பொதுபுத்தியின் எஸ்கேபிஸம் - தொடரும் வாதங்கள்

Posted: Tuesday, January 12, 2010 | Posted by no-nononsense | Labels:
தொடரும் விவாதத்தில் என்னை எதிர்கொண்ட நண்பனின் கருத்துக்கான என் பதில்:

மன்னிக்கவும் பரந்தாமா, நான் எழுதியவற்றில் எங்கேயும் நடந்த அச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்கவில்லை. ஒரு பரபரப்பான சம்பவத்தை மீடியாக்கள் எப்படி மிகைப்படுத்தி செய்தியாக தருகின்றன என்பதைத்தான் என் கருத்தின் ஆரம்பத்தில் கோடிட்டு காட்டியிருந்தேன். செய்தியை செய்தியாக மட்டும் தராமல் அதனுடன் மிகை கற்பனை மசாலாவையும் சேர்த்து தடவி தரும் டேபிள் ஜர்னலிஸத்தை நான் தொடர்ந்து கண்டித்து எழுதிவருகிறேன். இந்த இடம் புதுசு என்பதால் அதன் subversive meaning -ற்கு எதிராக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது.

மக்களின் நல்வாழ்வுக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஒருங்கே குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்களின் கண் முன்னே ஒரு உயிர் துள்ள துடிக்க சாகவிடப்பட்டிருக்கும் கொடுமையை என்ன வார்த்தை கொண்டு கண்டிக்க? இந்த மனிதாபிமானமற்ற செய்கையை இயல்பான மனிதன் எவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது எனும்போது, என்னால் மட்டும் எப்படி ஆதரிக்க முடியும். ஒரு வாதத்திற்காகக்கூட அதை நியாயப்படுத்தும் செய்கையில் என்னால் ஈடுபடமுடியாது.

இந்த கண்டனத்திற்குரிய சம்பவம் பற்றிய செய்திகள் வெளியானதும் நடப்பது நல்லாட்சியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கவேண்டும்? இந்நேரம் அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் விசாரணைக்காவது உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காததைக் கண்டித்து இந்நேரம் பத்திரிக்கைகளாவது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால் நடப்பது என்ன?

இரண்டு நாள் கழித்து நிதானமாக ’அருகே வெடிகுண்டு வெடிக்காமல் கிடந்தது; அதனால் காத்திருந்தோம்’ என்று ஒரு காரணத்தை கண்டுபிடித்து தருகிறார்கள். அதையும் விமர்சனம் எதுவுமின்றி அப்படியே வெளியிட்டுவிட்டு, அத்துடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாக கையைத் தட்டியபடி கள்ளமௌனம் சாதிக்கிறார்கள் முன்பு இச்செய்தியின் பரபரப்பில் பணம் பார்த்த ஊடகங்கள். (இந்த இடத்தில் வடக்கே ருசிகா தற்கொலை வழக்கில் ஊடகங்கள் செய்துவரும் வாதங்களையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்)

எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை கூட்டிக்கழித்துக்கொண்டிருக்கவே நேரம் போதாத நிலையில், இதையெல்லாம் கவனிக்கவோ கண்டிக்கவோ இங்கே எதிர்கட்சிகள் யாருக்கும் பெரிதாக அக்கறை கிடையாது. வழக்கம்போல ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார். முடிந்தது கடமை. இன்னொரு பக்கம், அண்மையில் தன்னைத்தானே தமிழக மக்களின் மீட்பராக அறிவித்துக் கொண்ட விஜயகாந்தும் ஒரு அறிக்கை வெளியிட்டார். என்னவென்று பார்த்தால், யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணிக்கு தயார் என்று ஒரு அறிவிப்பு. அதுதான் அந்த அறிக்கையின் உள்ளடக்கம். இவர்களைப் போன்றவர்களைத்தான் அரசியல் மாற்றாக கருதிக்கொண்டு காலம் தள்ளும் நிலையில் நாமெல்லாம் இருக்கிறோம்.

இவற்றையெல்லாம் கண்டு வெகுண்டு எழ வேண்டிய மக்களின் கவலையோ தங்கள் தொகுதி எம்.எல்.ஏ-க்கு எப்போது அல்பாயுசு வாய்க்கும்; இடைத்தேர்தல் வந்து எப்போது தங்கள் வீட்டுக் கதவை பணக்கவர் தட்டும் என்பதில்தான் இருக்கிறது.

இப்படி எட்டு திக்கும் குற்றவாளிகளை கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் ஏழு காலத்தில் கண்டனம் தெரிவித்து எழுதிதான் என்ன ஆகப்போகிறது — என்னும் ஒரு ஆயாசமான மனநிலையை நான் எப்போதோ எட்டிவிட்டேன். காரணம், ரொம்ப யோசித்தால்; ரொம்ப உணர்ச்சிவசப்பட்டால் எங்கே நானும் ஒரு நக்ஸலைட் ஆகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

அதனால் கண்டு கண்டு சலிப்புற்றிருக்கும் அரசியல் / நாட்டு நடப்புகளின் மீது அதீதமாக எதிர்வினை புரிவதை சமீபகாலமாக நிறுத்திவிட்டேன். அதையும் மீறி மனம் கோபம் கொள்ளும் நேரங்களிலெல்லாம் சுட்டு விரலை என்னை நோக்கியே திருப்பிப் பார்க்கிறேன். அது மேலே குறிப்பிட்ட உதவாக்கரை சமூககோபம்போல் இல்லாமல் உள்மனசுத்திகரிப்புக்கு கொஞ்சம் உதவியாக உள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டதே என்னுடைய முந்தைய விமர்சனம்.

நம் முன்னே ஒரு மனிதர் இம்மாதிரி அடிபட்டோ குத்துபட்டோ கிடந்தால் நடுத்தர மனோபாவம் மேவி நிற்கும் நானும் நீயும் அக்கணத்தில் அதற்கு எப்படி react செய்வோம்? நேர்மையான பதிலை அளிக்க வேண்டும் என்றால் அவர் நமக்கு தெரிந்தவராக இல்லாத பட்சத்தில் நாம் வெகு சீக்கிரமாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடவே பார்ப்போம். நான் அப்படியில்லை என்று யாராவது சொன்னால் உள்ளபடியே மகிழ்ச்சிதான். சிலர் ஓடோடி உதவுகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் மிகப்பெரும்பான்மை அப்படியில்லையே என்பதுதான் கவலை.

நானும் நீயும் சேர்ந்த நாமின் மடங்குகள்தான் இச்சமுதாயமாக விரிகின்றது எனும்போது, இதுபோன்ற கேள்விகளை அடிக்கடி நாம் நம் மனசாட்சியை நோக்கி எழுப்பிக்கொள்வது எதிர்கால சமுதாய நலனில் அக்கறைக்கொண்ட எவருக்கும் மிக அவசியமானதாகவே கருதுகிறேன். மற்றபடி எனக்கு உங்கள் அனைவரின் கருத்துநிலையில் இருந்து எவ்விதத்திலும் எதிர்கருத்துநிலை கிடையாது.

நீ group-a சென்றால் உனக்கு helping tendency இருக்கோ இல்லையோ, உன்னுடன் வந்தவர்களுக்காவது நீ ஒரு positive step எடுத்து வைப்பாய்
மேற்காணும் உன் நன்னம்பிக்கைக்கு என் வந்தனங்கள். நீ தொடர்ந்து துரைமார் தேசத்திலேயே வாழ்வது இந்திய சமுதாயத்தைப் பற்றி இவ்விதமாக நீ கொண்டிருக்கும் குறைந்தபட்ச நல்லெண்ணங்களுக்கு நல்லது.

தனியாக தவிர்த்துவிட்டு வந்தாலாவது மனசாட்சி உறுத்தும். அதையே கும்பலோடு கும்பலாக செய்யும்போது ’நான் மட்டுமா செய்தேன்? மற்றவர்களும் அப்படித்தான்’ என்னும் சுயசமாதானத்திற்கே அது வழிவகுக்கும். இங்கே ஏற்கெனவே கும்பல் வன்முறையைப் பற்றி உரையாடியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அது வேறு பொருளில் என்றாலும்கூட இரண்டின் அடிப்படை உளவியலும் ஒன்றுதான்.

0 comments:

Post a Comment