International Poultry Expo & Conference - சில குறிப்புகள்

Posted: Sunday, January 10, 2010 | Posted by no-nononsense | Labels:

அண்மையில் டெல்லியில் நடந்த Auto Expo 2010 -ஐ நான் இரண்டு காரணங்களுக்காக பின்தொடர்ந்து வந்தேன். முதல் காரணம் ஆனந்த் மகிந்த்ரா. எக்ஸ்போ நடப்புகளை தொடர்ந்து ட்விட்டி வந்தார். அதற்கேற்ப ஆட்டோ செக்டார் பங்குகளில் அந்த குறிப்பிட்ட நாட்களில் சிறப்பாக வர்த்தகம் செய்ய முடிந்தது. (கொஞ்சம் லாபம் பார்க்கவும் முடிந்தது. Thanks to that 140 word phenomenon, called Twitter!). இரண்டாவது காரணம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியாற்றும்போது எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவர் அதில் கலந்து கொண்டிருந்ததுடன் அதுபற்றி அடிக்கடி என்னுடன் பேசியும் வந்தார். கார்களை அடிக்கடி மாற்றுவது அவருக்கு வாடிக்கை. நாம் ஆடம்பரமாக நினைப்பது சிலருக்கு ஆதர்ஷமாக பெரும் கனவாக இருக்கிறது.

என்னுடைய அந்த நண்பர் பல விஷயங்கள் குறித்து என்னிடம் நிறைய உரையாடுவார். அவை பெரும்பாலும் புது புது தொழில்முறைகள் மற்றும் அதன் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றியதாக இருக்கும். எனக்கும் நிறைய சிபாரிசு செய்வார். எல்லாம் என் காலுக்கு அகலக் காலாக இருந்ததால் துணிந்து இறங்க முடிந்ததில்லை. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவுக்கு கூட அந்த நண்பர் என்னை அழைத்திருந்தார். இருக்கும் இடத்தை விட்டு எங்கும் நகரும் நிலையில் நான் இப்போதைக்கு இல்லை என்பதால் அதையும் தவறவிட்டுவிட்டேன். நிறைய வாய்ப்புகளும் தொடர்புகளும் பணியிட கடமைகளால் கண் முன்னே பறிபோகின்றன. சுயதொழில் புரிபவர்கள் புண்ணியவான்கள்!

இச்சூழ்நிலையில் உள்ளூரிலிருந்து ஒரு எக்ஸ்போவுக்கான அழைப்பு வந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி ”International Poultry Expo & Conference” என்ற பெயரில் மூன்று நாட்கள் நடத்திய பன்னாட்டு கோழியின கண்காட்சிதான் அது. அதில் நமது நண்பர்கள் சதீஷ்கண்ணனும் மாதும் பங்குபெற்று ஸ்டால் போட்டிருந்தனர் என்பதால் அது நம் கவனத்தையும் கவர்ந்திருந்தது.

சதீஷ்கண்ணன் அந்த துறையில் இருப்பதால் அதில் பங்கு பெற்றதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதில் மாதுவையும் அவன் பங்குபெற வைத்ததுடன் கோழியின ஆர்வலர்களிடம் நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறான். இந்த கண்காட்சியின் ஹைலைட்டே மாதுவின் பேன்ஸி கோழிகள்தான் என்றால் மிகையில்லை. எப்போதும் அங்கேதான் கூட்டம் மொய்த்தபடி இருந்ததாக தகவல். அதன் காரணமாக மாதுவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். இந்த தொடர்புகள் சாத்தியங்கள் எல்லாம் இங்கே நாம் இணையத்தில் இணைந்ததன் ஆகப்பயன் என்பதால் அதில் நமக்கும் மகிழ்ச்சிதான்.


இந்த இடத்தில் மாதுவின் பறவைக் காதல் பற்றி கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த வருடம் வரை மீன்கள் வளர்ப்பதில் தான் அவனுக்கு நாட்டம் இருந்தது. ஆனால் எங்கிருந்து பறவைகளின் மீது ஆர்வம் தொற்றியது என்று தெரியவில்லை, கடந்த ஒரு வருடமாக பல இன கோழிகள் மற்றும் வித விதமான பறவைகளை சேகரிப்பதிலும் பராமரிப்பதிலும் முழுவீச்சாக இறங்கிவிட்டான். அதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேர்ந்தாலும் சளைப்பதில்லை. குறுகிய காலத்திலேயே தமிழக அளவிலான பறவை ஆர்வலர்களின் நெட்வொர்க்கில் குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்திருக்கிறான். எல்லாமே அசுர வேகத்தில் நடந்தது. ஒரு காரியத்தில் ஈடுபாடு கொண்டு விட்டால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது அவனுக்கு இயல்புதான் என்பதால் எனக்கு அதில் ஆச்சரியமில்லை.

வெள்ளி கிழமை முதல் இக்கண்காட்சி நடந்து வந்தாலும் இன்றுதான் எனக்கு போக நேரம் கிடைத்தது. மனைவி குழந்தை சகிதம் கிளம்பினேன். உடன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் சதீஷ் (வக்கீல்) இணைந்து கொண்டனர். 12.30 அளவில் அரங்கினுள் நுழைந்தோம்.

பெயர்தான் சர்வதேச கோழியின கண்காட்சி. ஆனால் அங்கே இருந்த ஸ்டால்கள் அனைத்தும் பவுல்டரி வர்த்தக நிறுவனங்களின் விற்பனைப் பொருட்களின் காட்சிதான். அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதை ஈடு செய்யும் விதமாக ஈமு கோழிகளின் காட்சி இருந்தது. உருவத்தில் பிரம்மாண்டமான அக்கோழிகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன. அதைவிட்டால் மாதுவின் கோழிகள் தான் என்பதால் அதை நான் அவன் வீட்டு பண்ணையிலேயே பார்த்திருந்ததால் மற்ற ஸ்டால்களில் அதிகம் கவனம் செலுத்தினேன்.

நுட்பம் மேம்பட்ட பல பவுல்டரி உபகரணங்கள் புதிதாக சந்தைக்கு வந்திருந்தன. என்னுடைய கவனம் ஏதேனும் சிறுதொழில் வாய்ப்பு குறித்து தகவல் கையேடு, புத்தகம் கிடைக்குமா என்பதில் இருந்தது. ஆடு வளர்ப்பு, கலர் மீன் வளர்ப்பு, உவரி மீன் வளர்ப்பு குறித்து சில புத்தகங்கள் கிடைத்தன. எல்லாமே TANUVAS வெளியீடுகள். அதைத்தவிர வேறு உருப்படியாக ஒன்றும் இல்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் வணிக நோக்கத்தில் மட்டும் நடத்தப்படாமல் தொழில்முனைவோருக்கும் உபயோகமாக தகவல் கையேடுகள் மற்றும் விளக்க காட்சிகளுடன் நடத்தப்பட்டால் பயனாக இருக்கும்.

சதீஷ்கண்ணன் ஸ்டால் மிக ஜோராக இருந்தது. அதன் வடிவமைப்பில் செய்நேர்த்தி இருந்தது. என் பாராட்டுக்களை அவனிடம் சொல்லி சிறிது நேரம் அங்கே செலவிட்டுவிட்டு, மாது ஸ்டாலை வலம் வந்தோம். பெரிய இடத்தை அவனுடைய கோழிக் காட்சிக்காக ஒதுக்கியிருந்தார்கள். டிசைன் டிசைனான கோழிகள் நிறைந்திருந்தன. அவற்றின் இனம் குணம் பற்றியெல்லாம் எனக்கு ஸ்நான ப்ராப்தியும் இல்லை என்பதால் அருகில் இலவசமாக சாப்பிடக் கொடுத்த அவித்த முட்டைகள் சிலவற்றை உள்ளே தள்ளி, அங்கிருந்து நகர்ந்து ரொம்ப நேரமாக நாசியை தீண்டிக் கொண்டிருந்த சிக்கன் பிரியாணி உணவுக்கூடம் நோக்கிச் சென்றோம். அங்கே தயிர் சோறையும் மோர் மிளகாயையும் பஃபே போட்டு பங்கு வைத்துக் கொண்டிருந்தனர். சிக்கன் எல்லாம் டெலிகேட்ஸுக்குத்தானாம். கிடைத்ததை கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு (அய்யா ச.க, இப்படி பருப்பில்லாமல் கல்யாண சாப்பாடு போட்டது நியாயமா?) நண்பர்களிடம் விடை பெற்று வீடு வந்தோம்.

அங்கே எடுத்த சில புகைப்படங்களை கீழ்காணும் ஆல்பத்தில் காணலாம்.

0 comments:

Post a Comment