந்து அதற்கு கிடைக்கும் பங்கு தொகை அதன் பொருளாதார நலன்களுக்கு மிக முக்கியமானது.

அவசியம் நேர்ந்தால் இதன்மீது இன்னும் விரிவாக பேசலாம்.

0 comments:

Post a Comment