கொல்லிமலை - தொடரும் விவாதம்

Posted: Thursday, January 7, 2010 | Posted by no-nononsense | Labels: ,
(கொல்லிமலை குறித்து நண்பர்களுடன் மின்மடலில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி)

மாது மஹா ப்ரபோ! ஒரு வேலை செய்வீராக! நேரே கூகுள் சென்று kolli hills tour / trip / road trip / trekking என்பது போன்ற குறிச்சொற்கள் கொண்டு தேடுவீராக! அப்போது தெரியும் நாலா திசைகளிலும் இருந்து எத்தனைப் பேர் கொல்லிமலைக்கு வந்து போயிருக்கிறார்கள்; அவர்கள் அதை எந்தளவு அனுபவித்து எழுதியிருக்கிறார்கள் என்று.

சென்ற வருடத்தில் ஒருநாள் அதிகாலையிலேயே கிளம்பி திருச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். முசிறி தாண்டியுள்ள மணமேடு அருகே பஸ் பழுதாகி நின்றுவிட்டது. அந்த தடத்தில் ஒரு பிரச்னை என்னவென்றால் பத்துக்கு ஒன்பது பஸ்கள் படிக்கட்டுகளையும் தாண்டி பிதுங்கிக்கொண்டுதான் பயணம் செய்யும். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியும் வேறு பஸ் மாறமுடியவில்லை. அப்போது ஜோடி ஜோடியாக பைக்கில் பயணம் வந்த இளைஞர்கள் சிலர், நான் நின்றிருந்த இடம் அருகேயுள்ள டீக்கடையில் ஓரம் கட்டுவதைப் பார்த்தேன். ஒரு பைக் மட்டும் ஒத்தையில் வந்திருந்தது. அவர்கள் பயணம் நாமக்கல் திசை நோக்கி இருந்ததால் அவர்களிடம் சென்று லிப்ட் கேட்டேன். மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். பேசிக் கொண்டிருந்ததில் அவர்களெல்லாம் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் என்றும், பைக்கிலேயே கொல்லிமலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது. அதுகுறித்து அவர்கள் உற்சாகமாக காணப்பட்டார்கள். அவர்களில் ஒரு இளைஞன் இதுபோல் தான் பலமுறை பைக்கில் வந்து போயுள்ளதாகச் சொன்னான். பிறகு அவர்களுடன் நாமக்கல் வரை வந்து சேர்ந்தேன்.

நாமக்கல்லிலிருந்து சுமார் 55 கி.மீ தான் மொத்த தொலைவும். பைக்கில் சென்றாலுமேகூட ஒரு ஒன்றரை மணி நேரத்தில் உச்சிக்கே போய்விடலாம். இருந்தும் போகாததற்கு வித்தாரமாக வியாக்யானம் பேசிக் கொண்டிருக்கிறாய்.

உள்ளூரிலேயே வெண்ணையை வைத்துக்கொண்டு ஏனடா பிளாக்தண்டர், அதிசயம் என்று ஊரெல்லாம் தொண்ணையை தூக்கிக்கொண்டு நெய்க்கு அலைகிறீர்கள்; ஒருமுறை உள்ளூர் சரக்கையும் சுவைத்துத்தான் பாருங்களேன் என்றால், சொன்னதில் பொருளை விட்டுவிட்டு என் சொல்லில் மட்டும் குற்றம் காணும் உன் திறம் கண்டு வியக்கிறேன். போகாதது தேசிய குற்றம் ஒன்றும் இல்லைதான்; ஆனால் உன் தேடலில் குற்றம் என்கிறேன். சும்மா வாய் பேசாமல் நாங்கள் போகும்போது உடன் வந்துவிட்டு சொல், என் சொல் எப்படி என்று. சரியா?

(இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தாலாவது வர்றீங்களான்னு பார்க்கலாம்)

*

இதை எழுதும்போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை நானும் மணிகண்டனும் சோளக்காடுவரை ஒரு வேலையாக சென்றிருந்தோம். திரும்பிவரும்போது இயல்பாகவே மிதமான சுபாவம் கொண்ட அவனை கலவரப்படுத்த எண்ணி, வளைவுகள் தவிர்த்து மற்ற இடங்கள் அனைத்திலும் நான் வண்டியை கையை விட்டுவிட்டு ஓட்டி வந்தேன். அது கைனடிக் ஸபாரி வண்டி. டிவிஎஸ்ஸை விட நல்ல பாலன்ஸ் கிடைக்கும் என்பதால் பிரச்னை இல்லை. கீழே செக்போஸ்ட் வரும்வரை நான் செய்த அலும்புகளால் முகம் பேஸ்தடித்துப் போனதை மணி இன்னும் மறந்திருக்க மாட்டான்.

அப்போது அதெல்லாம் சாகஸம். இப்போது நினைக்கும்போதுதான் ரிஸ்க் புரிகிறது. சொல்லப் போனால் சாகஸத்துக்கும் ரிஸ்கிற்கும் இடையில்தான் இளமையின் த்ரில் இருக்கிறது.


0 comments:

Post a Comment