ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

Posted: Saturday, January 16, 2010 | Posted by no-nononsense | Labels:
ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து நண்பர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுக்கொண்டிருந்த நிலையில் என்னை படம் பார்க்க தூண்டியது பவித்ரா ஸ்ரீநிவாசனின் இந்த ரிடீஃப் விமர்சனம். பவித்ரா எனக்கு பொன்னியின் செல்வன் மின் மடல் குழுவில் பழக்கம் என்பதால் வரலாற்று துறையில் அவருடைய ஈடுபாடு மற்றும் களப்பணிகள் குறித்து எனக்கு கொஞ்சம் அறிதல் உண்டு. சோழ, பாண்டிய வரலாற்று பின்னணி கொண்ட இப்படத்தின் கதைக்கு அவர் விமர்சனம் எழுதியது மிகப் பொருத்தமானது என்பதால் எதிர்மறை விமர்சனங்களை மீறி பவித்ராவின் சிலாக்கியமான விமர்சனம் காரணமாக இப்படத்தை பார்க்க துணிந்தேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிலருக்கு இப்படம் ஏன் பிடிக்காமல் போனது என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. படத்தின் இரண்டாவது பாதியை ஊன்றி கவனிக்காதவர்களால், அதன் கதைப்போக்கில் வரும் பழந்தமிழையும் அரசர் வாழ்க்கை முறையையும் காட்சி விவரணைகளையும் புரிந்துகொள்வதில் பிரச்னை உள்ளவர்களால் திரைக்கதையை சரியாக பின்தொடரமுடியவில்லை என்று நினைக்கிறேன். இதன் சங்கிலித் தொடர் போன்ற ஒன்றுடன் ஒன்று பின்னியமைந்த காட்சியமைப்புகளில் ஓரிடத்தில் இழை அறுந்திருந்தால் கூட படத்தின் சுவாரஸ்யம் கெட்டிருக்க வாய்ப்புண்டு. அது இரண்டாம் முறை பார்க்கும்போது புரியக்கூடும்.

ரீமாசென்னின் பிளாஸ்பேக் போன்ற சில இடங்களில் லாஜிக் குறைவாக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவை கன்வின்ஸிங்காகவே இருந்தன. தமிழ் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க மேக்கிங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புதுப்பேட்டையில் நான் கண்டு வியந்த செல்வராகவன் இந்த படத்தின் மூலம் இன்னும் பல படிகள் உயர்ந்திருக்கிறார். இந்த படத்தை தோல்விப்படமாக்கி அவரையும் ஒரு மசாலா டைரக்டராக நம் ரசிகர்கள் ஆக்கிவிடாமல் இருந்தால், புது புது கதைக்களன்களில் இன்னும் பல நல்ல படங்கள் அவரிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

படத்தில் எல்லோரும் மெச்சும்படியான உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். பருத்தி வீரனில் எல்லோருக்கும் பிடித்த கார்த்திக்கின் நடிப்பு என்னை ஏனோ கவர்ந்திருக்கவில்லை. ஆனால் அந்த குறை இப்படத்தின் மூலம் தீர்ந்தது. ஹீரோயிஸம் இல்லாத இந்த மாதிரி underplay கேரக்டர்கள் பண்ண கார்த்திக் மாதிரியான புதுமுக நடிகர்களால்தான் முடியும். ரீமாசென் இப்படத்தின் மிகப்பெரிய பலம். பார்த்திபனுக்கு நிச்சயம் பெயர் சொல்லும்படியான கதாப்பாத்திரம்.

இப்படம் தமிழின் ஆகச்சிறந்த படம் அல்ல. இப்படம் அழகியல்கள் நிறைந்த படம் அல்ல. ஆனால் உங்களை வித்தியாசமான ஒரு களனுக்குக் கொண்டு போய் வழக்கமான தமிழ் படங்களுக்கு இடையில் புதிதான ஒரு அனுபவத்தை தரக்கூடிய ஒன்றாக நிச்சயம் இருக்கும்.

படத்தின் கதையினுள் நான் சென்று விளக்காததன் காரணம், அந்த அனுபவத்தை நீங்களும் அடைய வேண்டும் என்ற நோக்கில்தான். நிச்சயமாக தியேட்டரில் பார்க்க வேண்டியப் படம்.

படத்திற்கு டிக்கெட் விலை 50 ரூபாய். இதைப்போல ஐந்து மடங்கு கொடுத்திருந்தாலும் தகும்.

0 comments:

Post a Comment