NAMAKKAL SHOULD BE REDISCOVERED

Posted: Friday, January 8, 2010 | Posted by no-nononsense | Labels: ,


சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து கலைஞர் பேசும்போது “சென்னை மறுகண்டுபிடிப்பு” என்னும் புத்தகம் பற்றி சில மாறுபாடான கருத்துகளை கூறியிருந்தார். அதன் தொடர்ச்சி இந்த வார துகளக் வரை சர்ச்சையை கிளப்பிய வண்ணம் உள்ளது. நாம் அதனுள் நுழைய வேண்டாம்.

அப்புத்தகம் எஸ். முத்தையா எழுதிய "Madras rediscovered" என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் பதிப்பு. அதன் ஆங்கில மூலம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பு கண்டு வருகிறது. இன்றைய சென்னையின் முற்கால மெட்ராஸ் ராஜ்தானி வரலாற்றை தெளிவான ஆய்வுக்குட்படுத்தி தொகுக்கப்பட்ட அந்த நூலைப்பற்றி படிக்கும் போதெல்லாம், நாமக்கலுக்கும் ஏன் இப்படி ஒரு கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாற்று ஆய்வு நூல் இல்லை என்ற கேள்வியே மனதில் தொக்கி நிற்கிறது.

இங்கேயும் எத்தனையோ முனைவர்களும் ஆய்வாளர்களும் மண்ணின் மைந்தர்களாக தோன்றியிருக்கிறார்கள். எவரிடமிருந்தும் குறைந்த பட்சம் மேலோட்டமான ஒரு வரலாற்று நூல் கூட உருவானதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு ஆய்வு நூல் இருந்திருந்தால் வெறும் யூகங்களை (என்னென்ன என்பதை கீழே எழுதியிருக்கிறேன்) மட்டுமே வரலாறாக கொண்டு வாழ்ந்து வர வேண்டியதில்லை.

எனக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் நாமக்கல்லை ஒரு குறுக்கு வெட்டுக்கு உட்படுத்தி யோசிக்கும் போது மனதில் கீழ் காணும் கேள்விகளும் சிந்தனைகளும் தோன்றுகின்றன.

  • நாமக்கல் நகரின் மையமாகத் திகழும் நாமக்கல் மலைக்கு ’நாமகிரி’ என்று பெயர் வந்தது எப்படி? நாமகிரி தாயார் காரணமாக நாமகிரி மலையா (அ) மலை காரணமாக நாமகிரி தாயாரா?
  • இப்பெயர் பெறும் முன் இம்மலையின் பெயர் என்ன?
  • மலையின் மேலுள்ள மலைக்கோட்டையை சிலர் திப்பு சுல்தான் கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்; சிலர் மதுரை திருமலை நாயக்கர் அரசாட்சியை சேர்ந்த ராமசந்திர நாயக்கர் கட்டியதாகச் சொல்கிறார்கள். உண்மையில் யாரால் கட்டப்பட்டது? அது சம்மந்தமான கல்வெட்டு, செப்பேடு ஏதேனும் உள்ளதா?
  • மலையை திப்பு சுல்தான் தான் கட்டினான் என்றால் மலை மீதுள்ள வரதராஜ பெருமாள் கோவிலும், முகப்பிலுள்ள ஹிந்து சின்னங்களும், நாமமும் எப்படி வந்தன?
  • மலை மீதுள்ள இஸ்லாமிய தர்கா (அ) சமாதி (அ) கட்டிடத்தின் பின்னுள்ள வரலாறு என்ன? எப்படி இந்து-முஸ்லிம் சமய சின்னங்கள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டன?
  • நரசிம்மர் - நாமகிரி அம்மன் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும், குகை குடைவரை கட்டிடக்கலை முறையும் அப்படியே திருமயம் கோவிலை ஒத்திருப்பதால் இவையும் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். நாமக்கல்லை பல்லவர்கள் ஆண்டதாக எங்கேயும் பதிவு இல்லாதபோது எப்படி பல்லவ முறையில் கோவில்கள் கட்டபட்டன?
  • நரசிம்மர் கோவிலை நோக்கி கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயர் கோவிலின் ஸ்தல வரலாறு என்ன?
  • நாமக்கல் சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் அதிக காலம் இருந்ததாக தெரிகிறது. பிறகு சோழர்கள், நாயக்கர்கள், பீஜப்பூர் - கோல்கண்டா - மைசூர் சுல்தான்கள், அவர்களுக்குப் பிறகு நிஜாம் மன்னர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது. பிறகுதான் மற்ற இடங்களையும் போலவே இதுவும் ஆங்கிலேயரின் கீழ் வந்துள்ளது. இவை எல்லாமே மேலோட்டமான தகவல்களாகவே ஆங்காங்கே பதியப்பட்டுள்ளன. கால வரிசைப்படுத்தப்பட்ட முறையான தரவுகள் இல்லை.
  • நாயக்க ஆட்சியின் கீழ் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில் நாமக்கல் எந்த பாளையத்தில் அடக்கம்?
  • அரசு ஏடுகளிலோ அல்லது அருகிலுள்ள சேலம், ஈரோடு மாவட்ட ஆய்வு ஏடுகளிலோ நாமக்கலின் பண்டைய வரலாறுபற்றி ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா?
  • ஈரோடு மாவட்டத்தில் கபாலிகம்(சைவ மதத்தின் ஒரு பிரிவு) பரவலாக பின்பற்றப்பட்டிருந்தும் நாமக்கல்லில் வைணவம் மட்டும் கோவில் கண்டது எப்படி? (நாமக்கல்லில் ஒரு ஈஸ்வரன் கோவில்கூட கிடையாது)
  • கி.பி 1 முதல் 4 வரை தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த புத்த சமண சமயங்களின் பாதிப்பு எந்தளவு இங்கே இருந்தது?
  • நாமக்கல் மணிக்கூண்டு யாரால் கட்டப்பட்டது? அதற்கு தொட்ட்ண்ணா பெயர் வைக்கப்பட்டது ஏன்? யார் எந்த தொட்டண்ணா?
  • சுதந்திரப் போராட்டத்தில் நாமக்கல்லின் பங்கு என்ன? (கவிஞர் ராமலிங்கம் பிள்ளையைத் தவிர்த்து)
  • 1933-ல் காந்தியை நாமக்கல் அழைத்து வந்து குளக்கரையில் பொதுக்கூட்டம் நடத்தியவர் யார்? அக்கூட்டத்தின் உரை அல்லது அதைப்பற்றிய செய்தி குறிப்புகள், நூல் பதிவுகளின் சேகரம் உள்ளதா?
  • நாமக்கல் மக்களின் பிரதான தொழிலாக வேளாண்மை இருந்திருக்கிறது. இங்கே என்ன மாதிரியான பயிர் வகைகள் பயிரிடப்பட்டன? என்ன மாதிரி விவசாய முறைகள் பின்பற்றப்பட்டன?
  • பொய்யேரி போன்ற சிறு சிறு வாய்க்கால்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் நதிமூலம் யாது? நாமக்கல்லில் பின்பற்றப்பட்ட பாசனமுறைகள் யாவை?
  • லாரி, கோழிப்பண்ணை தொழில்கள் முதலில் யாரால் மேற்கொள்ளப்பட்டன? அவை எப்படி வேறூன்றின?
  • நாமக்கல்லின் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்குகள் என்ன?
  • தமிழகத்தின் கலை அரசியல் பண்பாட்டியலில் நாமக்கல்லின் பங்கு என்ன?
  • துறையூர் ரோட்டில் நியூ பேலஸ், மோகனூர் ரோட்டில் காந்தமலை, ச.பே.புதூரில் செல்வி, சேலம் ரோட்டில் ராஜா தியேட்டர் ஆகிய சினிமா கொட்டகைகள் இருந்துள்ளன. இவற்றில் செல்வி சிவசக்தியாகவும், ராஜா கே.எஸ் ஆகவும் பெயர் மாற்றம் கண்டன. (ரமேஷ் தியேட்டர் நமக்கே தெரியும்). இதுபோல் கூத்து, நாடக மன்றங்கள் இருந்தனவா? அப்படியானால் எம்மாதிரி கூத்துகள் நடத்தப்பட்டன? இவையெல்லாம் குறித்த முழுமையான தகவல்கள் தேவை.
  • தமிழகத்தில் வறட்சி மற்றும் சாதி கலவரங்களால் ஒருபோதும் பாதிக்கப்படாத ஒரு சில இடங்களில் நாமக்கல்லும் ஒன்று என்கிறார்கள். இத்தகவல் எந்தளவு உண்மை?
  • நாமக்கல்லில் எந்த மாதிரி பஞ்சாயத்து அமைப்பு முறைகள் இருந்தன? அதில் எந்த தகுதியின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட்டன? நீதி வழங்கல் அப்பஞ்சாயத்துகளில் நடைமுறையில் இருந்ததா?
  • நாமக்கல்லின் வரலாற்றில் தடம் பதித்த குறிப்பிடத்தக்க மனிதர்கள் யார் யார்? நாமக்கல் பகுதியின் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் குறித்த தரவுகள்?
  • நாமக்கல் பகுதியிலிருந்து ஏதாவது பெரு/சிறு பத்திரிக்கைகள் வெளியானதுண்டா? அப்படியானால் அதன் பின்புலம், தாக்கம்பற்றிய தகவல்கள்?
  • நாமக்கல் வட்டார வழக்கு யாது? அப்படி ஒன்று இருப்பின் அதன் தனித்துவமான வார்த்தைகளின் தொகுப்பு உருவாக்கப்படுதல் அவசியம்.
  • சுதந்திர இந்தியாவின் தமிழக சட்டமன்ற, பாராளுமன்ற ஆட்சியியலில் நாமக்கல் தொகுதி உறுப்பினர்களின் பங்களிப்பு

பிடித்து இழுக்க இழுக்க நீளும் மந்திரவாதியின் தொப்பி கயிறு போல நாமக்கல் வரலாறு குறித்த கேள்விகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. இவை அனைத்தையும் திரட்டி தொகுக்க முடிந்தால் நமக்கும் ஒரு மறுகண்டுபிடிப்பு நூலும், பிறந்த மண்ணின் வரலாறும் கிடைக்கும். ஒருவகையில் பிறந்த மண்ணின் வரலாறு கூட பிறப்பித்த தந்தையின் பெயருக்கு ஒப்பாக தோன்றுகிறது. எதை வேண்டுமானாலும் தந்தை பெயராக எப்படி சொல்லிவிட முடியாதோ, அதுபோல யூகங்களை மட்டுமே என் ஊர் வரலாறாக சொல்லிக்கொண்டு வாழ முடியாது.

0 comments:

Post a Comment