ஒற்றைப் பரிமாண நகைச்சுவை ரசனை

Posted: Saturday, January 30, 2010 | Posted by no-nononsense | Labels:
கோவா படம் பார்க்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் அதைவிட ’தமிழ்ப்படம்’ நல்ல நகைச்சுவைப் படம் என்று இணைய விமர்சனங்கள் சொல்கின்றன. அதிலும் ஒருவர் “தட்டித் தட்டி கையும், சிரித்துச் சிரித்து வயிறும் வலித்தபடியேதான் வரவேண்டியிருக்கிறது” என்று ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளியிருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது. இன்று அதைப் பார்த்துவிட உத்தேசம்.

சமீபமாக காமெடிப் படங்களை பார்க்க எத்தனிக்கும் ஒவ்வொருமுறையும் நினைவுக்கு வரும் ஒரு கசப்பான அனுபவம் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ சார்ந்தது. கனடாவைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பராகிய இலங்கை தமிழ்ப் பெண்மணி ஒருவர் எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தார். இப்படி யாராவது வரநேரிட்டால் நாமக்கல்லில் வாழ்வதிலுள்ள ஆகப்பெரும் சங்கடம் - இங்கே அழைத்துச் சென்று காட்ட, சற்று உலாவிவிட்டு வர ஆஞ்சநேயர்-நரசிம்மர் கோவில் தவிர வேறு ஒரு இடமும் இல்லை என்பதே. நாமக்கல் மலை மேலே செல்லலாம்தான்; ஆனால் அவர் வயது ஐம்பதை தாண்டியது என்பதால் அந்த ரிஸ்கை எடுக்க வேண்டாமே என்று மும்பை எக்ஸ்பிரஸ் அழைத்துச் சென்றோம்.

சும்மா சொல்லக்கூடாது.. கண்ணில் நீர் வர வாய்விட்டு சில காட்சிகளில் சிரித்தோம். நல்ல டைமிங் சென்ஸ் உள்ள பல காமெடிகள் அந்த படத்தில் உண்டு. ஆனால் ஒரு விசித்திரம், அன்று படம் பார்த்துக் கொண்டிருந்த ஐம்பது பேரில் நாங்கள் மூன்று பேர் உட்பட ஒரு ஏழெட்டு பேர்தான் அப்படி சிரித்துக்கொண்டிருந்தோம். மற்றவர்களெல்லாம் ஏதோ சீரியல் பார்ப்பதுபோல முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நாம்தான் அநாவசியமாக சிரிக்கிறோமோ என்று அடுத்தமுறை சிரிப்பு வரும்போது சரிபார்த்துக்கொண்டேன். நிச்சயம் இயல்பாக நகைச்சுவை உணர்வை தூண்டும் டைமிங் சென்ஸ் டயலாக் டெலிவரி கொண்ட அட்டகாசமான காட்சி. ஆனால் உடல்மொழியோ(body language) அடிதடியோ காமநெடியோ இல்லாததால் அதை காமெடியாக அங்கீகரிக்க நம் மக்கள் தயாராக இல்லை என்று தெரிந்தது. இப்படி ஒற்றை பரிமாண ரசனையில் உலவி திரிவதுதான் பல கலை வடிவங்களை புரிந்துகொள்வதில் நம் மக்கள் சந்திக்கும் பிரச்சினை. அன்று அப்படம் முழுவதும் தனிமைப்பட்டு உணர்ந்தோம். இப்படம் அப்படி இருக்காது என்று நம்புகிறேன். ஏனென்றால் spoof comedy-ல் பரிட்சார்த்த முயற்சிகளுக்கு வேலை இருக்காது. மேலும் ஏற்கெனவே பலரும் பாராட்டுகிறார்கள் என்பதால் இம்முறை ஊருடன் ஒத்து சிரிக்கலாம்.

0 comments:

Post a Comment